டவ்-தே அதி தீவிரப் புயலாக மாறுகிறது; தமிழகத்தில் 3 மாவட்டங்களில் 5 நாட்களுக்கு கனமழை; பரவலாக மழை: வானிலை ஆய்வு மையம்...

 


அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘டவ்-தே (TAUKTAE)’’ புயல் சின்னம் காரணமாகத் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழையும், பரவலாக மழையும் பெய்யக்கூடும். கடலில் சூறாவளி 90 கி.மீ. வேகம் வரை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.


அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள டவ்-தே புயல் அதி தீவிரப் புயலாக வலுப்பெற உள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் பரவலாக மழையும், 3 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:


“நேற்று கச்சத்தீவு பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறி தற்போது மத்திய கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், அதனைத் தொடர்ந்து 12 மணி நேரத்தில் அதி தீவிரப் புயலாகவும் மாறக்கூடும்.


இதன் காரணமாக இன்று மே 15 இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள், தெற்கு உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தெற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.


மே 16 (நாளை) நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


மே 17 அன்று நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் (30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


மே 18 அன்று நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் சூறைக் காற்றுடன் (30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.


மே 19 அன்று நீலகிரி, தேனி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக் கூடும்.


சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு:


நீலகிரி 14 செ.மீ., பெரியாறு (தேனி) சோலையாறு (கோவை) தலா 10 செ.மீ., தக்கலை (கன்னியாகுமரி) 9 செ.மீ., பெருஞ்சாணி (கன்னியாகுமரி) தேக்கடி (தேனி) கன்னியாகுமரி தலா 8 செ.மீ., சுருளகோடு (கன்னியாகுமரி) குழித்துறை (கன்னியாகுமரி) பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) சின்னக்கல்லாறு (கோவை) தலா 7 செ.மீ., குளச்சல் (கன்னியாகுமரி) வால்பாறை தாலுகா (கோவை) மைலாடி (கன்னியாகுமரி) 6 செ.மீ., நாகர்கோவில் (கன்னியாகுமரி) 5 செ.மீ., பாபநாசம் (திருநெல்வேலி) பூதப்பாண்டி (கன்னியாகுமரி) குந்தா பாலம் (நீலகிரி) கொட்டாரம் (கன்னியாகுமரி) தலா 4 செ.மீ., நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பஜார், உதகமண்டலம் குன்னூர், எமரால்டு, மேல் பவானி, அவலாஞ்சி, கோத்தகிரி, நடுவட்டம், பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), இரணியல் (கன்னியாகுமரி), நாங்குனேரி (திருநெல்வேலி) உடுமலைப்பேட்டை (திருப்பூர்) பொள்ளாச்சி (கோவை) தலா 2 செ.மீ.


மீனவர்களுக்கான எச்சரிக்கை

மே 15 அன்று குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மத்திய கிழக்கு அரபிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதி, லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 75 முதல் 85 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 95 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மே 16 நாளை மத்திய கிழக்கு அரபிக்கடல், கேரள கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”.


இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘டவ்-தே (TAUKTAE)’’ புயல் சின்னம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


இதுகுறித்துப் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் வானிலை நிலவரம் குறித்து முதல்வர் ஸ்டாலின், வானிலை ஆய்வு மைய அதிகாரி, தலைமைச் செயலர், பேரிடர் மேலாண்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.


இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:


“தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (15-5-2021), தலைமைச் செயலகத்தில், அரபிக் கடலில் உருவாகியுள்ள ‘டவ்-தே’ புயல் சின்னம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தினார்.


இக்கூட்டத்தில் இந்திய வானிலை ஆய்வு மையம் இயக்குநர் பாலச்சந்திரன் கலந்துகொண்டு, புயல் சின்னம் குறித்த தற்போதைய நிலவரத்தையும், மழை பெய்யவிருக்கிற சாத்தியக் கூறுகளையும் எடுத்துக் கூறினார்.


அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை ஏற்படக்கூடிய மாவட்டங்களில், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.


மேலும், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் 14-5-2021 காலைக்குள் கரைக்கு திரும்புமாறு ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு முதல்வர், அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள 244 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுள், 162 மீன்பிடிப் படகுகள் தற்போது கரைக்குத் திரும்பியுள்ள நிலையில், எஞ்சிய படகுகளும் கரை திரும்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.


நிலச்சரிவு ஏற்படக்கூடிய மலை மாவட்டங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான உபகரணங்களைத் தயார் நிலையில் வைக்கவும் உரிய அறிவுரைகளை முதல்வர் வழங்கினார்.


மழையால் பாதிக்கப்படுகிறவர்களை முகாம்களில் தங்க வைக்கும்போது, கரோனா எச்சரிக்கைகளை மேற்கொள்ளுமாறும், முழு வீச்சில் வருவாய்த் துறையினர் கண்காணிப்புப் பணிகளைச் செய்யுமாறும், அணைகளின் நீர்மட்டங்களைக் கண்காணித்து வரும்படியும் முதல்வர் கோரினார்.


தேசிய பேரிடர் மீட்புப் படையின் நான்கு குழுக்களும் மதுரை (2), கோயம்புத்தூர் (1) மற்றும் நீலகிரி (1) மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் குழுக்களும் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு ஏற்படக்கூடிய மாவட்டங்களில் அக்குழுக்களைக் கொண்டு உடனடியாக நிவாரணப் பணிகளை துரிதமாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.


இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, நிதித்துறைச் செயலர் கிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திர ரெட்டி, பொதுத் துறைச் செயலாளர் ஜகந்நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்''.


இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...