கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை



 தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை


கட்டுரையாளர்: லோகநாதன் பழனிசாமி, எழுத்தாளர்.


தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 42.3 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்ற நிலையில், நிகழாண்டு அந்த எண்ணிக்கை 40 லட்சமாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, சில இடங்களில் நான்கைந்து மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலை உருவாகியுள்ளது. எமிஸ் தரவுகளின்படி, தமிழகம் முழுவதும் சுமார் 5,800 தொடக்கப் பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக மட்டுமே பயின்று வருகின்றனர். இது கல்வி வளங்களையும் அரசின் நிதியையும் திறமையாகப் பயன்படுத்தாத நிலையை உருவாக்கியுள்ளது.

எடுத்துக்காட்டாக, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 155 தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 927 மாணவர்களுக்காக 310 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அதாவது, சராசரியாக ஓர் ஆசிரியருக்கு மூன்று மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களும், இரண்டு பகுதிநேர மதிய உணவுத் திட்டப் பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். ஓர் ஆசிரியரின் சராசரி ஆண்டு ஊதியம் ரூ. 5 லட்சம் என்றும், ஒரு பகுதிநேரப் பணியாளரின் ஆண்டு ஊதியம் ரூ. 75 ஆயிரம் என்றும் எடுத்துக்கொண்டால், ஒரு தொடக்கப் பள்ளியை நடத்த ஆண்டுக்கு சுமார் ரூ. 11.5 லட்சம் செலவாகிறது.

ஒரு மாணவருக்கான ஆண்டு அரசுச் செலவு ரூ. 1 லட்சம் எனக் கணக்கிட்டால் கூட, ஒரு தொடக்கப் பள்ளியில் குறைந்தபட்சம் 11 மாணவர்கள் இருக்க வேண்டும். எனவே, 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுடன் இணைப்பது காலத்தின் கட்டாயமாகும்.

இணைக்கப்படும் பள்ளி சற்று தொலைவில் இருந்தால், 10 மாணவர்கள் பயணிக்கக் கூடிய மினி வேனை ஓட்டுநருடன் ஒரு கல்வியாண்டுக்கு வாடகையில் இயக்க சுமார் ரூ. 5 லட்சம் செலவாகும். அனைத்து குறைந்த மாணவர் எண்ணிக்கையுள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் இத்தகைய போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ. 295 கோடி மட்டுமே செலவாகும்.

தற்போது, 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 5,800-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளை இயக்குவதற்கு, பள்ளி ஒன்றுக்கு சராசரியாக ரூ. 11.5 லட்சம் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு சுமார் ரூ. 670 கோடி செலவாகிறது. ஆனால், மேலே சொன்னதுபோல இந்த மாணவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ. 295 கோடி மட்டுமே போதுமானது.

இந்த ஒருங்கிணைப்பின்மூலம் மாணவர்கள் அதிகமான சக மாணவர்களுடன் சேர்ந்து கற்கவும், குழு நடவடிக்கைகளில் பங்கேற்கவும், விளையாடவும், சமூகத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து கற்பதைப் போலவே, சக மாணவர்களின் கேள்விகள், பதில்களின் மூலமும் பலவற்றைக் கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

ஆசிரியர்களும் தங்கள் கல்வித் திறமையையும் நேரத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆசிரியர்களும் ஓரிரு மாணவர்களிடையே மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, பல மாணவர்களை வகுப்பில் ஈடுபடுத்த முடியும்.

கழிப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு வசதிகள் போன்ற கட்டமைப்புகளையும் மேம்படுத்துவது எளிதாகும். காலை உணவுத் திட்டம் போன்ற நலத் திட்டங்களை பெரிய, ஆனால் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பள்ளிகளில் செயல்படுத்துவதும் எளிதாகும்.

ஆண்டு விழா, விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றையும் சிறப்பான முறையில் நடத்த முடியும். கலைத் திருவிழாக்களில் பங்கேற்று வெற்றிகளைக் குவிக்க முடியும்.

மேலும், ஒருங்கிணைக்கப்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றிப் பணியமர்த்தலாம். தமிழகம் முழுவதும் சுமார் 11,800 ஆசிரியர்களை (ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு ஆசிரியர்கள் என்ற அடிப்படையில்) தேவையுள்ள பள்ளிகளுக்கு மாற்றுவதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையையும் கணிசமாகக் குறைக்கலாம். ஓராசிரியர் பள்ளிகள் என்பதே இருக்காது.

பயன்படுத்தப்படாமல் இருக்கும் பள்ளிக் கட்டடங்களை சமூகக் கூடங்கள், பொது நூலகங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் அல்லது பிற பொதுப் பயன்பாட்டு மையங்களாக மாற்றிப் பயன்படுத்தலாம்.

இந்தத் திட்டத்தை ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் செயல்படுத்துவதற்குப் பதிலாக, தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் தலா ஒரு ஒன்றியத்தைத் தேர்ந்தெடுத்து ஓராண்டு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தலாம். அதன் முடிவுகளை அறிவியல் ரீதியாக மதிப்பீடு செய்து, மாணவர் நலன், கல்வித் தரம், நிதிச் சிக்கனம் மற்றும் ஆசிரியர் பயன்பாட்டில் கிடைக்கும் முன்னேற்றங்களை ஆய்வு செய்த பிறகு, படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தலாம்.

இந்த முன்னோடித் திட்டத்தின்மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு, கற்றல் முதலியவை மேம்படுவதால், சம்பந்தப்பட்ட ஒன்றியங்களில் அடுத்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என்றும், குறைந்தபட்சம் மாணவர் எண்ணிக்கை குறையாது என்றும் நம்பலாம்.

ஒருவேளை, இந்தத் திட்டத்தின் பலன்கள் என்ன என்பதை ஓராண்டுக்குள் தீர்க்கமான முடிவை எட்ட முடியவில்லை என்றால், இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவு செய்வதைத் தாமதப்படுத்தலாம்.

மாணவர் நலன், ஆசிரியர் வளத்தின் சிறந்த பயன்பாடு, அரசின் நிதிச் சிக்கனம் மற்றும் கல்வித் தர மேம்பாடு ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் அடைய, மிகக் குறைந்த மாணவர் எண்ணிக்கையுடன் செயல்படும் தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைத்து, முதல்கட்டமாக 38 மாவட்டங்களிலும் தலா ஒரு ஒன்றியத்தில் இந்த முயற்சியைத் தொடங்குவது காலத்தின் தேவையாகும்.



The Journey of Cauvery River



காவிரி நதியின் பயணம் - முழுமையான தகவல்கள்


இதுதான் காவிரி நதியின் பயணம்

 

The Journey of Cauvery River


காவிரி என்றாலே, கர்நாடகாவில் இருக்கும் ஏதாவது ஓர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு, அது நேராக தமிழ்நாட்டின் மேட்டூர் #Mettur அணைக்கு வந்துவிடுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள்.


ஆனால் காவிரியின் உண்மையான பயணம் அவ்வளவு எளிமையானதல்ல.


காவிரி ஒரே நீர்ப்பிடிப்பை மட்டும் சார்ந்த நதி அல்ல. அது பல துணை நீர்ப்பிடிப்புப் பகுதிகள், துணையாறுகள், அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் இணைந்த மிகப்பெரிய ஆற்றுப்படுகை.


ஒவ்வொரு துணை நீர்ப்பிடிப்புப் பகுதியிலும் பெய்யும் மழையின் அளவு வேறுபடும். அங்குள்ள அணைகளுக்கு வரும் நீர்வரத்து, அணையின் கொள்ளளவு மற்றும் வெளியேற்றப்படும் நீரின் அளவும் வேறுபடும்.


காவிரியின் பயணம் கர்நாடகாவின் குடகு மாவட்டத்திலுள்ள தலைக்காவிரியில் தொடங்குகிறது.


ஹாரங்கி #Harangi, ஹேமாவதி #Hemavathi மற்றும் லட்சுமண தீர்த்தா ஆகியவை தனித்தனி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உருவாகின்றன. இவற்றின் நீர் வெவ்வேறு இடங்களில் காவிரியுடன் இணைந்து, இறுதியாக கிருஷ்ணராஜ சாகர் எனப்படும் #KRS அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது.


ஆனால் கபினியின் பயணம் வேறு. #Kabini


கபினி கேரளாவின் வயநாடு பகுதியில் உருவாகி, கர்நாடகாவிலுள்ள கபினி அணையில் சேமிக்கப்படுகிறது. பின்னர் T.நரசிபுரா அருகே காவிரியுடன் இணைகிறது.


அதாவது, கபினி அணையிலிருந்து வெளியேறும் நீர் முதலில் KRS அணைக்குச் செல்வதில்லை. KRS அணையிலிருந்து வெளியேறும் காவிரியும், கபினி அணையிலிருந்து வரும் நீரும் T.நரசிபுரா பகுதியில் தான் ஒன்றாக இணைகின்றன.


இதற்குப் பிறகு சிம்ஷா, அர்க்காவதி, சுவர்ணவதி மற்றும் வழியிலுள்ள பிற சிறிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலிருந்து வரும் நீரும் காவிரியில் சேர்கிறது.


இவ்வாறு பல்வேறு ஆறுகள் மற்றும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இருந்து சேர்ந்த மொத்த காவிரி நீர், கர்நாடகா–தமிழ்நாடு எல்லையிலுள்ள பிலிகுண்டுலுவில் #Biligundlu அளவிடப்படுகிறது.


பிலிகுண்டுலு ஓர் அணை அல்ல. அது மத்திய நீர்வள ஆணையத்தின் முக்கிய நீர் அளவீட்டு நிலையம். (CWC Water Gauge)


கர்நாடக அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை மட்டும் கூட்டிப் பார்த்து, தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் கிடைத்தது என்று கூற முடியாது. வழியிலுள்ள துணையாறுகளின் நீர்வரத்து, மழை, பயண நேரம் மற்றும் ஆற்றின் உண்மையான ஓட்டம் அனைத்தும் இதில் அடங்கும்.


அதனால்தான் தமிழ்நாட்டிற்கு கிடைத்த உண்மையான நீரின் அளவு பிலிகுண்டுலுவில் பதிவாகும் நீரோட்டத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.


பிலிகுண்டுலுவைக் கடந்த காவிரி, தமிழ்நாட்டிற்குள் நுழைந்து ஒகேனக்கல் #Hogenakkal வழியாக மேட்டூர் அணையை அடைகிறது. மேட்டூரில் சேமிக்கப்படும் நீர், தேவையின் அடிப்படையில் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக கீழே திறக்கப்படுகிறது.


01.08.2026 நிலவரப்படி முக்கிய அணைகளின் நீர்மட்டம் மற்றும் மொத்த கொள்ளளவில் உள்ள நீர் இருப்பு:


✅Harangi: 127.55/129 அடி – 94%

✅Hemavathi : 100.98/117 அடி – 64%

✅KRS: 91.80/124.80 அடி – 34%

✅Kabini: 56.28/65 அடி – 74%

✅Mettur: 73.82/120 அடி – 39%

✅Bhavani Sagar: 55.32/105 அடி – 18%

✅Amaravati: 28.54/90 அடி – 9%


“சதவீதம்” என்பது அந்த அணையின் மொத்த கொள்ளளவில் தற்போது எவ்வளவு நீர் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.


ஒவ்வொரு அணையின் உயரமும் கொள்ளளவும் வேறுபடும். எனவே, அணைகளின் நீர்மட்டத்தை மட்டும் நேரடியாக ஒப்பிடக் கூடாது.


மேட்டூர் அணைக்குக் கீழே பவானி, நொய்யல் மற்றும் அமராவதி ஆறுகள் காவிரியுடன் இணைகின்றன.


எனவே, இந்த ஆறுகளின் நீர் மேட்டூர் #Mettur அணையை நிரப்பாது. ஆனால் மேட்டூருக்குக் கீழே காவிரியின் ஓட்டத்திற்கும், டெல்டா பகுதிகளின் தேவைக்கும் அவை கூடுதல் பங்களிப்பை வழங்குகின்றன.


அதன்பிறகு முக்கொம்பு மேலணைப் பகுதியில் காவிரி–கொள்ளிடம் நீர்ப் பிரிப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. கல்லணையில் இருந்து காவிரி டெல்டாவின் பல்வேறு கால்வாய்கள் மற்றும் ஆறுகளுக்கு நீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது.


எனவே, காவிரி டெல்டாவிற்குக் கிடைக்கும் நீர் என்பது ஏதாவது ஓர் அணையின் இருப்பை மட்டும் சார்ந்ததல்ல.


அது பிலிகுண்டுலுவில் கிடைக்கும் நீரோட்டம், மேட்டூர் அணையின் இருப்பு மற்றும் வெளியேற்றம், தமிழ்நாட்டின் பவானி–நொய்யல்–அமராவதி துணையாறுகள், உள்ளூர் மழை மற்றும் நீர் மேலாண்மை ஆகிய அனைத்தையும் சார்ந்துள்ளது.


சாதாரண நீராண்டில், ஜூன் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை மொத்தம் 177.25 TMC நீர் பிலிகுண்டுலுவில் தமிழ்நாட்டிற்கு உறுதி செய்யப்பட வேண்டும். இது ஆண்டின் ஒவ்வொரு மாதத்திற்கும் நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின் அடிப்படையிலான மொத்த அளவு.


சுருக்கமாக காவிரியின் பயணம்:

பல மழைப்பகுதிகள்

→ தனித்தனி துணை நீர்ப்பிடிப்புகள்

→ துணையாறுகள் மற்றும் அணைகள்

→ KRS–கபினி நீர் இணைப்பு

→ பிலிகுண்டுலு அளவீடு

→ ஒகேனக்கல்

→ மேட்டூர்

→ தமிழகத்தின் துணையாறுகள்

→ முக்கொம்பு

→ கல்லணை

→ காவிரி டெல்டா.


ஒரே காவிரி ஆற்றுப்படுகை; ஆனால் அதற்குள் பல துணை நீர்ப்பிடிப்புகள்!


இந்த வரைபடத்தின் நோக்கம், அந்த நீண்ட மற்றும் சிக்கலான காவிரிப் பயணத்தை அனைவரும் எளிதாகப் புரிந்துகொள்ளச் செய்வதே.


*ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைத் துறையின் நீர்த்தேக்கக் கண்காணிப்புத் தளம், மத்திய நீர்வள ஆணையம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம்.


HLO செயலியில் (App) தரவுகளைப் பதிவு செய்யும்போது ஏற்படும் பிழைகளை திருத்தம் செய்தல் குறித்த தகவல்கள்



HLO செயலியில் (App) தரவுகளைப் பதிவு செய்யும்போது ஏற்படும் பிழைகளை திருத்தம் செய்தல் குறித்த தகவல்கள்


அனைத்து கணக்கெடுப்பாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் கவனத்திற்கு...


HLO செயலியில் (App) தரவுகளைப் பதிவு செய்யும்போது ஏதேனும் பிழைகள் ஏற்பட்டால், அந்தப் பதிவை நீக்க வேண்டாம்.


தரவுகளை 'ஒத்திசைப்பதற்கு' (sync) முன்போ அல்லது அதற்குப் பின்னரோ எப்போது வேண்டுமானாலும் திருத்தம் செய்து சரிசெய்ய முடியும்.


ஒரு பதிவை நீக்குவது, வரிசை எண் (Line Number), மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு எண் (Census House Number) மற்றும் குடும்ப எண் (Household Number) உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் நிரந்தரமாக நீக்கிவிடும். இந்த மூன்று விவரங்களும் செயலியால் தானாகவே உருவாக்கப்படுபவை என்பதால், நீக்கப்பட்ட எண்கள் மீண்டும் உருவாக்கப்படாது.


உதாரணமாக, தரவுப் பதிவிற்குப் பிறகு முதல் மூன்று பதிவுகள் நீக்கப்பட்டால், 001, 002 மற்றும் 003 ஆகிய வரிசை எண்கள் நிரந்தரமாக இழக்கப்படும். இதன் விளைவாக, அடுத்த பதிவு 004 என்ற வரிசை எண்ணுடன் தொடங்கும்; இதனால் வரிசை எண் வரிசைமுறையில் இடைவெளிகள் ஏற்படும்.


எனவே, பிழைகள் கண்டறியப்படும்போது பதிவுகளை நீக்க வேண்டாம் என்று அனைத்து கணக்கெடுப்பாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதற்குப் பதிலாக, தேவையான திருத்தங்களைச் செய்ய 'திருத்து' (Edit) விருப்பத்தைப் பயன்படுத்தவும்.


வீட்டுப்பட்டியல் பிளாக் (HLB) கோட்டு வரைபடம் தயாரிக்கும் முறை



 மக்கள் தொகை கணக்கெடுப்பு ( Census ) வீட்டுப்பட்டியல் பிளாக் (HLB) கோட்டு வரைபடம் தயாரிக்கும் முறை



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


Census House Number எழுதும் முறை



 மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு எண்ணை (Census House number) எழுதும் murqi


மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்கள் கனிவான கவனத்திற்கு:


மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு எண்ணை (Census House number) எழுதும்போது, கட்டிட எண் பெரும்பாலான முக்கிய இடங்களில் இல்லை அல்லது வீட்டின் உரிமையாளர்கள் தெரிவிக்கும் எண் வேறாக உள்ளது என பல களப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எனவே, சீரான தன்மையைப் பராமரிக்கும் பொருட்டு, கட்டிடத்தின் முக்கியப் பகுதியில் கட்டிட எண்ணையும், அடைப்புக்குறிக்குள் எத்தனை கணக்கெடுப்பு வீடுகள் (Census houses) உள்ளன என்பதையும் எழுதுமாறு கணக்கெடுப்பாளர்களுக்கு (Enumerators) அறிவுறுத்தலாம்.


அதை அடிக்கோடிட்டு (Underline), ஒவ்வொரு கணக்கெடுப்பு வீட்டின் நுழைவாயிலிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு வீட்டு எண்ணை எழுத வேண்டும்.


எடுத்துக்காட்டாக:

முதல் கணக்கெடுப்பு வீட்டின் கட்டிட எண் 32/12 எனில், அதை பின்வருமாறு எழுத வேண்டும்:


32/12

--------

0001


கணக்கெடுப்பாளர்கள் செயலில் (App) HLO பதிவைத் தொடங்கியுள்ள இடங்களில், முதல் பதிவிற்குப் பிறகு தகவல்களை ஒத்திசைக்க (Sync) அவர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Self Enumeration : கணக்கெடுப்பாளர்களுக்கான தகவல்

 


Self Enumeration : கணக்கெடுப்பாளர்களுக்கான தகவல்


மொத்தமுள்ள 10 லட்சம் சுய கணக்கெடுப்புகளில்  (Self Enumeration), சுமார் 5 லட்சம் இன்று காலை 11 மணிக்குள் செயலாக்கப்பட்டுவிட்டன (processed). மீதமுள்ளவை மாலைக்குள் செயலாக்கப்படும்.


எனவே, கணக்கெடுப்பாளர்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும், செயலியை refresh செய்து நாளை முயற்சிக்குமாறும் தெரிவிக்கவும்.


இதற்கிடையில், அவர்கள் தங்கள் பகுதிகளைக் கண்டறிந்து, கட்டிட எண்களை உறுதிசெய்து, மாதிரி வரைபடத்தை (layout map) வரையுமாறு அறிவுறுத்தலாம்.


CENSUS 2026 - முக்கிய அறிவிப்பு

 


மக்கள்தொகை கணக்கெடுப்பு CENSUS 2026 - முக்கிய அறிவிப்பு


விவரங்கள்:


* வீடுகள் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு ஆகஸ்ட் 1 முதல் 30, 2026 வரை தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது.


* சுய கணக்கெடுப்பு முடித்தவர்கள், உருவான SE ID எண்ணை வீடுகளுக்கு நேரில் வரும் கணக்கெடுப்பாளரிடம் பகிர வேண்டும்.


* சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யாதவர்கள், வீடுகளுக்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் தகவல்களை வழங்கினால் அவர் பதிவு செய்வார்.


* அரசின் ID கார்டு அணிந்த அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பாளர்களிடம் மட்டுமே தகவல்களை வழங்க வேண்டும்.


* அரசின் ID கார்டு இல்லாமல் கணக்கெடுப்பு என்ற பெயரில் வரும் நபர்களிடம் எந்த தகவலையும் வழங்க வேண்டாம்.


* சந்தேகங்களுக்கு கட்டணமில்லா உதவி எண்: 1855


ஆடி 18 : உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

 


ஆடி 18 - 03-08-2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்


Districts where a local holiday has been announced for Aadi 18 (August 3, 2026)



ஆடி பெருக்கு:  


தருமபுரி, சேலம், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களுக்கு ஆகஸ்ட் 3 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


சேலம் மாவட்டம்: 

 ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


இந்த விடுமுறையை ஈடுகட்ட ஆகஸ்ட் 22ஆம் தேதி சனிக்கிழமை வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தருமபுரி மாவட்டம்: 

 தருமபுரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


தருமபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு திருவிழாவைக் கொண்டாடும் வகையில், வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் சரவணன்.



ஈரோடு மாவட்டம்: 

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு 03-08-2026 அன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


 ஆகஸ்ட் 22 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டம்: 


ஆடிப்பெருக்கு மற்றும் கொல்லிமலையில் நடைபெறும் வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, ஆகஸ்ட் 3ஆம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர். 


இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் 8ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூர் மாவட்டம்: 


திருப்பூர் மாவட்டத்திற்கு திங்கள்கிழமை  03.08.2026 உள்ளூர் விடுமுறை.


ஆகஸ்ட் 22 சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.




ECG எடுத்தல் : இந்தியா மற்றும் அமெரிக்கா மருத்துவ நிலை



 ECG எடுத்தல் : இந்தியா மற்றும் அமெரிக்கா மருத்துவ நிலை


விசித்திரமான வரலாறு 


இப்போதெல்லாம் நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டால்  

- உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஈசிஜி எனும் இதய சுருள் படம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்பது 

பெரும்பான்மையினருக்கு தெரியும்


இதய ரத்த நாள அடைப்பை ஹார்ட் அட்டாக் என்கிறோம். அடைப்பு ஏற்பட்டதில் இருந்து மூன்று மணிநேரமே பொன்னான நேரம் என்று கணக்கில் கொள்ளப்படுகிறது


அதற்குள் சிகிச்சை செய்து அடைப்பை நீக்க வேண்டும். 


நிற்க


 இங்கிருந்து செப்டம்பர் 23,1955 

அமெரிக்காவுக்கு செல்வோம்


பனிப்போர் காலம்


இரண்டாம் உலகப்போரை வென்ற அதிபர் ட்ரூமன் இறக்க 

இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் படையை தலைமை ஏற்று நடத்திய போர்த்தளபதி எய்ஸன்ஹோவர் அமெரிக்காவின் அதிபரானார். 


தனது அலுவலக பணிகளில் இருந்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் செப்டம்பர் 23,1955 அன்று காலை கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கும் போது 

நெஞ்செரிச்சலாக இருப்பதை உணர்ந்தார். 


அவரது சிறப்பு மருத்துவர் டாக்டர் ஹோவார்ட் ஸ்நைடர்

நெஞ்செரிச்சலுக்கான மருந்துகளை வழங்கினார். 


எனினும் நெஞ்செரிச்சல் அதிகமானதேயன்றி குறைந்தபாடில்லை. 


இது வயிற்றுப் பிரச்சனை இல்லை. இதய ரத்தநாள அடைப்பாக இருக்கக்கூடும் என்று உணர்ந்த மருத்துவர் ஸ்நைடர் 

  அதிபரை மருத்துவமனைக்கு பத்து மணிநேரங்களுக்குப் பிறகு அன்றிரவு பரிந்துரைத்தார். 


பரிந்துரைக்கும் போது இதய ரத்த நாளத்தை விரிவடையச் செய்யும் அமைல் நைட்ரேட் மற்றும் நெஞ்சு வலியை குறைக்க உதவும் மார்ஃபின் ஆகியவற்றை தந்தார். 


மார்ஃபின் விளைவால் அதிபர் நன்றாக உறங்கி விட்டார். 

மறுநாள் காலை எழுந்தும் நெஞ்சு வலி விட்டபாடில்லை. 


அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் இருந்து ஈசிஜி எடுக்கும் உபகரணம் கொண்டு வரப்பட்டு ஈசிஜி எடுக்கப்பட்டது. 


முந்தைய நாள் அறிகுறி தோன்றிய அதிபருக்கு 

அடுத்த நாள் காலை எடுக்கப்பட்ட ஈசிஜியில் இதய ரத்த நாள அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 


அப்போதெல்லாம் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டாலும் 

இப்போது இருப்பது போல 


எக்கோ கிடையாது 

ஆஞ்சியோ கிடையாது 

ஸ்டெண்ட் கிடையாது 

இதய தசைகள் காயமாகியுள்ளதை அறியும் நொதிகள் பற்றி அறிவியல் அறிந்திருக்கவில்லை


இதய ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும் லோடிங் டோஸில்

உள்ள ஆஸ்பிரின் அப்போது காய்ச்சலுக்கும் மூட்டு வலிக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த மருந்தாகும். 


ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும்

க்லோபிடோக்ரெல் / ஸ்டேடின் போன்ற மாத்திரைகள் கண்டறியப்படவில்லை


அப்போது இதய ரத்த நாள அடைப்பு வந்தால் 30-40% மரணம் தான் 

உயிர் பிழைத்தாலும் பலம் குன்றிய இதயத்துடன் சில காலம் வாழ்ந்து மரணிக்க வேண்டியது தான். 


உலகின் வல்லரசின் அதிபராக இருந்தாலும் அதே நிலைமை தான். 


இதய ரத்த நாள அடைப்பு என்பது நெஞ்சு வலி அன்றி நெஞ்செரிச்சல் / கழுத்து வலி / தாடை வலி என்றும் ஏற்படலாம் என்ற அறிவும் அப்போது இருந்திருக்கவில்லை


 இதய ரத்த நாள அடைப்புக்கு 

நைட்ரோ க்ளிசரின் ( ரத்த நாள விரிவடையச் செய்யும் மருந்து) மற்றும் வலியைக் குறையச் செய்யும் மார்ஃபின்  மட்டுமே இருந்த சிகிச்சைகள்


நிற்க 

மீண்டும் 2026க்கு வந்து விடுவோம் 


இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று மெடிக்கல் இண்சூரண்ஸ் இல்லாமல் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்


அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஈசிஜி எடுத்துப் பார்க்க வேண்டுமென்றால் 

ஒரு ஈசிஜி எடுத்துப் பார்க்க 

$450 முதல் $1200 டாலர் செலவாகும் என்பதை அறிந்து அதிர்ந்தேன். 


இந்திய மதிப்பில் குறைந்தபட்சம் ₹45000 வருகிறது. 


இதை எடுப்பதும் எளிதன்று 

கட்டாயம் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே எடுக்க முடியும். 


அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவரை சந்தித்து ஈசிஜி எடுக்க வேண்டும். 


இந்தியாவில் 

தமிழ்நாட்டில் 


ஒருவருக்கு அவர் நம் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பினும் சரியே 

வெளிமாநிலம் வெளி நாட்டினராக இருப்பினும் சரியே 

இண்சூரன்ஸ் தேவையில்லை 


நெஞ்சு வலி என்றால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் உடனடியாக 

ஈசிஜி இலவசமாக எடுக்கப்படும். 


பணம் கொடுத்து ஈசிஜி எடுக்க வேண்டுமென்றாலும் ₹300 க்கு எடுத்து விட முடியும். 

மருத்துவ பரிந்துரை தேவையில்லை. 

ஈசிஜி எடுத்து விட்டு மருத்துவரை படத்துடன் சந்திக்க முடியும். 


வல்லரசு நாட்டில் 70 வருடங்களுக்கு முன்பு அதிபருக்கு நேர்ந்த அதே விசயம் தான் இப்போதும் நேருகிறது 

மருத்துவம் சாமானியர்களிடம் இருந்து தூரமாக நிற்கிறது. 


இந்தியாவில் தமிழ்நாட்டில் சாமானியனுக்கும் எட்டக்கூடிய அளவில் மருத்துவ வசதி எளிமையாகக் கிடைக்கிறது என்பது தெரிகிறது. 


நாம் வாழும் காலம் 

சூழல் 

வாழும் இடம் போன்றவை 

நமது இருப்பை முடிவு செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன என்பது புலனாகிறது 


இந்த நிலை தொடர வேண்டும் என்பதே ஆவலாக உள்ளது. 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர்

சிவகங்கை


அரசுப்பள்ளி ஆசிரியையிடம் 16 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

 


ஆசிரியையிடம் 16 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு : தூத்துக்குடி அரசுப் பள்ளி வளாகத்தில் துணிகரம்


தூத்துக்குடி அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் புகுந்து, பெண் ஆசிரியையிடம் 16 பவுன் தங்கத் தாலிச்சங்கிலியைப் பறித்துச் சென்ற கொள்ளையனைப் போலீசார்  தீவிரமாகத் தேடி வருகின்றனர்.


தூத்துக்குடி அருகிலுள்ள அத்திமரபட்டியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 6, 7 மற்றும் 8-ஆம் வகுப்புகள் கொண்ட இப்பள்ளியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரத்னா தலைமை ஆசிரியராகவும், புதிய துறைமுக ஊழியர் குடியிருப்பைச் சேர்ந்த சாந்தி உதவி ஆசிரியராகவும் பணியாற்றி வருகின்றனர்.


இந்நிலையில், செவ்வாய் அன்று பிற்பகல் 1:45 மணியளவில் ஆசிரியை சாந்தி கைகழுவுவதற்காகப் பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறை பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது கழிப்பறைக்குள் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர், திடீரெனப் பாய்ந்து வந்து ஆசிரியை சாந்தியின் கழுத்தில் இருந்த 16 பவுன் தாலிச்சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோடினான்.


சங்கிலியைப் பறித்த வேகத்தில் ஆசிரியை கீழே விழுந்து அலறியுள்ளார். அவரது கூச்சல் சத்தம் கேட்டு மற்றவர்கள் ஓடி வருவதற்குள், அந்த மர்ம நபர் கிழக்குத் திசையில் உள்ள வாழைத் தோட்டத்திற்குள் புகுந்து தப்பியோடிவிட்டான். பறிகொடுக்கப்பட்ட சங்கிலியின் மதிப்பு ரூ. 20 லட்சத்திற்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படுகிறது.


இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். தப்பியோடிய கொள்ளையனைப் பிடிக்க மோப்ப நாய் மற்றும் ட்ரோன் கேமராக்களின் உதவியுடன் காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டப்பகலில் அரசுப் பள்ளி வளாகத்திலேயே நடைபெற்ற இந்தத் துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை

 தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை கட்டுரையாளர்: லோகநாதன் பழனிசாமி, எழுத்தாளர். தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 42.3 ...