கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>கல்வித்துறையில் தகவல் மேலாண்மை :ஆன்லைன் முறை டிசம்பரில் துவக்கம்

தமிழகத்தில் பள்ளி கல்வி துறையில், அனைத்து பள்ளிகளின் நிலை குறித்த தகவல்கள், பதிவு செய்யப்பட்டு வருகிறது. டிசம்பர் முதல் இந்த தகவல்களை, ஆன்லைனில் பெறலாம்.தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி மற்றும் இடைநிலை கல்வி திட்டம் இணைந்து, கல்வி தகவல் மேலாண்மை முறைக்கான தகவல் சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இதற்காக மாவட்டம்தோறும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, படிவங்கள் வழங்கப்பட்டு, பள்ளிகள் குறித்து தகவல் சேகரித்தனர். இப்பணி நேற்றுடன் முடிவடைந்தது. வட்டார மற்றும் மாவட்ட அளவில் சரிபார்க்கப்பட்டு, வரும் 21ம் தேதி, கம்பயூட்டரில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. பள்ளி கல்வி இயக்குனரகத்திற்கு நவ., 30க்குள் கம்ப்யூட்டர் பதிவுகள் அனுப்பப்படும். டிசம்பர் முதல், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் விபரங்கள் குறித்து, www.tn.nic.gov.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் www.communication.tn.schools.gov.in என்ற இணையதளம் மூலம், கல்வித்துறை வட்டார அலுவலர்கள் மற்றும் மாவட்ட அலுவலர்கள் தங்களுக்குள், தகவல் பரிமாற்றம் செய்யவும், மாநில அலுவலர்கள் நேரடியாக பள்ளி, வட்டார மற்றும் மாவட்ட அளவில் தொடர்பு கொள்ளவும் முடியும்.

>>>உயர் வருமான பதவிகள் நிரம்பின: குரூப் - 2 கலந்தாய்வில் ருசிகரம்

குரூப் - 2 பணி ஒதுக்கீடு கலந்தாய்வு துவங்கிய, முதல் இரண்டு நாளிலேயே, சார்பதிவாளர், நகராட்சி கமிஷனர், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட, "பசை'யுள்ள பதவிகள் நிரம்பின.குரூப் - 2 தேர்வில் வெற்றி பெற்ற, 6,949 பேரில், 3,472 பேருக்கு, பணி ஒதுக்கீடு உத்தரவு வழங்கும் கலந்தாய்வு, நேற்று முன்தினம், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் துவங்கியது.குரூப் - 2 நிலையில், அரசின் பல்வேறு துறைகளில், பல்வேறு பணிகள் இருந்தாலும், சார்பதிவாளர், நகராட்சி கமிஷனர், வணிக வரித்துறையில், உதவி வணிகவரி அலுவலர் உள்ளிட்ட சில வகை பணியிடங்களே, "டாப்'பில் இருக்கின்றன. இந்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும், இதைப் பிடிப்பதற்குத் தான், தேர்வர் மத்தியில், கடும் போட்டி நிலவுகிறது. கலந்தாய்வு துவங்கிய முதல் நாளில், 640 பேர் அழைக்கப்பட்டனர்; ஒன்பது பேர் வரவில்லை.சார்பதிவாளர் பதவியில், ஏழு இடங்களும், நகராட்சி கமிஷனர் பதவியில், ஐந்து இடங்களும், முதல் நாளே நிரம்பின. முதல், 10 இடங்களைப் பிடித்தவர்கள், இந்த பதவிகளை அள்ளிச் சென்றனர். உதவி வணிக வரி அலுவலர் பதவிகளும், நேற்று முன்தினம் கணிசமாக நிரம்பின. மொத்தத்தில், முதல் நாள், 605 பேர், பணி ஒதுக்கீடு பெற்றனர். இரண்டாம் நாளான நேற்றும், 640 பேர் அழைக்கப்பட்டனர்; 18 பேர் வரவில்லை. மீதம் இருந்தவர்களில், 526 பேர், பணி ஒதுக்கீடு ஆணை பெற்றனர். இரு நாளும் சேர்த்து, 1,131 பேர், பணி ஒதுக்கீடு ஆணை பெற்றனர். இவர்களால், 125 உதவி வணிகவரி அலுவலர் பணியிடங்கள், 281 உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்கள் மற்றும் நிதித்துறையில், 44, உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்கள் ஆகிய அனைத்தும் நிரம்பி விட்டன. பசை நிறைந்த பதவிகள், இரண்டே நாளில் நிரம்பியதைக் கண்டு, தேர்வாணைய வட்டாரம், வியப்பில் ஆழ்ந்தது. "கலந்தாய்விற்கு வராமல், தேர்வர், "ஆப்சென்ட்' ஆனால், அடுத்த நாளில் கலந்து கொள்ளலாம்; ஆனால், முதல் நாள் சீனியாரிட்டியை கேட்க முடியாது. கலந்தாய்விற்கு வரும் நாளன்று, முதலில் அழைக்கப்பட்டு, அவருக்குரிய பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படும்' என, தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன

>>>பட்டதாரி ஆசிரியர் விரைவில் நியமனம்

தொடக்க கல்வித் துறைக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர், விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.கடந்த, 2008-09, 09-10, 10-11 ஆகிய, மூன்று ஆண்டுகளில், நிரப்பப்படாத, 319 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, கடந்த ஜூனில், டி.ஆர்.பி., சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தியது. அதன்பின், இறுதி தேர்வுப் பட்டியலையும் வெளியிட்டது. இவர்களில், பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 149 பட்டதாரி ஆசிரியர், 10ம் தேதி பணி நியமனம் செய்யப்பட்டனர். தொடக்க  கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 83 பட்டதாரி ஆசிரியர், ஒரு வாரத்திற்குள், பணி நியமனம் செய்யப்படுவர் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.மதுரை மற்றும் கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, 19 பணிஇடங்கள், நிரப்பப்பட்டு விட்டன. இதர துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட, ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு, சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

>>>அனைத்துப் பள்ளிகளிலும் 6 மாதங்களில் கழிப்பறை வசதி - நிறைவேற்றுவது சாத்தியமா?

"அனைத்து வகை பள்ளிகளிலும், ஆறு மாதங்களில், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும்' என, சமீபத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவை, தமிழகத்தில், ஆறு மாதங்களுக்குள் நிறைவேற்ற முடியுமா என்பது, கேள்விக்குறியாக உள்ளது.சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு மையம் என்ற, தன்னார்வ அமைப்பு, தொடர்ந்த வழக்கில், "அனைத்து வகை பள்ளிகளிலும், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை, ஆறு மாதங்களில் ஏற்படுத்திட, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, இம்மாதம், 3ம் தேதி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தமிழகத்தில், தற்போது, பள்ளிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்த புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள், நவம்பர் இறுதியிலோ அல்லது டிசம்பர் முதல் வாரத்திலோ முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கணக்கெடுப்பு தகவல்கள் கிடைத்தபிறகே, எத்தனை பள்ளிகளில், அடிப்படை வசதிகள் உள்ளன; எத்தனை பள்ளிகளில், போதிய அளவிற்கு, அடிப்படை வசதிகள் நிறைவேற்ற வேண்டியுள்ளது என்பதை தெரிந்துகொள்ள முடியும். இந்த புள்ளி விவரங்கள் அடிப்படையில், தேவை உள்ள பள்ளிகளுக்கு, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, திட்டங்கள் தீட்டி, அரசின் அனுமதிபெற வேண்டும். அதன்பின், டெண்டர் விட்டு, பணிகளை நிறைவேற்ற, நடவடிக்கைஎடுக்க வேண்டும்.பட்ஜெட் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், கடைசி நேரத்தில் தனியாக வெளியாவதற்கு வாய்ப்புகள் இல்லை என, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எனவே, புள்ளி விவரங்கள் அடிப்படையில், தீட்டப்படும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், வரும் பட்ஜெட்டிலோ அல்லது பள்ளிக்கல்வி மானியக் கோரிக்கையிலோ வெளியாகலாம். அதனால், ஆறு மாதங்களுக்குள், திட்டப் பணிகளை முடிப்பதற்கு, நடைமுறையில் சாத்தியமில்லை என, கல்வித்துறை கை விரிக்கிறது.இந்த ஆண்டு, அரசுப் பள்ளிகளில், 3,769 குடிநீர் வசதிகள், 4,373 மாணவர் கழிப்பறை வசதிகள், மாணவியருக்கென, 7,262 கழிப்பறை வசதிகள், 7,907 கூடுதல் வகுப்பறைகள், 3.81 லட்சம் மீட்டரில், பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை கட்டமைப்புதிட்டங்கள், 1,507 கோடி ரூபாய் செலவில் நிறைவேற்றுவதற்கு திட்டமிடப்படது. இப்பணிகளில், 90 சதவீதத்திற்கும் அதிகமான திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த திட்டங்களை உள்ளடக்கிய பள்ளிகள் போக, மேலும் அடிப்படை வசதிகள் தேவைப்படும் பள்ளிகள் எண்ணிக்கை, குறைவாகவே இருக்கும் என, கல்வித்துறை எதிர்பார்க்கிறது.இந்தப் பள்ளிகளுக்கு, வரும் கல்வியாண்டில், தேவையான அளவிற்கு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

>>>தேர்ச்சி விகிதம் அதிகரிக்க மாணவர்களை தத்தெடுக்க உத்தரவு

அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, 10 ,12ம் வகுப்பில் தலா பத்து மாணவர்களை தத்தெடுத்து, தினமும் அவர்களை கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உயர்,மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளில், ஆண்டுதோறும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும், அனைவரும் இடைநிலை கல்வியை கடக்கவும், அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், 10, 12ம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள், குறைந்தது தலா பத்து மாணவ, மாணவிகளை தத்தெடுக்க வேண்டும். தங்களது கட்டுப்பாட்டிலுள்ள மாணவர்களிடம், தினமும் தங்களது பாடம் தவிர, மற்ற ஆசிரியர்கள் நடத்தியவை, வீட்டு பாடங்களை கண்காணிக்க வேண்டும். அவர்களை பொதுத் தேர்வில் அதிக மார்க் எடுக்க வைப்பதுடன், தேர்ச்சி விகித்தை அதிகரிக்க செய்ய வேண்டும். மாணவர்கள் தேர்வில் தோல்வியை தழுவினாலும், பள்ளிக்கு சரியாக வராவிட்டாலும், சம்பந்தப்பட்ட ஆசிரியரே பொறுப்பு. இதற்கான உத்தரவு, முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவர் கூறுகையில், "அரசு பள்ளிகளில் மாணவர்களை தத்தெடுப்பது, ஆசிரியர்களுக்கு கூடுதல் சுமை. மாணவர்கள், ஆசிரியர் இடையே தகுந்த ஒத்துழைப்பு தேவை. ஒழுக்கமில்லாத மாணவ, மாணவிகளை கண்டிக்கக்கூடாது என, உத்தரவு இருக்கும் போது, ஒழுக்கமற்றவர்களை திருத்திக் கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும். பெற்றோர்களும் ஒத்துழைக்க வேண்டும்" என்றார்.

>>>10 நாட்களில் டி.இ.டி தேர்வு கீ-ஆன்சர் வெளியீடு

ஆசிரியர் தகுதி மறுதேர்வின், "கீ-ஆன்சர்" 10 நாட்களில் வெளியிடப்படுகிறது. அக்டோபர் 14ல் நடந்த, டி.இ.டி., மறு தேர்வில், 4.75 லட்சம் பேர் பங்கேற்றனர். ஜூலையில் நடந்த தேர்வை விட, இப்போது நடந்த தேர்வு, எளிதாக இருந்ததாலும், தேர்வு நேரத்தை, மூன்று மணி நேரமாக அதிகரித்து வழங்கியதாலும், அதிகம் பேர் தேர்ச்சி பெறுவர் என, டி.ஆர்.பி., எதிர்பார்க்கிறது. இதற்கிடையே, கேள்விகளுக்கான விடைகளை (கீ-ஆன்சர்), 10 நாளில் வெளியிட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. தற்போது, மாவட்டங்களில் இருந்து, விடைத்தாள் கட்டுகள், சென்னைக்கு வந்து கொண்டிருக்கின்றன. விடைத்தாள், ஸ்கேன் செய்வதற்கு முன்பே, விடைகளை வெளியிட்டால், ஏதாவது முறைகேடு நடப்பதற்கு வழி வகுத்தது போல் ஆகிவிடும் என்பதால், ஸ்கேன் செய்யும் பணிகள் முடிந்தபின், விடைகளை வெளியிட, டி.ஆர்.பி., தீர்மானித்துள்ளது.

>>>வறுமையே உனக்கு வறுமை வராதா: இன்று உலக வறுமை ஒழிப்பு தினம்

உலகில் ஏதாவது ஒரு இடத்தில், வறுமையால் யாராவது பாதிக்கப்பட்டால், அவர்களது மனித உரிமை மீறப்படுகிறது என்கிறார் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் ரெசின்கி. இவர், சிறு வயது முதலே வறுமைக்கு எதிராக போராடினார். இவரது முயற்சியால் தான், உலக வறுமை ஒழிப்பு தினம் 1987 அக்.,17ல் உருவாக்கப்பட்டது. பின் ஐ.நா., சபையால், இத்தினம் அங்கீகரிக்கப்பட்டது. வறுமையை ஒழிக்கவும், அனைவருக்கும் அடிப்படை வசதி கிடைப்பதை உறுதி செய்யவும் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., வலியுறுத்துகிறது. "வறுமையால் உருவாகும் வன்முறைக்கு முடிவு: தேவையை பூர்த்தி செய்து அமைதியை உருவாக்குதல்' என்பது இந்தாண்டு மையக் கருத்து.
எது வறுமை:
அனைவருக்கும் சுத்தமான தண்ணீர், சத்தான உணவு, மருத்துவம், வேலை வாய்ப்பு, சுகாதாரம், கல்வி, உடை, இருப்பிடம் கிடைக்க வேண்டும். இவை இல்லாத அனைவரும், வறுமை நிலையில் இருப்பவர்கள் என கருதப்படுகிறார்கள். பட்டினி, வன்முறைக்கு வறுமை வழிவகுக்கிறது.
129 கோடி பேர்:
உலக மக்கள் தொகையில், 129 கோடி பேர் வறுமை நிலையில் வாழ்கின்றனர். இதில் 40 கோடி பேர் இந்தியாவிலும், 17 கோடி பேர் சீனாவிலும் உள்ளனர். இந்தியாவில் 32.7 சதவீதம் பேர், சர்வதேச வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழ்கின்றனர். 68.7 சதவீதம் பேர், 100 ரூபாய் வருமானத்தில் வாழ்கின்றனர் என 2008ல "உலக வங்கி' நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த இடைவெளி:
வசதி படைத்தோர் - ஏழைகளுக்கு இடையேயான இடைவெளி அதிகரிக்கிறது. வளராத நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, உலகின் முதல் மூன்று பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட குறைவு. உலக பணக்காரர்களில், 20 சதவீதம் பேர், உலகின் மொத்த வளங்களில் 86 சதவீதத்தை வைத்துள்ளனர். மீதமுள்ள 80 சதவீத மக்களுக்கு கிடைப்பது 14 சதவீதம் மட்டுமே.
அக்கறையின்மை:
ஏழ்மை நிலையில் மக்கள் தள்ளப்படுவதற்கு அரசியல்வாதிகள், ஊழல், லஞ்சம், கல்வியறிவின்மை, வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, புதிய தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தாமை போன்ற காரணங்கள் உள்ளன. இருப்பினும், ஏழைகளின் பசியை போக்க எந்த அரசுக்கும் அக்கறை இல்லாததே முக்கிய காரணம். ஆட்சிக்கு வந்தால் அதைத் தருவோம், இதைத் தருவோம் என தேர்தலின் போது அனைத்து கட்சிகளும் வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றன. ஆனால் ஆட்சியில் அமர்ந்தவுடன், மக்களின் பசியைக்கூட போக்க அவை முன்வருவதில்லை.
என்ன செய்யலாம்:
ஏழைகளை ஒரே நாளில் வசதியானவர்களாக மாற்ற முடியாது. இப்போதிருந்து தொலைநோக்கு திட்டங்களை தீட்டினால், வரும் சந்ததியினரும் வறுமைக் கோட்டில் வசிப்பதை தவிர்க்கலாம். கல்வியறிவே ஒரு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கிறது. உலகில் 11 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்வதில்லை என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா, வும், 2015ம் ஆண்டுக்குள், அனைத்து நாடுகளும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறது. அரசுகளுடன் மக்களும் முயற்சி எடுத்தால், ஏழ்மை நிலையை முடிந்தளவு குறைக்கலாம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...