முதல்வரின் தனிப் பிரிவிற்கு, பொதுமக்களிடம் இருந்து  பெறப்படும் மனுக்களுக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க, புதிய  வலைதளத்தினையும், மனுதாரர்களுக்கு குறுந்தகவல் மூலம் ஒப்புகைச் செய்தி  அனுப்பும் முறையையும் முதல்வர் அவர்கள் துவக்கி வைத்து உள்ளார். 
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:முதல்வரின்  தனிப்பிரிவிற்கு நாள்தோறும் பொதுமக்களிடமிருந்து நேரடியாகவும், தபால் வழி,  மின்னஞ்சல் மற்றும் இதர ஊடகங்கள் வாயிலாகவும் நாளொன்றுக்கு சுமார் 3 ஆயிரம்  முதல் 5 ஆயிரம் மனுக்கள் பெறப்படுகின்றன. இம்மனுக்கள் தனிக் குறியீடுகள்  மூலம் வகைப்படுத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்பிரிவில்  பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து எடுக்கப்படும் நடவடிக்கையால் பொதுமக்கள்  பயனடைந்து வருகின்றனர்.முதல்வரின் தனிப்பிரிவின் மூலம்  பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கும்  நோக்கில் முதல்வரின் தனிப்பிரிவிற்கு, http://cmcell.tn.gov.in என்ற புதிய வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் அவர்கள் நேற்று முன் தினம் தலைமைச் செயலகத்தில் துவக்கி வைத்தார்.
ஒப்புகைச் சீட்டு: இவ்வலைதளத்தின் மூலம் பொதுமக்களிடமிருந்து  பெறப்படும் மனுக்கள் மீதான ஒப்புகைச் சீட்டு, உடனே மனுதாரர்களின்  மின்னஞ்சல் முகவரிக்கு பதிவு எண்ணுடன் அனுப்பி வைக்கப்படும். புதிய வலைதளம்  மூலம் பெறப்படும் மனுக்கள், அம்மனு தொடர்புடைய அலுவலகத்திற்கு கணினி மூலம்  மாற்றப்பட்டு, அதன் விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட  அலுவலகத்திலுள்ள முதல்வர் தனிப்பிரிவின் ஒருங்கிணைப்பு அலுவலரின் பெயர்  இந்த வலைதளத்தில் குறிப்பிடப்படும். இதன்மூலம் மனுதாரர் அந்த அலுவலரை  நேரடியாக தொடர்பு கொள்ள முடியும்.மேலும், இப்பிரிவில் பெறப்படும்  மனுக்களுக்கு குறுந்தகவல்(எஸ்.எம்.எஸ்.,) மூலம் மனுதாரர்களுக்கு ஒப்புகை  செய்தி அனுப்பும் முறையையும் முதல்வர் துவக்கி வைத்தார். அதேபோல், தபால்  வழியாக அனுப்பும் மனுக்களில் மனுதாரர் கைபேசி எண்ணை குறிப்பிட்டிருந்தால்  முதல்வரின் தனிப்பிரிவினால் வழங்கப்படும் பதிவு எண், தொடர்புடைய அலுவலகம்  மற்றும் அலுவலர் ஆகிய விவரங்கள் முதல்வர் தனிப்பிரிவிலிருந்து குறுந்தகவல்  மூலம் மனுதாரர்களுக்கு அனுப்பப்படும்.
 

 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.