கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆப்பிள்

 
பொதுவாக உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க செல்லும்போது, ஆப்பிள் கொடுப்பது வழக்கம். அந்த அளவுக்கு ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியும், ஊட்டச் சத்தும் நிறைந்திருக்கிறது.ஆப்பிள் குறித்து மேற்கொள்ளப்பட்ட புதிய ஆராய்ச்சியில் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது, நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் நீண்ட ஆயுளை அளிக்கும் என்பது தெரியவந்துள்ளது. சீனாவை சேர்ந்த ஹாங்காங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஸென் யூ சென் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியின் வெளிப்பாடு இது.

ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், சாராசரியாக மனித ஆயுளை 10 சதவீதம் அதிகரிப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். பழங்களை, குறிப்பாக ஆப்பிளை தேடிச்செல்லும் வண்டுகள் உள்ளிட்ட பூச்சிகளிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவற்றின் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளவு அதிகமாக இருப்பதன் மூலமும் இது உறுதியாகி உள்ளது.

இது குறித்து தலைமை ஆராய்ச்சியாளர் ஸென் யூ சென் கூறியதாவது:

ஆப்பிளில் உள்ள பாலிபெனால் என்ற அதிக சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், உடலில் உள்ள நோய்க்கிருமிகளை பெருமளவில் அழிக்கிறது. இதனால் நோயில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவில் எடுத்துக் கொள்வதால் ஆரோக்கியத்துடன் உடல் பருமன் குறைவது உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைப்பதை ஏராளமான ஆய்வுகள் வலியுறுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வும் அதையே வலியுறுத்தி உள்ளது.

தக்காளி, ப்ராகலி, ப்ளூபெரி, ஆப்பிள் உள்ளிட்ட பழங்களில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆன்டிஆக்சிடன்ட்ஸ் அதிக அளவு உள்ளது. அவற்றில் பாலிபெனால் என்ற அதிக சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்சிடென்ட், நோயில் இருந்து பாதுகாப்பு அளிப்பதுடன் ஆயுளையும் அதிகரிக்கிறது. இது ஆப்பிளில் மிக அதிக அளவில் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து உடல் மற்றும் மூளைச் செல்களின் செயல்பாட்டையும் தூண்டுகிறது.

அன் ஆப்பிள் எ டே, கீப்ஸ் த டாக்டர் அவே’ என்பது அனைவரும் அறிந்த மொழி. “நாளும் ஒரு ஆப்பிள் பழத்தை நாடும் மனிதனை மருத்துவன் நாடமாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. பழமொழிகள் பொய்ப்பதில்லை என்பது மறுபடியும் மெய்பிக்கப்பட்டிருக்கிறது.

கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் ரூய் ஹாய் லியு என்பவர் ஆப்பிள் பழம் பெண்களின் மார்பகப் புற்றுநோயை தடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தன்னுடைய ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கிறார்.

ஆப்பிள் பழம் மட்டுமல்லாது காய்கறிகளும் இதே பண்புகளைக் கொண்டிருப்பதாக இவரது கட்டுரை தெளிவாக்குகிறது. புதிய ஆப்பிள் பழச்சாறு கொடுக்கப்பட்டதால் எலிகளின் பால்சுரப்பிகளில் தோன்றிய கட்டிகள் சிறியதாகிப்போயின. ஆப்பிள் பழச்சாற்றின் அளவு கூடும்போது கட்டிகளின் அளவு இன்னும் சிறுத்துப்போனது. மேலும் இந்தக்கட்டிகள் தீங்கற்றவையாகவும் மாறிப்போயின. மனிதர்களிலும் விலங்குகளிலும் மார்பகப்புற்றுநோய்க்கு காரணமான adenocarcinoma எனப்படும் ஆபத்தான கட்டிகள் மரணத்தை விளைவிக்கக்கூடியவை. பேராசிரியர் லியு ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 81 சதவீதமாக இருந்தது.

24 வாரங்களுக்கு நாளொன்றுக்கு ஓர் ஆப்பிள் பழத்தின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 57 சதவீதமாக குறைந்தது.

நாளொன்றுக்கு மூன்று ஆப்பிள் பழங்களின் சாறு வீதம் கொடுக்கப்பட்ட விலங்குகளில் இந்த கட்டிகளின் பாதிப்பு 50 சதவீதமாகவும், நாளொன்றுக்கு ஆறு ஆப்பிள் பழங்களின் சாறு கொடுக்கப்பட்ட விலங்குகளுக்கு இந்த பாதிப்பு 23 சதவீதமாகவும் குறைந்து போயிருந்தது.

ஆப்பிள்பழங்களில் காணப்படும் phytochemicals எனப்படும் வேதிப்பொருள்கள் மார்பகப் புற்றுநோய் செல்களில் வீக்கத்தை ஏற்படுத்தும் NFkB என்ற பாதையை தடைசெய்துவிடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

அன்றாட உணவில் பழங்களையும் காய்கறிகளையும் அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் பால்சுரப்பிகளில் ஏற்படும் புற்றுநோய் கட்டுப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே பொருள் குறித்து ஏற்கனவே பல ஆய்வுக்கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இருந்தாலும் அந்தக் கட்டுரைகளுக்கு வலுசேர்க்கும் விதமாக கார்னல் பல்கலைக்கழக பேராசிரியர் லியு வின் புதிய ஆய்வுக்கட்டுரை அமைந்துள்ளது. பெண்களை அச்சுறுத்தும் மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆற்றலை ஆப்பிள் பழத்தில் அதிகமாக உள்ள phenolics or flavonoids எனப்படும் phytochemicals பெற்றிருக்கின்றன என்பதை படம் தெளிவாக்குகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...