கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மலையில் மலர்ந்த அறிவியல் பூக்கள் !

''நண்பா, எங்களுக்கு உங்களை மாதிரி நவீன வசதிகள் கிடையாது. நினைச்சதும் கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து இன்டர்நெட்டில் தகவல்களை எடுக்க முடியாது. சொல்லப்போனா கம்ப்யூட்டரையே பலரும் பார்த்தது கிடையாது. ஆனாலும் சாதிச்சு இருக்கோம்.''

சொல்லும்போதே அவர்களிடம் பொங்கும் உற்சாகம் நம்மையும் தொற்றிக்கொள்கிறது. இவர்கள் ஈரோடு மாவட்டம், தாமரைக்கரை மலைக்கிராமத்தின் 'பள்ளி செல்லாத மற்றும் பள்ளி இடைநின்ற மாணவர்கள்’, பள்ளியில் படிக்கும் மலைவாழ் மாணவர்கள். இந்தப் பள்ளியை 'சுடர்’ என்ற அமைப்பு நடத்துகிறது.
''மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை உதவியுடன், ஆண்டுதோறும் 'தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாடு’ அனைத்து மாநிலங்களிலும் நடக்கும். அப்படி இந்த வருடம் தமிழ்நாடு சார்பாக கோவையில் நடந்தது. இந்த மாநாட்டில் பல தனியார் கல்வி நிறுவனங்கள், அரசுப் பள்ளிகள் கலந்துகொண்டு 180 ஆய்வுகளைச் சமர்ப்பித்தன. இதில் வெற்றிபெற்று, தேசியப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை எங்கள் பள்ளி மாணவர்கள் பெற்று இருக்கிறார்கள். தேசியப் போட்டியில் வென்றால், ஜனாதிபதி கையால் இளம் விஞ்ஞானிகள் விருது பெறுவார்கள்'' என்கிறார் சுடர் தொண்டு நிறுவனத்தின் இயக்குனர் நடராஜ்.

''இது, தேசிய அறிவியல் வரலாற்றில் பெரும் சாதனை. இதுபோன்ற போட்டிகளில் பெரும்பாலும் தனியார் பள்ளி மாணவர்களே அதிகம் பங்கேற்பார்கள். அடிப்படை வசதிகள் குறைவாக இருக்கும் இந்த மாணவர்கள் தங்களின் முயற்சியாலும் அறிவுத்திறத்தாலும் சாதித்து இருக்கிறார்கள்'' என்கிறார் செந்தில்நாதன். இவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், ஈரோடு மாவட்ட இணைச் செயலாளர்.

''வசதி இல்லாததால் இங்கே இருக்கும் குழந்தைகள் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டும், காட்டில் குருவிகள் பிடித்துக்கொண்டும் திரிவார்கள். இவர்களை ஒருங்கிணைத்து, சுடர் தொண்டு நிறுவனத்தின் மூலம் 12 தேசிய குழந்தைத் தொழிலாளர் சிறப்புப் பள்ளிகளை நடத்திவருகிறோம். பாடப் புத்தகங்களை மட்டுமே நடத்தாமல் செயல்வழிக் கற்றல், ஓரிகாமி, களிமண் பொம்மைப் பயிற்சி, இயற்கை வேளாண்மை எனப் பல வழிகளில் கல்வியை வழங்குகிறோம்'' என்கிறார் நடராஜ்.

இந்த ஆண்டு தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டுக்காக கணேஷ் என்ற மாணவன் தலைமையில் வேலன், சின்னத்தம்பி, குமார், கலைச்செல்வி என ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்தார்கள். பல்வேறு மலைக் கிராமங்களுக்கு சென்று மக்களைச் சந்தித்து, 'எரிசக்தி ஆற்றலின் பயன்பாடு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையைத் தயாரித்து மாநாட்டில் சமர்ப்பித்தனர்.

இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோரும் நண்பா என்றே அழைத்துக்கொள்கிறார்கள். மாநில மாநாட்டில் கலெக்டர் இந்த ஆய்வைப் பார்வையிட்டுப் பல கேள்விகளைக் கேட்டார். அவரையும் 'அப்படி இல்லை நண்பா, இப்படி நண்பா’ என்று பேசியது அனைவரையும் கவர்ந்தது.

இதுபற்றி டீம் லீடர் கணேஷ், ''நண்பா, எங்கள் வீடுகளில் சிலிண்டர், மின்சார அடுப்பு போன்றவை குறைவு. பெரும்பாலும் விறகு அடுப்புதான். ஆனால், விறகுக்காக மரத்தை அழிக்கக் கூடாது.  இதற்கு மாற்று என்ன என்று யோசித்தோம். மக்களைச் சந்தித்துப் பேசினோம். அதை ஆய்வறிக்கையாகச் சமர்ப்பித்தோம். ஜனாதிபதி கையால் விருது வாங்குவது மட்டுமே எங்கள் நோக்கம் கிடையாது. இதன் மூலம் இயற்கையைக் காத்து, எங்களைப் போன்ற மலைவாழ்ப் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வழியை உருவாக்க வேண்டும் நண்பா'' என்கிறார் தன்னம்பிக்கையுடன்.

அசத்துங்க நண்பர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attempt to leak TET question paper | 3 arrested by Maharashtra Police

  ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வினாத்தாள் கசிவு முயற்சி | மகாராஷ்டிர காவல்துறையால் 3 பேர் கைது Attempt to leak Teacher Eligibility Test (TE...