Incentive பெற்று வரும் ஆசிரியர்களின் திறனை மதிப்பீடு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

 


ஊக்க ஊதியம் பெறும் ஆசிரியர்களின் திறனை மதிப்பீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு


மதுரை, ஜூலை 5-


ஊக்க ஊதிய உயர்வை தொடர்ந்து பெறும் ஆசிரியர்கள், தாங்கள் பெற்ற கூடுதல் அறிவு, திறன்களை கற்பித்தல் பணியின்போது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்துகின்றனரா என்பதை அவ்வப்போது மதிப்பீடு செய்வதற்கான நடைமுறையை தமிழ்நாடு அரசு வகுக்க  வேண்டும் என் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே குன்னாரம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனு: 


நான் 1999ல் இடைநிலை ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். எம்.ஏ., பி.எட்.,தேர்ச்சியடைந்தேன். இதற்காக 2013 முதல் எனக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. அது தவறானது என தணிக்கையில் ஆட்சேபனை எழுப்பப்பட்டது. எனது ஊதியம் மாற்றியமைக்கப்பட்டது. ஊக்க ஊதிய உயர்விற்காக வழங்கிய கூடுதல் தொகையை திரும்பப் பெற கொட்டாம்பட்டி வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டார். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். 


இந்த வழக்கினை நீதிபதி பி.புகழேந்தி அவர்கள் விசாரித்தார்.


 மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்:

 மேல்நிலை கல்வி பாடத்திட்ட பாடங்களில் தகுதிகளை பெறும் இடைநிலை ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெற தகுதியானவர்கள். அதற்குரிய அரசாணை நடைமுறையில் உள்ளது. பிந்தைய நடவடிக்கைகள் மூலம் மனுதாரருக்கு ஏற்கனவே வழங்கிய சலுகையை முன்தேதியிட்டு பறிக்க முடியாது.


அரசு வழக்கறிஞர்: 

பட்டப்படிப்பை முடித்ததற்காக வழங்கிய ஊக்க ஊதிய உயர்வு, நடைமுறையில் உள்ள அரசாணைகளுக்கு முரணானது. தணிக்கையின்போதுதான் இத்தவறு கண்டறியப்பட்டது. இதன் விளைவாக, மனுதாரரின் ஊதியம் திருத்தி அமைக்கப்பட்டு, வழங்கப்பட்ட கூடுதல் தொகை திரும்பப் பெற உத்தரவிடப்பட்டது. இவ்வாறு வாதம் நடந்தது.


நீதிபதி பிறப்பித்த உத்தரவு: 

மனுதாரர் இடைநிலை ஆசிரியர். மேல்நிலை கல்வி பாடத்திட்டத்தில் பொருளாதாரம் ஒரு பாடமாக இருந்தாலும், அந்த ஒரு காரணத்திற்காக மட்டும் ஊக்க ஊதிய உயர்வு கோர மனுதாரருக்கு உரிமை இல்லை.


இடைநிலை ஆசிரியராக மனுதாரர் வழக்கமாக மேற்கொள்ளும் பணிகளுக்கும், அவர் பெற்ற பொருளாதார பட்டப்படிப்பு தகுதிக்கும் இடையே நேரடியான அல்லது நியாயமான தொடர்பு ஏதுமில்லை. அத்தகுதியின் மூலம் அவர் பெற்ற கூடுதல் அறிவு, அவர் கற்பிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் என்றோ அல்லது ஊக்க ஊதிய உயர்வு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றும் என்றோ மனுதாரர் நிரூபிக்கவில்லை. 


அரசாணைப்படி எம்.ஏ.,பொருளாதாரம் தகுதியை பெற்றதற்காக ஊக்க ஊதிய உயர்வு பெற மனுதாரர் தகுதியற்றவர். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.


உயர்கல்வி தகுதி பெறுவதற்காக வழங்கப்படும் தொடர் முன்பணம் மற்றும் ஊக்குவிப்பு ஊதிய உயர்வு திட்டத்தை ரத்து செய்வது குறித்த கொள்கை முடிவை, அரசு 2020ல் எடுத்தது. இருப்பினும், முந்தைய கொள்கை முடிவின் கீழ் வழங்கப்பட்ட ஊக்குவிப்பு ஊதிய உயர்வுகளை பல ஆசிரியர்கள் தொடர்ந்து பெற்று வருகின்றனர். 


ஊக்க ஊதிய உயர்விற்காக செலவிடப்படும் தொகை வரி செலுத்துவோரின் பணம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஊக்க ஊதியம் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கத்தை அது நிறைவேற்றும் வரையில் மட்டுமே இத்தகைய செலவினத்தை நியாயப்படுத்த முடியும்.


மதிப்பீடு

ஊக்க ஊதிய உயர்வை தொடர்ந்து பெறும் ஆசிரியர்கள், தாங்கள் பெற்ற கூடுதல் அறிவு, திறன்களை கற்பித்தல் பணியின்போது மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்துகின்றனரா என்பதை அவ்வப்போது மதிப்பீடு செய்வதற்கான நடைமுறையை தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும். அம்மதிப்பீட்டின் அடிப்படையில், ஊக்க ஊதிய உயர்வு பெற்று வரும் ஆசிரியர்களுக்கு சலுகையை தொடர்ந்து வழங்கலாமா என்பது குறித்து, அரசு முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் உத்தரவிட்டார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.