கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr.A.B.ஃபரூக் அப்துல்லா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Dr.A.B.ஃபரூக் அப்துல்லா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கான்சியா : தாய்ப்பால் விழிப்புணர்வு வார தகவல்

 


கான்சியா : தாய்ப்பால் விழிப்புணர்வு வார தகவல்


தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்று 

லாவ்...

அருகில் உள்ள பந்தமான நாடுகள்

வியட்நாமும் 

தாய்லாந்தும் 

கம்போடியாவும்


1950 களில் 

லாவ் நாட்டை பிரெஞ்சு காலணி ஆதிக்கத்தில் இருந்து மீட்பதற்கான 

விடுதலைப் போர் நடந்து கொண்டிருந்தது. 


இதற்கு ஆதரவாக அருகில் உள்ள வியட்நாம் நாட்டின் ராணுவம் நேசக்கரம் நீட்டியது. 


ஹுவாய் துவா எனும் நீரோடை இருக்கும் பகுதியில் 

உக்கிரமான போரின் விளைவால் 

அமெரிக்க படைகள் - வியட்நாம் வீரர்களின் ஆயுதக்கிடங்கு மற்றும் தங்குமிடங்களை குண்டுகளிட்டு அழித்தனர். 


அதில் வியட்நாம் ராணுவ வீரர்களும் பாதிப்புக்குள்ளாகினர். 


அவர்களுக்கு உணவு செல்லும் வழியும் 

தடைபட்டுப் போனது. 


இந்த சூழ்நிலையில் 

வியட்நாம் முகாமில் ஒரு ராணுவ வீரருக்கு 

அனோஃபிலஸ் கொசு வகையினால் பரப்பப்படும் மலேரியா காய்ச்சல் வரவே 


அருகில் இருந்த கிராமத்திற்கு 

உதவி கேட்டு ராணுவ வீரர்கள் வந்தனர். 


அப்போது கான்சியா  எனும் 18 வயது நிரம்பிய அப்போது தான் தனது முதல் குழந்தையை ஈன்று பால் கொடுக்கும் காலத்தில்  பெண்ணொருத்தி இருந்தார். 

  

அவரிடம் சென்ற ராணுவ வீரர்கள் 

"உயிருக்கு மன்றாடும் வியட்நாம் நாட்டு சகோதரனுக்கு தங்களின் பாலைத் தந்து உதவ வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர். 


அக்காலத்தில் மட்டுமன்று 

இக்காலத்தில் கூட மற்றொரு சிசுவுக்குத் தாய்ப்பால் தருவதற்கே பல முறை சிந்திப்போம் தானே.. 


அப்போது நிலவி வந்த மூடநம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்து 

தன்னை நம்பி வந்த ராணுவ சகோதரனின் உயிரைக் காப்பாற்ற தனது தாய்ப்பாலைச் சுரந்து கொடுத்தார் கான்சியா. 


அந்தப் பாலைப் பருகி கூடவே மூலிகை சிகிச்சையும் மேற்கொண்டு  மலேரியாவில்  இருந்தும் மீண்டார் அந்த ராணுவ வீரர். 


பல போராட்டங்கள் உள்நாட்டுப் போர்கள் முடிவில் 1975 இல் லாவ் விடுதலை பெற்றது. பிறகு வியட்நாம் வீரர்கள் அனைவரும் அவர்கள் சொந்த நாடு திரும்பினர்.


தற்போது 50 ஆண்டுகள் கழித்தும் 

அந்த இருநாட்டு நல்லுறவு தூதர் 

உரையாற்றும் போது 

"இருநாடுகளுக்கு  இடையே உள்ள பந்தம் - சகோதரி கான்சியா தந்த தாய்ப்பாலால் இன்னும் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது"  என்றார். 


சகோதரி கான்சியா அவர்கள் 

அதற்குப் பிறகு 12 மகவுகள் ஈன்று 

தற்போது தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் அதே கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். 


தாய்பால் கொடையாகத் தந்த இந்த சகோதரியைப் பற்றி இன்று எழுதுவதற்கான காரணம் இருக்கிறது. 


ஆகஸ்ட் முதல் வாரம் 

தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாகும்.


தாய் சுரக்கும் தாய்ப்பால் 

அவர் சிசுவுக்கும் உதவுகிறது

மிஞ்சும் பாலை பால் வங்கிக்கு வழங்கினால் தாயற்ற பல சிசுக்களுக்கும் உதவும். 


தாய்ப்பால் வழங்குவது தாயின் கடமை

தாய் மற்றும் சேய் இருவரையும் அரவணைப்பது தந்தையின் கடமை. 


அன்புத் தாய்மாரே 

எங்கு இருந்தாலும் 

எந்தப் பணி செய்தாலும் 

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்கிடுங்கள் 


பெரியோரே சகோதரரே 

மக்கள் கூடும் இடத்தில்

முக்கியமாக பணி செய்யும் இடத்தில் 

தாய்ப்பால் வழங்கப்படுவதற்கு ஏற்ற சூழலை உண்டாக்க முன்னுரிமை வழங்கிடுவோம். 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


ECG எடுத்தல் : இந்தியா மற்றும் அமெரிக்கா மருத்துவ நிலை



 ECG எடுத்தல் : இந்தியா மற்றும் அமெரிக்கா மருத்துவ நிலை


விசித்திரமான வரலாறு 


இப்போதெல்லாம் நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டால்  

- உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஈசிஜி எனும் இதய சுருள் படம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்பது 

பெரும்பான்மையினருக்கு தெரியும்


இதய ரத்த நாள அடைப்பை ஹார்ட் அட்டாக் என்கிறோம். அடைப்பு ஏற்பட்டதில் இருந்து மூன்று மணிநேரமே பொன்னான நேரம் என்று கணக்கில் கொள்ளப்படுகிறது


அதற்குள் சிகிச்சை செய்து அடைப்பை நீக்க வேண்டும். 


நிற்க


 இங்கிருந்து செப்டம்பர் 23,1955 

அமெரிக்காவுக்கு செல்வோம்


பனிப்போர் காலம்


இரண்டாம் உலகப்போரை வென்ற அதிபர் ட்ரூமன் இறக்க 

இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் படையை தலைமை ஏற்று நடத்திய போர்த்தளபதி எய்ஸன்ஹோவர் அமெரிக்காவின் அதிபரானார். 


தனது அலுவலக பணிகளில் இருந்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் செப்டம்பர் 23,1955 அன்று காலை கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கும் போது 

நெஞ்செரிச்சலாக இருப்பதை உணர்ந்தார். 


அவரது சிறப்பு மருத்துவர் டாக்டர் ஹோவார்ட் ஸ்நைடர்

நெஞ்செரிச்சலுக்கான மருந்துகளை வழங்கினார். 


எனினும் நெஞ்செரிச்சல் அதிகமானதேயன்றி குறைந்தபாடில்லை. 


இது வயிற்றுப் பிரச்சனை இல்லை. இதய ரத்தநாள அடைப்பாக இருக்கக்கூடும் என்று உணர்ந்த மருத்துவர் ஸ்நைடர் 

  அதிபரை மருத்துவமனைக்கு பத்து மணிநேரங்களுக்குப் பிறகு அன்றிரவு பரிந்துரைத்தார். 


பரிந்துரைக்கும் போது இதய ரத்த நாளத்தை விரிவடையச் செய்யும் அமைல் நைட்ரேட் மற்றும் நெஞ்சு வலியை குறைக்க உதவும் மார்ஃபின் ஆகியவற்றை தந்தார். 


மார்ஃபின் விளைவால் அதிபர் நன்றாக உறங்கி விட்டார். 

மறுநாள் காலை எழுந்தும் நெஞ்சு வலி விட்டபாடில்லை. 


அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் இருந்து ஈசிஜி எடுக்கும் உபகரணம் கொண்டு வரப்பட்டு ஈசிஜி எடுக்கப்பட்டது. 


முந்தைய நாள் அறிகுறி தோன்றிய அதிபருக்கு 

அடுத்த நாள் காலை எடுக்கப்பட்ட ஈசிஜியில் இதய ரத்த நாள அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 


அப்போதெல்லாம் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டாலும் 

இப்போது இருப்பது போல 


எக்கோ கிடையாது 

ஆஞ்சியோ கிடையாது 

ஸ்டெண்ட் கிடையாது 

இதய தசைகள் காயமாகியுள்ளதை அறியும் நொதிகள் பற்றி அறிவியல் அறிந்திருக்கவில்லை


இதய ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும் லோடிங் டோஸில்

உள்ள ஆஸ்பிரின் அப்போது காய்ச்சலுக்கும் மூட்டு வலிக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த மருந்தாகும். 


ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும்

க்லோபிடோக்ரெல் / ஸ்டேடின் போன்ற மாத்திரைகள் கண்டறியப்படவில்லை


அப்போது இதய ரத்த நாள அடைப்பு வந்தால் 30-40% மரணம் தான் 

உயிர் பிழைத்தாலும் பலம் குன்றிய இதயத்துடன் சில காலம் வாழ்ந்து மரணிக்க வேண்டியது தான். 


உலகின் வல்லரசின் அதிபராக இருந்தாலும் அதே நிலைமை தான். 


இதய ரத்த நாள அடைப்பு என்பது நெஞ்சு வலி அன்றி நெஞ்செரிச்சல் / கழுத்து வலி / தாடை வலி என்றும் ஏற்படலாம் என்ற அறிவும் அப்போது இருந்திருக்கவில்லை


 இதய ரத்த நாள அடைப்புக்கு 

நைட்ரோ க்ளிசரின் ( ரத்த நாள விரிவடையச் செய்யும் மருந்து) மற்றும் வலியைக் குறையச் செய்யும் மார்ஃபின்  மட்டுமே இருந்த சிகிச்சைகள்


நிற்க 

மீண்டும் 2026க்கு வந்து விடுவோம் 


இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று மெடிக்கல் இண்சூரண்ஸ் இல்லாமல் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்


அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஈசிஜி எடுத்துப் பார்க்க வேண்டுமென்றால் 

ஒரு ஈசிஜி எடுத்துப் பார்க்க 

$450 முதல் $1200 டாலர் செலவாகும் என்பதை அறிந்து அதிர்ந்தேன். 


இந்திய மதிப்பில் குறைந்தபட்சம் ₹45000 வருகிறது. 


இதை எடுப்பதும் எளிதன்று 

கட்டாயம் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே எடுக்க முடியும். 


அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவரை சந்தித்து ஈசிஜி எடுக்க வேண்டும். 


இந்தியாவில் 

தமிழ்நாட்டில் 


ஒருவருக்கு அவர் நம் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பினும் சரியே 

வெளிமாநிலம் வெளி நாட்டினராக இருப்பினும் சரியே 

இண்சூரன்ஸ் தேவையில்லை 


நெஞ்சு வலி என்றால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் உடனடியாக 

ஈசிஜி இலவசமாக எடுக்கப்படும். 


பணம் கொடுத்து ஈசிஜி எடுக்க வேண்டுமென்றாலும் ₹300 க்கு எடுத்து விட முடியும். 

மருத்துவ பரிந்துரை தேவையில்லை. 

ஈசிஜி எடுத்து விட்டு மருத்துவரை படத்துடன் சந்திக்க முடியும். 


வல்லரசு நாட்டில் 70 வருடங்களுக்கு முன்பு அதிபருக்கு நேர்ந்த அதே விசயம் தான் இப்போதும் நேருகிறது 

மருத்துவம் சாமானியர்களிடம் இருந்து தூரமாக நிற்கிறது. 


இந்தியாவில் தமிழ்நாட்டில் சாமானியனுக்கும் எட்டக்கூடிய அளவில் மருத்துவ வசதி எளிமையாகக் கிடைக்கிறது என்பது தெரிகிறது. 


நாம் வாழும் காலம் 

சூழல் 

வாழும் இடம் போன்றவை 

நமது இருப்பை முடிவு செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன என்பது புலனாகிறது 


இந்த நிலை தொடர வேண்டும் என்பதே ஆவலாக உள்ளது. 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர்

சிவகங்கை


இளையோரிடத்தில் அதிகரித்து வரும் HIV தொற்று

 


கர்நாடக மாநிலத்தில் இளையோரிடத்தில்  அதிகரித்து வரும் ஹெச் ஐ வி தொற்று 


கர்நாடகா வழி பாடம் கற்போம் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


2023 - 2024 ஆம் வருடம்

44,500 எச்.ஐ.வி தொற்றாளர்கள் என்றிருந்த நிலையில் தற்போது 2025-2026 இல் 

66,600 என்று எண்ணிக்கை கூடியுள்ளது. 

இந்தத் தொற்றாளர்கள் அனைவரும் 18-35 வயதுக்குட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கர்நாடகாவில் தற்போது 

2.60 லட்சம் எச்.ஐ.வி தொற்றாளர்கள் இருக்கிறார்கள் 

அதில் 2.05 லட்சம் பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார்கள். 

54000 பேர் எந்த சிகிச்சை வளையத்துக்குள்ளும் இல்லாமல் தங்களுக்கு தொற்று இருந்தும் அது குறித்த விழிப்புணர்வு இன்றி இருக்கிறார்கள். 


இவர்கள் மூலம் தான் தொற்று பிறருக்கு 

- பாதுகாப்பற்ற உடலுறவு 

- பாதுகாப்பற்ற ஊசி ஏற்றிக் கொள்ளுதல் 

போன்ற வழிகளில் பரவி வருகிறது என்கின்றது ஆய்வு. 


ஹெச். ஐ.வி. 90களில் பரவத் துவங்கிய போது அது 30+ வயதினரிடையே அதிகம் கண்டறியப்பட்டு வந்தது. 


இப்போது 18+ முதல் 35 வயதுக்குள் அதிகமாகக் கண்டறியப்பட்டு வருவதன் காரணங்கள் இதோ..


1. ஆன்லைன் டேட்டிங் ஆப்களின் வருகை 


ஆன்லைன் டேட்டிங் ஆப்கள் பல உள்ளன. அவற்றின் வழியாக ஊர் பேர் தெரியாத ஆள் யாரென்றே தெரியாதவர்கள் கூட 

பிணைப்பு ஏற்படுகிறது. 

இந்தப் பிணைப்பு பிறகு "ஹூக் அப்" எனும் பிரச்சனைக்குரிய கலாச்சார சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது.  ஹூக் அப் என்றால் 

கொஞ்ச நாள் டேட்டிங் ஆப்களில் பழகியவருடன் உடலுறவு கொள்ளுதல். 

இதை "டிஜிட்டல் ஹூக் அப்" என்கிறார்கள்


இதனுடன் 


2. கெம் செக்ஸ் கலாச்சாரம் 


ஆன்லைன் ஆப்கள் மூலம் இணைந்த இது போன்ற ஜோடிகள் உடலுறவில் ஈடுபடும் போதும் அதற்கு முன்பு மெத்தாம்பிடமின், கொகயன் போன்ற போதை வஸ்துக்களை உட்கொண்டு அதன் மூலம் எந்த ஒரு தடை உணர்வோ அச்ச உணர்வோ இல்லாமல் தங்குதடையின்றி உடலுறவு கொள்ளுதல் நிலை தான் கெம் செக்ஸ் ( CHEM - மருந்து SEX - உடலுறவு) 

தன்னிலை மறந்த நிலையில் காண்டம் ( ஆணுறை) பெண்ணுறை போன்றவற்றை உபயோகிப்பதில்லை, உபயோகித்தாலும் அது கிழியுறுவதைக் கண்டுகொள்வதில்லை ஆகிய அலட்சியங்களால் 

ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பால்வினை நோய்கள் பரவுகின்றன. 


3. ஒருவருக்கு பலருடன் ஒரே நேரத்தில் தொடர்பு


ஒருவர் ஒருவருடன் உறவில் இருக்கும் போதே பலருடனும் அதே சமயத்தில் உறவில் ஈடுபடும் போது பால்வினை தொற்றுகள் எளிதில் பரவும் வாய்ப்பாக அமைந்து விடுகின்றன 


4. ஆண்களுக்குள் உறவில் ஈடுபடுபவர்களிடம் சதவிகித அளவில் சற்று அதிகமாக ஹெச் ஐ வி தொற்று பரவி வருவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


5. சுத்தமற்ற ஊசிகள் / ஒருவர் பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தி போதை மருந்துகளை ஏற்றும் பழக்கம் இருப்பவர்கள் (PEOPLE WHO INJECT DRUGS) 


6. இளையோரிடத்தில் பாதுகாப்பற்ற உடலுறவு குறித்தும், பால்வினை நோய்களின் பரவல் குறித்தும் போதுமான விழிப்புணர்வின்மை 


என்று பல காரணங்கள் இதற்குப் பின்பு உள்ளன. 


இளையோரிடத்தில் பால்வினை நோய்ப்பரவல் அதிகரித்திருப்பது ஏன்? 


முன்பெல்லாம் குறிப்பிட்ட சில இரவு விடுதிகள், சில நைட் கிளப்கள், சிவப்பு விளக்குப் பகுதிகள் ஆகிய இடங்களில் 

இருந்து மட்டுமே ஹெச்.ஐ.வி உள்ளிட்ட நோய்கள் பரவும் என்பது பொதுவான நம்பிக்கையாகவும், பொது சுகாதார ரீதியாக அந்த இடங்களைக் குறிவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போதுமானதாக இருந்தது. 


விபச்சாரத்தில் ஈடுபடுவோரிடையே 

ஹெச் ஐ வி , பால்வினை நோய் பரிசோதனைகள், கட்டாய ஆணுறை உபயோகிப்பு , சுய உதவிக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு விழிப்புணர்வு அதிகரித்தது. 


ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஹூக் அப் கலாச்சாரம் - உடலுறவில் ஈடுபட மேற்கூறிய இடங்கள் தேவையில்லை

 மாறாக ஆன்லைன் மூலம் ஜோடிகள் கிடைத்து, எளிதில் எந்த இடத்திலும் உடலுறவு கொள்ளும் நிலைக்கு பரவலாக்கம் ஆகியுள்ளது. பொது சுகாதார ரீதியாக நோய் தொற்று அடைந்தவர் யார்? 

அவரிடம் இருந்து யார் யாருக்கெல்லாம் பரவியது என்று சரியான மேற்பார்வை செய்ய இயலாமல் போகிறது. 


இவற்றைத் தடுக்க தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? 


- செக்ஸ் குறித்த  கல்வி வளர் இளம் பருவத்தில் இருந்து கட்டாயமாக்கப்பட வேண்டும். 

- பாதுகாப்பற்ற உடலுறவு கர்ப்பத்திலும் பால்வினை நோய்களிலும் எய்ட்ஸிலும் கொண்டுய்க்கும் எனும் செய்தி பரவலாக்கப்பட வேண்டும்

- போதை வஸ்து நுகர்வு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெளிவாக பள்ளிகள் கல்லூரிகள் தோறும் பரப்புரை ஆற்றப்பட வேண்டும். 

- குறிப்பாக ரத்த நாளம் வழி ஊசி மூலம் போதை பொருள் ஏற்றிக் கொள்வதும். ஊசிகளை பகிர்ந்து கொள்வதும் மிகவும் ஆபத்தானது. ஹெச் ஐ வி , ஹெப்பாடைட்டிஸ் பி போன்ற நோய்கள் பரவும் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வேண்டும் 

- ஆன்லைன் ஆப்கள் மூலம் ஜோடிகள் சேருவது அதிலும் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவது என்பது ஆபத்தானது. இது குறித்தும் விழிப்புணர்வு அவசியம். 


தொடர்ந்து தொற்றுக்குள்ளாகி அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் 54000 பேரைக் கண்டறியும் பொருட்டு 

மாநிலம் முழுவதும் உள்ள நிறுவனங்கள், கல்வி மையங்களில் தன்னார்வமாக ஹெச் ஐ வி பரிசோதனை செய்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 


விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் கடமை

விழித்துக் கொள்வது அவரவர் பொறுப்பு 


ஆதாரங்கள் 

1. NACO SANKALAK sixth edition 2024 report 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர்

சிவகங்கை


திறமையால் பிறவிக் குறைபாட்டை வென்ற மாவீரன்

 


தன் திறமையால் 

பிறவிக் குறைபாட்டை வென்ற மாவீரனின் கதை. 


ஜூன் 24,1987 

தென் அமெரிக்க கண்டத்தில் 

அர்ஜெண்டினா நாட்டின் 

ரொசாரியோ நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு 

லியோனல் மெஸ்ஸி என்று பெயர் சூட்டினார் அவரது தந்தை ஜோர்ஜ் .


லியோனெல்- பிரெஞ்சு- பொருள் - குட்டி சிங்கம் 

மெஸ்ஸி - இத்தாலி - பொருள் - அறுவடை செய்பவன் 


பெயர் வைத்தது போலவே

லியோனெல் பிறந்ததில் இருந்து தனது சக நண்பர்களைப் போல வயதுக்கேற்றாற் போல வளர்ச்சி காணாமல் "குட்டியாகவே" இருந்தார். 


அர்ஜென்டினாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் பரிசாக வழங்கப்படுவது எது என்றால் கேட்டால் 

தயக்கமே இல்லாமல் அது

"கால் பந்து" தான். 


குட்டையாக இருந்தாலும் 

சிங்கம் சிங்கம் தான். 

கால்பந்தாட்ட களத்தில் எதிர் அணியினர் அமைக்கும் கோட்டைகளை லாவகமாகக் கடந்து சென்று கோல் அடிப்பதில் 

இவரது ஆட்ட நேர்த்தி என்பது 

குழந்தைப் பருவத்திலேயே பிரபல்யம். 


அவரது குடும்பத்தினருக்கு 

அவர் சரியான அளவில் 

உடல் வளர்ச்சியைக் காணவில்லை என்பதை பத்தாம் வயதிலேயே ஒட்டியே உணர்ந்தனர். .


அவரது பதினோறாம் வயதில் 

அந்த செய்தி அவரது குடும்பத்தில் பேரிடியாக இறங்கியது.


ஆம்... மூளையில் பிட்சுசுவரி சுரப்பி எனப்படும் நாளமில்லா சுரப்பியில் இருந்து உடலின் வளர்ச்சியைத் தூண்டும் முக்கியமான ஹார்மோனான

"உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்" (GROWTH HORMONE) சரியான அளவில் சுரக்கவில்லை என்பது உறுதியானது. 


இதை Growth Hormone Deficiency என்று அழைக்கிறோம். 

இதன் விளைவாக உடலின்  வளர்ச்சி என்பது அதிகபட்சம் 140 செண்ட்டிமீட்டரில் தடை படும். 

கால்பந்தாட்ட வீரனுக்குத் தேவையான தசை வளர்ச்சியோ எலும்பு வலிமையோ கிடைக்காது. 


ஒட்டுமொத்த குடும்பமே நொறுங்கிப் போனது. 


அசாத்தியமான கால்பந்தாட்டத் திறனைக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் எதிர்காலம் - பிறவிக் குறைபாட்டினால் பாதிக்கப்படப்போவது கண்கூடாகத் தெரிந்தது. 


அக்கால அர்ஜென்டினாவில்

வளர்ச்சிக்கான ஹார்மோன் சிகிச்சை என்பது பிரபலமானதாகவும் இல்லை. 

எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் இல்லை. 


பிரதிமாதம்  900 முதல் 1500 டாலர்கள்

செலவு புடிக்கும் சிகிச்சைக்கு அந்த ஏழைத் தகப்பனால் எப்படி வழி செய்ய முடியும்? 


மெஸ்ஸிக்கு தேவைப்படும் உதவியை 

குடும்பத்தாலோ சுற்றத்தாராலோ 

அவர் விளையாடிய உள்ளூர் அணியாலோ செய்ய இயலவில்லை. 


எனவே, 13 வயதுச் சிறுவனான மெஸ்ஸியை அழைத்துக் கொண்டு 

ஸ்பெய்ன் நாட்டில் உள்ள பார்சிலோனா மாகாணத்திற்கு சென்றார் அவரது தந்தை. 


அங்கு பார்சிலோனா கால்பந்து கிளப் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான அணியாகும். 

அந்த அணியின் பயிற்சி மற்றும் அணி மேலாண்மை செயலாளராக இருந்த கார்லஸ் ரெக்சாக் அவர்கள் பார்க்க ஒரு ஆட்டத்தில் விளையாடினார் 


இவரது மிரட்டலான ஆட்டத்திறனையும் 

எதிரிகளிடம் பதுங்கிப் பாயும் திறனையும் 

பந்தை லாவகமாக அங்கும் இங்கும் கொண்டு செல்லும் நேர்த்தியும் பார்த்து விட்டு "அசாத்தியமான திறன்" கொண்டவனாக இருக்கிறானே என்று வியந்தார். இவரை உடனே இந்த கிளப்பிற்குள் புக் செய்யலாம் என்று முடிவு செய்தார். 


ஆனால் பார்சிலோனா அணியின் ஏனைய நிர்வாகக் குழுவினருக்கு இவரது முடிவில் உடன்பாடு ஏற்படவில்லை. 


- வெளிநாட்டு வீரர் 

- வயது மிகவும் குறைவாக உள்ளது. 

- கூடவே பிறவு வளர்ச்சிக் குறைபாட்டு நோய் உள்ளது . அதனால் போதிய வளர்ச்சி இல்லை 

- அவரது மருத்துவ செலவுக்கும் சேர்த்து செலவு செய்ய வேண்டும். 


இத்தனை அஃகன்னாக்கள் இருப்பதால் 

வேண்டாம் என்றே முடிவு செய்தனர். 

போர்ட் கமிட்டியின் இந்த முடிவு, மெஸ்ஸிக்கும் அவரது தந்தைக்கும் அவரது செயலாளர்களுக்கும் பின்னடைவாக அமைந்தது. 


டிசம்பர் 14, 2000

பொம்பேயா டென்னிஸ் கிளப் 

உள்ளே 

பார்சிலோனா டெக்னிக்கல் மேனேஜர் 

ரெக்சாக்குடன் மெஸ்ஸியின் மேனேஜர்கள் 

நீண்ட நேரம் பேசிய பிறகு 

உடன்படிக்கை எட்டப்பட்டது. 


ரோக்சாக்குக்கு மெஸ்ஸியை விட மனசில்லை. 

எனவே, போர்டு கமிட்டியின் முடிவையும் மீறி மெஸ்ஸிக்காக ரிஸ்க் எடுக்கிறேன் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட எத்தனித்தார். 


ஒப்பந்தம் கையெழுத்தாக 

சரத்துகளை எழுத அங்கே காகிதங்கள் கூட தயார் செய்து வைக்கப்பட்டிருக்கவில்லை. 


எனவே, அங்கிருந்த பேப்பர் நேப்கினை எடுத்து அதில் ஒப்பந்த உடன்படிக்கையை எழுதி கையெழுத்திட்டு 

மெஸ்ஸியின் தந்தையிடம் கொடுத்து

"இனி உங்களின் மகன் எங்களின் அணிக்கு விளையாடுவான்" என்றார். 


நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டிருந்த தந்தையின் வயிற்றில் பால் வார்த்த முடிவல்லவோ அது. 


மெஸ்ஸியின் மருத்துவ செலவு முழுவதையும் பார்சிலோனா கிளப் ஏற்கும் என்பதும் முக்கியமான ஒப்பந்தமாகும். 


அதற்கடுத்து 

மெஸ்ஸி, அவருடன் அவரது குடும்பமும் 

ஸ்பெயினுக்கு இடம்பெயரவும் பார்சிலோனா உதவி செய்தது. 


இதன் மூலம் 

மெஸ்ஸி சரியான உடல் வளர்ச்சியை அடைந்தார். 140 செமீட்டர் உயரம் தான் வளருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முறையான ஹார்மோன் சிகிச்சை கிடைத்து 170 செமீட்டர் என்ற அளவை எட்டினார். 



 தனக்கு வாழ்வளித்த பார்சிலோனா அணியில் 2000 முதல் 2021 வரை தொடர்ந்தார். 


அதற்குப் பின்பும் 

அங்கேயே தொடர்ந்து தனது ஓய்வை அந்த அணியில் இருந்தே அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார். 


ஆனால், பார்சிலோனா அணி நிர்வாகத் திறமையின்மையால் பொருளாதார நலிவுறுதலைச் சந்தித்தது. கிளப்களை நிர்விக்கும் கடுமையான பொருளாதாரம் சார்ந்த நெறிமுறைகளின்  விளைவாக மெஸ்ஸியை அந்த அணியால் தக்க வைக்க இயலவில்லை. 


இத்தனைக்கும் மெஸ்ஸி பணமே வாங்காமலும் விளையாடத் தயாராக இருந்தும், நெறிமுறைகள் சாதகமாக இல்லாததால் கடினமான இதயத்துடனும் கண்ணீருடனும் தனக்கு வாழ்வு தந்த பார்சிலோனாவைப் பிரிந்து  தற்போது இண்டர்மியாமி சிஎஃப் (INTERMIAMI CF) 

அணிக்கு விளையாடி வருகிறார். 


சிறுவனாக சரியான வளர்ச்சி அடைய இயலாமல் 

பொருளாதாரத்திலும் உடல் நிலை சார்ந்தும் பாதிப்பில் இருந்தாலும், 


தனது தனித்திறமையின் காரணமாகவும் 

பார்சிலேனா அணியின் மேலாளர் கார்லஸ் ரெக்சாக்கின் நம்பிக்கை காரணமாகவும் 

இன்று கால்பந்தாட்ட உலகின் மன்னனாக இருந்து வருகிறார் .


 குட்டி சிங்கமான லியோனெல்

கோல்களையும் கோப்பைகளையும் 

அறுவடை செய்யும் மெஸ்ஸியாக மாறியது 

நமக்கெல்லாம் உத்வேகம் தரும் கதை என்றால் அது மிகையாகாது. 


பின்குறிப்பு :- தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாவட்ட அளவிலான ஆரம்ப கால தலையீடு மையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு குழந்தைகள் நல நிபுணர்கள் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டைக் கண்டறிந்து " பிறவி வளர்ச்சிக்கான ஹார்மோன் குறைபாடு" இருப்பின் அவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 

"ஹார்மோன் சிகிச்சை" இலவசமாக வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


நன்றி


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



Deaths inside cars – How to prevent them?



கார்களுக்குள் ஏற்படும் உயிரிழப்புகள் - தடுப்பது எப்படி?


சமீப காலமாக பூட்டிய காருக்குள் 

நிகழும் மரணங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. 


சமீபத்தில் இராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில்  காருக்குள் தூங்கிய மருத்துவர் மரணமடைந்திருப்பதும் பெரும்

 துக்கம்


இப்படியாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்து 

காருக்குள் நிகழும் மரணங்கள் நம்மைக் கடந்து செல்கின்றன. 


தற்போதையை காலத்தில் 

மகிழுந்து எனும் கார் வைத்திருப்பது நம்மிடையே அதிகரித்து வரும் சூழ்நிலையில் நாம் அனைவரும் 

இது குறித்து விழிப்புணர்வு பெற்றிருப்பது காலத்தின் கட்டாயமாகவும் உயிர்களைக் காக்கக் கூடியதாகவும் இருக்கும் என்று நம்புகிறேன் 


பூட்டிய கார்களுக்குள் ஏசி ஆன் செய்து விட்டு உறங்குவதும் ஆபத்து. 


வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் நேரத்தில் அதிக நேரம் நிற்க வந்தால் ஏசி ஆன் செய்திருந்தாலும் பல பேருடன் காருக்குள் இருப்பதும் ஆபத்து 


என்பதை பின்வரும் கட்டுரை ஆய்வுப் பூர்வமாக உங்களுக்கு விளக்கும் என்று நம்புகிறேன். 


பொதுவாக, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளே இவ்வாறு காருக்குள் விளையாடும் போது தெரியாமல் ஆட்டோமேட்டிக் சென்ட்ரல் லாக் ஆகி 

உள்ளேயே அடைபட்டு போய் அதிகமாக மரணிக்கின்றனர். 


அரிதாக பெரியவர்களும் குறிப்பாக அதீத போதையில் இருப்பவர்களும் மரணமடைகிறார்கள். 


இது எதனால் நிகழ்கிறது என்று பார்ப்போம். 


ஒரு சராசரி மனிதனுக்கு 

தினசரி 300 லிட்டர் ஆக்சிஜன் அவன் சுவாசிக்கத் தேவை. 


அதாவது ஒரு மணிநேரத்துக்கு 12.6 லிட்டர் ஆக்சிஜன் எனும் உயிர்வளி கட்டாயத் தேவையாகும். 


இப்போது முற்றிலும் பூட்டப்பட்ட ஜன்னல்கள்  மூடப்பட்ட காருக்குள் 

நான்கு குழந்தைகள் மாட்டிக் கொள்கின்றனர் என்பதைக் கற்பனை செய்வோம்.. 


பூட்டிய காருக்குள் சுமார் 3000 முதல் 4000 லிட்டர் காற்று அடைபட்டிருக்கும்.  

வெளியில் இருந்து காற்று உள்ளே வருவதற்கோ 

உள்ளே இருக்கும் காற்று வெளியே செல்வதற்கோ இயலாது. 


காற்றில் 21% ஆக்சிஜன் கலந்துள்ளது. 

அப்படியென்றால் காருக்குள் இருக்கும்   சுமார் 3500 லிட்டர் அடைபட்ட காற்றில் ,

735 லிட்டர் ஆக்சிஜன் இருக்கும். 


ஒரு குழந்தை ஒரு நிமிடத்திற்கு 

0.25 லிட்டர் ஆக்சிஜனை சுவாசிக்கும் என்றால் நான்கு குழந்தைகளும் ஒரு நிமிடத்திற்கு ஒரு லிட்டர் ஆக்சிஜன் என 

ஒரு மணிநேரத்திற்கு அறுபது லிட்டர் வீதம் 

அடுத்த பனிரெண்டரை மணிநேரம் அவர்கள் நால்வரும்  சுவாசிக்கத் தேவையான ஆக்சிஜன் உள்ளே இருக்கிறது. 


பிறகு ஏன் பூட்டப்பட்ட கார்களுக்குள் சென்ற குழந்தைகள் இரண்டு மூன்று மணிநேரங்களுக்குள் மூர்ச்சையாகி மரணமடைகின்றனர்? 


இதற்குக் காரணம் 

நாம் சுவாசத்தை உள்ளிழுக்கும் போது  

ஆக்சிஜனை வைத்துக் கொண்டு 

 சுவாசத்தை வெளிவிடும் போது 

கரியமில வாயு எனப்படும் கார்பன் டை ஆக்சைடை மூச்சுக் காற்றில் வெளியேற்றுகிறோம். 


முறையாக ஜன்னல்கள் திறந்திருக்கும் காரில் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு வெளியே சென்று, புதிய ஆக்சிஜன் உள்ள காற்று உள்ளே வந்து விடும். 


ஆனால் அடைக்கப்பட்ட காருக்குள் 

கொஞ்சம் கொஞ்சமாக மனிதர்கள் வெளியிடும் மூச்சுக் காற்றின் கார்பன் டை ஆக்சைடு அளவுகள்  கூடிக் கொண்டே செல்லும். 


இது தான் உயிரைக் கொல்லும் முக்கிய ஆபத்து. 


ஒரு இடத்தில் நிலவும் காற்றில், கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 1000 பிபிஎம் (PPM) என்பதற்கு கீழ் இருப்பது உகந்தது என்கிறது உலக சுகாதார நிறுவனம். 


சென்ஸ் ஏர் எனப்படும் காருக்குள் இருக்கும் கார்பன் டை ஆக்சைடு சென்சார் தயாரிக்கும் நிறுவனம் இது குறித்து பல ஆய்வுகள் செய்துள்ளது. 


கதவுகள், ஜன்னல்கள் பூட்டப்பட்ட காருக்குள் நான்கு மனிதர்கள் ஏசி போட்டுக் கொண்டு பயணம் செய்யும் போது 


1½ நிமிடங்களிலேயே கார்பன் டை ஆக்சைடு - 1000 பிபிஎம் தொட்டு விடுகிறது

5 நிமிடங்களில் - 2500 பிபிஎம் 


(2000 பிபிஎம் தாண்டினாலே 

மயக்கம், தலை சுற்றல், தலைவலி, தூக்கம் வருவது போல் இருப்பது போன்ற அறிகுறிகள் தோன்றலாம் என்பது குறிப்பிடத்தக்கது.)


22 நிமிடங்களில் - 6000 பிபிஎம் 


இத்தனைக்கும் ஏசியை  வெளிப்புறக் காற்று உள்ளே புகும் மோடில் வைத்துப் பயணிக்கும் போதே இத்தகைய நிலை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 


இதுவே கதவுகள் பூட்டப்பட்டு ஜன்னல்கள் மூடிய எஞ்சின் ஓடாத காருக்குள் நான்கு பேர் இருக்கும் போது 15 நிமிடங்களிலேயே கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 40000 பிபிஎம் தொட்டிருக்கின்றன. 


மற்றொரு ஆய்வில் 

இருவர் சுமார் நாற்பத்தி ஐந்து நிமிடங்கள் காரில் ஏசி போட்டு பயணிக்கும் போது 

பிபிஎம் 1400 என்ற அளவில் உயர்ந்துள்ளது. 

பிறகு இந்த அளவுகள் 1000 க்கு கீழ் குறைவதற்கு அடுத்த நாள் காலை வரை அதாவது பனிரெண்டு மணிநேரங்களுக்கு மேல் எடுத்துக் கொண்டுள்ளது. 


இப்போது கார்பன் டை ஆக்சைடு அளவுகள் 

கூடக் கூட மனித உடலுக்கு என்ன நடக்கும் என்பதைப் பார்ப்போம் 


2000-2500 பிபிஎம் வரை

-  சோர்வு 

- கவனச்சிதறல் 

- வேக்காடாக உணர்தல் 


2500-5000 பிபிஎம் 

- தலைவலி

- தலை சுற்றல் 

- உறக்கம் ஏற்படும் நிலை 


5000- 40,000 பிபிஎம் 

- மூச்சுத் திணறல் 

- மூர்ச்சை நிலை

- அதீத கவனக் குறைபாடு 


40,000 க்கு மேல்

- தீவிர மூச்சுத் திணறல் 

- கோமா 

- திடீர் மரணம் ஏற்படுதல் 


இதில் இருந்து நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் 

காருக்குள்  அடைபடும் போது காற்றில் இருக்கும் ஆக்சிஜன் நமக்கு பல மணிநேரங்களுப் போதுமானதாக இருந்தாலும் கூட 

நாம் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் - மிகவும் வேகமாக உள்ளே அதன் அடர்த்தி அதிகமாகிக் கொண்டே செல்லும். 


இதனால் நாம் தேவைக்கும் அதிகமாக கார்பன் டை ஆக்சைடை சுவாசிக்கத் துவங்குவோம். அதனால் 

நமது உடலில் ஒரே நேரத்தில் 

ஆக்சிஜன் குறைபாடும் ( ஹைப்பாக்சியா) 

கூடவே ஹைப்பர் கேப்னியா ( கார்பன் டை ஆக்சைடு அதிகமாகும்) சூழ்நிலையும் தோன்றும் 


இதனால் உடல் அமிலத்தன்மைக்குச் செல்லும். 

பல உறுப்புகளும் செயலிழக்கும்.  

மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் 

மூர்ச்சை நிலைக்குச் சென்று 

சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது. 


இதற்கடுத்தபடியாக 

நிற்கும் காரில் ஏசி போட்டுக் கொண்டு 

அனைத்து ஜன்னல்களையும் அடைத்துக் கொண்டு நீண்ட நேரம்  உறங்குவது சரியா? 


தவறு.. உயிருக்கு ஆபத்தானதும் கூட.. 


அதாவது கார் ஓடும் போதும் கூட 

ஏசியை காற்று உள் சுழற்சி மட்டும் ஆகும் மோடில் வைத்திருந்தால் 

வெளியே இருந்து புதிய காற்று உள்ளே வராது. 


மகிழுந்தை வெளிப்புறத்தில் நிறுத்தி வைத்திருக்கும் போது, 

வெளியில் இருந்து காற்று உள்ளே நுழையும் மோடில் வைத்திருந்தால் பெரிய பிரச்சனை இல்லை. 


 அதுவே கார்களை நிறுத்தும் கீழறைகள் (BASEMENT)  அல்லது சுற்றிலும் அடைக்கப்பட்ட அறை ஆகியவற்றில் காரை நிறுத்தி இஞ்சின் ஆன் செய்து உள்ளே உறங்குவது ஆபத்தானது. 


காரணம் - காருக்குள் செல்லும் காற்றானது, 

அந்தக் காரின் இஞ்சின் வெளியிடும் 

கார்பன்டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு கலந்த காற்றாக இருக்கும். 

தொடர்ந்து இந்த கலப்படமான காற்று காருக்குள் வரும் போது, இயல்பாகவே சுவாசிக்கும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் கூடிவிடும்.  

இது உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடும். 

அதிலும் குடி போதையில் இருக்கும் போது இதை கவனிக்கும் வாய்ப்பு குறைவு. 

இதனால் மரணம் நிகழும். 


இதைத் தவிர்க்க, 

காருக்குள் தூங்க வேண்டும் என்றால் 

பாதுகாப்பான திறந்த வெளியில் 

ஜன்னல்களை லேசாகத் திறந்து வைத்து விட்டு இஞ்சினை ஆன் செய்யாமல் உறங்குவது சிறந்தது. 


இன்னும் கார் சம்பந்தமான ஏசி இயக்கத்தில் பாதுகாப்புக்காக சில டிப்ஸ்கள் இதோ


ஏசி மோடில் இரண்டு வகை உண்டு


- நாம் சுவாசிக்கும் காற்று உள்ளேயே சுழற்சியில் இருக்கும் மோட் 

- வெளியில் இருந்து சுத்தமான காற்று உள்ளே வரும் மோட். 


காருக்குள் இருவருக்கு  மேல் 

நால்வர் மற்றும் அதற்கு மேல் நபர்கள் பயணிக்கும் போது 


வெளியில் இருந்து சுத்தமான காற்று உள்ளே புகும் ஏசி மோடில் பயணிப்பது நல்லது. இது உங்கள் காருக்குள் ஆக்சிஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு அளவுகள் சரியாக இருப்பதை உறுதி செய்யும். 


நீண்ட நெடிய பயணங்கள் செல்லும் போது அவ்வப்போது கட்டாய ப்ரேக் எடுத்து 

சில நிமிடங்கள் அனைவரும் இறங்கி வெளிக்காற்றைப் பெறுவது கட்டாயமாகிறது 


வாகன நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களில் அதிக நேரம் கார் நிற்க நேருமாயின், ஏசியை ஆஃப் செய்து விட்டு ஜன்னல்களைத் திறந்து கொண்டு நிற்பது நல்லது. காரணம் - நம்மைச் சுற்றி இருக்கும் காற்றில் வாகனங்களின் புகை அதிகமாக இருக்கும். குறிப்பாக நமக்கு முன் நிற்கும் கார்/ பேருந்தின் எக்ஸ் ஹார்ட் டில்லியில் இருந்து வெளிவரும் புகையில் உள்ள கார்பன் டை ஆக்சைடு/ கார்பன் மோனாக்சைடு அதிகம் உள்ள காற்றை நமது காருக்குள் ஏசி உள்ளிழுக்கும். இது நமக்கு ஊறு விளைவிக்கலாம். இது போன்ற சமயங்களில் காற்று உள் சுழற்சி மட்டும் ஆகுமாறு மோட் செட் செய்து கொள்ளவும். 


கட்டாயம் மூடிய காரில் ஏசி போட்டு உறங்கக் கூடாது. அதுவும் மது அருந்தி விட்டு உறங்கவே கூடாது.


பொதுவாக கார்களை நாம் லாக் செய்யும் போது ஜன்னல்களில்  ஒன்றோ இரண்டிலோ குறைந்தபட்சம் ஒரு செண்ட்டிமீட்டர்  இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொண்டால் 

தற்செயலாக விபரீதமாக  குழந்தைகள் உள்ளே சென்று விளையாடி கார் லாக் ஆனால் கூட 

அந்த ஒரு செண்டிமீட்டர் இடைவெளியானது உயிர்களைக் காப்பாற்றக் கூடும். 


நம் குழந்தைகளை கண்காணிப்புடன் வளர்த்து வருவோம்.

 என்றும் 

குழந்தைகள் காணவில்லை எனில் முதலில் சுற்றி இருக்கும் கார்களில் சென்று தேடுவதை வழக்கமாகக் கொள்வோம்.


காரணம் தற்காலக் குழந்தைகள்

கார்களின் சாவிகளை தானே எடுத்துக் கொண்டு அவற்றை சிறிய அழுத்தில் திறந்து உள்ளே சென்று விளையாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அவர்களிடம் கார் சாவி கிடைக்காமல் பார்த்துக் கொள்வதையும் உறுதி செய்யலாம். 


கார் - ஏசி - கார்பன் டை ஆக்சைடு - ஆக்சிஜன் - கார்பன் மோனாக்சைடு  என்று நாம் கற்றுக் கொண்ட இந்த விஷயங்களை நம் வாழ்க்கையில் பின்பற்றுவோம் 


இன்னுயிர்களைக் காப்போம்


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர்

சிவகங்கை


வெப்பநிலை உயர்வால் தகிக்கும் France

 


வெப்பநிலை உயர்வால் கொதிக்கும் ஃபிரான்ஸ்


France sweltering due to rising temperatures


ப்ரான்சில் வரலாறு காணாத அளவு வெப்பம் நிலவி வருகிறது. 

 

பாலைவனத்தில் தகிக்கும் சவுதி அரேபியாவின் மக்கா மாநகரை விடவும் ப்ரான்சின் பாரிசில் வெப்பம் அதிகமாக நிலவி வருகிறது என்பது எத்தகைய பெரிய முரண். 


கடந்த திங்கள் அன்று ப்ரான்சு அதன் வரலாற்றிலேயே உஷ்ணமான நாளை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது. 


இத்தனைக்கும் அங்கு பல்வேறு இடங்களிலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் தான் நிலவுகிறது. 


நீங்கள் கேட்கலாம்.. 

நாங்களாம் இதே 40 டிகிரி செல்சியஸ் 

வெப்பத்தில்  சூடான டீ அடிப்போமே 

40 டிகிரிலாம் ஒரு வெப்பமா? என்று கேட்கலாம். 


ப்ரான்சின் சராசரி வெப்பம் வெறும் 11 டிகிரி முதல் 13 டிகிரி செல்சியஸ்ங்க..

வெயில் காலத்தில் கூட அதிகபட்சம் 24-28 டிகிரி தான் அங்கு வெப்பமே இருக்கும்.


உங்களுக்கு இன்னொரு விஷயம் சொல்றேன் ரொம்ப அதிர்ச்சியாக இருக்கும்.. 


அங்கு பெரும்பான்மையான இடங்களில் ஏசி கிடையாது. இன்னும் ஏன் ஃபேன் கூட கிடையாது 


காரணம் அதற்குத் தேவையும் அங்கு இல்லை. 


ஆனால் திடீரென்று மாறிய இத்தகைய வெப்பமான சூழ்நிலையை அந்நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. 


வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளில் குளிக்கச் சென்ற 40 இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர். 


அடைபட்ட காரில் சிக்கிக் கொண்ட 2 மற்றும் 4 வயது சிறுவர்கள் இருவர் வெப்ப வாதம் ஏற்பட்டு இறந்துள்ளனர். 


போர்டியா நகரில் 80-95 வயதுடைய மூன்று முதியோர் இறந்துள்ளனர். 


இரவு நேர வெப்பமே 30 டிகிரி செல்சியஸ் நிலவி வருவதால் குளிரூட்டியும் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 


ஈஃபிள் டவருக்கு முன் உள்ள செயற்கை நீர் சுனையில் மக்கள் குளித்து வருகின்றனர். 


இத்தகைய வானிலை மாற்றத்துக்குக் காரணம் "ஒமேகா தடை" வானிலை என்று அழைக்கப்படுகிறது. 


கிரேக்க எழுத்துகளில் ஒமேகா எழுத்து Ω

இப்படி குண்டானைக்  கவிழ்த்தது  போல இருக்கும். 


இத்தகைய ஒமேகா  வடிவில் வட ஆப்ரிக்காவில் இருந்து வரும் வெப்பக்காற்றை தன்னகத்தே வைத்துக் கொண்டு மேற்கு ஐரோப்பாவை அவித்து வருகிறது எனலாம். 


இந்தக் காற்று மிகவும் மெதுவாக நகர்வதால், வெப்பத்தில் இருந்து தப்பிக்க லேசான காற்று கூட அடிக்காமல் வெப்பம் உயர்ந்து வருகிறது. 


வீட்டில் ஏசி ஃபேன் இல்லாமல் இத்தகைய சூழ்நிலையை சமாளிப்பது மிக மிகக் கடினம் என்பதால் குழந்தைகளுக்கு பள்ளிகள் விடுமுறையும் வேலை நேரங்களைக் குறைத்தும் இயங்கி வருகின்றன. 


நாளின் பிற்பகுதி தான் முற்பகுதியை விட அதிக வெப்பத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. 


பிரிட்டனில் கெண்ட் நகரில்  தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக  வீட்டில் யாரும் தோட்டத் தண்ணீர்க் குழாயை  உபயோகிக்கக் கூடாது என்று தற்காலிகத் தடை விதிக்கும் அளவு நிலை சென்று வருகிறது.


சூப்பர்  எல்நினோவின் பாதிப்பை இந்திய தீபகற்பம் சந்தித்து வரும் சூழ்நிலையில் 


ஒமேகா ப்ளாக் காரணமாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் வெப்பத்தால் தகிப்பது, மாறி வரும்  வானிலை சூழல்கள் மக்களை பாதித்து வருகிறது. அதனால் ஏற்படும் உடல் நிலை பாதிப்புகளும் அதிகரிக்கின்றன.


வானிலை / காலநிலை மாற்றங்கள் குறித்து நாம் அதிகம் அறிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது. 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


Ventilator சிகிச்சை ஏமாற்று வேலையா?

 


வென்டிலேட்டர் ( Ventilator ) சிகிச்சை ஏமாற்று வேலையா? 


நமது சமூகத்தில் பரவி இருக்கும் முக்கியமான கட்டுக்கதைகளுள் ஒன்று - வெண்டிலேட்டர்  சிகிச்சை குறித்தானதாக இருக்கிறது. 

வென்டிலேட்டரில் ஒருவர் போடப்பட்டதாலேயே அவருக்கு உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை. வென்டிலேட்டர் சிகிச்சை  வெறுமனே பணம் சம்பாதிப்பதற்குண்டான அவசியமற்ற சிகிச்சை என்றும், 

இன்னும் சில திரைப்படங்களில் வென்டிலேட்டர் சிகிச்சையில் இறந்தவர்களை வைத்தும் போலியாக நாடகமாடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டமையால் அந்த சிகிச்சை குறித்து பல அவநம்பிக்கைகள் சமூகத்தில் நிலவி வருகின்றது. அவற்றை  க் களைவதே இன்றைய கட்டுரையின் பணியாகும். 


வெண்டிலேட்டர் எப்படி செயல்படுகிறது? 


பொதுவாக ஒரு அறைக்குள் புதிய காற்று உள்ளே வந்து,  பழைய காற்று வெளியே செல்வதை "வென்டிலேசன்"( காற்று சுழற்சி) என்று கூறக் கேட்டிருப்போம். இதைப் போன்றே நமது உடலிலும் 

ஆக்சிஜன் நிரம்பிய புதிய காற்று உள்ளே வந்து, கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய பழைய காற்று வெளியே செல்வது நம் உயிர் வாழ்வுக்குத் தேவையான முக்கியமான காற்று சுழற்சியாகும். 


நமது உடலில் காற்றில் உள்ள ஆக்சிஜனை ரத்தத்தில் ஏற்றுவதும், 

ரத்தத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதும் என ஒரு ஓய்வறியா சலவைக்காரரின் பணியைச் செய்பவை நமது நுரையீரல்கள்.


இந்த நுரையீரல்கள் செவ்வனே அதன் பணியைச் செய்வதற்கு 

இரண்டு விஷயங்கள் தேவை. 


முதல் விஷயம் 

காற்று உள்சென்று வெளியேறத் தேவையான  தங்குதடையற்ற சுவாசப்பாதை 


இரண்டாவது விஷயம் 

நுரையீரல் காற்றை உள்ளே இழுக்கவும் வெளி விடவும்,  உதரவிதானம் மற்றும் நெஞ்சாங்கூட்டுத் தசைகளின் இயக்கம் இன்றியமையாத தேவையாகிறது. 


பல நேரங்களில், நுரையீரலில் ஏற்பட்ட நிமோனியா போன் கொடுந்தொற்றுகளின் காரணமாக, அதன் இயக்கம் பாதிக்கப்படும். இதன் விளைவாக, ரத்தத்தின் ஆக்சிஜன் ஏற்றப்படுவது முறையாக நடக்காமல் போகும். 


நுரையீரலில் நீர் தேங்குதல், தீவிர ஆஸ்துமா நிலை, மஸ்குலார் டிஸ்ட்ரோபி போன்ற தசைகளின் செயலிழப்பை ஏற்படுத்தும் நோய்கள், 

இதய செயல் முடக்கம், சுவாச செயல் முடக்கம், 

அறுவை சிகிச்சைகள், சுவாசப்பாதையில் ஏதேனும் பொருள் சிக்கிக் கொள்ளுதல்,  நினைவு மங்கி மூர்ச்சை நிலைக்குச் செல்வது என்று பல காரணங்களினால் சுவாசித்தல் என்பது இயற்கையாக நிகழாமல் போகின்றது. 


இந்நிலையில் உடனடியாக சி.பி.ஆர் (CARDIO PULMONARY RESUSCITATION) எனும் இதய சுவாச செயல் மீட்பு முதலுதவியைச் செய்து, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உடனடியாக அவரது உயிரைக் காக்கும்

உன்னத சிகிச்சையாக வென்டிலேட்டர்கள் பொருத்தப்படுகின்றன. 


வென்டிலேட்டர் என்பது 

உதரவிதானமும் நெஞ்சாங்கூட்டு தசைகளும் செய்த வேலையான காற்று உள்ளிளுத்து வெளிவிடும் காற்று சுழற்சிக்கு செயற்கையான முறையில் உதவுகின்றன.


வென்டிலேட்டரில் போட்டு விட்டாலே கதை முடிந்தது என்று பரப்பப்படும் கட்டுக் கதைகளை நம்ப வேண்டியதில்லை. 


தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் செயற்கை சுவாசக் கருவிகளில் பொருத்தப்படும் பயனாளிகளில் பெரும்பான்மையினர் விரைவில் நலம் பெற்று தங்களது உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு வீடு திரும்புகின்றனர் என்பதே உண்மை. 


நுரையீரல் இயற்கையாக சுவாசிக்கும் திறனைப் பெறுமட்டும், தற்காலிகமாக அதன் இயக்கு தசைகளுக்கு ஓய்வு வழங்கும் பணியை மட்டுமே வென்டிலேட்டர் செய்கிறது. 


எனவே, இறந்த ஒரு நபரை வென்டிலேட்டரில் போலியாகப் பொருத்தி வைப்பது என்பது இயலாத காரியமாகும்.


வென்டிலேட்டரால் 

இதயத்தை துடிக்கச் செய்யவோ, 

நுரையீரல் மூலம் நிகழும் ஆக்சிஜன்- கார்பன் டை ஆக்சைடு பரிமாற்றத்தையோ செய்ய இயலாது. 

எனவே, உயிருடன் இருக்கும் நபர்களுக்கு அதிலும் வென்டிலேட்டர் உதவியுடன் மீண்டு வருவார் என்ற நிலையில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. 


இறந்த ஒரு உடல் அடுத்த சில மணிநேரங்களில் ரைகர் மார்டிஸ் என்ற விரைத்துக் கொள்ளும் நிலையை அடையும். இந்த சூழ்நிலையில், இறந்த உடலுக்கு வென்டிலேட்டர் பொருத்துவது இயலாத காரியம். எனவே, திரைப்படங்களில் காட்சியின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்கு எடுக்கப்படும் காட்சிகளை நம்பி உயிர்காக்கும் வென்டிலேட்டர் சிகிச்சையை மறுத்துவிடக்கூடாது. 


வென்டிலேட்டரைச் சுற்றியுள்ள அடுத்த மூடநம்பிக்கை - வென்டிலேட்டரில் போடப்பட்ட நபர் அதிலிருந்து வெளியே வருவது கடினம் என்பதாகும். 

உண்மையில், மயக்க மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவானது, ஒருவரை வென்டிலேட்டரில் பொருத்தும் போதே அவர்களைத் தொடர்ந்து துல்லியமாகக் கண்காணித்து எத்தனை விரைவாகவும் விவேகமாகவும் வென்டிலேட்டரில் இருந்து மறக்கடிப்பது என்பது குறித்தே சிந்திப்பார்கள். 


காற்று உட்புகும் அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றைத் தேவைக்கு ஏற்ப, பயனாளியின் தேக முன்னேற்றத்தைப் பொருத்து படிப்படியாகக் குறைத்து வென்டிலேட்டரை நீக்குவார்கள். இதற்குப் பெயர் "வீனிங் (weaning)" மறக்கடித்தல்" என்பதாகும். 

எனவே, தேவையில்லாமல் வென்டிலேட்டரில்  பயனாளியை வைத்திருப்பார்கள் என்ற வதந்தியில் மெய் துளியும் இல்லை. 


அவசிய தேவையின்றி வென்டிலேட்டரில் பயனாளியை வைத்திருக்கும் போது 

வென்டிலேட்டர் பொருத்தியமையால் உண்டாகும் பாதிப்புகள்  ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதை சிகிச்சை அளிக்கும் குழு உணர்ந்தே செயலாற்றுகின்றது. 


நுரையீரலில் இருந்து நெஞ்சாங்கூட்டுக்கு காற்றுக் கசிவு ஏற்படுதல் (நிமோ தொராக்ஸ்), நுரையீரலில் ஏற்படும் தொற்றுகள், நீண்ட காலம் படுத்தே இருப்பதால் ஏற்படும் முதுகுப்பகுதி அழுத்தக் காயங்கள்,  கால்களின் ஆழ்சிரைகளில் ஏற்படும் ரத்த நாளக்கட்டிகள் ஆகியவற்றில் இருந்து பயனாளியைப் பாதுகாக்கும் பொருட்டு உயிர்காக்கும்  

தேவைக்கு மீறி நீண்ட  நாட்கள்  வென்டிலேட்டர் சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதில்லை என்பதைப் பதிவு செய்கிறேன்.  


நவீன கால வென்டிலேட்டர்களில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நுரையீரலுக்கு பாதகமான விளைவுகள் ஏற்படாத வண்ணம் சரியான அளவில் காற்றின் அளவு மற்றும்  அழுத்தம் நிர்வகிக்கப்படுகிறது. 

தொடர்ந்து வென்டிலேட்டரின் செயல்முறை கண்காணிக்கப்பட்டு பயனாளியின் தேவைக்கு ஏற்ப அதன் இயக்கம் மாற்றி அமைக்கப்படுகிறது. 

இதனால் பயனாளிக்குத் தேவையான குறைந்தபட்ச அழுத்தம் மற்றும் அளவில் காற்று சுழற்சி நடந்து நுரையீரலின் நலன் பாதுகாக்கப்படுகிறது.


வென்டிலேட்டர் -  உயிர்காக்கும் நவீன கண்டுபிடிப்பு


போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பதற்காக  "இரும்பு நுரையீரல்" எனும் பெயரில் 1930 களில் இருந்து பயன்பாட்டுக்கு வந்த வென்டிலேட்டர்கள் தற்போது கணினிகள் துணைகொண்டு இயங்கும் தானியங்கி முறையில் நவீனமடைந்துள்ளன. 


கோவிட் பெருந்தொற்று காலத்தில் இவற்றின் உயிர்காக்கும் தன்மையைட் கண்கூடக் கண்டோம்.

கோவிட் வைரஸால் ஏற்பட்ட நிமோனியா குணமடையும் வரை பலரின் உயிர்களை உடல்களோடு ஒட்டி வைத்த பெரும் காரியத்தைச் செய்தவை வென்டிலேட்டர்கள். 


வென்டிலேட்டர்கள் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு  

உயிர் காக்கும் உன்னத சிகிச்சையை வழங்குகின்றன. எனவே, அவற்றைப் பற்றிய அவதூறுகளை நம்பி, முக்கியமான நேரத்தைத் தாழ்த்தாமல், செயற்கை சுவாசக் கருவி சிகிச்சை குறித்து சரியான முடிவெடுப்போம் 


இன்றைய (6.6.2026) இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை. 


நன்றி இந்து தமிழ் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை






மார்பகப் புற்று நோயைக் கண்டறிய சுயமாக செய்து கொள்ளும் எளிய பரிசோதனை குறித்த விளக்கம்

 


மார்பகப் புற்று நோயைக் கண்டறிய சுயமாக செய்து கொள்ளும் எளிய பரிசோதனை குறித்த செய்முறை விளக்கம் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


சுய மார்பகப் பரிசோதனை 


இருபது வயதைக் கடந்த அனைத்து மகளிரும் மாதம் ஒருமுறை 

தங்களின் மாதவிடாய் காலம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு பின்வரும் சுய மார்பகப் பரிசோதனையை கட்டாயம் செய்யவும் 


முதல் படி 

பாருங்கள் 


முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று கொண்டு தங்களின் இருபக்க தோள்பட்டைகளையும் நேராக வைத்துக் கொண்டு கைகளை கீழே தொங்க விட்டுக் கொள்ளுங்கள். 

இப்போது தங்களின் இருபக்க  மார்பகங்களிலும் 

அளவிலோ

வடிவத்திலோ

நிறத்திலோ ஏதேனும் மாற்றத்தை காண்கிறீர்களா? 

ஏதேனும் வீக்கத்தைக் காண்கிறீர்களா? 


இப்போது உங்களின் இரு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு மேற்கூறியவற்றைப் பார்க்கவும். 


இரண்டாவது படி 

உணர்தல்


தங்களின் தோள்பட்டைப் பகுதிக்குக் கீழ் தலையைணையை வைத்துப் படுத்துக் கொண்டு, தங்களின் இடது கையை வைத்து வலது புற மார்பகத்தையும் 

வலது கையை வைத்து இடது புற மார்பகத்தையும் தொட்டு உணர்ந்து பாருங்கள். 


மூன்றாவது படி 

உணர்தல் 


உங்களின் நடு மூன்று விரல்களின் உள்ளங்கைப் பகுதியைக் கொண்டு அங்குலம் அங்குலமாக தங்களின் மார்பகங்களை அழுத்திப் பரிசோதனை செய்யுங்கள். 


தங்களின் மூன்று விரல்களையும் தட்டையாக சேர்த்து வைத்துக் கொண்டு சீரான அழுத்தத்தைக் கொடுத்து இந்த பரிசோதனையைச் செய்யுங்கள்.  


சிறிய சிறிய வட்ட வடிவில் தங்களின் விரல்களை வைத்து அழுத்திப் பார்க்க வேண்டும். இவ்வாறு தங்களின் மார்பகம் முழுமையையும் பரிசோதனை செய்திருக்க வேண்டும். 


ஒவ்வொரு முறை வட்ட வடிவில் அழுத்தம் தருவதற்கு இடையிலும் விரல்களை எடுக்காமல் தொடர்ந்து பரிசோதனை செய்யவும். 


வெளிப்புறத்தில் இருந்து சுற்றுப் பகுதிகளை பரிசோதனை செய்து கொண்டே உட்பக்கம் வந்து இறுதியில் முலைக் காம்பு வரை அழுத்தம் தந்த பரிசோதனை செய்திருப்பதை உறுதி செய்யவும். 


இந்தப் பரிசோதனையில் 

ஏதேனும் வீக்கம், 

கட்டி இருப்பது போன்ற உணர்வு, தோல் பகுதி ஆரஞ்சுப் பழ தோல் போன்று தடிமனாக இருத்தல் போன்றவற்றை பரிசோதிக்கவும்


அப்படியே அந்தப் பக்கம் இருக்கும் 

கக்கம் (Arm pit) பகுதியை அழுத்தி அங்கு ஏதேனும் கழலை வீக்கம் இருக்கின்றதா? என்பதை பரிசோதிக்கவும். 


நான்காவது படி 

உணர்தல் 


தங்களது முலைக்காம்பை மெதுவாகப் பிதுக்கிப் பார்க்க வேண்டும். 

முலைக் காம்பில் இருந்து 

நீர் போன்ற , பால் நிற அல்லது மஞ்சள் நிற திரவமோ அல்லது ரத்தமோ வெளியேறுகிறதா என்பதைப் பார்க்கவும். 


ரத்தம் வெளியேறுவது புற்று

நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். 


ஐந்தாவது படி

பார்த்தல் & உணர்தல் 


மேற்கூறிய அனைத்து படிநிலைகளையும் மற்றொரு மார்பகத்திலும் செய்ய வேண்டும்.


ஏதேனும் வித்தியாசமாகத் தெரிந்தால் உடனே தங்களின் மருத்துவரை நாட வேண்டும். 


இந்தப் பரிசோதனையை மாதம் ஒரு முறை செய்வதன் மூலம்  தங்கள் மார்பகங்களில் நேரும் மாற்றங்களை உடனே இனங்கண்டு மருத்துவ உதவியை நாட முடியும். 


முப்பது வயதைக் கடந்தோர்

வருடம் ஒருமுறையேனும் மருத்துவரிடம் நேரடி மார்பகப் பரிசோதனை  செய்து கொள்வது நல்லது. 


விரைவான நோய் கண்டறிதல் மூலம்

துரிதமான சிகிச்சை அளித்து

வியத்தகு முன்னேற்றம் அடைந்து

முழுமையான நோய் குணம் பெற முடியும். 


எனதருமை தாய்மார்களே சகோதரிகளே இன்றே தொடங்கிடுவீர் சுய மார்பகப்பரிசோதனையை... 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை





தொலைதூரப் பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ? - மருத்துவரின் எச்சரிக்கை பதிவு



 தொலைதூரப் பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ? - மருத்துவரின் எச்சரிக்கை பதிவு


அடிக்கடி பேருந்துகளில் பல மணிநேரங்கள்    தொலைதூரப் பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ?


மகிழ்வுந்தில் வீக்கெண்ட் சில  நூறு கிலோமீட்டர்கள் லாங்  ட்ரைவ்  செல்பவரா  நீங்கள்? 


தொலைதூர விமானப்பயணங்களின்  மூலம் காலை நியூயார்க்கில்  காபி 

மாலை டோக்கியோவில்  டின்னர் சாப்பிடும் வழக்கம் கொண்டவரா நீங்கள்? 


குடும்பத்தைக்காக்க வருமானத்துக்காக   சரக்கு லாரிகளை மாநிலம் விட்டு மாநிலம்   ஓட்டும் லாரி ஓட்டுநர்கள்  / அரசு விரைவுப்போக்குவரத்து  பேருந்து ஓட்டுநர்கள்  / தனியார் மொஃபசல் பேருந்து ஓட்டுனர்கள்  


இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கானது  தான். 


Dr.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


சமீபத்தில் புது டெல்லியை சேர்ந்த சவுரப்  சர்மா எனும் முப்பது வயது இளைஞர் 

வீக்கெண்ட் ஜாலி ட்ரைவாக  ரிசிகேஷில்  இருந்து காரை  எடுத்துக்கொண்டு கிளம்பி இருக்கிறார் 


இவரது வண்டி ஒரு ஆட்டோமேட்டிக்  வண்டி  ஆதலால் இடது காலுக்கு வேலை இல்லை. 


வழக்கமான  கியர்  வண்டியில் இடது கால் க்ளட்ச்சில்  எப்போதும் கால் இருக்க வேண்டும். 

ஆனால் ஆட்டோமேட்டிக்கில்  ப்ரேக் ஆக்சிலேட்டர்  இரண்டும் வலது காலால்  இயக்கினால்  போதும். 


மேலும் விலையுயர்ந்த  கார்களில் "cruise" மோட்  என்று இருக்கும். 

நாம் நெடுஞ்சாலையை அடைந்தவுடன்  அடைய வேண்டிய வேகத்தை அடைந்து விட்டு க்ரூஸ்  போட்டு விடலாம். 


இப்போது வலது  காலுக்கும்  வேலை இருக்காது. 


சரி விசயத்துக்கு வருவோம். 

இந்த தம்பி சுமார் எட்டு மணிநேரம் நான்  ஸ்டாப்பாக  வண்டியை செலுத்தி தனது அலுவலகத்தை  அடைந்துள்ளார். 


கூடவே நன்றாக டைட்டாக  இருக்கும் படியான சாக்குத்துணியால்  ஆன பேண்ட்டை  அணிந்துள்ளார். என்னது சாக்குதுணியா? என்று கேட்காதீர்கள். நாம் உபயோகிக்கும்  ஜீன்ஸ் பேண்ட்  உருவாக்கப்படும்  டெனிம்  வகை துணி - சாக்குத்துணி தானே. 


நமது சீதோஸ்ன  நிலைக்கு சற்றும் பொருந்தாது  என்றாலும் நாம் ஃபேசனுக்காக  ரோசத்தை  விடும் கூட்டமன்றோ? 


இந்த டைட் டெனிம்  பேண்ட்  போட்டுக்கொண்டு  எட்டு மணிநேரம் வண்டியை ஓட்டிக்கொண்டு போன அவருக்கு

இடது கனுக்காலில்  நன்றாக வலி  இருந்துள்ளது.  


முதல் அறிகுறிகளை புறக்கணிப்பது இந்திய நோயாளி கண்டிப்பாக கடைபிடிக்கும் எழுதப்படாத  சட்டமன்றோ.? 

தம்பியும்  அந்த வலியை  புறக்கணித்து  இரண்டு நாட்கள் அலுவலகம் செல்கிறார். 


அங்கும் குத்த  வைத்தபடியே  பணி செய்யும் வொய்ட்  காலர் வேலை தான். 


வலி அதிகமாகியிருக்கிறது. 

இரண்டாவது நாள் அலுவலகத்தில் நண்பர்களுடன் இருக்கும் போது 

தீடீரென்று கண்ணைக் கட்டிக் கொண்டு  வந்திருக்கிறது. 

இதை Black outs என்கிறோம். 


கூடவே மூச்சிரைப்பும்  படபடப்பும் 

பிறகு மூர்ச்சை  நிலைக்கு சென்று விட்டார். 


கொஞ்ச நேரம் கழித்து நினைவு வந்தாலும் மீண்டும் மயக்கத்துக்கு  செல்ல


ஆபத்தில் உதவுபவர்கள் தானே நண்பர்கள். 

உடனே இவரை பக்கத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். 

அங்கே நாடித்துடிப்பு  மிக குறைவாக இருக்கவே 


இதயத்துடிப்பையும்  சுவாசத்தையும்  மீட்கும்  நவீன மருத்துவத்துறையின் பிரம்மாஸ்திரமான cardio pulmonary resuscitation ஐ செய்து  

உடலை விட்டு பிரிந்து சென்ற உயிரை மீண்டும் பிடித்து இழுத்து வந்து  இரண்டுக்கும்  கால்கட்டு  போட்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.


இதெல்லாம் சரி.. இப்ப அவருக்கு என்ன தான் நடந்துச்சு.. அத சொல்லுங்க டாக்டர்.. 

நானும் வாரக்கடைசில  சென்னைல  இருந்து வண்டிய கெளப்பி  நான்ஸ்டாப்பா  மதுரைக்கு கார் ஓட்டிட்டு  போய்ட்ருக்கேன் என்று நமது ஐடி துறை சகோதரர்கள் பதறும் அவர்களின் இதயத்துடிப்பு  இங்கு வரை கேட்கிறது. 


சொல்கிறேன் ..


ஒரு மனுசன் இவ்வளவு நேரம் தான் படுத்துருக்கணும்..இவ்வளவு நேரம் தான் காலை தொங்க போட்டு வச்சுருக்கணும்.. இவ்வளவு நேரம் தான் தொடர்ந்து உக்கார்ந்துருக்கணும்னு  விதி இருக்கு. 


சாதாரண சிசேரியன் செய்தாலும் மருத்துவர்  பிள்ளை பெற்ற அந்த பச்சை உடம்புக்காரியை  வலியே  இருந்தாலும் பரவாயில்லை  எழுந்து நடந்தே ஆகணும்  என்று வற்புறுத்துவது  எதனால்? 


காரணம் இருக்கிறது. 

நாம ஒரே இடத்தில் பல மணிநேரம் எந்த அசைவும் கொடுக்காம கால்கள தொங்க போட்டோ? அல்லது நீட்டியோ  வைத்திருந்தால் நமது கால்களில் இருக்கும் ரத்த ஓட்டம் மெதுவாகும்  மேலும் காலில் இருந்து மேலே செல்ல வேண்டிய ரத்தத்தின் சுழற்சியும்  குறையும். 


இதனால் stasis எனும் ரத்த ஓட்ட மந்த நிலை ஏற்படும். 


இதனால் நமது கால்களில் உள்ள ஆளத்தில்  இருக்கும் சிறைகளில் Deep vein thrombosis என்ற பிரச்சனை வரலாம். அதாவது அந்த சிறைகளில் ரத்தம் கட்டியாக மாறிவிடக்கூடும். எனினும் அனைவருக்கும் இவ்வாறு நடக்காது. ஒரு சிலருக்கு இவ்வாறு ரத்தக்கட்டி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். 


இந்த ரத்தக்கட்டி  நாம் அடுத்து எழுந்து நடக்கும் போது நமது காலின் சிறைகள் வழியாக பயணித்து inferior vena ceva  எனும் பெரிய சிறைதனில் நுழைந்து 

இதயத்தில் உள்ள வலப்பக்க  மேல்புற  அறையான Right atrium  அடைந்து அங்கிருந்து right ventricle வழியாக நுரையீரலுக்கு  பம்ப் செய்யப்பட்டு நுரையீரலின்  ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தலாம். இதை pulmonary embolism என்கிறோம். 


இது போய் மூளையின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தினால் அது பக்க வாதம் (stroke) வரவழைக்கும். இதை thrombo embolic stroke என்கிறோம். 


இதய ரத்த நாளங்களை  அடைத்தால் அதற்கு பெயர் myocardial infarction. 


ஏன் சார்.. ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு  ஒரு லாங்க் ட்ரைவ்ல நான்ஸ்டாப்பா ஓட்டி  புது வொயஃப்  கிட்ட சீன் போடலாம்னு பாத்தா...அதுலயும்  இப்டி பயம்புடுத்துறீங்களே? என்று கேட்கிறீர்களா 


என்ன செய்வது? 

நம் உடலின் இயற்கை அப்படி. 

நாம் நடந்து நடந்தே பழக்கப்பட்ட பிராணிகள்.  


நாம் நடப்பதை நிறுத்தினால்  மரணம் வரப்போகிறது என்று அர்த்தம்.   


நமது கால்களின் கணுக்கால் பகுதியில்  Soleus எனும் பிரத்யேகமான தசை  உள்ளது. இதை இன்னொரு இதயம் என்றே அழைக்கலாம் . நாங்கள் இதை peripheral heart என்று செல்லமாக அழைக்கிறோம். 


இதன் வேலை கால்களில் ரத்த ஓட்டத்தை  ஒரு இடத்தில் நிற்க விடாமல் ரத்த கட்டிகள் உருவாகிவிடாமல் இருக்க  


ஒரு விநாடிக்கு  9.8 மீட்டர் என்ற அளவில்  இழுக்கும் பவர்ஃபுல்  புவிஈர்ப்பு சக்தியை எதிர்த்து ரத்தத்தை  பம்ப்  செய்கிறது. 

இது ஏறக்குறைய நம் அந்த கால அடிகுழாய்  போன்று வேலை செய்கிறது. 


ஒரு பக்கமாக ரத்தத்தை  மேலே ஏற்றிவிட்டு 

கீழே ரத்தம் இறங்காமல்  பார்த்துகொள்கிறது. 


இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சோலியஸ்  தசை கூட 

நீரிழிவு 

உடல் பருமன் 

முதுமை போன்றவைகளால்  வலுகுறைகிறது.  


கால்களுக்கு செல்ல வேண்டிய  ரத்த ஓட்டத்தை நாம் டைட்டான  பெல்ட்/ டைட்டான  சாக்குத்துணி  பேண்ட்  அணிந்து தடுத்தால் 

என்ன நடக்கும் என்பதை நான் சொல்லித்தெரிய  வேண்டியதில்லை. 


இந்த கட்டுரையின் கடைசி கட்டம் 


டேக் ஹோம் அட்வைசஸ் 


1. வீக்கெண்ட்  ட்ரிப்  நிச்சயம் தேவை. 

லாங்க்  ட்ரைவும்  ஓகே. ஆனால் நான் ஸ்டாப்பாக  பல மணிநேரம் பயணிக்க வேண்டியதில்லை. 

நம்மை நம்பி தானே நெடுஞ்சாலையோர  டீக்கடைகள்  இருக்கின்றன. இறங்கி இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறையேனும்  ஒரு சாயா  அடிக்கலாம் அல்லது சிறுநீர் கழிக்கலாம். இப்படி நின்று நிதானமாக  செல்வது தான் நல்லது . நம் கூட பயணிக்கும் அனைவரும் ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் இறங்கி இரண்டு நிமிடம் நடந்து விட்டு பிறகு வந்து காரில்  ஏறுவது சிறந்தது. 


2. எந்த நெடுந்தூரப்பயணத்திற்கும்  டெனிம் துணிகள் அணிய தகுதியானைவை  அல்ல. 

பருத்தி  துணிகள் சிறந்தவை. 

அளவுக்கு பொருந்தாத  டைட்  ஜீன்ஸ்கள்  வேண்டாம். பேலியோவுக்கு மாறினால் அந்த டைட் ஜீன்ஸ்களும்  லூசாக  வாய்ப்பு உண்டு 😃


3.  முதியோர் / நீரிழிவு நோயர்கள் / ரத்த அழுத்தம் இருந்து மாத்திரை எடுப்பவர்கள் 

பேருந்துகளில்  நெடுந்தூர பயணங்களில் இருக்கும் போது கட்டாயம் வண்டி நிற்கும் போது ஏறி இறங்குவது நல்லது. 

இடை நில்லாப்பேருந்தாக இருந்தால் குறைந்தபட்சம் எழுந்து கொஞ்ச நேரம் நின்று உட்காரலாம்  அல்லது கால்களை  தையல்  மிசின் அமுக்குவது  போல அமர்ந்த படியே செய்யலாம். இது கால்களின் ரத்த ஓட்டம் மந்தமாகாமல் தடுக்கும். 


4. லாரி ஓட்டுநர்கள்/ தொலை தூர  வாகன ஓட்டிகள் கட்டாயம் இரண்டு மணிநேரத்திற்கு  ஒரு முறை வண்டியை நிறுத்தி விட்டு ஒரு கிலோமீட்டராவது  நடந்து விட்டு வண்டியில்  ஏற வேண்டும்.  என்னை சந்திக்கும் பல பேருந்து ஓட்டுனர்களுக்கு  நீரிழிவு / ரத்த கொதிப்பு இருக்கிறது.


5. விமானங்களில்  நெடுந்தொலைவு  பயணப்படும்  மக்கள்  வண்டி சீட் பெல்ட் அணியத்தேவையில்லாத உயரத்தை அடைந்ததும் கட்டாயம்  இரண்டு மணிநேரத்திற்கு  ஒரு முறையாவது எழுந்து சிறுநீர் வராவிட்டாலும்  பரவாயில்லை. ஃப்ளைட்டில்  டாய்லெட்  எப்படி இருக்கிறது என்று பார்க்கவாவது  எழுந்து நடங்கள்.  

ஏர்  ஹோஸ்டஸ்  அம்மணிகள்  என்ன நினைப்பார்களோ? அருகில் இருக்கும் கோட் சூட் போட்ட அங்கிள்  என்ன நினைப்பாரோ? என்றெல்லாம் சங்கோஜப்படாதீர்கள்.  


6. இதயத்தில் வால்வு ஆபரேசன் செய்யப்பட்டு அடைப்பு நீக்கம் / செயற்கை வால்வு பொருத்தப்பட்டவர்களுக்கு  ரத்தம் உறையாமல் தடுக்க அசிட்ரோம்  போன்ற மாத்திரைகள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும்.

பயணத்தின்  போது அந்த மாத்திரையை மறந்து விடாதீர்கள் சொந்தங்களே. 


7. வீட்டில் நடக்கவே  இயலாத நிலையில் இருக்கும் முதியோர் இருப்பார்கள். அவர்களுக்கு முழங்கால்  முட்டிப்பகுதியில்  காலை  அவ்வப்போது  மடக்கி நீட்டும்  பிசியோதெரபி செய்ய வேண்டும். தையல்  மிசினை அமுக்குவது  போன்ற எக்சர்சைஸ் செய்ய வேண்டும்.



8. முதியவர்கள் / கர்ப்பிணிகள்  / வேரிகோஸ்  வெய்ன்  பிரச்சனை இருப்பவர்கள் கால்களில் கம்ப்ரசன்  ஸ்டாக்கிங்க்ஸ்  அணிந்து கொண்டு பயணம் செய்யலாம் 


9. கட்டாயம் தொலை தூரப்பயணத்தின்  போது தண்ணீர் போதுமான அளவு அருந்த மறக்கக்கூடாது . காரணம் நீரிழப்பு  ரத்தத்தை  எளிதில் உறைய வைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே தண்ணீர் குடித்துக்கொண்டே  இருக்க வேண்டும். தண்ணீர் குடித்தால்  யூரின் போக  வேண்டி வரும் என்று முக்கியமாக பெண்கள் சரியாக தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.  அவர்களுக்கானது இந்த எச்சரிக்கை. 


10.எந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலும் சரி.. மருத்துவர் எழுந்து நடக்க சொல்லிவிட்டால் நடக்க வேண்டும். எத்தனை வலித்தாலும்  பரவாயில்லை. எழுந்து நடக்க வேண்டும்  

எழுந்து நடக்கும் வரை தான்   

நாம் வாழ்கிறோம் 


11 . முதியோர்களுக்கு மூட்டுத் தேய்மானத்திற்கு பரிந்துரைக்கப்படும் KNEE CAP / KNEE CUFF போன்றவற்றை நீண்ட பயணங்களின் போது கட்டாயம் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை  அவிழ்த்து ரத்த ஓட்டத்தை உறுதி செய்த பின் மீண்டும் கட்டிக் கொள்ளலாம் அல்லது இறுக்கமாக அணியும் KNEE CAPகளை நீண்ட பயணங்களின் போது தவிர்க்கலாம். 

முதுகுக்கு அணியும் Lumbo sacral belt போன்றவற்றை அணிவதில் பிரச்சனை இல்லை. 


  

நடை நின்று  விட்டால் 

ஒன்று நாம் அதை நெருங்கி விட்டோம்

அல்லது 

அது நம்மை நெருங்கி விட்டது 

என்று அர்த்தம் 


அவசியமான குறிப்பு 


கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் குறிப்பாக மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் அளவு பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களின் ரத்த உறைதல் தன்மையை சரிபார்க்கும் PT , aPTT , INR , BT, CT ஆகிய பரிசோதனைகளை இப்போது ஒரு முறை செய்து ரத்த உறைதல் தன்மை சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். 

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் ரத்த உறைதல் தன்மையில் பாதிப்பு இருப்பதைக் காண முடிகிறது. இவர்களுக்கு மற்றவர்களை விட சீக்கிரம் ரத்தம் உறைவதால் ரத்தக் கட்டிகள் ஏற்பட்டு இதய ரத்த நாள அடைப்பு / மூளை ரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. 


பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


Portronics Mobike 4 Bike Phone Mount with 360° Rotational, Strong Hold for Bicycle, Motorcycle Compatible with 4.7 to 6.8 inch Devices (Black)


https://amzn.to/3KRgV8k




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-08-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்