மின்தடை தொடர்பாக புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் (Whatsapp) எண்...



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் கொரானா நோய் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு மற்றும் கோடை காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவது தொடர்பாக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நேற்று (23.05.2021) தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.




இக்கூட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், அரசு முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, இணை மேலாண்மை இயக்குநர் எஸ்.வினீத், மின்தொடரமைப்பு கழகத்தின் மேலாண்ணைம இயக்குநர் எஸ். சண்முகம், நிதி இயக்குநர்கள், தொழில்நுட்ப இயக்குநர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




இக்கூட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு மற்றும் கோடைகாலம் தொடங்கிய நிலையில், மின் கட்டமைப்பு மேலாண்மை, தடையில்லா மின் வழங்குதல், கூடுதல் மின்தேவை மற்றும் மின் உபகரணங்கள் பராமரிப்பு போன்றவை குறித்து விரிவாக மாண்புமிகு அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.




மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஆகிய இடங்களுக்கு மின்வாரியம் மூலம் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட வேண்டும். மேலும் சிறப்பு கவனம் செலுத்தி தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள மேற்பார்வை பொறியாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் அறிவுறுத்தினார்.



தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் பணியாற்றக்கூடிய அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் எதிர்வரும் 31.05.2021 வரை அமல்படுத்தப்படவுள்ள ஊரடங்கின் போது அனைத்து நகர் மற்றும் புறநகர் பகுதிகள் குறிப்பாக மலைவாழ் மக்கள் உள்ள பகுதிகளில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மேலும் இப்பணிகளை கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள்/ பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


 


தற்பொழுது கோடைமழை பெய்து வருவதால் மின்தேவைகள் கணிசமாக குறைந்துள்ளது, மேலும் கடந்த 6 மாத காலமாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளாத நிலையில், தற்பொழுது காலமுறை பராமரிப்பு பணிகளை துரிதமாக மேற்கொண்டு தற்காலிக மின்தடை ஏற்படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.




மேலும் காலமுறை பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக பொது மக்களுக்கு ஊடகங்கள் மூலமாக செய்தி வெளியீடுகள் வெளியிடப்படவேண்டும் எனவும், சராசரி மின் இழப்புகளை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைளை பின்சார வாரியம் மேற்கொள்ள வேண்டும். அனைத்து மின்தளவாட பொருட்கள் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.




பொது மக்களிடமிருந்து மின்தடை தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரி செய்வதற்கு ஏதுவாக அனைத்து கட்டுப்பாட்டு மையங்களும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். மேலும் பொது மக்கள் மின்தடை மற்றும் பழுது தொடர்பான புகார் விவரங்களை 1912 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தெரிவிக்கலாம் என்றும் மின்தடை/பழுது நீக்கம் தொடர்பாக புகைப்படத்துடன் கூடிய தகவல் தெரிவிப்பதற்காக 9445850811 என்ற வாட்ஸ்அப் (Whatsapp) செயலி எண் 24 மணி நேரமும் செயல்படும்.




பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி மற்றும் வாட்ஸ்அப் (Whatsapp) எண்கள் தொடர் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் பொது மக்களிடமிருந்து பெறப்படும் மின்தடை தொடர்பான விவரங்களை உரிய பதிவேடுகளில் பணியில் உள்ள அலுவலர்கள் முறையாக பதிவு செய்து பராமரித்திட வேண்டும். களப்பணிகளை ஆய்வு செய்திட பணிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மேற்கூறிய பதிவேடுகளை தணிக்கை செய்திட வேண்டும்.




களப்பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலை பணியாளர்களும், முகக்கவசம், கையுறை மற்றும் உரிய பாதுகாப்பு உபகரணங்களை கொண்டு பணிசெய்திட வேண்டும் எனவும் குறிப்பாக கட்டுபடுத்தபட்ட (Containment) பகுதிகளாக அறிவிக்கப்பட்ட இடங்களில் மிக கவனத்துடன் பணியாற்ற வேண்டும் என்றும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.




மேலும் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் விழிப்புடன் பணிபுரியுமாறு மற்றும் மின் தடங்கல் ஏற்படும் இடங்களில் விரைவாக செயல்பட்டு மின் தடங்கல் உடனுக்குடன் நீக்க தேவையாக நடவடிக்கைகள் எடுக்கமாறும் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்துமாறு உத்தரவிட்டார்.




கொரானா தொற்று ஏற்படாமலிருக்க உரிய பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் அரசு அறிவுறுத்தும் நடைமுறைகளை பின்பற்றி பணியாற்றிடவும் அனைத்து அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முககவசம், கையுறை மற்றும் சானிடைஸ்சர் வழங்கிடுமாறு மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் அறிவுறுத்தினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.