Best diet for students at public exam times



பொதுத் தேர்வுகள் எழுதவுள்ள மாணவ மாணவிகளுக்கான உணவுகள்


Best diet for students at public exam times


பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளின் கவனத்திற்கு


பிளஸ்-2 தேர்வுகள் நாளை தொடங்க உள்ளது. ஆண்டு முழுக்க கண்விழித்து படித்தாலும், தேர்வு காலங்களில் நமது படிப்பு, மனநிலை, உடல் நிலை, உணவு முறை போன்றவையும் நாம் பெறும் மதிப்பெண்ணில் முக்கிய பங்கு வகிக்கிறது. தேர்வு தருகின்ற மன அழுத்தத்தால் மாணவர்கள் உணவு விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். ஆகவே, தேர்வு நேரத்தில், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், அவர்கள் நல்ல மதிப்பெண் பெற ஊக்குவிப்பதற்கும் உதவுகின்ற வகையில் உணவு முறைகளை அமைத்துக் கொள்ளவேண்டியது முக்கியம். அதுபற்றி பிரபல ஊட்டச்சத்து நிபுணர் சில தகவல்களை பகிர்ந்து கொள்கிறார். 


இவர், பொது தேர்வை எதிர்நோக்கி இருக்கும் மாணவ-மாணவிகளுக்கு தரும் ஆலோசனைகள்... 


 *காலை உணவு...* 


‘‘மூளை சீராக இயங்க அதிக ஆக்சிஜனும், சீரான ரத்த ஓட்டமும் அவசியம். எல்லா சத்துகளும் கொண்ட சமச்சீரான உணவு மட்டுமே மூளையை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும். மூன்று வேளை சாப்பிட வேண்டும். என்ன காரணமாக இருந்தாலும் காலை உணவை தவிர்க்கக் கூடாது. காலை உணவு தான் உடலுக்கு அதிக சக்தியைத் தருகிறது. தேர்வு நேரத்தில் காலையும், மதியமும் நன்றாக சாப்பிட வேண்டும். எளிதில் ஜீரணமாகக்கூடிய இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவை காலை உணவுக்கும், இரவு உணவுக்கும் நல்லது. தோசை, பூரி, நூடுல்ஸ் போன்றவற்றை காலை வேளையில் தவிர்ப்பது நல்லது. தேவைப்பட்டால், தினை பொங்கல், சேவை நூடுல்ஸ் போன்றவைகளை காலை உணவாக சாப்பிடலாம். 


 *மன அழுத்தம் நீங்க...* 


அரிசி சாதம், தக்காளி சாதம், பருப்பு சாதம், ரசம் சாதம், கீரை சாதம் மதிய உணவுக்கு நல்லது. புளியோதரை, லெமன் சாதம் போன்ற புளிப்புள்ள சாத வகைகளைத் தவிர்க்க வேண்டும். அதுபோல் இரவில் வயிறு நிறைய சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். இரவில் படுக்கச்செல்லும் போது பால் சாப்பிடலாம். பாலில் உள்ள ‘டிரிப்டோபென்' எனும் அமினோ அமிலம் மன அழுத்தத்தைத் தவிர்க்கும் அற்புத மருந்து. அதுமட்டுமல்ல, மூளையில் நினைவாற்றலுக்கு உதவும் நரம்பு செல்களை உறுதியாக வைத்திருப்பதும் இதுதான். 


*மோர் அவசியம்...* 


மதிய உணவில் தினமும் ஒரு பருப்பு, ஒரு கீரை, ஒரு காய்கறி, தயிருக்கு மாற்றாக நீர் மோர் இருக்க வேண்டும். கேரட், பீட்ரூட், அவரை, முட்டைக்கோஸ் போன்ற அடர்ந்த நிறமுள்ள காய்கறிகள் தேர்வு நேரத்தில் ஏற்றவை. மூளையை இயக்குகின்ற சத்து இவற்றிலிருந்து கிடைக்கும். வைட்டமின் ஏ நிறைந்த முருங்கைக் கீரை கண்களுக்கு மிகவும் நல்லது. மாணவர்கள் அதிக நேரம் படிக்கும் போது கண்ணில் எரிச்சல் ஏற்படாமல் பாதுகாக்கும். தேர்வு நேரத்தில் ஏற்படுகின்ற மன அழுத்தத்தால் மாணவர்களுக்கு வயிற்றில் அதிகமாக அமிலம் சுரந்து அல்சர், அஜீரணம் போன்றவை தலை காட்டும். மோர், அமிலம் சுரப்பதைக் கட்டுப்படுத்துவதோடு, ஜீரண சக்தியை ஒழுங்குபடுத்தும். 


*மாலை நேர ஸ்நாக்ஸ்* 


 மாலை நேரத்தில் சுண்டல், வேகவைத்த வேர்க்கடலை, பாதாம் பருப்பு, தேனில் ஊறவைத்த பேரீட்சை, அத்திப்பழம், முளைகட்டிய பயறுகள், காய்கறி சாலட், பழ சாலட் போன்றவற்றை சாப்பிடலாம். பாதாம் பருப்பில் உள்ள ‘செலினியம்' நினைவாற்றலுக்கு மிக நல்லது. ஊறவைத்த பாதாமை அரைத்து சூடான பாலில் கலந்து தினமும் இரண்டு வேளை குடிப்பது படித்தது மறக்காமல் இருக்க உதவும். 


*பழம் நல்லது...* 


 தேர்வு நேரங்களில் நோய்வராமல் பாதுகாக்க வேண்டுமானால் தினமும் ஏதாவது ஒரு பழம் சாப்பிட வேண்டும். பழங்களில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. நார்ச்சத்து ஜீரணத்துக்கு உதவுகிறது. வாழைப்பழம், திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், மாதுளை, தக்காளி, பப்பாளி ஆகியவை உடனடியாக புத்துணர்வைத் தருபவை’’- இவ்வாறு தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகளுக்கு ஊட்டச்சத்து நிபுணர் ரேணுகா தேவி அதுதொடர்பான தகவல்களை வழங்கி, புத்துணர்வை ஊட்டினார். 


*முத்திரை...* 


 மறந்த விஷயங்களை நினைவுக்கு கொண்டு வருவதில் யோக முத்திரைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. அந்தவகையில் தேர்வறையில் படித்த பாடங்கள் மறந்துபோனால், சின் முத்திரையை செய்து பாருங்கள். மோதிர விரலும், கட்டை விரலும் தொடும்படி மற்ற விரல்களை நேராக நீட்டுங்கள். இப்படி செய்யும்போது, படித்த விஷயங்கள் நினைவுக்கு வரும். திரும்பவும் கூறுகிறேன்.... படித்த விஷயங்கள் மட்டுமே நினைவுக்கு வரும். 


*இரவு கண்விழித்து படிக்கும்போது...* 


மாணவர்கள் தூக்கம் வராமல் இருக்க காபி, டீ அருந்துவது வழக்கம். ஆனால் இவையும் மந்தத்தன்மையை உண்டாக்கும். இவற்றுக்கு பதிலாக, இரவில் சூடான பால், லெமன் டீ, காலையில் எலுமிச்சை பழச்சாறு அல்லது காய்கறி சூப், கீரை சூப் சாப்பிடலாம். தண்ணீர் நிறைய பருகுவது, படிக்கும் போது ஏற்படுகின்ற தலைவலியைக் குறைக்கும். படிக்கின்ற நேரத்தில் சிப்ஸ், சீவல் போன்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிட வேண்டாம். தேர்வு முடியும் வரை கொழுப்பு மிகுந்த அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. முடியாத பட்சத்தில் மீன், முட்டை சாப்பிடலாம். அதுவும் இரவில் நிச்சயம் வேண்டாம். கொழுப்பு உணவு மூளையை மழுங்கடித்து தூக்கத்தை வரவழைக்கும். 

  

*தேர்வுக்கு செல்வதற்கு முன்...* 


 பரீட்சைக்கு செல்லும் முன்பு, சப்போட்டா, அத்தி இது போன்ற பழங்களை அதிகமாக சாப்பிடலாம். வால்நட்ஸ், பாதாம், உலர் திராட்சை, பேரீட்சை போன்றவை நல்ல ஆற்றலை கொடுக்கும் என்பதால் தேர்வுக்கு செல்லும் முன்பு இவற்றை சாப்பிடலாம். பசி தாங்கும். 


 *துரித உணவுகள்..* 


 குழந்தைகளுக்கு இனிப்பு சாக்லெட், நூடுல்ஸ், பாஸ்ட் புட் போன்றவை ரொம்ப பிடிக்கும். ஆனால் தேர்வு முடியும் வரை அவற்றை தவிர்ப்பது நல்லது. அதற்கு மாற்றாக, பாதாம், வால்நட், பேரீட்சை இவை மூன்றையும் நன்றாக அரைத்து, லட்டு போல உருவாக்கி உண்ண கொடுக்கலாம். இது படிக்கும்போதும், தேர்விற்கு செல்லும்போதும் சிறப்பான ஸ்நாக்ஸாக இருக்கும்.