ஓடும் ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு பணத்தைக் கொள்ளையடித்தது எப்படி?
இந்த பதிவில் எழுதப்பட்ட அனைத்தும் உண்மை சம்பவங்களே.
திரைப்படங்களில் வருவது போல் நிஜத்தில் நடந்த ஒரு பரபரப்பான கொள்ளை சம்பவத்தை பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.
திரைப்படத்தையே மிஞ்சும் அளவிற்கு சுவாரசியம் கொண்ட அந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றது வேறெங்கும் இல்லை நம் தமிழ்நாட்டில் தான்.
08-ஆகஸ்ட்-2016 அன்று சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ.323 கோடி பழைய மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கிக்கு எடுத்து செல்லப்பட்டது.
இதனை அறிந்த கொள்ளையர்கள் ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு ரூ.5.78 கோடி மதிப்பிலான பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இந்த கொள்ளை தொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி துப்பு துலக்க முடியாத நிலையில் சிபிசிஐடி போலீசாருக்கு வழக்கு விசாரணை மாற்றப்பட்டது.
சிபிசிஐடியின் தடயவியல் துறை அதிகாரிகள் பெட்டியை அங்குலம் அங்குலமாக சோதித்தனர்.
பெட்டியின் மேற்கூரை சதுரமாக கத்திரிக்கப்பட்டு ஒரு ஆள் உள்ளே நுழையும் அளவுக்கு வெட்டப்பட்டு அதன் வழியாக ஆட்கள் நுழைந்து பணப்பெட்டிகளில் சிலவற்றை கொள்ளையடித்தது தெரியவந்தது.
சிபிசிஐடி போலீஸார் சேலத்திலிருந்து சென்னை வரை 350 கிலோ மீட்டர் தூரத்தை ஆய்வு செய்தனர்.
சேலத்தில் பணம் ஏற்றப்படுவதற்கு முன்னரே ரயில் பெட்டியின் மேற்கூரையை துண்டித்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.
பணம் ஏற்றிய போது சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் பணியில் இருந்த ரயில் நிலைய மேலாளர், பார்சல் அலுவலக ஊழியர்கள், ஓட்டுநர்கள், போர்ட்டர்கள் என 34 ஊழியர்களிடம் சிபிசிஐடி தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
மேலும் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.
ரயில் வரும் வழியெங்கும் உள்ள இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்ந்தனர்.
ஆனாலும் துப்பு துலக்க முடியவில்லை.
மின்சார ரயிலாக இருந்தாலும் சேலத்திலிருந்து விழுப்புரம் வரும் வரையில் அது டீசல் எஞ்சின் மூலம் இழுத்து வரப்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.
மின்சார ரயில் கேபிள் வரும் இடத்தில் ரயில் பெட்டியின் மேற்கூரையை பெயர்த்து கொள்ளை அடிக்க முடியாது.
ஆகவே டீசல் எஞ்சின் வரும் வரையில் உள்ள பகுதிகளிலேயே மேற்கூரையில் துளையிட்டு கொள்ளை அடித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும் என சிபிசிஐடி போலீஸார் சந்தேகித்தனர்.
கொள்ளையர்கள் பற்றிய ஒரு துப்பும் கிடைக்காத நிலையில் 1 வருடம் கடந்தது.
சிபிசிஐடியில் அதிகாரிகள் மாறினர். அம்ரேஷ் புஜாரி புதிய ஏடிஜிபியாக பொறுப்பேற்றார்.
அதன் பின்னர் அவரது உத்தரவின் பேரில் இந்த வழக்கு மீண்டும் வேகமெடுத்தது.
இம்முறை சிபிசிஐடி போலீஸார் புது யுக்தியை கையாண்டனர்.
இந்த வழக்கிற்காக இஸ்ரோவின் உதவியை நாடினர் .
இந்த சம்பவம் குறித்து இஸ்ரோவுக்கு தகவல் கொடுத்து உதவி கோரினர்.
இதன் மூலம் ரயிலில்
எந்த இடத்தில் பெட்டியின் மேற்கூரை துளையிடப்பட்டது?
எந்த இடத்தில் பணப்பெட்டி கொள்ளையடிக்கப்பட்டது?
எப்படி அந்த பணம் கொண்டு செல்லப்பட்டது?
என்பவற்றை பற்றிய துல்லியமான படங்களை பெற முடியும்.
கொள்ளை நடைபெற்ற அந்த நாளில் அந்த நேரத்தை சரியாக கணக்கிட்டு அந்த தகவல்களை இஸ்ரோவிடம் கொடுத்து அதற்கான படங்களை கேட்டனர் சிபிசிஐடி அதிகாரிகள்.
இஸ்ரோ உதவியுடன் செயற்கைகோள் சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் சிபிசிஐடி போலீஸாருக்கு கிடைத்தது.
எந்த இடத்தில் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது என்ற துப்பும் கிடைத்தது.
அதன் பின்னர் அந்த இடத்தில் அந்த நேரத்தில் இயக்கப்பட்ட செல்போன் எண்களை அதிகாரிகள் சேகரித்தனர்.
இதன் மூலம் பத்துக்கும் மேற்பட்ட செல்போன் எண்கள் கிடைத்தன.
அவற்றை ஆராய்ந்த போது அவை மத்திய பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள நபர்களின் பெயரில் இருப்பது தெரிய வந்தது.
இதன் பின்னர் சிறப்பு புலனாய்வு குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் நம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் பயணம் செய்து கொள்ளை சம்பவம் தொடர்பான தகவல்களை சேகரித்தனர்.
கிட்டத்தட்ட 2 வருடங்களாக (2016-2018) சிபிசிஐடி போலீசார் இந்த கொள்ளை சம்பவத்தை பற்றிய விசாரணையை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
சிபிசிஐடி போலீஸாரின் கடின முயற்சிக்கு பின்னர் இறுதியாக மத்திய பிரதேச மாநில போலீஸார் மூலம் சில தகவல்களை சேகரித்திருக்கின்றனர்.
அதில் மத்தியபிரதேசத்தில் உள்ள குணா மாவட்டத்தை சேர்ந்த மோஹர்சிங் என்ற கொள்ளைக் கூட்டத்தலைவனின் ஆட்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும் ரயில் கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகள் சென்னை வருவதாக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி சென்னை வந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த தினேஷ்(38), ரோஹன் பார்தி(29) ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
விசாரணையின் போது குற்றவாளிகள் இருவரும் மோஹர்சிங் தலைமையின் கீழ் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். மொத்தம் 5 பேர் கொண்ட கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டதையும் ஒப்புக்கொண்டனர்.
மேலும் விசாரணையில் கொள்ளை சம்பவத்தோடு தொடர்புடைய கொள்ளை கூட்ட தலைவன் மோஹர்சிங் மற்றும் கூட்டாளிகளில் சிலர் குணா மாவட்ட மத்திய சிறையில் மற்ற வழக்கு சம்மந்தமாக அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததுள்ளது.
ரயில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மோஹர்சிங் தலைமையிலான குழுவானது பார்தி குற்றவாளிகள் குழுவினைச் சேர்ந்தவர்களாவர்.
(தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வரும் பவாரியா குழுவை போல )
இந்த கொள்ளை குழுவினர் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் குழுவாக சென்று அப்பகுதிகளில் சாலையோரம் அல்லது ரயில் நிலையம், தண்டவாளங்கள் அருகே தற்காலிக கூடாரங்களை அமைத்து கொள்வார்களாம் .
இவர்கள் கட்டிட தொழிலாளிகளாகவும், பலூன் மற்றும் பொம்மை விற்பனையாளராகவும் வேலை செய்வது போல் அப்பகுதியில் சுற்றித் திரிந்து கொள்ளையடிப்பதற்கு ஏதுவான இடத்தை தேர்ந்தெடுப்பார்களாம்.
மேலும் இவர்கள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபெற்ற பல குற்றச் சம்பவங்களோடு தொடர்புடையவர்கள்.
தமிழ்நாட்டில் இக்குழுவினரால் நிகழ்த்தப்பட்ட மற்ற குற்றங்கள் குறித்தும் அந்த சமயத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
ஓடும் ரயிலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் எப்படி நடைபெற்றது என்பது தொடர்பாக குற்றவாளிகளின் வாக்குமூலத்தை இப்போது பார்க்கலாம்.
சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிக்கடி பணம் எடுத்து செல்லப்படுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இந்த ரெயிலில் கொள்ளையை அரங்கேற்ற நீண்ட நாட்களாக திட்டமிட்டிருந்தோம்.
இதற்காக சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலை தொடர்ந்து நோட்டமிட்டு வந்தோம்.
சேலம் ரெயில் நிலையம் மற்றும் சென்னை எழும்பூர் ரெயில் நிலையங்களில் பல நாட்கள் வேவு பார்த்தோம்.
சேலத்தில் இருந்து ரெயில் எப்போது புறப்படுகிறது?
எந்தெந்த நிலையங்களில் நிற்கிறது?
எவ்வளவு நேரம் நிற்கிறது?
எப்போது சென்னை வருகிறது?
பெரிய பெரிய பார்சல்களை ரெயில்வே சரக்கு போக்குவரத்து அதிகாரிகள் எப்படி கையாளுகிறார்கள்?
என்பதை நீண்ட நாட்களாக கண்காணித்தோம்.
ரெயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்துக் கொண்டும்
ரெயில் நிலையத்தில் ஆங்காங்கே டீ குடித்துக் கொண்டும்
நாளிதழ் படித்துக் கொண்டும்
அங்கு நடக்கும் விஷயங்களை தீவிரமாக கண்காணித்தோம்.
இந்த நிலையில் 08-ஆகஸ்ட்-2016 அன்று சேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோடிக்கணக்கான அளவில் பணம் ரிசர்வ் வங்கிக்கு எடுத்து செல்லப்படுவதை அறிந்தோம்.
மின்சார ரயிலான சேலம் எக்ஸ்பிரஸ் சேலத்தில் இருந்து விழுப்புரம் வரை டீசல் எஞ்சின் மூலம் இழுத்து வரப்படும் என்பதை அறிந்து கொண்டோம்.
அந்த இடைவெளியில் கொள்ளையடிப்பது தான் சரியான இடம் என்பதை தேர்வு செய்தோம்.
அதன்படி சேலத்தில் இருந்து இரவு ஒன்பது மணிக்கு புறப்பட்ட ரயிலில் எங்கள் தலைவன் மோஹர்சிங் தலைமையில் 5 பேர் அந்த ரெயிலில் ஏறிக்கொண்டோம்.
குறிப்பிட்ட நேரத்தில் ரெயிலின் மேற்கூரைக்கு செல்லும் வகையில் பெட்டியின் படிக்கட்டு பகுதியிலேயே தயாராக இருந்தோம்.
ரெயில் புறப்பட்டதுமே திட்டத்தை மீண்டும் ஒருமுறை எங்களுக்குள் கூறிக்கொண்டோம்.
நாங்கள் திட்டமிட்ட நேரத்தில் ரெயிலின் ஜன்னல் கம்பிகளை பிடித்து மெதுவாக ரெயிலின் மேற்கூரைக்கு ஒவ்வொருவராக சென்றோம்.
இரவு வேளை என்பதாலும் ஏற்கனவே நோட்டமிட்டபடி சுரங்கப்பாதைகளோ மரக்கிளைகளோ இல்லாத காரணத்தாலும் மின் மயமாக்கப்படாத பாதை என்பதாலும் எளிதாக ரெயிலின் மேற்கூரைக்கு சென்றோம்.
ஒரு கட்டத்தில் நாங்கள் 5 பேரும் பணம் இருந்த பெட்டியின் மேற்கூரையில் கூட்டாக அமர்ந்திருந்தோம்.
பேட்டரியால் இயங்கும் கட்டர் மற்றும் கையால் இயக்கப்படும் கட்டர் ஆகியவற்றை கொண்டு துளையிட தயாரானோம்.
இந்த நிலையில் எக்ஸ்பிரஸ் ரெயில் சின்ன சேலம் கடந்து விருத்தாச்சலம் நோக்கி சென்றது.
அப்போது தான் நாங்கள் திட்டமிட்டிருந்த படி மேற்கூரையில் துளை போட்டோம்.
எந்த சூழ்நிலையிலும் கண்காணிப்பு போலீசாரிடம் சிக்கிவிடக்கூடாது என்பதில் ஜாக்கிரதையாக இருந்தோம்.
இதனால் ரெயில் என்ஜின் ஒலி எழுப்பும் சமயத்தில் குறிவைத்து வேகவேகமாக மேற்கூரையில் துளைபோட்டோம்.
ஓரளவு துளை போட்டதும் எங்களில் 2 பேர் அந்த துளையின் வழியாக ரெயில் பெட்டிக்குள் இறங்கினார்கள்.
அந்த 2 பேர் தான் ரெயில் பெட்டிக்குள் இருந்த மரப்பெட்டிகளை உடைத்து பணக்கட்டுகளை எடுத்தனர்.
இதனை தொடர்ந்து அங்கிருந்த ரூபாய் நோட்டுகளை 6 லுங்கிகளில் சுற்றி கட்டினார்கள்.
அவசர அவசரமாக பணக்கட்டுகளை எடுத்து கொண்டு 2 பேரும் மேலே ஏறி வந்தனர்.
நாங்களும் முன்பு போல ஜன்னல் கம்பிகள் வழியாக மெதுவாக கீழே இறங்கி ரெயில் பெட்டிக்குள் வந்துவிட்டோம்.
ரயில் விருத்தாசலம் வந்த போது அங்கே தண்டவாளம் அருகே காத்திருந்த எங்கள் கூட்டாளிகளிடம் பணத்தை கொடுத்து விட்டு நாங்கள் அங்கிருந்து தப்பி விட்டோம்.
அதிக அளவில் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த போதும் நேரமின்மையால் குறைவான பணத்தையே எங்களால் கொள்ளையடிக்க முடிந்தது.
பெரும் சிரமங்களுக்கு இடையே துல்லியமாக திட்டமிட்டு சில கோடிகளை கொள்ளையடித்தை நினைத்து சந்தோஷப்பட்டோம்.
ஆனால் நாங்கள் கொள்ளையடித்தது செல்லாத மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகள் என்பதை அறிந்து மிகவும் கவலைப்பட்டோம்.
ஆயினும் எப்படியாவது இந்த பணத்தை மாற்றிவிடலாம் என்று நம்பிக்கையில் இருந்தோம்.
சொந்த ஊருக்கு திரும்பிய பிறகு கொள்ளை கும்பலைச் சேர்ந்த அனைவரும் பணத்தை சமமாக பிரித்து கொண்டோம்.
அதன்படி கொஞ்சம் கொஞ்சமாக அந்த ரூபாய் நோட்டுகளை மாற்றி சந்தோஷமாக செலவு செய்து வந்தோம்.
ஆனால் சம்பவம் முடிந்து சரியாக 3 மாதங்களில் 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தின் பெரும்பகுதியான 500 ரூபாய் நோட்டுகளை எரித்து விட்டோம்.
எரிக்கப்பட்ட பணத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வரை இருக்கலாம் என்றும்
அவர்களின் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.
இறுதியாக இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் மத்தியப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மோஹர்சிங் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
இவர்களை 14 நாட்கள் காவலில் எடுத்த போலீஸார் கொள்ளை நடந்த பகுதிகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து
இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான மோஹர்சிங் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குணா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும்.
இவரது குடும்பத்தினர் பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
கொலை வழக்கில் தேடப்பட்டதால் தென் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்த மோஹர்சிங் கடந்த 2016-ம் ஆண்டில் தமிழ்நாட்டிற்குள் வந்துள்ளான்.
தனது கும்பலுடன் சேர்ந்து விழுப்புரம், சேலம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ரயில் நிலையங்கள், ரயில்வே பாதைகள், பாலங்கள் அருகே தங்கியுள்ளான்.
அப்போது சேலத்தில் தங்கியிருந்த தனது கும்பலை சேர்ந்த ஒருவன் மூலமாக ரயிலில் பணம் கொண்டு செல்லப்படுவது குறித்து அறிந்து இந்த கொள்ளை சம்பவத்தை சாமர்த்தியமாக அரங்கேற்றியுள்ளான்
என்று சிபிசிஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருந்தனர்.
கூடுதல் தகவல்:
சேலம் மாநகர குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை காவல் துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் மற்றும் அவரது குழுவினர் மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றனர்.
அங்கு உஜ்ஜையின் மற்றும் குணா மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி மாநிலங்களுக்கிடையே செயல்படும் குற்ற குழுக்கள் பற்றிய தகவல்களை சேகரித்தனர்.
இடையறாத முயற்சிக்குப் பின் மத்திய பிரதேசம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த மோஹர்சிங் மற்றும் கூட்டாளிகளுக்கு இவ்வழக்கோடு தொடர்புள்ளது என்ற நம்பத் தகுந்த தகவலை காவல் துணை காணிப்பாளர் கிருஷ்ணன் திரட்டினார்.
நீண்ட ஆய்வுக்கு பின் மேற்கண்ட குழுவானது ரயில் கொள்ளையில் ஈடுபடுட்டது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
குறிப்பு: இந்த பதிவு 2016-ல் நடந்த சேலம்–சென்னை ரயில் பணக் கொள்ளை வழக்கை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு செய்தி அறிக்கைகள் மற்றும் பொதுவில் கிடைக்கும் தகவல்களைத் தொகுத்து எழுதப்பட்டுள்ளது