உடனடி கட்டட அனுமதியில் நிலத்தை சரிபார்க்க 15 நாள் கெடு...
'சுயசான்று அடிப்படையில், உடனடி கட்டட அனுமதி கோரும் நிலத்தின் உண்மை தன்மையை, 15 நாட்களுக்குள் விசாரிக்க வேண்டும்' என, நகராட்சி நிர்வாகத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 2,500 சதுரடி வரையிலான மனைகளில், 3,500 சதுரடி வரை வீடு கட்ட, சுயசான்று அடிப்படையில் ஒப்புதல் வழங்கும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதன்படி, பொது மக்கள் உரிய ஆவணங்களை, 'ஆன்லைன்' முறையில் தாக்கல் செய்தால், ஒரு மணி நேரத்தில் கட்டட அனுமதி கடிதம் கிடைத்து விடும்.
இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை பிறப்பித்துள்ள உத்தரவு:
உடனடி கட்டட அனுமதி தொடர்பாக, அரசு பிறப்பித்துள்ள உத்தரவுகளை, நகராட்சி, மாநகராட்சி மன்ற கூட்டங்களின் வைத்து தீர்மான மாக நிறைவேற்ற வேண்டும். இதை இயல்பான நடைமுறையாக அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒற்றை சாளர முறை இணையதளத்தில், இதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை கடைப்பிடிக்க வேண்டும். ஆன்லைன் முறையில் வசூலாகும் கட்டணங்களை உரிய தலைப்புகளில் பிரித்து, ஒவ்வொரு மாதமும் 5ம் தேதிக்குள் செலுத்தி, அதற்கான சான்றை தலைமையகத்துக்கு அனுப்ப வேண்டும்.
உடனடி கட்டட அனுமதி வழங்கப்படும் இனங்களில் தொடர்புடைய நிலங்களின் உரிமை விபரங்களை, 15 நாட்களுக்குள், 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும். கட்டட அனுமதி வழங்கப்பட்ட, 30 நாட்களுக்குள் காலிமனை வரியை வசூலிக்க வேண்டும்.
இதேபோன்று கட்டட அனுமதி வழங்கப்பட்ட, 30 நாட்களுக்குள், பாதாள சாக்கடை உள்ளிட்ட இணைப்புகளுக்கான கட்டணங்களையும் வசூலிக்க வேண்டும். இதில் அனுமதி பெறுவோர், இரண்டு வீடுகளுக்கு மேல் கட்டக்கூடாது என்பதை, அதிகாரிகள் கள ஆய்வு வாயிலாக உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.