சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு
ஆயுள் தண்டனை வழங்கினால் இப்படி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதிப்பு.
சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிப்பு சாத்தான்குளம் வழக்கு : நீதிமன்றம் தலையிடாவிட்டால் இருவரின் உடல்களுடன் உண்மையும் புதைக்கப்பட்டிருக்கும் - நீதிபதி பரபரப்பு தீர்ப்பு
ஆயுள் தண்டனை வழங்கினால் இப்படி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது என்று நீதிபதி தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் கொலை வழக்கில் 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை அறிவித்ததும் பேனா நுனியை முடித்தார் நீதிபதி முத்துக்குமரன்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 2020ஆம் ஆண்டில் விசாரணைக்காக அங்கு உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் படுகாயம் அடைந்த இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த சமயத்தில் அவர்கள் இருவரும் இறந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அதில் பால்துரை என்பவர் 2020-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார்.
இந்த இரட்டைக் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடக்கிறது. தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான 9 போலீஸ்காரர்களும் குற்றவாளிகள் என கடந்த மார்ச் 23ஆம் தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் 9 காவலர்களுக்கான தண்டனை விவரங்களை மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் இன்று வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
காவல் நிலையத்தில் வைத்து இருவரும் காவல் சித்திரவதை செய்யப்பட்டு சாகடிக்கப்பட்டுள்ளனர். தந்தை முன் மகனையும், மகன் முன் தந்தையையும் அடைத்து வைத்து தாக்கியதை எளிதாக கருத முடியாது. இருவரும் நிராயுதபாணியாக இருந்தபோதும், இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து தாக்கியுள்ளனர். இருவரும் வியாபாரிகள். சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் இருப்பவர்கள். அவர்கள் மீது எந்த குற்ற வழக்கும் இல்லை என்றே தெரிகிறது.
குற்றவாளிகளை சார்ந்து குடும்பம் உள்ளது என்பதால் தண்டனையை குறைக்க வேண்டுமென்பதை ஏற்க இயலாது. தண்டனை என்பது குற்றத்தின் தன்மையை பொறுத்தே தீர்மானிக்கப்பட வேண்டும். குற்றவாளிகள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதால், கடுமையான குற்றமாகவே கருத வேண்டும். குற்றவாளிகள் நல்ல அறிவு வளர்ச்சி உள்ளவர்கள்; படித்தவர்கள். இதை சாதாரண குற்றமாக கருத முடியாது. பொதுமக்கள் பணத்தில் அரசு ஊதியம் பெற்றவர்கள், பொருளாதார அழுத்தத்தையோ, மன அழுத்தத்தையோ காரணமாக கூற இயலாது.
உயர் அதிகாரிகள் சொன்னதால் அடித்தோம் என்று சொல்வதை ஏற்க முடியாது. தந்தையும் மகனும் நிராயுதபாணியாக இருந்தும் இரவு முழுவதும் இரக்கமின்றி தாக்கியுள்ளனர். பழிவாங்கும் நோக்கில் கொடூர சம்பவம் நடந்து இருக்கிறது என்று தெரிவதாக தெரிவித்துள்ளார்.
சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பால கிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை, தலைமை காவலர் முருகன், காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில்முத்து ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு நடந்து வந்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர் பால்துரை கொரோனா தொற்றால் சிறையிலேயே உயிரிழந்தார். தொடர்ந்து இந்த வழக்கானது கடந்த 6 ஆண்டுகளாக மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் கடந்த மாதம் 23 ஆம் தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். அப்போது, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் கைதான இன்ஸ்பெக்டர் உள்பட 9 காவலர்களும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தொடர்ந்து குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை வழங்கலாம் என சி.பி.ஐ. மற்றும் மாநில அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது 9 காவலர்களுக்கும் அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை வழங்க வேண்டும் என சிபி.ஐ. மற்றும் ஜெயராஜ் குடும்பத்தினர் சார்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி இன்று தண்டனை விவரத்தை அறிவித்தார்.
இதன்படி கைது செய்யப்பட்ட காவலர்கள் 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார். இன்று மாலை 5.30 மணியளவில் சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 9 போலீஸ்காரர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தொடர்ந்து நீதிபதி முத்துக்குமரன் தண்டனை விவரங்களை அறிவித்தார்.
சட்டத்தை காக்க வேண்டியவர்களே குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார்கள். வேலியே பயிரை மேய்ந்ததுபோல அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். தந்தை, மகன் இருவர் மீதும் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளது. எங்கு அதிகாரம் உள்ளதோ, அங்கு பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். சட்ட திட்டங்களை காற்றில் பறக்கவிட்டு காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர். இரக்கமின்றி அடித்ததை கொடூரமாகவே பார்க்க வேண்டும்.
ஒரே நேரத்தில் தந்தை, மகன் என ஒரு குடும்பத்தின் ஆணிவேர் பிடுங்கப்பட்டுள்ளது. சாதாரண நபர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டிருந்தால் அவர்களுக்கு சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதில் குற்ற செயல்களை செய்துள்ளனர். காவல் நிலையங்களில் ஏற்படும் மரணங்களில் நேரடி சாட்சிகள் அரிதிலும் அரிதாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த வழக்கில் நேரடி சாட்சியம் உள்ளது. குற்றவாளிகளுக்கு பொருளாதார ரீதியாகவும் கடுமையான தண்டனை வழங்கினால் தான் இது போன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும்.
வழக்கில் கைது செய்யப்பட்ட 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதிப்பதே சிறந்தது. இதுபோன்ற வழக்குகளில் ஆயுள் தண்டனை வழங்கினால், இப்படி செயல்படும் போலீசாருக்கு அச்சம் ஏற்படாது. எனவே இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயில் முத்து ஆகிய 9 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ரூ.15 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.