>>>தகுதித் தேர்வில் வெற்றி பெற்றும் பணி இல்லை : மனமுடைந்த ஆசிரியர் தற்கொலை முயற்சி

டி.ஆர்.பி., தேர்வில் தேர்ச்சி பெற்றும், வேலை வாய்ப்புக்கான தகுதி இல்லாததால், மனமுடைந்த பட்டதாரி ஆசிரியர், வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம், வடலூர், தோமையன் நகரைச் சேர்ந்தவர் லாரன்ஸ், 46; பி.ஏ., பட்டப்படிப்பில், "தத்துவம்' பாடத்தை முதன்மைப் பாடமாகவும், பி.எட்., படிப்பில் சமூக அறிவியலும் படித்துள்ளார். திட்டக்குடி அடுத்த, தனியார் பள்ளியில், கடந்த, 14 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிகிறார். இவர், அக்டோபரில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பிரிவு தேர்வில், 114 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றார். பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தமிழக அளவில், தமிழ், ஆங்கிலம், கணிதம், சமுக அறிவியல் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு மட்டுமே, பணி வாய்ப்புகள் என,
அறிவிக்கப்பட்டிருந்தது. சி.இ.ஓ., அலுவலகத்தில், கடந்த மாதம் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பின் போது, வேலை வாய்ப்புக்கான தகுதியில், தத்துவம் பாடம் இல்லை என்பதால், "வேலை இல்லை' என அனுப்பப்பட்டார். நேற்று முன்தினம், கடலூரில் நடந்த கலந்தாய்விற்கு வந்த லாரன்சிடம், அதிகாரிகள் அதே தகவலைக் கூறினர். நேற்று காலை, வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு வந்த லாரன்ஸ், இதுகுறித்து விசாரித்தார். அங்கேயும், தனக்கு வேலை கிடைக்க வாய்ப்பில்லை என்ற விஷயம் தெரிய வந்தது. மனமுடைந்த அவர், வேலை வாய்ப்பு அலுவலக வளாகத்திலேயே, விஷம் குடித்தார். அங்கிருந்தவர்கள் அவரை, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். லாரன்சுக்கு புரட்சிமணி என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடலூர் புதுநகர் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.