தமிழகத்தில் உள்ள, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில்,
தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவர்களின்
கல்வித்தரம் குறைந்து வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும்
பழங்குடியினர் நலத்துறையின் கீழ், 1,095 பள்ளிகள், செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகளில், 1.50 லட்சம் மாணவர்கள், பயின்று வருகின்றனர். இதில்,
நூற்றுக்கும் குறைவான மேல்நிலைப் பள்ளிகளே செயல்படுகிறது. இம்மேல்நிலைப்
பள்ளிகளில், 24 தலைமை ஆசிரியர்கள், 97 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், இங்கு பயிலும் மாணவர்களின் கல்வித்தரம், குறையும் அபாயத்தில்
உள்ளது.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: தமிழகத்தில், பெரும்பான்மையான
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளில், பல ஆண்டுகளாக, ஆசிரியர்
பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. காலியாக உள்ள பணியிடங்களில், பெற்றோர்
ஆசிரியர் கழகத்தின் மூலம், கவுரவ ஆசிரியர்களை நியமித்திருந்திருக்கலாம்.
அதுகுறித்தும், எந்த அக்கறையும் காட்டவில்லை. இதனால், நல்ல மதிப்பெண்கள்
பெற்றிருந்த, மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து கொண்டே வருகிறது.
நிதிநிலை அறிக்கையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
பள்ளியில் பயிலும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக, பல்வேறு
நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அரசு அறிவித்திருக்கிறது, ஆண்டு கணக்கில்,
காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முன்வரவில்லை. இதேநிலை தொடர்ந்தால்,
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில் பயிலும்,
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கணிசமாகக் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை, கல்வி பிரிவு உயர் அதிகாரிகளிடம்
கேட்ட போது, "காலி பணியிடங்களில், ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கை
துரிதமாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு பின், காலி பணியிடங்களை நிரப்பி
விடுவோம்" என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.