கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்கள் சென்றுவரத் தேவையான போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையை சேர்ந்த முகமது யூனுஸ் ராஜா, கடந்த 2018ல் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், ஏழை நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். ஆகவே, மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் இன்று விசாரித்தனர். அப்போது நீதிபதிகள், ஊரகப் பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன? கிராமங்கள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் சென்று வர போதுமான அளவு போக்குவரத்து வசதிகள் உள்ளதா?.மருத்துவர்களின் ஆரம்ப கால ஊதியமாக எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? இதே நேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எவ்வளவு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது? என்பது குறித்து அரசுத் தரப்பில் விரிவாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.