>>>ஆல்பர்ட் ஷுவைட்சர்...

 
ஆல்பர்ட் ஷுவைட்சர்... அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர். இவருக்கு மருத்துவர், பாதிரியார், இசை வல்லுநர், தத்துவ நிபுணர், சமூக சேவகர் என பல முகம் உண்டு. ஜெர்மனியில் பிறந்த இவர் அடிப்படையில் தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தொடர்ந்து தத்துவ வகுப்புகள் எடுத்து வந்தார்.

பல்வேறு மதங்களின் கருத்துக்களை தொடர்ந்து படித்துவந்த இவர், இன்றைய வாழ்க்கைக்கு எப்படி அறம் சார்ந்த வாழ்வை இவற்றின் மூலம் கொண்டு வரமுடியும் என தொடர்ந்து யோசித்தார்; வாசித்தார். உலகப்போர் சமயத்தில் ஆப்ரிக்காவில் சேவை செய்ய வேண்டும் என்பதற்காக, மருத்துவம் பயின்றார். அங்கே போர்கைதியாக மனைவியோடு சிலகாலம் கஷ்டப்பட்டார்.

மனித வாழ்க்கையில் அறம் குறைந்து வருவதைகண்டு மனம் துடித்தார். சமண மதத்தின் உயிர்களை கொல்லாமை என்கிற கருத்து அவரை ஈர்த்தது; உயிர் என்பது காக்க, அழிக்க அல்ல வாழ்தலின் அறம் உயிர்களை காத்தலும், பிற உயிரை முடிந்தவரை காயப்படுத்தாமலும், கொல்லாமலும் இருக்க வேண்டும் என்ற அவரது, "reverence of life" தத்துவம் ஆப்ரிக்காவில் காண்டாமிருக கூட்டத்துக்கு நடுவில் போகும் பொழுது உதித்தது. அதை அங்கே ஆப்ரிக்காவில் லம்பாரனே எனும் இடத்தில் மருத்துவமனை தொடங்கி எண்ணற்ற உயிர்களை காக்க ஆரம்பித்தார், அங்கே தன் தத்துவத்தை செயல்படுத்தினார். அவ்வூரின் மக்களுக்கு அதை விளக்கினார். அன்பை பரப்பினார்.

அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. அந்த பணத்தை தொழுநோய் சிகிச்சை மையத்தை அங்கே அமைக்க பயன்படுத்தி கொண்டார்.இன்று உலகம் முழுக்க அவர் காட்டிய தத்துவ பாதையில் பல்வேறு அமைப்புகள் உயிர்களை காத்து வருகின்றன. ஜன.14 - அவரது பிறந்தநாள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.