நேபாள வெள்ளம்: 1,643 மாணவர்களைக் காப்பாற்றிய ஆசிரியர்
நேபாளத்தில் நேர்ந்த பெருவெள்ளத்தில் ஆசிரியர் ஒருவர் தனது சாதுர்யமான நடவடிக்கையால் 1643 பள்ளி மாணவர்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். நேபாளத்தைச் சேர்ந்த பலரும் ஆசிரியரின் செயலை பாராட்டி வருகின்றனர்.
பள்ளியில் இருக்கும் மாணவர்களின் பாதுகாப்புக்கு தானே முழு பொறுப்பு என்பதை உணர்ந்து வெள்ளத்தின் கோரத்தன்மையை உணர்ந்து விரைந்து செயல்பட்டதாக ஆசிரியர் கூறுகிறார்.
நேபாளத்தில் திரிசூலி பள்ளத்தாக்கில் திரிபுவன் திரிசூலி மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் ஆங்கில ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் இருப்பவர் ராஜேந்திர தவாடி.
வெள்ளம் ஏற்பட்ட புதன்கிழமை காலை சுமார் 9.20 மணியளவில் ஆசிரியர் தவாடிக்கு அவரின் நண்பரிடம் இருந்து வெள்ளத்தின் கோரத்தன்மை குறித்து எச்சரிக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டி, களிமண், கலந்த வெள்ளநீர் மிகுந்த ஆக்ரோஷமாக நீர்வழித்தடத்தை உடைத்துக்கொண்டு வருவதாகவும் இதில் கட்டடங்கள், பாலங்கள், மின்நிலையங்கள் அடித்துச்செல்லப்படுவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து நொடியையும் வீணாக்காமல் சாதுர்யமாக செயல்பட்ட தவாடி, மற்ற இடங்களைக் காட்டிலும் பள்ளிக் கட்டடம் பாதுகாப்பானது என்பதை உணர்ந்தார்.
பள்ளியின் எச்சரிக்கை மணியை உடனடியாக அழுத்தி, மாணவர்களை பதட்டமடையச் செய்யாமல் பள்ளிக் கட்டடத்திற்கு மேலே அனைவரையும் அழைத்துச் செல்ல சக ஆசிரியர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.
ஏனெனில் அந்த மூன்று மாடி கான்கிரீட் கட்டடம் ஆற்றிலிருந்து சுமார் 60 மீட்டர் உயரத்தில், கிராமத்தை கிழக்குக் கரையுடன் இணைக்கும் இரும்புப் பாலத்தின் அதே மட்டத்தில் அமைந்திருந்தது.
ஆசிரியரின் இத்தகைய உடனடி செயலால் 1,643 பள்ளி மாணவர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. எனினும் சமூகவியல் ஆசிரியர் உயிரிழந்தார். பள்ளியின் மற்றொரு ஆசிரியர் கதவுகளைப் பூட்டிவிட்டுத் திரும்பும் போதுவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார்.
பள்ளிக்கு மாணவர்களை அனுப்பிவிட்ட பெற்றோர்கள் பரிதவிப்பில் இருக்கையில், சுயநலமாகச் செயல்படாமல் மாணவர்களின் உயிரைக் காக்கும் வகையில் செயல்பட்ட ஆசிரியர் தவாடியை உள்ளூர் மக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.