கான்சியா : தாய்ப்பால் விழிப்புணர்வு வார தகவல்

 


கான்சியா : தாய்ப்பால் விழிப்புணர்வு வார தகவல்


தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்று 

லாவ்...

அருகில் உள்ள பந்தமான நாடுகள்

வியட்நாமும் 

தாய்லாந்தும் 

கம்போடியாவும்


1950 களில் 

லாவ் நாட்டை பிரெஞ்சு காலணி ஆதிக்கத்தில் இருந்து மீட்பதற்கான 

விடுதலைப் போர் நடந்து கொண்டிருந்தது. 


இதற்கு ஆதரவாக அருகில் உள்ள வியட்நாம் நாட்டின் ராணுவம் நேசக்கரம் நீட்டியது. 


ஹுவாய் துவா எனும் நீரோடை இருக்கும் பகுதியில் 

உக்கிரமான போரின் விளைவால் 

அமெரிக்க படைகள் - வியட்நாம் வீரர்களின் ஆயுதக்கிடங்கு மற்றும் தங்குமிடங்களை குண்டுகளிட்டு அழித்தனர். 


அதில் வியட்நாம் ராணுவ வீரர்களும் பாதிப்புக்குள்ளாகினர். 


அவர்களுக்கு உணவு செல்லும் வழியும் 

தடைபட்டுப் போனது. 


இந்த சூழ்நிலையில் 

வியட்நாம் முகாமில் ஒரு ராணுவ வீரருக்கு 

அனோஃபிலஸ் கொசு வகையினால் பரப்பப்படும் மலேரியா காய்ச்சல் வரவே 


அருகில் இருந்த கிராமத்திற்கு 

உதவி கேட்டு ராணுவ வீரர்கள் வந்தனர். 


அப்போது கான்சியா  எனும் 18 வயது நிரம்பிய அப்போது தான் தனது முதல் குழந்தையை ஈன்று பால் கொடுக்கும் காலத்தில்  பெண்ணொருத்தி இருந்தார். 

  

அவரிடம் சென்ற ராணுவ வீரர்கள் 

"உயிருக்கு மன்றாடும் வியட்நாம் நாட்டு சகோதரனுக்கு தங்களின் பாலைத் தந்து உதவ வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர். 


அக்காலத்தில் மட்டுமன்று 

இக்காலத்தில் கூட மற்றொரு சிசுவுக்குத் தாய்ப்பால் தருவதற்கே பல முறை சிந்திப்போம் தானே.. 


அப்போது நிலவி வந்த மூடநம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்து 

தன்னை நம்பி வந்த ராணுவ சகோதரனின் உயிரைக் காப்பாற்ற தனது தாய்ப்பாலைச் சுரந்து கொடுத்தார் கான்சியா. 


அந்தப் பாலைப் பருகி கூடவே மூலிகை சிகிச்சையும் மேற்கொண்டு  மலேரியாவில்  இருந்தும் மீண்டார் அந்த ராணுவ வீரர். 


பல போராட்டங்கள் உள்நாட்டுப் போர்கள் முடிவில் 1975 இல் லாவ் விடுதலை பெற்றது. பிறகு வியட்நாம் வீரர்கள் அனைவரும் அவர்கள் சொந்த நாடு திரும்பினர்.


தற்போது 50 ஆண்டுகள் கழித்தும் 

அந்த இருநாட்டு நல்லுறவு தூதர் 

உரையாற்றும் போது 

"இருநாடுகளுக்கு  இடையே உள்ள பந்தம் - சகோதரி கான்சியா தந்த தாய்ப்பாலால் இன்னும் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது"  என்றார். 


சகோதரி கான்சியா அவர்கள் 

அதற்குப் பிறகு 12 மகவுகள் ஈன்று 

தற்போது தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் அதே கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். 


தாய்பால் கொடையாகத் தந்த இந்த சகோதரியைப் பற்றி இன்று எழுதுவதற்கான காரணம் இருக்கிறது. 


ஆகஸ்ட் முதல் வாரம் 

தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாகும்.


தாய் சுரக்கும் தாய்ப்பால் 

அவர் சிசுவுக்கும் உதவுகிறது

மிஞ்சும் பாலை பால் வங்கிக்கு வழங்கினால் தாயற்ற பல சிசுக்களுக்கும் உதவும். 


தாய்ப்பால் வழங்குவது தாயின் கடமை

தாய் மற்றும் சேய் இருவரையும் அரவணைப்பது தந்தையின் கடமை. 


அன்புத் தாய்மாரே 

எங்கு இருந்தாலும் 

எந்தப் பணி செய்தாலும் 

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்கிடுங்கள் 


பெரியோரே சகோதரரே 

மக்கள் கூடும் இடத்தில்

முக்கியமாக பணி செய்யும் இடத்தில் 

தாய்ப்பால் வழங்கப்படுவதற்கு ஏற்ற சூழலை உண்டாக்க முன்னுரிமை வழங்கிடுவோம். 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.