தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று கல்வித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளிகள் கட்டணம் கேட்டு வற்புறுத்துவதாக சென்னை உயர்நீதி மன்றத்தில் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கில், முதற்கட்டமாக 40 சதவீத கட்டணம் வசூலிக்க கடந்த ஜூலை 17-ம் தேதி உயர் நீதிமன்றம் உத்தவிட்டது. இந்த உத்தரவை மீறி அதிக கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர் தரப்பில் கூறப்படும் வாய்மொழி, எழுத்துப் பூர்வ புகார்கள் மீது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உரிய விசாரணை நடத்தவும், நோட்டீஸ் அனுப்பவும் பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியிருந்தது.
இதன் பேரில், அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பெற்றோர் புகார் தெரிவிக்கும் வகையில், இ-மெயில் முகவரிகளை வெளியிட்டு இருந்தனர். அதில், நிறைய பெற்றோர்கள் புகார் அனுப்பியிருந்தனர். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி 100 சதவீத கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தும் பள்ளிகள் தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஎஸ்சி பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் முழு கட்டணம் செலுத்த நிர்பந்தம் செய்த சிபிஎஸ்இ பள்ளிகள் குறித்த விவரங்களையும் நீதிபதி கேள்வியாக கேட்டார்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, 35 சிபிஎஸ்இ பள்ளிகள் நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும், முழு கட்டணத்தை செலுத்த பெற்றோர்களை நிர்பந்தம் செய்ததாகவும் இந்த 35 பள்ளிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி ஆனந்த வெங்கடேஷ், சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டார். இதனைபோல், 40% கட்டணத்தை செலுத்த காலஅவகாசம் கடந்த முறை வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், மீதமுள்ள 30% கட்டணத்தை எப்போது வசூலிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம், தனியார் பள்ளிகள் தரப்பில் கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதிபதி, பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரிந்த பின்தான், இது தொடர்பாக விளக்க முடியும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, தமிழகத்தில் பள்ளிகள் எப்போது? திறக்கப்படும் என்பது குறித்து நவம்பர் 11-ம் தேதிக்குள் பதிலளிக்க கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தவிட்டு அன்றைய தினத்திற்கு வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார். நவம்பர் 11-ம் தேதி தமிழக அரசு அளிக்கும் பதிலைப் பார்த்து மீதமுள்ள கட்டணத்தை வசூலிப்பது குறித்து நீதிபதி உத்தரவிடுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.