⚠️⚠️⚠️
“சண்டாளர்” என்ற பெயரை பயன்படுத்த தடை...
*🔹🔸தமிழ்நாட்டில் “சண்டாளர்” என்ற சாதிப் பெயரை வசைபாடவோ, நகைச்சுவையாகவோ பயன்படுத்த கூடாது என்று தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.*
▪️. பட்டியலின சாதிப் பிரிவு பட்டியலில் 48ஆவதாக சண்டாளர் என்ற சாதிப் பெயர் உள்ளது.
▪️. எனவே, பட்டியலினத்தில் உள்ள இந்த பிரிவினரை வசை பாடுவதற்கு பயன்படுத்த கூடாது,
▪️. மீறி பயன்படுத்தினால் SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளது...
'சண்டாளர்' என்ற சமூகத்தின் பெயரை நகைச்சுவைக்காகவோ, பொதுவெளியிலோ இனி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, " இந்தியாவின் சாதியக் கட்டமைப்பில் ஒவ்வொரு சாதிக்கும் வெவ்வேறு பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இப்பெயர்கள் சமூக மதிப்பையும், அவமதிப்பையும் சுட்டுவதாக உள்ளன. தங்களின் சாதியின் பெயர் இழிவாக இருப்பதாகக் கருதும் சாதிகள், அப்பெயரை மாற்றிக் கொள்வதும், அதற்கு அரசு ஒப்புதல் கொடுத்து அரசாணை வெளியிடுவதும் தொடர்ந்து நிகழ்கின்றன.மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு தேவையான அடிப்படையான பொருட்களை உற்பத்தி செய்தல், சடலங்களை அடக்கம் செய்தல் போன்ற சமூகப் பயனுள்ள பணிகளை செய்யும், சமூகக் குழுக்களை இழிவான பெயர்களில் அழைப்பதும், அரசியல் மேடைகளில் பிறரை வசைபாட பயன்படுத்துவதும், கலை இலக்கியங்கள், திரைப்பட நகைச்சுவை காட்சிகளிலும், திரைப்பட பாடல்களிலும் அப்பெயர்களை பயன்படுத்துவதும் பரவலாக உள்ளது.
இது, இப்பெயர்களில் உள்ள மக்களை புண்படுத்துவதாகும். தவிர இது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம் என்ற எண்ணமும் பொதுமக்களிடம் இல்லை. மேலும், பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டப்படி(Scheduled Castes and Scheduled Tribes (Prevention of Atrocities) Act, 1989) பொதுவெளியில் பட்டியல் சாதிப் பெயர்களை இழிவான பொருளில் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். தமிழகத்தின் சில பகுதிகளிலும், இந்தியாவிலும் 'சண்டாளர்' என்ற பெயரில் மக்கள் உள்ளனர்.தமிழகத்தில் பட்டியல் சாதியினர் அட்டவணையில் இப்பெயர் 48-ஆவது இடத்தில் உள்ளது. அண்மைக்காலங்களில் பிறரை இழிவுபடுத்தும் நோக்கில் இப்பெயர் பொது வெளியில் சமூக ஊடகங்களில் அழுத்தமாக பேசப்படுவதை காண முடிகிறது. எனவே, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ, அரசியல் மேடைகளிலோ சண்டாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்துவோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அரசுக்கு ஆணையம் பரிந்துரைக்கிறது". இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.