விபத்தில் வருவாய் கோட்டாட்சியர் உயிரிழப்பு - முதலமைச்சர் இரங்கல் - நிவாரண நிதி அறிவிப்பு



திருச்சி அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்து: வருவாய் கோட்டாட்சியர் உயிரிழப்பு


திருச்சி அருகே அரசு பேருந்தும் காரும் மோதி விபத்துக்குள்ளானதில் முசிறி கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு


விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஓட்டுநர் நல்வாய்ப்பாக உயிர் தப்பி படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி


திருச்சியில் இருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும், முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா  சென்ற  காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. காரின் டயர் வெடித்ததால் எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த விபத்தில், பலத்த காயமடைந்த வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா பரிதாபமாக உயிரிழந்தார் என கூறப்படுகிறது.


இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.  வருவாய் கோட்டாட்சியர்  உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தகவல் அறிந்ததும், திருச்சி கலெக்டர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். சாலை விபத்தில் வருவாய் கோட்டாட்சியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






திருச்சி மாவட்டம் கடியாக்குறிச்சி அருகே நடந்த சாலை விபத்தில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுது தேவசேனா உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.


அவரது குடும்பத்தினருக்கு அரசு ஊழியர்களுக்கான காப்பீட்டு தொகை ரூ.1 கோடி பெற்று வழங்கப்படும் எனவும், பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.10 லட்சம், குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவு.


சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியரின் குடும்பத்துக்கு நிதியுதவி: முதலமைச்சர் அறிவிப்பு


கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி கிராமம் அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனாவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-


திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், மேக்குடி கிராமம், கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, கடியாக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா இன்று காலை 11.45 மணியளவில் TN 45 G 1798 என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே திருச்சியிலிருந்து திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசுப்பேருந்து மோதியதில் முசிறி வருவாய் கோட்டாட்சியரின் நான்கு சக்கர வாகனம் நிலைதடுமாறி அருகில் பழுது பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்த ஜேசிபி வாகனம் மீது எதிர்பாதாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானதில் முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், வேதனையுமடைந்தேன்.


முசிறி வருவாய் கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனாவின் உயிரிழப்பு வருவாய்த் துறைக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். ஆரமுத தேவசேனாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.


ஆரமுத தேவசேனாவின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்த அரசு அலுவலர்களுக்கான காப்பீட்டுத் தொகை ரூபாய் ஒரு கோடி பெற்று வழங்கப்படும். மேலும், அவரது குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து ஐந்து லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.