>>>தலைமை செயலக ஊழியர்களின் "டென்ஷனை' குறைக்க யோகா பயிற்சி

தலைமைச் செயலக ஊழியர்கள் நலனுக்காக, உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா பயிற்சி மையம் ஆகியவை விரைவில் அமைய உள்ளது. தலைமைச் செயலக வளாகத்தில், சட்டசபை, நாமக்கல் கவிஞர் மாளிகை ஆகியவற்றில், தமிழக அரசின் அனைத்து துறைகளின் நிர்வாக அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த அலுவலகங்களில், உயர் அதிகாரிகள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை, 8,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்கவும், உடல் நலத்தைப் பேணவும், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையம் அமைக்க வேண்டும் என்று, தலைமைச் செயலக சங்கத்தினர், அரசிற்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்திருந்தனர். முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், எம்.எல்.ஏ., விடுதியில், பெண் எம்.எல்.ஏ.,க்களுக்கு உடற்பயிற்சிக் கூடத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, தலைமைச் செயலக ஊழியர்களுக்கும் உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையத்திற்கான அனுமதி தற்போது கிடைத்துள்ளது. முதல் கட்டமாக, தலைமைச் செயலக வளாகத்தில், நாமக்கல் கவிஞர் மாளிகையில் அமைந்துள்ள, தேசிய தகவல் மையத்தின் பின்புறம், இந்த உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகா மையத்திற்கான இடம் ஒதுக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலக சங்கத் தலைவர் பீட்டர் அந்தோணிசாமி, செயலர் விஜயகுமார் கூறியதாவது: இட நெருக்கடி மிக்க, தலைமைச் செயலக வளாகத்தில் தற்போது தலைமைச் செயலக ஊழியர்களுக்கான, உடற்பயிற்சிக் கூடத்திற்கு இடத்தை முதல்வர் ஒதுக்கித் தந்துள்ளார். ஊழியர்களின், மன அழுத்தத்தை போக்கும் வகையிலும், அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவும் இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன. யோகா மையத்தில், காலை, மதிய இடைவேளை, மாலை நேரங்களிலும், உடற்பயிற்சிக் கூடத்தில் காலை மற்றும் மாலை நேரங்களிலும், ஊழியர்கள் பயிற்சி பெறலாம். இதற்கான உபகரணங்கள் வாங்குவதற்கு, நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. உடற்பயிற்சிக் கூடம் மற்றும் யோகாவிற்கு விளையாட்டுத் துறை மூலம் பயிற்சியாளர்கள் வரவழைக்கப்பட்டு, பயிற்சி வழங்கப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.