தன் திறமையால்
பிறவிக் குறைபாட்டை வென்ற மாவீரனின் கதை.
ஜூன் 24,1987
தென் அமெரிக்க கண்டத்தில்
அர்ஜெண்டினா நாட்டின்
ரொசாரியோ நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு
லியோனல் மெஸ்ஸி என்று பெயர் சூட்டினார் அவரது தந்தை ஜோர்ஜ் .
லியோனெல்- பிரெஞ்சு- பொருள் - குட்டி சிங்கம்
மெஸ்ஸி - இத்தாலி - பொருள் - அறுவடை செய்பவன்
பெயர் வைத்தது போலவே
லியோனெல் பிறந்ததில் இருந்து தனது சக நண்பர்களைப் போல வயதுக்கேற்றாற் போல வளர்ச்சி காணாமல் "குட்டியாகவே" இருந்தார்.
அர்ஜென்டினாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் பரிசாக வழங்கப்படுவது எது என்றால் கேட்டால்
தயக்கமே இல்லாமல் அது
"கால் பந்து" தான்.
குட்டையாக இருந்தாலும்
சிங்கம் சிங்கம் தான்.
கால்பந்தாட்ட களத்தில் எதிர் அணியினர் அமைக்கும் கோட்டைகளை லாவகமாகக் கடந்து சென்று கோல் அடிப்பதில்
இவரது ஆட்ட நேர்த்தி என்பது
குழந்தைப் பருவத்திலேயே பிரபல்யம்.
அவரது குடும்பத்தினருக்கு
அவர் சரியான அளவில்
உடல் வளர்ச்சியைக் காணவில்லை என்பதை பத்தாம் வயதிலேயே ஒட்டியே உணர்ந்தனர். .
அவரது பதினோறாம் வயதில்
அந்த செய்தி அவரது குடும்பத்தில் பேரிடியாக இறங்கியது.
ஆம்... மூளையில் பிட்சுசுவரி சுரப்பி எனப்படும் நாளமில்லா சுரப்பியில் இருந்து உடலின் வளர்ச்சியைத் தூண்டும் முக்கியமான ஹார்மோனான
"உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்" (GROWTH HORMONE) சரியான அளவில் சுரக்கவில்லை என்பது உறுதியானது.
இதை Growth Hormone Deficiency என்று அழைக்கிறோம்.
இதன் விளைவாக உடலின் வளர்ச்சி என்பது அதிகபட்சம் 140 செண்ட்டிமீட்டரில் தடை படும்.
கால்பந்தாட்ட வீரனுக்குத் தேவையான தசை வளர்ச்சியோ எலும்பு வலிமையோ கிடைக்காது.
ஒட்டுமொத்த குடும்பமே நொறுங்கிப் போனது.
அசாத்தியமான கால்பந்தாட்டத் திறனைக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் எதிர்காலம் - பிறவிக் குறைபாட்டினால் பாதிக்கப்படப்போவது கண்கூடாகத் தெரிந்தது.
அக்கால அர்ஜென்டினாவில்
வளர்ச்சிக்கான ஹார்மோன் சிகிச்சை என்பது பிரபலமானதாகவும் இல்லை.
எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் இல்லை.
பிரதிமாதம் 900 முதல் 1500 டாலர்கள்
செலவு புடிக்கும் சிகிச்சைக்கு அந்த ஏழைத் தகப்பனால் எப்படி வழி செய்ய முடியும்?
மெஸ்ஸிக்கு தேவைப்படும் உதவியை
குடும்பத்தாலோ சுற்றத்தாராலோ
அவர் விளையாடிய உள்ளூர் அணியாலோ செய்ய இயலவில்லை.
எனவே, 13 வயதுச் சிறுவனான மெஸ்ஸியை அழைத்துக் கொண்டு
ஸ்பெய்ன் நாட்டில் உள்ள பார்சிலோனா மாகாணத்திற்கு சென்றார் அவரது தந்தை.
அங்கு பார்சிலோனா கால்பந்து கிளப் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான அணியாகும்.
அந்த அணியின் பயிற்சி மற்றும் அணி மேலாண்மை செயலாளராக இருந்த கார்லஸ் ரெக்சாக் அவர்கள் பார்க்க ஒரு ஆட்டத்தில் விளையாடினார்
இவரது மிரட்டலான ஆட்டத்திறனையும்
எதிரிகளிடம் பதுங்கிப் பாயும் திறனையும்
பந்தை லாவகமாக அங்கும் இங்கும் கொண்டு செல்லும் நேர்த்தியும் பார்த்து விட்டு "அசாத்தியமான திறன்" கொண்டவனாக இருக்கிறானே என்று வியந்தார். இவரை உடனே இந்த கிளப்பிற்குள் புக் செய்யலாம் என்று முடிவு செய்தார்.
ஆனால் பார்சிலோனா அணியின் ஏனைய நிர்வாகக் குழுவினருக்கு இவரது முடிவில் உடன்பாடு ஏற்படவில்லை.
- வெளிநாட்டு வீரர்
- வயது மிகவும் குறைவாக உள்ளது.
- கூடவே பிறவு வளர்ச்சிக் குறைபாட்டு நோய் உள்ளது . அதனால் போதிய வளர்ச்சி இல்லை
- அவரது மருத்துவ செலவுக்கும் சேர்த்து செலவு செய்ய வேண்டும்.
இத்தனை அஃகன்னாக்கள் இருப்பதால்
வேண்டாம் என்றே முடிவு செய்தனர்.
போர்ட் கமிட்டியின் இந்த முடிவு, மெஸ்ஸிக்கும் அவரது தந்தைக்கும் அவரது செயலாளர்களுக்கும் பின்னடைவாக அமைந்தது.
டிசம்பர் 14, 2000
பொம்பேயா டென்னிஸ் கிளப்
உள்ளே
பார்சிலோனா டெக்னிக்கல் மேனேஜர்
ரெக்சாக்குடன் மெஸ்ஸியின் மேனேஜர்கள்
நீண்ட நேரம் பேசிய பிறகு
உடன்படிக்கை எட்டப்பட்டது.
ரோக்சாக்குக்கு மெஸ்ஸியை விட மனசில்லை.
எனவே, போர்டு கமிட்டியின் முடிவையும் மீறி மெஸ்ஸிக்காக ரிஸ்க் எடுக்கிறேன் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட எத்தனித்தார்.
ஒப்பந்தம் கையெழுத்தாக
சரத்துகளை எழுத அங்கே காகிதங்கள் கூட தயார் செய்து வைக்கப்பட்டிருக்கவில்லை.
எனவே, அங்கிருந்த பேப்பர் நேப்கினை எடுத்து அதில் ஒப்பந்த உடன்படிக்கையை எழுதி கையெழுத்திட்டு
மெஸ்ஸியின் தந்தையிடம் கொடுத்து
"இனி உங்களின் மகன் எங்களின் அணிக்கு விளையாடுவான்" என்றார்.
நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டிருந்த தந்தையின் வயிற்றில் பால் வார்த்த முடிவல்லவோ அது.
மெஸ்ஸியின் மருத்துவ செலவு முழுவதையும் பார்சிலோனா கிளப் ஏற்கும் என்பதும் முக்கியமான ஒப்பந்தமாகும்.
அதற்கடுத்து
மெஸ்ஸி, அவருடன் அவரது குடும்பமும்
ஸ்பெயினுக்கு இடம்பெயரவும் பார்சிலோனா உதவி செய்தது.
இதன் மூலம்
மெஸ்ஸி சரியான உடல் வளர்ச்சியை அடைந்தார். 140 செமீட்டர் உயரம் தான் வளருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முறையான ஹார்மோன் சிகிச்சை கிடைத்து 170 செமீட்டர் என்ற அளவை எட்டினார்.
தனக்கு வாழ்வளித்த பார்சிலோனா அணியில் 2000 முதல் 2021 வரை தொடர்ந்தார்.
அதற்குப் பின்பும்
அங்கேயே தொடர்ந்து தனது ஓய்வை அந்த அணியில் இருந்தே அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார்.
ஆனால், பார்சிலோனா அணி நிர்வாகத் திறமையின்மையால் பொருளாதார நலிவுறுதலைச் சந்தித்தது. கிளப்களை நிர்விக்கும் கடுமையான பொருளாதாரம் சார்ந்த நெறிமுறைகளின் விளைவாக மெஸ்ஸியை அந்த அணியால் தக்க வைக்க இயலவில்லை.
இத்தனைக்கும் மெஸ்ஸி பணமே வாங்காமலும் விளையாடத் தயாராக இருந்தும், நெறிமுறைகள் சாதகமாக இல்லாததால் கடினமான இதயத்துடனும் கண்ணீருடனும் தனக்கு வாழ்வு தந்த பார்சிலோனாவைப் பிரிந்து தற்போது இண்டர்மியாமி சிஎஃப் (INTERMIAMI CF)
அணிக்கு விளையாடி வருகிறார்.
சிறுவனாக சரியான வளர்ச்சி அடைய இயலாமல்
பொருளாதாரத்திலும் உடல் நிலை சார்ந்தும் பாதிப்பில் இருந்தாலும்,
தனது தனித்திறமையின் காரணமாகவும்
பார்சிலேனா அணியின் மேலாளர் கார்லஸ் ரெக்சாக்கின் நம்பிக்கை காரணமாகவும்
இன்று கால்பந்தாட்ட உலகின் மன்னனாக இருந்து வருகிறார் .
குட்டி சிங்கமான லியோனெல்
கோல்களையும் கோப்பைகளையும்
அறுவடை செய்யும் மெஸ்ஸியாக மாறியது
நமக்கெல்லாம் உத்வேகம் தரும் கதை என்றால் அது மிகையாகாது.
பின்குறிப்பு :- தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாவட்ட அளவிலான ஆரம்ப கால தலையீடு மையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு குழந்தைகள் நல நிபுணர்கள் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டைக் கண்டறிந்து " பிறவி வளர்ச்சிக்கான ஹார்மோன் குறைபாடு" இருப்பின் அவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ்
"ஹார்மோன் சிகிச்சை" இலவசமாக வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை