பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 காலாண்டுத் தேர்வுகள், தேர்வுத் துறை  அனுப்பும் கேள்வித்தாள் அடிப்படையில் நடக்க இருப்பதால், விடைத்தாள்களை  ஆய்வு செய்ய, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.                               
நடப்பு கல்வியாண்டு முதல், 10ம்  வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, பொதுத் தேர்வை மட்டுமல்லாமல்,  காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளையும், தேர்வுத் துறையே நடத்துகிறது.
செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்து, காலாண்டுத் தேர்வுகள் நடக்கின்றன.  10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, இரண்டாவது வாரத்தில் தேர்வுகள்  துவங்குகின்றன.தேர்வுக்காக, பாட வாரியாக கேள்விகள் தயாரிக்கும் பணி,  தேர்வுத் துறையில் நடந்து வருகிறது.
கேள்விகளை, "சிடி" யில் பதிவு செய்து, மாவட்ட வாரியாக, முதன்மைக்  கல்வி அலுவலர்களுக்கு, தேர்வுத்துறை விரைவில் அனுப்ப உள்ளது. "சிடி"  யில் இருந்து, தேவையான கேள்வித்தாள்களை, "பிரின்ட்" எடுத்து, மாணவ,  மாணவியருக்கு வினியோகம் செய்ய, பள்ளி தேர்வுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
விடைத்தாள்களை, சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்களே மதிப்பீடு செய்வர்.  எனினும், தேர்வுத்துறை வழங்கும் கேள்வித்தாள் அடிப்படையில், மாணவ, மாணவியர்  எப்படி தேர்வு எழுதியிருக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ள, விடைத்தாள்களை  ஆய்வு செய்ய, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
தேர்வுத்துறை வட்டாரங்கள் இதுகுறித்து கூறியதாவது:பொதுத்தேர்வு எப்படி  நடக்குமோ, அதே நடைமுறையில், காலாண்டுத் தேர்வும், அரையாண்டுத் தேர்வும்  நடக்கும். வகுப்புகளில், ஆசிரியர் எவ்வளவு தான் எடுத்துக் கூறினாலும்,  பொதுத்தேர்வில், சிவப்பு மற்றும் பச்சை நிற, "ஸ்கெட்ச்" எழுது  கருவிகளை மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இதை தவிர்ப்பதற்கான  நடவடிக்கைகள், காலாண்டுத் தேர்வில் இருந்தே எடுக்கப்படும்.இவ்வாறு  தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.