கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கலைகளைக் காப்போம்! - வெ.இறையன்பு

பல்வேறு இடங்களுக்கு செல்லும் நாம் அழகான தோட்டங்கள், பரந்து விரிந்த கடற்கரை, கம்பீரமான கோயில்கள், சிறப்பு மிகுந்த சிற்பங்கள் என்று பார்த்து மகிழ்கிறோம். அவற்றை அழகுபடுத்த முடியாவிட்டாலும் அழுக்குப்படுத்தாமல் இருப்பது அவசியம்.

கடற்கரையில் அமர்ந்து காற்று வாங்கும்போது நாம் பெறுகிற சுகத்தை அங்கே இருப்பவர் களும் பெற வேண்டாமா? நாம் சாப்பிட்ட கடலைத் தோல்களையும், எண்ணெய் காகிதத்தையும் அங்கேயே போட்டால் எறும்புகள் மொய்க்காதா? ஈக்கள் சூழாதா? இப்படி பலரும் போட்ட தின்பண்டங்களின் எச்சங்கள் தமிழகத்தில் உள்ள ஒரு கடற் கரையையே சேதப் படுத்திவிட்டது. இப்போது அங்கே அமர்கிறவர்கள் வாழ்நாள் முழுவதும் தோல் நோயால் தொல்லையுறு கிறார்கள். மணலைச் சலித்து எடுத்தால்தான் அங்கிருக்கும் நுண்ணுயிரிகளைச் செயலிழக்கச் செய்யமுடியும் என்று அது குறித்த அறிவியல் அறிஞர்கள் அறிவிக்கின்றார்கள்.

புனிதத் தலங்கள் என்று சொல்லிக் கொண்டு, அவற்றை அழுக்குப்படுத்த நமக்கு மட்டும்தான் மனம் வரும். கோயில்களின் தெப்பக்குளங்கள் குப்பைத்தொட்டிகளாகும் அளவுக்கு, உபயோகித்த பொருள்கள் எல்லாம் எறியப்படு கின்றன. வணங்கிய சிலையையே உடைப்பது போன்றது இந்தச் செயல்.

அழகிய பூங்காக்கள் முழுவதும் காலை நேரத்தில் காகிதச் சிதறல்களாக இருப்பதைக் காணலாம். எங்கு சென்றாலும், எதையாவது தின்பதுதான் ஆனந்தமயமான அனுபவம் என்று எழுதப்படாத விதி நம்மிடம் இருக்கிறது. அதனால்தான், கடலை ரசிப்பதைவிட கடலை கொறிப்பதில் நமக்கு அக்கறை அதிகம். சாப்பிட்ட பிறகு காகிதங்களையும், மிச்சமானவற்றையும் குப்பைத் தொட்டிகளில் போட வேண்டும் என்கின்ற ஆறாவது அறிவைப் பல நேரம் இழப்பவர்கள் நாலாந்தார மனிதர்களாகி விடுகிறார்கள்.

கோயில்களுக்குச் சென்றால், அங்கிருக்கும் சிற்பங்களில் ஆணியாலும், கரியினாலும் தங்கள் பெயர்களை எழுதி அசிங்கப்படுத்து பவர்கள் இருக்கிறார்கள். நம் உடலில் ஒரு சின்னக் கீறல் ஏற்பட்டாலே அடுத்தவர்களை நொந்து கொள்கிற நாம், அழகான சிற்பங்களைக் கொஞ்சம்கூட குற்றவுணர்வு இல்லாமல் காயப்படுத்துகிறோம். சிலர், சிற்பங்களின் மூக்குகளை உடைக்கிறார்கள், கைகளைச் சிதைக்கிறார்கள். இரண்டாயிரம் ஆண்டு களுக்கு மேற்பட்ட கலைச்சின்னங்களில் இப்படிப்பட்ட கயமைத்தனமான செயலால் நாம் சேதப்படுத்துகிறோம்.

நாம் செல்கிற இடங்களை கண்களால் ரசிப்போம். அவற்றை சிதிலப்படாமல் பாதுகாப்போம். மற்றவர்கள் அச்செயலைச் செய்கிறபோது தடுப்போம், அறிவுறுத்துவோம், விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். நம் நாட்டின் பெருமைகளைத் தொடர்ந்து பேணிக் காப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SGT Appointment Order Ceremony - DEE Proceedings

  இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா 24.07.2025 அன்று சென்னையில் நடைபெறுதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Appoin...