கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>பணி நியமன உத்தரவு வழங்கிய பின் மீண்டும் சான்றிதழ் சரிபார்ப்பு

எப்போதும் இல்லாத வகையில், டி.இ.டி., தேர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில், அரசு வட்டாரத்தில் இருந்து, தொடர் நெருக்கடி வந்ததால், முழு திருப்தியில்லாமல், அரைகுறை மனதுடன், இறுதி தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது.

இதன்காரணமாக, 20 ஆயிரம் பேர், பணி நியமன உத்தரவை வாங்கிச் சென்ற பின், அவர்களுடைய சான்றிதழ்களை, மீண்டும் சரிபார்க்கும் பணியில், டி.ஆர்.பி., இறங்கியுள்ளது. ஒவ்வொரு தேர்வின்போதும், சான்றிதழ்களை ஒன்றுக்கு பல முறை, டி.ஆர்.பி., அதிகாரிகள் குழு, அங்குலம், அங்குலமாக அலசி, ஆய்வு செய்யும். இதன் பின், இறுதி தேர்வு முடிவுகள் தயாராகும்.
சுதந்திரம் இல்லை :
தேர்வு முடிவுகளை, விரைந்து வெளியிட வேண்டும் என, எந்த தரப்பில் இருந்தும், டி.ஆர்.பி.,க்கு நெருக்கடிகள் வருவது இல்லை. ஆனால், டி.இ.டி., தேர்வு விவகாரத்தில், முழு சுதந்திரத்துடன் செயல்பட முடியவில்லை என, துறை வட்டாரங்கள், வருத்தத்துடன் ஒப்புக் கொள்கின்றன.ஜூலையில் நடந்த, டி.இ.டி., தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, ஆகஸ்ட்டிலும், அக்டோபரில் நடந்த, டி.இ.டி., தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நவம்பரிலும் நடந்தது. இவை, மாவட்ட தலைநகரங்களில் நடந்தது.வழக்கமாக, மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடந்தாலும், அந்த ஆவணங்களை, டி.ஆர்.பி., அலுவலகத்தில், மீண்டும் ஒன்றுக்கு, பல முறை சரிபார்க்கப்படும். ஆனால், டி.இ.டி., தேர்வைப் பொறுத்தவரை, மாவட்டங்களில் நடந்த சரிபார்ப்பை, மீண்டும் ஒருமுறை, டி.ஆர்.பி., சரிபார்க்கவில்லை என, கூறப்படுகிறது.விரைந்து முடிவுகளை வெளியிட்டு, பணி நியமனம் செய்ய வேண்டும் என, தொடர் நெருக்கடிகள் வந்ததால், மீண்டும் ஒரு முறை, சான்றிதழ்களை சரிபார்க்க முடியவில்லை என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

அவசர விழா:
இம்மாதம், 4ம் தேதி, டி.இ.டி., தேர்வு முடிவுகள் வெளியாயின. மறுநாளே, 13ம் தேதி, பணி நியமன உத்தரவு வழங்கும் விழா குறித்து, தகவல்கள் வெளியாயின. அதன்படி, நேற்று முன்தினம், பிரம்மாண்டமாக நடந்த விழாவில், 20 ஆயிரம் பேருக்கு, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கான கலந்தாய்வு, 9,10,11 தேதிகளில், அவசரம், அவசரமாக நடந்தது. அதே போல், கடைசி நேரத்தில் தான், 2,308 முதுகலை ஆசிரியர்களுக்கான பணி நியமனம் வழங்குவது குறித்தும், முடிவு எடுக்கப்பட்டது. பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த முடிவையும் வெளியிட்டே ஆக வேண்டும் என, டி.ஆர்.பி.,க்கு நெருக்கடி வந்ததால், வேறு வழியில்லாமல், 12ம் தேதி இரவு, முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவு வெளியானது.முக்கியமான தேர்வுப் பணிகளில், இப்படி நெருக்கடிகள் அதிகரிப்பது, ஆரோக்கியமானது அல்ல என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, அவர்கள் மேலும் கூறியதாவது:ஒரு தேர்வை நடத்தி, முடிவை வெளியிட, குறைந்தபட்சம், 8 மாதங்கள் தேவை. இப்படித் தான், இதற்கு முந்தைய தேர்வுகள் நடந்துள்ளன. ஆனால், டி.இ.டி., தேர்வு இறுதி முடிவு, 3 மாதங்களில் வெளியிடப்பட்டுள்ளது.இப்படி, மிக விரைவாக, தேர்வுப் பணிகளை முடிப்பதற்கு ஏற்ற உள் கட்டமைப்பு வசதிகளோ, அதிகமான பணியாளர்களோ, டி.ஆர்.பி.,யில் கிடையாது. அப்படியிருக்கும்போது, நெருக்கடிகள் அதிகரித்தால், பணியை, சுதந்திரமாகவும், திருப்தியுடனும் செய்வதற்கு வாய்ப்புகள் இல்லை. எந்த காரணத்திற்காகவும், தேர்வு நிறுவனத்திற்கு, நெருக்கடி தரக் கூடாது.டி.ஆர்.பி.,யை, முழுவீச்சில் வலுப்படுத்தவும், உள்கட்டமைப்பு வசதிகளை பெருக்கவும், தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, டி.இ.டி., தேர்வு முடிவை சரியாக வெளியிடவில்லை என்றும், தகுதியானவர்கள் பலர், பட்டியலில் சேர்க்கவில்லை என்றும் கூறி, 10ம் தேதி, டி.ஆர்.பி., அலுவலகத்தை, 500க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.இந்த குளறுபடிகளை சரிசெய்யும் வகையில், தேர்வு பெற்றவர்களின் சான்றிதழ்களை, மீண்டும் ஒரு முறை சரிபார்க்கும் பணியை, டி.ஆர்.பி., துவக்கி உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன."முதலில், சான்றிதழ்களை, சரிவர சரிபார்க்காததால், இப்போது ஒரு முறை சரிபார்க்க திட்டமிட்டுள்ளோம். அதேபோல், தகுதியானவர்கள் விடுபட்டுள்ளார்களா என்பதையும் சரிபார்க்க உள்ளோம்' என, துறை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கள்ளர் சீரமைப்புப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு

Transfer counseling for Kallar Reclamation School teachers begins on 02.09.2026 – Circular from the Joint Director கள்ளர் சீரமைப்புப் பள்ளி ...