சின்னம்மை நோய் (Chicken Pox) குறித்த முழுமையான தகவல்கள்

 


சின்னம்மை நோய் (Chicken Pox) குறித்த முழுமையான தகவல்கள் 


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

தற்போதைய வெயில் காலத்தில் சின்னம்மை தொற்றுக்கு உள்ளாகி வருவதைக் காண்கிறோம். 


"Chich-Pois" எனும் பிரெஞ்சு மொழிச் சொல்லுக்கு "பச்சை பட்டாணி" ( Chick peas) என்று பொருள். 


சின்னம்மை ஏற்படும் போது உடல் முழுவதும் பச்சை பட்டாணி அளவில் கொப்புளம்  தோன்றியதால் "சிக்கன் பாக்ஸ்" என்று அழைக்கப்படுகிறது. மற்றபடி நாம் உண்ணும் சிக்கனுக்கும் இந்த சின்னம்மைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 

 

பொதுவாக 

சின்னம்மைக்கு எந்த  மருத்துவ சிகிச்சையும்  தேவை இல்லை எனும் மூடநம்பிக்கை இன்னும் நமது சமூகத்தில் நிலவி வருகிறது.

அதைப் போக்கும் முகமாக இந்த விழிப்புணர்வுக்  கட்டுரை அமையும். 


சின்னம்மை எனும் சிக்கன் பாக்ஸ் - வேரிசெல்லா சோஸ்டர் வைரஸ் மூலம் உண்டாகும் தொற்று நோயாகும். 


காற்றின் மூலம் பரவும் தொற்று நோய் என்பதால் தொற்றுக்குள்ளானவர் தும்மும் போதும் இருமும் போதும் அருகில் இருந்து அதை சுவாசிப்பவர்களுக்கு எளிதில்  பரவி விடும். 


இதனோடு கொப்புளங்கள் தோன்றும் நிலை வரும் போது தோலோடு தோல் உரசுவதாலும் தொற்றுப் பரவல் நடக்கிறது.


வைரஸ் தொற்று உடலுக்குள் சென்றதில் இருந்து நோயின் அறிகுறி தொடங்க சராசரியாக இரண்டு வாரங்கள் எடுக்கும்.


காய்ச்சல்

உடல் சோர்வு 

தொண்டை வலி

தலை வலி ஆகியன முதல் ஐந்து முதல் ஏழு நாட்கள் இருக்கும். 


அதன்பின், உடல் முழுவதும் சிவப்பு நிற படை தோன்றி நெஞ்சுப் பகுதி, பின்புறம், முகம் என கொப்புளங்கள் உருவெடுத்து உடல் முழுவதும் பரவும். 


இரண்டாவது வாரத்தின் முடிவில் கொப்புளங்கள் சருகாகி விழுந்து விடும். 


கொப்புளங்கள் தோன்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்து, அவை சருகாகி விழும் வரை பிறருக்குத் தொற்றுப் பரவும் நிலையில் இருக்கும். 


ஏன் சின்னம்மைக்கு மருத்துவ சிகிச்சை அவசியம்   ? 


பொதுவாக குழந்தைகளுக்கு இந்தத் தொற்று ஏற்படும் போது பெரிய பாதிப்புகள் இன்றி மறையும் என்பது உண்மை தான். ஆனால் வளர் இளம் பருவத்தினர், வயது வந்தோர், முதியோர், கர்ப்பிணிகள், எதிர்ப்பு சக்தி குன்றியோர்க்கு ஏற்படும் போது நோயின்  தீவிரமாக வெளிப்படும். 


முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் 

சிலருக்கு நிமோனியா எனும் தீவிர நுரையீரல் தொற்று , எண்கஃபாலைட்டிஸ் எனும் மூளை அழற்சி , கொப்புளங்களில் பாக்டீரியா தொற்று ஆகியவை ஏற்படலாம். 


சின்னம்மைக்கு 

ஏசைக்ளோவிர்/ வேல்ஏசைக்ளோவிர் ஆகிய மாத்திரைகள் சிறப்பாக செயல்பட்டு நோயின் தீவிரத்தையும் நோயின் காலத்தையும் குறைக்கக் கூடியதாக உள்ளன. 


முக்கியமாக இந்த மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின் கீழ், தோல் படை மற்றும் கொப்புளங்கள் தோன்றத் துவங்கிய 24 மணிநேரத்திற்குள் எடுக்கும் போது சிறந்த பலனைத் தருகிறது.  


இதுவன்றி சின்னம்மை ஏற்பட்டு குணமானவர்களுக்கு, வைரஸின் ஒரு பகுதி அவர்களின் நரம்பு மண்டலத்தில்  நெடிய துயில் நிலைக்குச் சென்று அமைதி காத்திருக்கும். தனக்கான தோதான சூழல் வரும் போது ( அந்த நபரின் எதிர்ப்பு சக்தி குறையும் போது) மீண்டும் உயிர்ப்பு பெற்று அக்கி எனும் ஹெர்பிஸ் சோஸ்டர் நோயை ஏற்படுத்தும். அக்கி என்பது தோலில் திராட்சை பழம் போல தோற்றம் கொண்ட ஒன்றோடு ஒன்று நெருங்கி ஒட்டி இருக்கும் கொப்புளங்களுடன் கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடிய நோயாகும். 


ஒரு வயதுக்குள் சின்னம்மை ஏற்பட்டிருந்தாலும் சரி, அந்த நபர் முதியவராக ஆன பின்பும் கூட அதாவது அறுபது வயதைக் கடக்கும் போது மீண்டும் வெளிவந்து அக்கியை ஏற்படுத்தலாம்.

அந்த நோய்க்கும், 

ஏசைக்லோவிர் மருந்தை உடனடியாகக் கொடுப்பதன் மூலம் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.


சின்னம்மை கண்ட ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்களில் 20% பேருக்கும், எதிர்ப்பு சக்தி குன்றியோரில் 50% பேருக்கும் அவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் அக்கி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிக. 


யாருக்கெல்லாம் சின்னம்மை தீவிரத்துடன் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது? 


எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறிப்பாக அதிக அளவில் ஸ்டீராய்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், 


புற்று நோய் சிகிச்சையில் இருப்பவர்கள், மனித எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர், கர்ப்பிணிமார்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள், குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள், குறைவான எடை கொண்ட ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள், ஒரு வயதுக்குட்பட்ட சிசுக்கள், 60+ வயதைத் தாண்டிய முதியோர் 

ஆகியோருக்கு சின்னம்மை தொற்று ஏற்படும் போது தீவிரத்துடன் வெளிப்படக்கூடும். எனவே அதிக கவனம் தேவை. உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். 


சின்னம்மை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வழிகள் உள்ளனவா? 


ஆம். சின்னம்மைக்கு எதிரான தடுப்பூசியை நமது குழந்தைகளுக்கு 

முதல் தவணை - 12 முதல் 15 மாதங்களுக்குள்ளும் 

இரண்டாவது தவணையை  - 4 முதல் 6 வயதிலும் வழங்கலாம். 


இந்தத் தடுப்பூசி 70 முதல் 90%  தொற்றுகளைத் தடுக்கவும், 95% தீவிரத் தொற்றுகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. 


இந்தத் தடுப்பூசியை, 

சின்னம்மை ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த குழந்தைக்கு மூன்று நாட்களுக்குள் வழங்கினால் நோயின் தீவிரம் குறைவதைக் காணலாம். 


எனது குழந்தைக்கு சின்னம்மை தடுப்பூசி போட்டும் சின்னம்மை வந்து விட்டதே. ஏன்? 


சின்னம்மை தடுப்பூசி நோய்த் தொற்றை 70-90% தடுக்கும் என்று ஆய்வுகளில் நிரூபணமாகியிருப்பதால், 10-30% பேருக்கு தடுப்பூசி போட்டிருந்தாலும் தொற்று ஏற்படலாம். ஆயினும் தீவிர நோய் நிலை ஏற்படாமல் தடுப்பூசி காக்கும். 


இதுவரை சின்னம்மை தொற்று ஏற்படாத வயது வந்தோரும் கூட இந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை - நான்கு மாத இடைவெளியில் போட்டுக் கொள்ளலாம். 


அக்கிக்கு எதிரான தடுப்பூசியும் 50+ வயதினருக்குக் குறிப்பாக நீரிழிவு மருத்துவப் பயனாளிகளுக்கென சந்தையில் உள்ளது. 

தேவைப்படுவோர் அக்கி ஏற்படாமல் இருக்க இந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை -  இரண்டு முதல் ஆறு மாத இடைவெளியில் பெற்றுக் கொள்ளலாம். 


வீட்டில் ஒருவருக்கு சின்னம்மை ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்? 


சின்னம்மை ஏற்பட்டவரிடம் இருந்து வீட்டில் பிறருக்கும் தொற்று பரவாமல் இருக்க - தொற்று கண்டவரைத் தனிமைப் படுத்த வேண்டும். நோயின் அறிகுறிகள் தோன்றிய ஒருவரை தனிமைப்படுத்துவதற்குப் பெயர் "ISOLATION" ஆகும். 


கொப்புளங்கள் தோன்றியதில் இருந்து அவை சருகாகி உலரும் வரை இந்தத் தனிமைப்படுத்துதல் தொடர வேண்டும். 


இதற்கடுத்த படியாக, 

தொற்று கண்ட நபருடன் நேரடித் தொடர்பில் இருந்த அவரது வீட்டினர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

தொற்று கண்டவருடன் தொடர்பில் இருந்து, இன்னும் நோயின் அறிகுறிகள் தோன்றாதவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதை "QUARANTINE" என்கிறோம். 


தற்காலத்தில் இந்த குவாரண்டைன் என்பது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை.  அதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 


பொதுவாக ஒரு குடும்பத்தில் முதலில் தொற்று கண்டவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் போது, இரண்டாவது தொற்று கண்டவருக்கு முன்னவரை விட தீவிரமாக நோய் வெளிப்படுவதைக் காண முடிகின்றது. 


இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், சின்னம்மை தொற்று வீட்டில் உள்ள முதியோர்களுக்கும் அதிகமாக ஏற்பட்டு தீவிரத் தொற்றை ஏற்படுத்துகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 


கொப்புளங்கள் தோன்றிய  24 மணிநேரத்திற்குள், அவர்களுக்கு ஏசைக்லோவிர் / வால்ஏசைக்லோவிர் மருத்துவ சிகிச்சை கிடைத்திடச் செய்ய வேண்டும். 


- தொற்று கண்டவரின் விரல் நகங்களை வெட்டி விட வேண்டும்.  கைகளில் துணி கையுறை அணிவிக்கலாம். இது கொப்புளங்களில் ஏற்படும் அரிப்பின் போது அதிகமாக சொரிந்து காயம் ஏற்படாமல் தடுக்க உதவும். 

- அரிப்பு ஏற்படும் போது காலமைன் லோசன் தடவலாம்.

வேறு எந்த வலி நிவாரணி களிம்போ வேறு வகையான தைலங்களோ தடவுதல் கூடாது. 

- தினமும் லேசான  வெந்நீரில் உடலை ஒத்தி எடுக்கலாம். இது கொப்புளங்கள் மீது பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும். 

- நீராகாரங்களாகப் பருகக் கொடுக்கலாம். 

- அரிப்புக்கும் காய்ச்சலுக்கும் மருத்துவர் பரிந்துரையில் சிகிச்சை எடுக்க வேண்டும்

- கொப்புளங்கள் சருகாகி உலர்ந்ததும் குளியல் போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே வரலாம். 


அபாய அறிகுறிகள் குறித்த கவனம் தேவை - 

சின்னம்மை ஏற்பட்டவருக்கு இரண்டாவது வாரத்தில் 

- பிதற்றல் நிலை 

- அதீத தலை வலி

- வலிப்பு 

- மூர்ச்சை நிலை 

- மூச்சுத் திணறல் 

- தலை சுற்றல் 

- வயிற்று வலி

ஆகியன ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை வழங்கிட வேண்டும். 


சின்னம்மை தானே என்று லேசாக எடுத்துக் கொள்ளாமல் 

அதற்கு வழங்க வேண்டிய மருத்துவ சிகிச்சையையும் 

அதற்குரிய சரியான வழிகாட்டுதல்களையும் கடைபிடித்தால் நோயின் தீவிரத்தையும் 

காலத்தையும் அதன் பாதிப்புகளையும் நம்மால் குறைத்திட முடியும். 


நன்றி இந்து தமிழ் 

மறையாத கட்டுக் கதைகள் - 3 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.