கர்நாடக மாநிலத்தில் இளையோரிடத்தில் அதிகரித்து வரும் ஹெச் ஐ வி தொற்று
கர்நாடகா வழி பாடம் கற்போம்
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
2023 - 2024 ஆம் வருடம்
44,500 எச்.ஐ.வி தொற்றாளர்கள் என்றிருந்த நிலையில் தற்போது 2025-2026 இல்
66,600 என்று எண்ணிக்கை கூடியுள்ளது.
இந்தத் தொற்றாளர்கள் அனைவரும் 18-35 வயதுக்குட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் தற்போது
2.60 லட்சம் எச்.ஐ.வி தொற்றாளர்கள் இருக்கிறார்கள்
அதில் 2.05 லட்சம் பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார்கள்.
54000 பேர் எந்த சிகிச்சை வளையத்துக்குள்ளும் இல்லாமல் தங்களுக்கு தொற்று இருந்தும் அது குறித்த விழிப்புணர்வு இன்றி இருக்கிறார்கள்.
இவர்கள் மூலம் தான் தொற்று பிறருக்கு
- பாதுகாப்பற்ற உடலுறவு
- பாதுகாப்பற்ற ஊசி ஏற்றிக் கொள்ளுதல்
போன்ற வழிகளில் பரவி வருகிறது என்கின்றது ஆய்வு.
ஹெச். ஐ.வி. 90களில் பரவத் துவங்கிய போது அது 30+ வயதினரிடையே அதிகம் கண்டறியப்பட்டு வந்தது.
இப்போது 18+ முதல் 35 வயதுக்குள் அதிகமாகக் கண்டறியப்பட்டு வருவதன் காரணங்கள் இதோ..
1. ஆன்லைன் டேட்டிங் ஆப்களின் வருகை
ஆன்லைன் டேட்டிங் ஆப்கள் பல உள்ளன. அவற்றின் வழியாக ஊர் பேர் தெரியாத ஆள் யாரென்றே தெரியாதவர்கள் கூட
பிணைப்பு ஏற்படுகிறது.
இந்தப் பிணைப்பு பிறகு "ஹூக் அப்" எனும் பிரச்சனைக்குரிய கலாச்சார சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது. ஹூக் அப் என்றால்
கொஞ்ச நாள் டேட்டிங் ஆப்களில் பழகியவருடன் உடலுறவு கொள்ளுதல்.
இதை "டிஜிட்டல் ஹூக் அப்" என்கிறார்கள்
இதனுடன்
2. கெம் செக்ஸ் கலாச்சாரம்
ஆன்லைன் ஆப்கள் மூலம் இணைந்த இது போன்ற ஜோடிகள் உடலுறவில் ஈடுபடும் போதும் அதற்கு முன்பு மெத்தாம்பிடமின், கொகயன் போன்ற போதை வஸ்துக்களை உட்கொண்டு அதன் மூலம் எந்த ஒரு தடை உணர்வோ அச்ச உணர்வோ இல்லாமல் தங்குதடையின்றி உடலுறவு கொள்ளுதல் நிலை தான் கெம் செக்ஸ் ( CHEM - மருந்து SEX - உடலுறவு)
தன்னிலை மறந்த நிலையில் காண்டம் ( ஆணுறை) பெண்ணுறை போன்றவற்றை உபயோகிப்பதில்லை, உபயோகித்தாலும் அது கிழியுறுவதைக் கண்டுகொள்வதில்லை ஆகிய அலட்சியங்களால்
ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பால்வினை நோய்கள் பரவுகின்றன.
3. ஒருவருக்கு பலருடன் ஒரே நேரத்தில் தொடர்பு
ஒருவர் ஒருவருடன் உறவில் இருக்கும் போதே பலருடனும் அதே சமயத்தில் உறவில் ஈடுபடும் போது பால்வினை தொற்றுகள் எளிதில் பரவும் வாய்ப்பாக அமைந்து விடுகின்றன
4. ஆண்களுக்குள் உறவில் ஈடுபடுபவர்களிடம் சதவிகித அளவில் சற்று அதிகமாக ஹெச் ஐ வி தொற்று பரவி வருவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. சுத்தமற்ற ஊசிகள் / ஒருவர் பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தி போதை மருந்துகளை ஏற்றும் பழக்கம் இருப்பவர்கள் (PEOPLE WHO INJECT DRUGS)
6. இளையோரிடத்தில் பாதுகாப்பற்ற உடலுறவு குறித்தும், பால்வினை நோய்களின் பரவல் குறித்தும் போதுமான விழிப்புணர்வின்மை
என்று பல காரணங்கள் இதற்குப் பின்பு உள்ளன.
இளையோரிடத்தில் பால்வினை நோய்ப்பரவல் அதிகரித்திருப்பது ஏன்?
முன்பெல்லாம் குறிப்பிட்ட சில இரவு விடுதிகள், சில நைட் கிளப்கள், சிவப்பு விளக்குப் பகுதிகள் ஆகிய இடங்களில்
இருந்து மட்டுமே ஹெச்.ஐ.வி உள்ளிட்ட நோய்கள் பரவும் என்பது பொதுவான நம்பிக்கையாகவும், பொது சுகாதார ரீதியாக அந்த இடங்களைக் குறிவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போதுமானதாக இருந்தது.
விபச்சாரத்தில் ஈடுபடுவோரிடையே
ஹெச் ஐ வி , பால்வினை நோய் பரிசோதனைகள், கட்டாய ஆணுறை உபயோகிப்பு , சுய உதவிக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு விழிப்புணர்வு அதிகரித்தது.
ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஹூக் அப் கலாச்சாரம் - உடலுறவில் ஈடுபட மேற்கூறிய இடங்கள் தேவையில்லை
மாறாக ஆன்லைன் மூலம் ஜோடிகள் கிடைத்து, எளிதில் எந்த இடத்திலும் உடலுறவு கொள்ளும் நிலைக்கு பரவலாக்கம் ஆகியுள்ளது. பொது சுகாதார ரீதியாக நோய் தொற்று அடைந்தவர் யார்?
அவரிடம் இருந்து யார் யாருக்கெல்லாம் பரவியது என்று சரியான மேற்பார்வை செய்ய இயலாமல் போகிறது.
இவற்றைத் தடுக்க தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
- செக்ஸ் குறித்த கல்வி வளர் இளம் பருவத்தில் இருந்து கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- பாதுகாப்பற்ற உடலுறவு கர்ப்பத்திலும் பால்வினை நோய்களிலும் எய்ட்ஸிலும் கொண்டுய்க்கும் எனும் செய்தி பரவலாக்கப்பட வேண்டும்
- போதை வஸ்து நுகர்வு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெளிவாக பள்ளிகள் கல்லூரிகள் தோறும் பரப்புரை ஆற்றப்பட வேண்டும்.
- குறிப்பாக ரத்த நாளம் வழி ஊசி மூலம் போதை பொருள் ஏற்றிக் கொள்வதும். ஊசிகளை பகிர்ந்து கொள்வதும் மிகவும் ஆபத்தானது. ஹெச் ஐ வி , ஹெப்பாடைட்டிஸ் பி போன்ற நோய்கள் பரவும் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வேண்டும்
- ஆன்லைன் ஆப்கள் மூலம் ஜோடிகள் சேருவது அதிலும் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவது என்பது ஆபத்தானது. இது குறித்தும் விழிப்புணர்வு அவசியம்.
தொடர்ந்து தொற்றுக்குள்ளாகி அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் 54000 பேரைக் கண்டறியும் பொருட்டு
மாநிலம் முழுவதும் உள்ள நிறுவனங்கள், கல்வி மையங்களில் தன்னார்வமாக ஹெச் ஐ வி பரிசோதனை செய்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் கடமை
விழித்துக் கொள்வது அவரவர் பொறுப்பு
ஆதாரங்கள்
1. NACO SANKALAK sixth edition 2024 report
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.