கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மீது துறைரீதியாக நடவடிக்கை - உயர்நீதிமன்றம் உத்தரவு...

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்,  வட்டாட்சியர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...



பட்டா மாற்றம் செய்துதரக் கோரிய மனுவை 6 மாதம் பரிசீலிக்காமல் இருந்ததால் நடவடிக்கை


வருவாய் துறையினரின் மெத்தனப் போக்கான செயல் கண்டனத்திற்குரியது என நீதிபதிகள் கருத்து


உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை ஜனவரி 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு.. 


பட்டா மாற்றம் செய்து தரக் கோரிய மனுவை ஆறு மாதங்களாக பரிசீலிக்காத வருவாய் துறையினரின் மெத்தனப் போக்கான செயல் கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் வட்டாட்சியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. ஆழ்துளை கிணறு, மின் இணைப்பு ஆகியவற்றுடன் கூடிய இரண்டு சர்வே எண்களுடன் உள்ள நிலத்திற்கான பட்டாவை தன் பெயருக்கு மாற்றித் தரக் கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் திருவள்ளூர் தாசில்தார் ஆகியோரிடம் வெள்ளியூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவர் கடந்த மே 3ம் தேதி பரிந்துரை மனு அனுப்பியுள்ளார்.அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை எதிர்த்து கோவிந்தராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஞானபானு ஆஜராகி மனு கொடுத்து நீண்ட நாட்களாகியும் விசாரிக்கவில்லை என்று தெரிவித்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பட்டாவை தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டுமென்று மே மாதத்தில் கோரிக்கை அளித்த மனுதாரரையும், நான்கெல்லையிலும் உள்ள நில உரிமையாளர்களையும் விசாரிக்க வேண்டிய பணி 6 மாதங்களாகியும் முடிக்கப்படவில்லை. எனவே, இரண்டு மாதத்திற்குள் மனுதாரரின் மனு மீது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் முடிவெடுக்க வேண்டும்.வருவாய் துறையில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள், மனுக்கள், மேல்முறையீடு மனுக்கள், மறு ஆய்வு மனுக்கள் ஆகியவற்றின் மீது உரிய காலத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், நில நிர்வாக ஆணையர் சுற்றறிக்கை பிறப்பித்தும், அதை வருவாய் துறையினர் முறையாக பின்பற்றவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்காத வருவாய் துறையினரின் மெத்தனப்போக்கான செயல் கண்டனத்திற்குரியது. உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காத திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோர் மீது இரண்டு மாதத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கையை தலைமை செயலாளர் எடுக்க வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை ஜனவரி 30ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Census 2027 | Instruction Manual for House-listing and Housing Census

  இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பிற்கான அறிவுரைக் கையேடு Census of India 2027 | Instructi...