கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

போலி NCC Camp பாலியல் தொல்லை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - அரசு தகவல்

 

 கிருஷ்ணகிரி போலி NCC Camp பாலியல் தொல்லை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் - அரசு தகவல்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி.முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளிலும் இடைக்கால குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மேலும் 3 தனியார் பள்ளிகளுக்கு ஒரு வாரத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவர். பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ரூ.1.63 கோடி மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. 4 பள்ளிகளிலும் போலி என்.சி.சி. முகாம் எப்படி நடத்தப்பட்டது? என்ன உள்நோக்கம்? என்பது தொடர்பாக விரிவாக விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 30ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


போலி என்.சி.சி.முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரத்தில், பதிவு செய்யப்பட்ட மூன்று வழக்குகளிலும் இடைக்கால குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளிகளில் போலி என்.சி.சி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் ஏ.பி. சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி வாதிட்டனர். அப்போது, நான்கு பள்ளிகளில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மூன்று வழக்குகளிலும் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே ஒரு பள்ளிக்கு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மூன்று பள்ளிகளுக்கும் ஒரு வாரத்தில் சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக ரூ.1.63 கோடி கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.


சிவராமன், அவரது அலுவலகத்தில் வைத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும், மாணவிகளை மாமல்லபுரம், கொடைக்கானல் மற்றும் மைசூரு உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா அழைத்து சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் நடைபெற்றது முதல் தற்போது வரையிலான விசாரணையின் நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும், நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் விசாரணை இருக்கும் எனவும், அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றம் திருப்தி அடையும் வகையில் இதுவரை விசாரணை நடத்தப்படவில்லை என கூறிய நீதிபதிகள், இந்த நான்கு பள்ளிகளிலும் போலி என்.சி.சி. முகாம் எப்படி நடத்தப்பட்டது? என்ன உள்நோக்கம் என்பது தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டுமென தெரிவித்து, விசாரணையை அக்டோபர் 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

NMMS 2024-2025 Final Answer Key

  NMMS 2024-2025 Final Key Answer Released by DGE >>> Click Here to Download...