கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>நவம்பர் 29 [November 29]....

நிகழ்வுகள்

  • 1781 - கூலிகளை ஏற்றிச்சென்ற சொங் (Zong) என்ற கப்பல் மாலுமிகள் காப்புறுதிக்காக 133 ஆபிரிக்கர்களை கொன்று கடலுக்குள் எறிந்தனர்.
  • 1830 - போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
  • 1855 - துருக்கியில் தாதியர் பயிற்சிக்காக புளோரன்ஸ் நைட்டிங்கேல் நிதியம் நிறுவப்பட்டது.
  • 1877 - தோமஸ் அல்வா எடிசன் போனோகிராஃப் என்ற ஒலிப்பதிவுக் கருவியைக் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தினார்.
  • 1915 - கலிபோர்னியாவில் சாண்டா கட்டலீனா தீவின் பல முக்கிய கட்டடங்கள் தீயில் எரிந்தன.
  • 1922 - ஹவார்ட் கார்ட்டர் பண்டைய எகிப்தின் துட்டன்காமுன் மன்னனின் கல்லறையை பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விட்டார்.
  • 1929 - ஐக்கிய அமெரிக்காவின் ரிச்சார்ட் பயேர்ட் தென் முனை மேல் பறந்த முதல் மனிதரானார்.
  • 1945 - யூகொஸ்லாவிய சமஷ்டி மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
  • 1947 - பாலஸ்தீனத்தைப் பிரிப்பதென ஐநா பொதுச் சபை முடிவெடுத்தது.
  • 1950 - வட கொரியா மற்றும் சீனப் படைகள் ஐநா படைகளை வட கொரியாவிலிருந்து வெளியேறும்படி செய்தனர்.
  • 1961 - நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 5 விண்கலம் சிம்பன்சி ஒன்றை ஏற்றிக்கொண்டு விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது பூமியை இரு தடவைகள் சுற்றிவந்து புவேர்ட்டோ ரிக்கோவில் இறங்கியது).
  • 1963 - 118 பேருடன் சென்ற கனடாவின் விமானம் மொன்ட்ரியாலில் விபத்துக்குள்ளாகியது.
  • 1982 - ஐநா பொது அவை சோவியத் படைகளை ஆப்கானிஸ்தானில் இருந்து உடனடியாக விலகும்படி சோவியத் ஒன்றியத்தைக் கேட்டது.
  • 1987 - கொரிய விமானம் தாய்-பர்மிய எல்லைக்கருகில் வெடித்துச் சிதறியதில் 155 பேர் கொல்லப்பட்டனர்.
  • 2006 - அணுவாயுதங்களை எடுத்துச் சென்று 700 கிமீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய ஷாகீன் 1 என்ற ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது.

பிறப்புக்கள்

  • 1889 - எட்வின் ஹபிள், வானிலையாளர் (இ. 1953)
  • 1908 - என். எஸ். கிருஷ்ணன், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் (இ. 1957)

இறப்புகள்

  • 1989 - மருதகாசி, திரைப்படப் பாடலாசிரியர் (பி. 1920)
  • 1993 - ஜே. ஆர். டி. டாடா, இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர், இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடி (பி. 1904)
  • 2008 - ஜோர்ன் அட்சன், டென்மார்க் கட்டிடக்கலைஞர் (பி. 1918)

>>>ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது..?

 
1.இன்ஷூரன்ஸ் பாலிசி!

யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள் நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தர வேண்டும்.

2.மதிப்பெண் பட்டியல்!

யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.

மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை: விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை: காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

3.ரேஷன் கார்டு!

யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

4.டிரைவிங் லைசென்ஸ்!

யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை: விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை: காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பம்.

5.பான் கார்டு!

யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.

கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை: பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

6.பங்குச் சந்தை ஆவணம்!

யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.

எவ்வளவு கட்டணம்? தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை: விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை: முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.கிரயப் பத்திரம்!

யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்? ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20 ரூபாய்.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

8.டெபிட் கார்டு!

யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

கணக்குத் தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை: வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை: டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

மனைப் பட்டா!

யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?

நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை: ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை: முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

9.பாஸ்போர்ட்!

யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20 ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.4,000.

கால வரையறை: இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை: பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.



10.கிரெடிட் கார்டு!

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.
யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை: 15 வேலை நாட்கள்.

நடைமுறை : தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச் சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

>>>தூய்மையான சூழலை உருவாக்குவோம்! - வெ.இறையன்பு

வெளியிலிருந்து பார்த்தால் புதிதாகப் பூத்த தாமரை போல் மலர்ந்திருந்த அந்த அழகான கட்டடம் உருவாகிற ஒவ்வொரு படியையும் நான் அறிவேன். எவ்வளவு பெரிய முதலீடு! எத்தனை பெரிய கட்டடம்! எத்தனை பேருடைய உழைப்பு! விரைவில் முடிக்க எவ்வளவு கண்காணிப்பு.

தடபுடலான விழாவுடன் அந்தப் பொதுக் கட்டடம் திறக்கப்பட்டது. எனக்கும் ஆசை இருந்தது. இப்போது அது எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பார்த்துவிட வேண்டும் என்று ஏற்பட்ட அவாவில் அது திறந்த ஒரு மாதம் கழித்து அங்கு சென்றேன்.

உள்ளே நுழையும்போதே மூக்கைப் பிடிக்க வேண்டிய சூழ்நிலை. திரும்பிய பக்கம் எல்லாம் குப்பைகள். மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு முன்னேறும் போதே, எதுவுமே நடக்காதது போல் ஒரு சிலர் அந்த மைதானத்தை திறந்தவெளி கழிவறை ஆக்கியிருந்தார்கள். அதனால் காலை உணவைத் தேடி நன்றி விசுவாசத்துடன் பன்றிகள் சில படை எடுத்திருந்தன.

அப்படி கடமையை முடித்து வந்த ஒருவரிடம் கேட்டேன், "இங்கு கழிவறை வசதி இல்லையா?" அதற்கு அவர், "'என்ன இருந்தாலும் இந்த சுகம் வருமா" இன்னொருவர், "நான் இந்த அலுவலகத்துக்கு வரவில்லை. மதில் சுவரெல்லாம் கட்டி மறைவாக இருப்பதால் இங்கு வந்தேன்."

இவற்றையும் மீறி உள்ளே நுழைந்தேன். வாசல் பக்கம் பல்வேறு பிளாஸ்டிக் பைகள். மாடிப்படி வளைவுகளில் எச்சில் துப்பிய சுவடுகள். கண் முன்னேயே வாயில் குதப்பிய வெற்றிலையைக் காறி உமிழும் ஒருவரைக் கண்டேன். அவரைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை.

ஒரு மாதத்துக்கு முன்புதான் திறக்கப்பட்ட இந்த அழகிய கட்டடம் இப்படி ஆகிவிட்டதே என்கிற வருத்தம் என் மனம் முழுவதும் பரவியது. சின்ன வயதிலேயே "பொது இடத்தில் எச்சில் துப்பக்கூடாது. சிறுநீர் கழிக்கக்கூடாது. அரசுக் கட்டடங்களை நம் சொந்த சொத்தைப்போல பாதுகாக்க வேண்டும். தூய்மையான சூழலே ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை. சுற்றுலாத் தலங்களை நம் வருகையால் அழுக்காக்கக் கூடாது" என்கிற உயர்ந்த குடிமைப் பண்புகளை நாம் தரித்துக்கொள்ள வேண்டும். நம் மாநிலத்தின் அருகிலேயே அமைந்திருக்கும் கேரளாவில் இந்த நிலைமையில்லை. அங்கு குடிமைப் பண்புகள் கோலோச்சுகின்றன.

வாயைப் பொத்திக்கொண்டு தும்ம வேண்டும். கைகளை வைத்து இரும வேண்டும். இவ்வா றெல்லாம் நம்மை ஒழுங்குபடுத்திக்கொள்வது அவசியம்.

'டென்மார்க்கின் தலைநகரம் எது' என்று சொல்லிக் கொடுப்பதற்கு முன், இதை சொல்லித் தந்தால் தமிழகத்தின் பல இடங்களில் மூக்கை மூடிக்கொண்டு, சில இடங்களில் கண்ணை மூடிக்கொண்டும் போக வேண்டிய அவசியம் ஏற்படாது. இவற்றைத் தட்டிக் கேட்காமல், வாயை மூடிக்கொண்டு இருந்தால், இதே நிலைதான் தொடரும்.

>>>உடுமலையில் அரசு பள்ளியை அசுத்தப்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை

உடுமலை அருகே அரசு பள்ளி வளாகத்தை அசுத்தப்படும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், பள்ளி முன்பு அப்பள்ளி நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.
உடுமலை நகராட்சி, ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளிலுள்ள பள்ளி வளாகங்களை இரவு நேரங்களில் சிலர் மதுபானம் குடிப்பதற்கும், கழிப்பிடத்திற்காவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மாணவர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டி.வி., பட்டணம் பழனி ஆண்டவர் மில்ஸ் நகராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தை சிலர் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்தியுள்ளனர். மாணவர்கள் வகுப்பறை மற்றும் கட்டடம் முழுவதும் அசுத்தம் செய்து வைத்துள்ளதால், பள்ளிக்குள்ளே செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசியுள்ளது.
இதை கண்ட ஆசிரியர்கள், மாணவர்களும் அதிர்ச்சியடைந்து, மன உளைச்சலுக்கு ஆளாகினர். பின் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்று சில நாட்கள் இதே சம்பவம் மீண்டும் நடந்துள்ளது. இதனால் விரக்தியடைந்த ஆசிரியர்கள், கல்விக்குழு, பள்ளிமேலாண்மைக் குழு உறுப்பினர்களை அழைத்து, கூட்டம் நடத்தினர்.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்தால், பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்துவது கடினம்; பள்ளி வளாகம் என்றாலே தூய்மையாக வைத்திருக்க வேண்டும்; கோவில் போன்ற பள்ளி வளாகத்தை சிலர் அசுத்தம் செய்வதால், மாணவர்களும் படிக்க முடியாமல் திணறுகின்றனர் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, பள்ளி வளாகத்தை அசுத்தப்படுத்தாமல் இருக்க பொதுமக்களிடம் அறிவுறுத்துவோம்; அதையும் மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை பலகை வைத்துவிடலாம் என முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, பள்ளி முன்பு வைக்கப்பட்ட எச்சரிக்கை பலகையில், "கல்வி கற்பிக்கும் பள்ளியை சிலர் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். பள்ளி வளாகத்தை அசுத்தப்படுத்தவோ, கழிப்பறையாக பயன்படுத்தவோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது. மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என எழுதப்பட்டுள்ளது. இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் அப்பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
"கல்வி கற்கும் வளாகம் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், சிலர் செய்யும் செயல்களால் அசுத்தப்படுகிறது. இதை தவிர்க்க பள்ளி முன்பு எச்சரிக்கை போர்டு வைக்கப்பட்டது. தற்போது யாரும் பள்ளி வளாகத்திற்குள் வருவதில்லை,&'&' என்றார் பள்ளி தலைமையாசிரியர் சிவக்குமார்.
பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க ஆசிரியர்களும், மாணவர்களும் முயற்சித்தால் போதாது; அப்பகுதியை சேர்ந்த அனைவரும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சாத்தியமாகும். அரசு சொத்து என்றாலும், மாணவர்கள் படிக்கும் வளாகம் என்பதால், தூய்மையாக வைத்திருக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்பதே கல்வி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

>>>வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி: சிபெட் மீது வழக்கு

பயிற்சி முடித்ததும் வேலை வழங்கப்படும் என்ற உறுதிமொழியை, 'சிபெட்' காப்பாற்றவில்லை என தெரிவித்து, வேலை கிடைக்காத, வட கிழக்கு மாநில மாணவர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களான, அருணாச்சல பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய, எட்டு மாநிலங்களின் மேம்பாட்டிற்கான, வடகிழக்கு பகுதி மேம்பாட்டு துறை சார்பில், படித்த இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.
சென்னையை தலைமையகமாக கொண்டுள்ள, 'சிபெட்' எனப்படும், மத்திய பிளாஸ்டிக் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் சார்பில், வட கிழக்கு மாநிலங்களில், ஆறு மாதங்கள், தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும்; பயிற்சி முடிந்ததும், வேலைவாய்ப்பு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த அறிவிப்பை நம்பி, 2010, ஆகஸ்டில், பயிற்சியில் சேர்ந்த மாணவர்களில், 100 பேருக்கு, பயிற்சி நிறைவு பெற்ற பிறகும் வேலை கிடைக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த மாணவர்கள், கவுகாத்தி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், அவர்கள் கூறியுள்ளதாவது:
ஆறு மாத பயிற்சி நிறைவடைந்ததும், வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என கூறப்பட்டதால், 5,000 ரூபாய் கட்டணம் செலுத்தி படித்தோம். பயிற்சி முடிந்ததும், வீட்டுக்கு செல்லுங்கள் என, கூறப்பட்டது. நாங்கள் மறுத்ததால், பெயரளவிற்கு வேலை வழங்கினர். ஆனால், அந்த வேலைகளும் நிரந்தரமாக கிடைக்கவில்லை.
தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், 'சிபெட்' இடமிருந்து தகவல் கேட்கப்பட்டதில், "பயிற்சி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் வேலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது" என, கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் அவ்வாறு வேலைவாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படவில்லை. எங்களுக்கு போதுமான பயிற்சியும் வழங்கப்படவில்லை.
எங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதி, தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், எங்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர, உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அந்த மாணவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

>>>ஐஐடி கவுன்சிலிங்கில் ஆன்லைன் முறை ரத்து

மாணவர் சேர்க்கை செயல்பாட்டில், ஒரு புதிய விதியாக, ஆன்லைன் கவுன்சிலிங் முறை ரத்துசெய்யப்பட்டு, மாணவர்கள் நேரடியாக கலந்துகொள்ளும் முறை, அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கடந்த பல்லாண்டு காலமாக, ஆன்லைன் கவுன்சிலிங் முறை நடைமுறையில் இருந்து வந்தது. ஆனால், வரும் 2013ம் ஆண்டு முதல், இந்த நடைமுறை ரத்துசெய்யப்பட்டு, மாணவர்கள் நேரடியாக, சம்பந்தப்பட்ட ஐஐடி -களுக்கு செல்ல வேண்டிய புதிய விதிமுறை புகுத்தப்படவுள்ளது.
கடந்த 2012ம் ஆண்டில், புபனேஷ்வர் - ஐஐடி மற்றும் ஐஎஸ்எம் - தன்பாத், ஆகியவற்றில் சேர்க்கைப் பெறுவதற்காக, 2 பேர் ஆள்மாறாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, வருங்காலத்திலும், அதுபோன்ற மோசடி நடவடிக்கைகளைத் தவிர்க்கவே, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவை மேலும் கூறுவதாவது: நாட்டின் 15 ஐஐடி -கள், பனாரஸ் இந்து பல்கலை மற்றும் தன்பாத்திலுள்ள ஐஎஸ்எம் ஆகியவற்றிலுள்ள மொத்தம் 10,000 இடங்களுக்கு, ஆண்டுதோறும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிடுகின்றனர். இத்தகைய பெரிய நடைமுறை செயல்பாட்டில், ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையினர், முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
எனவேதான், இந்த புதிய விதி புகுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரில் வரும்போது, ஆள் மாறாட்டம் சாத்தியமற்றுப் போகிறது என்கின்றன சம்பந்தப்பட்ட வட்டாரங்கள்.

>>>முப்பருவ கல்வி முறை திட்டம் : டிச., 7ம் தேதி கடைசி நாள்

முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில் தயார் செய்யப்பட்ட புத்தகங்களை, ஒப்புதல் பெற, வரும், டிச., 7 கடைசி நாளாகும். இதுகுறித்து, மாநில பொதுபள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் தலைவர் வெளியிட்ட அறிக்கை: மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் வழங்கப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டத்தின் அடிப்படையில், 1 முதல் 8 வகுப்புகளுக்கு, தமிழ் பாடம் நீங்கலாக, இதர பாடப் புத்தகங்களை, முப்பருவ கல்வி முறை திட்டத்தின் அடிப்படையில், தயார் செய்யப்பட்ட புத்தகங்களுக்கு ஒப்புதல் பெற விரும்புவோர், பாடப் புத்தகங்களின், இரண்டு நகல்களை, "உறுப்பினர் - செயலர் மாநில பொதுப் பள்ளி கல்வி வாரியம் மற்றும் பள்ளி கல்வி இணை இயக்குனர் (இடைநிலைக் கல்வி), கல்லூரி சாலை, சென்னை-6' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். பாடப் புத்தகங்கள், மல்டி கலரிலும், ஏ4 அளவிலும், 80 ஜி.எஸ்.எம்., ஹைடெக் மப்லித்தோ பேப்பரிலும், சிடிபி பிரின்டிங்கிலும், 200 ஜி.எஸ்.எம்., வர்ஜின் கேட்டெட் போர்டு அட்டையும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பாடப் புத்தகத்தின் தோராய விலை குறிப்பிட வேண்டும்.
1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் பாடம் நீங்கலாக இதர பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்க வேண்டும். வரைவு பாடப்புத்தகங்களுக்கு ஒப்புதல் அளிப்பது மாநில கல்வி வாரியத்தின் இறுதி முடிவுக்குட்பட்டது. 7ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் அனுப்பப்பட வேண்டும். முப்பருவ முறை திட்டத்தின் கீழ், 2012-13ம் கல்வி ஆண்டில், 1 முதல் 8ம் வகுப்புகள் வரை, இறுதி செய்யப்பட்ட, மூன்றாம் பருவ பாடத்திட்டம் மாநில பொதுப்பள்ளி கல்வி வாரியத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பெற்றோர், மாணவர், பள்ளிகள் மற்றும் பொது மக்கள் பார்வைக்காக தீதீதீ.ஞீண்ஞு.tட.ஞ்ணிதி.டிண என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Hi-tech labs in 6,990 middle schools to become operational on July 15

தமிழ்நாட்டில் 6,990 நடுநிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ஜூலை 15-ல் செயல்பாட்டுக்கு வருகின்றன தமிழ்நாட்டில் உள்ள 6,990 அரசு நடுந...