ஆசிரியருக்கு அனுபவ அறிவு தேவையில்லை ; பாடங்களை மனப்பாடம் செய்து நினைவில் கொள்ளும் திறமை மட்டுமே போதும் என்பதுதான் தகுதியா?
TET தேர்வே தேவையில்லை. அந்தந்த ஆண்டு என்ன நடைமுறையோ அதை பின்பற்றிதான் பணிநியமனம் நடைபெற்றுள்ளது.
1.4.2003 இல் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டம் கிடையாது. தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பினைப் பின்பற்றி அதற்கு முன் பணிநியமனம் பெற்ற அனைவருக்கும் பென்சன் இல்லை என்று சொல்ல முடியுமா?
அல்லது 2012 க்கு பிறகு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் சம்பளம் அதற்கு முன்ன நியமனம் பெற்ற ஆசிரியர்களின் ஊதியத்தை விட மிக மிகக் குறைவு.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற அவர்களின் கருத்திற்கு செவி சாய்க்கலாமே.
இப்போது TET தேர்வில் வெற்றி பெற்று பணிநியமனத் தேர்விலும் வெற்றி பெற்றால் பணி நியமனம். அதற்காக 2012 ஆம் ஆண்டில் TET தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்று பணியில் உள்ளோரை பணிநியமனத் தேர்விலும் நீங்கள் வெற்றி பெற வேண்டும், இல்லை என்றால் வெளியேறுங்கள் என்று கூறினால் அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா ?
NEET தேர்வில் வெற்றி பெற்றால் தான் இப்போது மருத்துவர் ஆக முடியும். அதற்காக முன்னர் நியமனம் பெற்ற அனைத்து மருத்துவர்களையும் நீட் தேர்வு எழுதுங்கள் அல்லது வெளியேறுங்கள் என்று கூற முடியுமா?
அனைத்தையும் தேதி மட்டுமே முடிவு செய்கிறது.
ஒருவேளை இன்று தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 25 ஆண்டு காலம் பணிக்காலத்தை முடித்த பிறகு,
அன்றைய சூழலில் அதாவது 2050, 60களில் பணி நியமனத்திற்கான தேர்வினை எழுதினால் வேலையில் இருக்கலாம் இல்லையெனில் வீட்டுக்கு போகலாம் என்று சூழல் வருமானால் என்ன செய்வது?
இங்கு தகுதி என்பது எது?
வெறும் நினைவாற்றல் செய்யும் திறனை மாணவர்களுக்கு வளர்க்க வேண்டாம் என்று கூறிவிட்டு ஆசிரியர்களுக்கு மட்டும் அதனை கட்டாயப்படுத்துவது, எந்த வகையில் நியாயம்.
தன்னை அப்டேட் செய்து கொள்ளுதல் என்பது இன்றைய சூழலில் பாடப் பொருள்களை நினைவில் வைத்துக் கொள்வது அல்ல.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தனக்கு வழங்கப்பட்ட பாடப் பொருளை மாணவர்களுக்கு எளிதாக வழங்கிடும் வகையில் தங்களை தயார் செய்து கொள்வது மட்டுமே.
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு வினாத்தாளை குறைந்த நேரத்தில் தயார் செய்ய ஒரு ஆசிரியர் தன்னை தகுதிப்படுத்திக் கொள்வது மட்டுமே அப்டேட் செய்து கொள்வது.
எம்.எஸ்.சி., பி.எட்., அறிவியலில் பட்டம் பெற்ற ஒரு இடைநிலை ஆசிரியர் ஒன்றாம் வகுப்பில் பணிபுரிந்து வருகிறார் என கொண்டால், TET தேர்வில் கேட்கப்படும் வினாக்களுக்கு தனது நினைவாற்றலைக் கொண்டு அவர் பதில் அளித்து தகுதித் தேர்வில் வெற்றி பெறுவது,
அந்த ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு வழங்கப் போகும் பலன் என்ன?
இது அவருடைய தகுதியை எந்த வகையில் உயர்த்தி விட இயலும்.
மாறாக கற்பித்தல் முறை பாடப்பொருள் வகுப்பறை சூழல் ஆகியவற்றில் பல்வேறு மாற்றங்கள் அவ்வபோது ஏற்பட்டாலும் அவர்களுக்கு உரிய பயிற்சி சிறப்பாக வழங்கி இன்று வரை ஆசிரியர்களை பட்டை தீட்டிய வைரங்களாகவே பாதுகாத்து பராமரித்து வருகிறது தமிழ்நாடு அரசு என்பதை நாம் எவ்விதம் தெரிவிப்பது? உண்மையில் இன்று வரை ஆசிரியர்கள் அனைவரும் Update செய்யப்பட்டு உள்ளார்கள் என்பதை எப்படி சமூகத்திற்கு எடுத்துரைப்பது?
எனக்குத் தெரிந்து 50 வருடங்களாக ஒரே பாடத்திட்டம் தான் இருந்து வருகிறது பாடத்திட்டங்களில் எந்த விதமான மாற்றங்களும் இருப்பதாக நமக்கு தெரியவில்லை.
தற்சமயம் பி எஸ் சி பி எட் முடித்த ஆசிரியர் ஒருவர் அறிவியலிலோ கணிதத்திலோ பட்டம் பெற்றிருந்தாலும், 15 ஆண்டுகளாக அவர் பாடம் நடத்தி வருவது மூன்றாம் வகுப்பு நான்காம் வகுப்புக்கு மட்டும் தான் என்ற நிலையில்
தனது படிப்பிற்குரிய பாடங்களில் இந்த இரண்டு வருடங்களில் அவர் நினைவு கூர்ந்து தேர்வுகளில் வெற்றி பெற்று விடுவாரா.?.
தகுதி தேர்வுகள் என்பவை நடைமுறையில் மிகவும் கடினமானவையாகவே உள்ளன. ஆசிரியர்களின் அறிவாற்றலை சோதிப்பதாக அமைந்திருக்கவில்லை. மாறாக வினாத்தாள் எடுப்பவரின் அல்லது தயார் செய்பவரின் அறிவை பறைசாற்றுவதாகவே உள்ளது ஆகவே தான் இது போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுகின்ற வாய்ப்பினை இளம் வயதில் தேர்வுகளை சந்திப்பவர்கள் கூட வெற்றி பெற முடியாமல் தவிக்கின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை.
மேலும் இது போன்ற தகுதித் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றத் தொடங்கிய காலம் தொட்டு இன்று வரை மாணவர்களின் கல்வித்தரம் உயர்ந்துள்ளதா குறைந்துள்ளதா என்பதை பற்றிய புள்ளி விவரங்கள் தெரிவிப்பன யாது.?
தொடக்க நிலையில் எழுத படிக்கத் தெரியாத மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது ,
இது போன்ற தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை நியமனம் செய்த பிறகு அதிகமாகி உள்ளதா குறைந்துள்ளதா?
ஆகியவைகளை சீராய்வு செய்ய வேண்டிய கால கட்டங்களும் இவையே.
இந்த ஒரு தேர்வினை இன்று எழுதி விட்டால் இனி வரும் 30 ஆண்டுகால பணிக்காலத்தில் அவர் தகுதியானவர் என்று உறுதி செய்து விட முடியுமா?
என்ன விதமான நம்பிக்கைகள் இவை.
இந்தத் தேர்வு எழுதி வெற்றி பெறாதவர்கள் வீட்டிற்கு செல்லலாம் என்பது ஒரு தலைமுறை ஆசிரியர் சமுதாயத்தின் சேவையை மிகவும் இழிவுபடுத்தும் செயலாகவே பார்க்கிறேன்.
எம்எஸ்சி பிஎட் பட்டம் பெற்ற ஒரு நபர் இன்று தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவோ/ நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகவோ/ உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகவோ செயல்பட்டு வருகிறார் என்றால் அவர்களிடம் எல்லா பாடங்களையும் பற்றிய நினைவு திறன்கள் குறைந்து,
அன்றாடம் பள்ளியில் நடைபெறும் நிர்வாக நடவடிக்கைகளுக்கு தீர்வு காணும் அனுபவ செயல்பாடுகளே அதிகமாக இருக்கும். அவ்வப்போது தமிழக அரசு தெரிவித்து வரும் திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிகழ்வுகளை தயார் செய்வது,
செயல்படுத்துவது, ஒருங்கிணைப்பது, விளைவுகளை உறுதிப்படுத்துவது
ஆகிய நடவடிக்கைகளில் இவர்களுக்கு திறன் அதிகம் இருக்கும்.
இது போன்ற சூழலில்
இவர்களுக்கு தேர்வுகள் வைத்து தகுதியை நிர்ணயம் செய்வது என்பது,
அனுபவம் மிக்க ஆசிரியர்களை களத்தில் இருந்து வெளியேற்றும் செயலாகவே இருக்கும்.
ஒரு பணி நியமனத்திற்கான நடைமுறை என்பது ஒவ்வொரு காலகட்டங்களிலும் வெவ்வேறாகவே இருந்து வந்துள்ளன.
இனிவரும் காலங்களிலும் வெவ்வேறு ஆகவே இருக்கும் இவைகளில் மாற்றுக்கருத்து இல்லை.
70களில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் ஆசிரியர்கள்,
எண்பதுகளில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் உடனடியாக ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டனர்.
90களில் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் நடத்தப்படும் பாடத்திட்டங்களில் வெற்றி பெற்று வழங்கப்படும் பட்டயங்கள் பெற்றவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.
அதற்குப் பிறகு 95 முதல் முறையாக ஆசிரியர் நியமனத்திற்கு தேர்வு என்று நடைமுறை பின்பற்றப்பட்டது.
அடுத்து வந்த திமுக அரசு பணி நியமனத்திற்கு மாவட்ட வேலை வாய்ப்புகள் முன்னுரிமையை அடிப்படையாகக் கொண்டு பெருவாரியான ஆசிரியர்களை சமூகத்திற்கு வழங்கியது.
அதற்குப் பிறகு மாநில முன்னுரிமை படி நியமனங்கள் நடைபெற்றன.
அதற்குப் பிறகு 2012 முதல் TET என்ற தேர்வு நடைமுறைக்கு வந்தது.
அதற்குப் பிறகு டெட் மட்டும் போதாது அதற்குப் பிறகு ஒரு நியமன தேர்வு அவசியம் தேவை என்ற நிலைக்கு வந்தது.
இப்படி அந்தந்த கால நடைமுறைகள் நடைமுறைகள் ,
அதனை அடுத்து வரும் நாள்களுக்கு உரியவையாக இருக்க வேண்டும் ஏனெனில் மாற்றம் ஒன்றே மாறாதது.
கல்வித்துறைக்கு மட்டுமல்ல எந்தத் துறைக்கும்,
முன் தேதியிட்டு அந்த நடைமுறைகளை 30 ஆண்டுக்கு முன்னர் உள்ளவர்களுக்கும் பொருத்தம் என கருதும் போக்கு நிலைப்பட்டு விட்டால், என்ன மாதிரியான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும் என்பதை காலமே நின்று நிலைத்து பதில் சொல்லும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.