கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>தூய்மையான சூழலை உருவாக்குவோம்! - வெ.இறையன்பு

வெளியிலிருந்து பார்த்தால் புதிதாகப் பூத்த தாமரை போல் மலர்ந்திருந்த அந்த அழகான கட்டடம் உருவாகிற ஒவ்வொரு படியையும் நான் அறிவேன். எவ்வளவு பெரிய முதலீடு! எத்தனை பெரிய கட்டடம்! எத்தனை பேருடைய உழைப்பு! விரைவில் முடிக்க எவ்வளவு கண்காணிப்பு.

தடபுடலான விழாவுடன் அந்தப் பொதுக் கட்டடம் திறக்கப்பட்டது. எனக்கும் ஆசை இருந்தது. இப்போது அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பார்த்துவிட வேண்டும் என்று ஏற்பட்ட அவாவில் அது திறந்த ஒரு மாதம் கழித்து அங்கு சென்றேன்.

உள்ளே நுழையும்போதே மூக்கைப் பிடிக்க வேண்டிய சூழ்நிலை. திரும்பிய பக்கம் எல்லாம் குப்பைகள். மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு முன்னேறும் போதே, எதுவுமே நடக்காதது போல் ஒரு சிலர் அந்த மைதானத்தை திறந்தவெளி கழிவறை ஆக்கியிருந்தார்கள். அதனால் காலை உணவைத் தேடி நன்றி விசுவாசத்துடன் பன்றிகள் சில படை எடுத்திருந்தன.

அப்படி கடமையை முடித்து வந்த ஒருவரிடம் கேட்டேன், "இங்கு கழிவறை வசதி இல்லையா?" அதற்கு அவர், "'என்ன இருந்தாலும் இந்த சுகம் வருமா" இன்னொருவர், "நான் இந்த அலுவலகத்துக்கு வரவில்லை. மதில் சுவரெல்லாம் கட்டி மறைவாக இருப்பதால் இங்கு வந்தேன்."

இவற்றையும் மீறி உள்ளே நுழைந்தேன். வாசல் பக்கம் பல்வேறு பிளாஸ்டிக் பைகள். மாடிப்படி வளைவுகளில் எச்சில் துப்பிய சுவடுகள். கண் முன்னேயே வாயில் குதப்பிய வெற்றிலையைக் காறி உமிழும் ஒருவரைக் கண்டேன். அவரைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஒரு மாதத்துக்கு முன்புதான் திறக்கப்பட்ட இந்த அழகிய கட்டடம் இப்படி ஆகிவிட்டதே என்கிற வருத்தம் என் மனம் முழுவதும் பரவியது. சின்ன வயதிலேயே "பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது. சிறுநீர் கழிக்கக்கூடாது. அரசுக் கட்டடங்களை நம் சொந்த சொத்தைப்போல பாதுகாக்க வேண்டும். தூய்மையான சூழலே ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை. சுற்றுலாத் தலங்களை நம் வருகையால் அழுக்காக்கக் கூடாது" என்கிற உயர்ந்த குடிமைப் பண்புகளை நாம் தரித்துக்கொள்ள வேண்டும். நம் மாநிலத்தின் அருகிலேயே அமைந்திருக்கும் கேரளாவில் இந்த நிலைமையில்லை. அங்கு குடிமைப் பண்புகள் கோலோச்சுகின்றன.

வாயைப் பொத்திக்கொண்டு தும்ம வேண்டும். கைகளை வைத்து இரும வேண்டும். இவ்வா றெல்லாம் நம்மை ஒழுங்குபடுத்திக்கொள்வது அவசியம்.

'டென்மார்க்கின் தலைநகரம் எது' என்று சொல்லிக் கொடுப்பதற்கு முன், இதை சொல்லித் தந்தால் தமிழகத்தின் பல இடங்களில் மூக்கை மூடிக்கொண்டு, சில இடங்களில் கண்ணை மூடிக்கொண்டும் போக வேண்டிய அவசியம் ஏற்படாது. இவற்றைத் தட்டிக் கேட்காமல், வாயை மூடிக்கொண்டு இருந்தால், இதே நிலைதான் தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET 2026 Notification For Working Teachers

    TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS - 2026 NOTIFICATION பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு கு...