கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>"லேப்டாப்' மட்டும் ஏன் இல்லை:சுயநிதி பள்ளி மாணவர்கள் ஆதங்கம்

தமிழக அரசின் அனைத்து விலையில்லா பொருட்களும் சுயநிதி பிரிவு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்து வந்த நிலையில் "லேப்டாப்' மட்டும் தற்போது மறுக்கப்படுகிறது. இது, பாதிக்கப்பட்ட மாணவர்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.மாணவர்கள் நலன் கருதி அரசு சார்பில் புத்தகம், சீருடை, சைக்கிள் என 13 வகையான விலையில்லா பொருட்கள் அறிவிக்கப்பட்டு, ஒவ்வொன்றாக வழங்கப்படுகிறது. தற்போது, விலையில்லா "லேப்டாப்'கள் கொடுக்கப்படுகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுயநிதி பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு "லேப்டாப்' வழங்குவது குறித்து எவ்வித உத்தரவும் அரசு சார்பில் வெளியிடவில்லை. "அரசின் விலையில்லா திட்டங்கள் பட்டியலில் உள்ள சைக்கிள், சீருடை, புத்தகங்கள் உள்ளிட்டவை பெற்ற எங்களுக்கு "லேப்டாப்'கள் மட்டும் பெறுவதற்கு தகுதி இல்லையா. பிளஸ் 2வில் அரசு மற்றும் உதவி பெறும் கலை பிரிவு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு வழங்கும்போது, சுயநிதி பிரிவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்தவர்களுக்கு கூட லேப்டாப் இல்லையா?' என்று சுயநிதி பள்ளி மாணவர்கள் ஆதங்கத்தில் உள்ளனர்.

>>>இரண்டாம் பருவ பாடப்புத்தகத்துக்கு தட்டுப்பாடு:தனியார், மெட்ரிக் பள்ளிகளில் தவிப்பு

சமச்சீர் கல்வியில் இரண்டாம் பருவத்துக்கான வகுப்புகள் துவங்கி, ஒரு மாதம் ஆகும் நிலையில், தனியார் பள்ளிகளில் இன்னும் பாடப்புத்தகங்கள் வழங்கப்படவில்லை. ஒவ்வொரு பருவத்துக்கும் பாடப்புத்தகம் வழங்குவதில் ஏற்படும் தாமதம், பெற்றோரை அதிருப்தியடைய செய்துள்ளது. தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வியில் முப்பருவக்கல்வி முறை மற்றும் தொடர் மதிப்பீட்டு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பாடப்புத்தகம் மூன்று பருவத்துக்கு பிரிக்கப்பட்டு, தனித்தனியே தயாரிக்கப்பட்டது.அரசுப்பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கும் இலவச பாடப்புத்தகங்களுக்கு முன்னுரிமை வழங்கி, பள்ளி வகுப்பு துவங்கும் போதே வழங்கப்பட்டுவிடுகிறது. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் முதல்பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்க, ஒரு மாதத்துக்கு மேல் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், முதல்பருவத்துக்கான தேர்வுகள் முடிந்து, இரண்டாம் பருவத்துக்கான வகுப்புகள், அக்டோபர் 4ம் தேதி முதல் துவங்கியது. அரசு பள்ளிகளில் இரண்டாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட நிலையில், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில், இதுவரையும் வழங்கப்படவில்லை. புத்தகங்கள் இல்லாமலேயே பாடம் நடத்தப்படுவதால், மாணவர்கள் வீட்டில், "ரிவிஷன்' செய்யவோ, ஹோம்வொர்க் செய்யவோ கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
தனியார் பள்ளி நிர்வாகத்தினர் கூறியதாவது:தமிழ் வழி பாடநூல்களை தேவையான அளவுக்கு முன்கூட்டியே உற்பத்தி செய்யும் தமிழக அரசு, ஆங்கில வழிக்கல்விக்கான புத்தகங்களை உற்பத்தி செய்வதில் தாமதம் காட்டுகிறது. சமச்சீர் புத்தகத்துக்காக பல முறை அலையவேண்டியுள்ளது. ஒரு சில பாடப்புத்தகங்கள் "ஸ்டாக்' இல்லை என்பதால், மற்ற மாணவர்களுக்கும் புத்தகங்களை வழங்க முடியாத நிலை உள்ளது.சரியான ரெஸ்பான்ஸ் இல்லாததாலேயே பல பள்ளிகள் தனியார் பாடப்புத்தகங்களை வாங்கி கொடுத்துவிடுகின்றனர். சமச்சீர் கல்வி புத்தகங்கள் தரமானதாகவே இருப்பதால், அதை வாங்கி கொடுக்கலாம் என நினைக்கும் பள்ளிகள் சிக்கலில் மாட்டிக்கொள்கின்றன. தனியார் பள்ளிகளுக்கும் உரிய காலகட்டத்துக்குள் புத்தகங்களை வழங்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

>>>தமிழகத்தில் அரசு பஸ்களில் கூரியர் சேவை விரைவில் துவக்கம்

 
தமிழக அரசு, விரைவு போக்குவரத்துக் கழகத்தின் வருவாயை அதிகரிக்கும் வகையில், தனியார் மூலம் கூரியர் சேவை துவக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களின் எண்ணிக்கை, 905ல் இருந்து, 1,761 ஆக அதிகரித்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களில், ஒரு நகரத்தில் இருந்து, மற்றொரு நகருக்கு அனுப்படும் கவர்களுக்கு, டிரைவர், கண்டக்டர்களே குறிப்பிட்ட தொகையை வசூல் செய்து வந்தனர். அது மட்டுமின்றி, பஸ்களில் அனுப்பப்படும் பூக்கள் உள்ளிட்ட, பார்சலுக்கும் லக்கேஜ் கட்டணம் வசூல் செய்து வந்தனர்.அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் வருவாயை அதிகரிக்கும் வகையில், பஸ்களில் பார்சல், கூரியர் தபால் அனுப்பவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமையை, வி.ஸ்பீடு லாகிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. இதற்காக, அந்த நிறுவனம், விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு குறிப்பிட்ட தொகையை டிபாசிட்டாக செலுத்தி உள்ளது. அது மட்டுமின்றி, பஸ்களில் அனுப்பப்படும் பார்சலின் எண்ணிக்கைக்கு ஏற்ப, குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் அந்நிறுவனம் விரைவு போக்குவரத்துக் கழகத்துக்கு செலுத்தும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போது, வி.ஸ்பீடு லாகிஸ்டிக்ஸ் பிரைவேட் லிமிடெட், சேலம், சென்னை கோயம்பேடு, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய நகர, பஸ் நிலையங்களில் செயல்படும், அரசு விரைவு போக்குவரத்துக் கழக, டிக்கெட் புக்கிங் சென்டர்களின் அருகில், கூரியர் புக்கிங் சென்டர்களை அமைத்து வருகிறது.கூரியர் தபால்களை விரைந்து சப்ளை செய்யும் வகையில், அனைத்து நகரங்களிலும் தலைமை அலுவலகத்தை துவக்கி உள்ளது.

இது குறித்து கூரியர் நிறுவன மண்டல மேலாளர் ஒருவர் கூறியதாவது:அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் மூலம், கூரியர் சேவையை துவக்கி உள்ளோம். ஒரு நகரத்தில் இருந்து, மற்றொரு நகரத்துக்கு அனுப்பப்படும் பார்சல்கள் அனைத்தும், பஸ் நிலையங்களிலேயே இறக்கப்படும்.அதன் பின், அந்த பார்சல்களை மற்றொரு வாகனத்தின் மூலம், எங்கள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று பட்டுவாடா செய்வோம்.எங்கள் நிறுவனத்தை பொறுத்த வரை, காலையில் புக்கிங் செய்தால், அன்று மாலையிலேயே பார்சல்கள் கொண்டு சேர்க்கப்படும் வகையில், தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.இந்நிறுவனத்தில் பார்சலுக்கான கட்டணம் பிற நிறுவனங்களை விட, 40 முதல், 50 சதவீதம் வரை குறைவாகவே உள்ளது.இவ்வாறு மண்டல மேலாளர் கூறினார்.

விரைவு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் ஒருவர் கூறியதாவது:விரைவு போக்குவரத்துக் கழகத்தின் வருவாயை அதிகரிக்க, பார்சல், கூரியர் சேவை துவக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், பயணிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில், அனைத்து பார்சல்களும் பஸ்சின் மேல்பகுதியிலும், வண்டியின் பின்புறம் உள்ள டிக்கியில் மட்டுமே ஏற்ற வேண்டும், என்ற நிபந்தனையுடன் தான், பார்சல் சேவையை அனுமதித்துள்ளோம்.இவ்வாறு கிளை மேலாளர் கூறினார்.

இந்த சேவையால் பஸ்களில் பார்சல்களை ஏற்றுவது, இறக்குவது போன்ற பணிகளால், காலதாமதம் ஏற்படும். அதனால், பயண நேரம் அதிகரிக்கும் என்றும், குறிப்பிட்ட நேரத்தில் பயணிகளை கொண்டு சேர்க்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

>>>தமிழகத்தில் காற்றாலைகளின் இயக்கம்

 
தமிழகத்தின் தலையாய பிரச்னை மின் வெட்டு. தற்போது, தமிழகத்துக்கு, தினமும், 12 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவை. ஆனால், 7,500 மெகாவாட் மின்சாரமே உற்பத்தியாகிறது. 4,500 மெகாவாட் மின் பற்றாக்குறை, தமிழகத்தை ஆட்டி படைக்கிறது. தமிழக மின்வாரிய அதிகாரிகளின் கெடுபிடியால், பல காற்றாலைகளின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை, தேவையற்ற சேவை வரி, நடைமுறை சிக்கல்களை நீக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்காததால், காற்றாலை உரிமையாளர்கள், பிற மாநிலங்களுக்கு படையெடுக்க துவங்கி உள்ளனர்.
காற்றாலை மின் உற்பத்தி குறைவு:
தமிழகத்தில், தற்போது நிறுவப்பட்டுள்ள காற்றாலைகள் மூலம், 7,040 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், சாதாரண நாட்களில், காற்றாலைகள் மூலம், தினமும், 3,000 முதல், 3,500 மெகாவாட் வரை, மின்சாரம் உற்பத்தியாகிறது. கடந்த ஆண்டு, அதிகபட்சமாக ஒருநாளில், 4,059 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. தற்போது காற்று வீசும் காலம் முடியும் தருவாய். எனவே, காற்றாலை மூலம்,1,000 மெகாவாட் அல்லது அதற்கும் குறைவாகவே மின்சாரம் உற்பத்தியாகிறது. இது தான் மின் தட்டுப்பாடுக்கு முக்கிய காரணம். மொத்தம், 7,040 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, காற்றாலைகளை நிறுவியிருந்தும், தினமும், 3,000 முதல், 3,500 மெகாவாட் மின்சாரம் வரை மட்டுமே உற்பத்தியாவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
காரணம் இது தான்:
காற்றாலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என, இத்தொழிலில், தனியார் ஆர்வமாக இறங்கினர். எனினும், ஒரு காற்றாலைக்கு, 1.25 கோடி ரூபாய் முதல், 13 கோடி ரூபாய் வரை, முதலீடு செய்து, அதை நிறுவ அனுமதி பெறுவதில் சிக்கல், தயாரித்து கொடுக்கும் மின்சாரத்துக்கு, மின் வாரியத்திலிருந்து பணம் கிடைப்பதில் இழுத்தடிப்பு போன்றவை, மின் உற்பத்தியாளர்களை கலங்கடித்தது. இதனால், காற்றாலைகளை நிறுவிய பலர், அவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைத்துள்ளனர்.

இதுகுறித்து, காற்றாலை முதலீட்டாளர்கள் கூறியதாவது: பல கோடி ரூபாய் முதலீடு செய்து, அரசுக்கு, மின்சாரம் வழங்குகிறோம். ஆனால், அதற்கான தொகை சரியாக கிடைப்பதில்லை. அத்தோடு, சேவை வரி, அதிகாரிகள் கெடுபிடி என்று ஏகப்பட்ட பிரச்னைகள். நாங்கள் மீண்டும் தொழிலில் இறங்க, இப்பிரச்னைகள் நீங்க வேண்டும். இல்லாவிடில், போனது வரை நஷ்டம் என்று ஒதுங்கிவிடுவோம்.காற்று வீசும் காலம் முடிந்தாலும், லேசாக அடிக்கும் காற்றை வைத்தே, மின்சாரம் தயாரிக்கும், நவீன காற்றாலைகள் சந்தைக்கு வந்துள்ளன. ஆனால், அதிகாரிகளின் கெடுபிடியால், அந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் ஆர்வமில்லை. நவீன காற்றாலைகளை நிறுவினால், மின் பிரச்னையை சமாளிக்கும் அளவுக்கு, மின்சாரம் உற்பத்தி செய்யலாம்.இவ்வாறு முதலீட்டாளர்கள் கூறினர்.

இந்திய காற்றாலை சங்கத்தின் தேசிய தலைவர் கஸ்தூரி ரெங்கையன் கூறியதாவது:தமிழகத்தில், கடந்த ஆண்டு மட்டும், 1,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, காற்றாலை நிறுவப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு, இதுவரை, 150 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க மட்டுமே காற்றாலை நிறுவப்பட்டுள்ளது. மின்சாரத்துக்கு, தமிழக அரசு கொடுக்கும் விலை கட்டுப்படியாகவில்லை; எனவே, இதில் முதலீடு செய்ய, பலருக்கும் ஆர்வம் இல்லை.
மஹாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், மற்றும் ஆந்திரா மாநிலத்தில், காற்றாலை மின்சாரத்துக்கு, ஒரு யூனிட்டுக்கு, 4.30 ரூபாய் முதல், 5.50 ரூபாய்க்கு மேல் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சராசரியாக, ஒரு யூனிட்டுக்கு, 3.05 ரூபாய் மட்டுமே கிடைக்கிறது. அதிலும், "பூல்டு' விலையில் கொடுப்பவர்களுக்கு, 2.54 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே, பிற மாநிலங்களில், காற்றாலைகளை நிறுவ முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்தியா முழுவதும், காற்றாலை மூலம், 17 ஆயிரத்து, 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. அதில், தமிழகத்தில் அதிகபட்சமாக, 7,040 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய, காற்றாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.உற்பத்தி செலவுக்கு ஏற்ற விலை, தேவையற்ற சேவை வரி, நடைமுறையில் உள்ள சிக்கல்களை நீக்க, அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே,காற்றாலை உற்பத்தியாளர்கள் கவனம், மீண்டும் தமிழகம் பக்கம் திரும்பும்.இவ்வாறு ரெங்கையன் கூறினார்.
தமிழகத்தில் என்ன விலை?:
காற்றாலை மின்சாரத்துக்கு, தமிழக அரசு ஒரு யூனிட்டுக்கு, 2.54 ரூபாய் முதல், 3.51 ரூபாய் வரை கொடுக்கிறது. அதையும், முறையாக மாதம்தோறும்கொடுப்பதில்லை. 2011, ஜூலையில் கொடுத்த மின்சாரத்துக்கு, தற்போது தான், தமிழக மின் வாரியம் பணம் தரத் துவங்கி உள்ளது.
இரண்டு ஆண்டுகளாக, காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு, மின் வாரியம் சரியாக பணம் தராததே, மின் தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.கடந்த, 2006க்கு முன் நிறுவப்பட்ட காற்றாலைகளுக்கு, ஒரு யூனிட்டுக்கு, 2.75 ரூபாயும், 2009க்கு பின் நிறுவப்பட்ட காற்றாலைகளுக்கு, யூனிட்டுக்கு, 2.90 ரூபாயும், 2012 மார்ச்சுக்கு பின் நிறுவப்பட்ட காற்றாலைக்கு, யூனிட்டுக்கு, 3.39 ரூபாயும், இனிமேல் நிறுவப்படும் காற்றாலைக்கு, ஒரு யூனிட்டுக்கு, 3.51 ரூபாயும் வழங்க, மின் வாரிய தீர்ப்பாயம், விலை நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், காற்றாலை மூலம், ஒரு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய, 4.45 ரூபாய் செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உதிரி பாகம் நிறுவனங்கள் முடக்கம்:
இந்தியாவில் நிறுவப்படும் காற்றாலைகளில், 60 சதவீதம், திருச்சியில் தான் தயாரிக்கப்படுகிறது. காற்றாலை தயாரிப்பின் முக்கிய மையமாக திருச்சி திகழ்கிறது. சுஸ்லான், கணேசா, வின்விண்ட், லீப்நெஸ், ரெஸின் உள்ளிட்ட, 18 காற்றாலை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, தமிழகத்தில் செயல்படுகின்றன. இந்தியா முழுவதும் உள்ள காற்றாலை நிறுவனங்களுக்கு, திருச்சி மாவட்டம், துவாக்குடி பகுதியில் உள்ள, தொழிற்சாலைகளிலிருந்துதான், உதிரி பாகங்கள் சப்ளையாகிறது.காற்றாலை தொழில் பாதிக்கப்பட்டுள்ளதால், உதிரி பாகம் நிறுவனங்கள் ஒரு ஆண்டாக முடங்கியுள்ளன. இத்தொழிலில் ஈடுபட்டுள்ள, 10 ஆயிரம் தொழிலாளர்கள், மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், வங்கிக் கடன், கடனுக்கான வட்டி, தொழிலாளர்களின் சம்பளம் ஆகியவற்றை கொடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இப்பிரச்னையை போக்க, தமிழக அரசு, காற்றாலை மின்சார உற்பத்தியில் இறங்க வேண்டும் என்று, உதிரி பாக தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் விரும்புகின்றனர்.

திருச்சி துவாக்குடி அருகே காற்றாலை தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருபவர் கூறுகையில், "" கடந்த ஒரு ஆண்டாக, காற்றாலை உதிரி பாக விற்பனை அறவே இல்லை. ஏற்கனவே ஆர்டர் கொடுத்தவர்கள் கூட, காற்றாலை தொழிலில் உள்ள பிரச்னையால், அவற்றை வாங்க வரவில்லை. இதனால் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டு, நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இடத்தின் விலை உயர்வும் காற்றாலை தொழில் பின்னடைவுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது,'' என்றார்.

>>>நியூட்ரினோ ஆய்வகம் பொட்டிபுரம் மக்களின் தேவை என்ன?

நியூட்ரினோ ஆய்வகம் அமைய உள்ள, தேனி மாவட்டம் தேவாரம் பொட்டிபுரம் ஊராட்சியிலும், சுற்றுப்பகுதிகளிலும் செய்ய வேண்டிய அடிப்படைகட்டமைப்பு பணிகள் ஏராளம் உள்ளன. "நியூட்ரினோ' துகள் குறித்த ஆராய்ச்சி, இந்திய இயற்பியல் துறையை, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும். 1,320 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மத்திய அரசின் நிதி உதவியுடன், நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே அம்பரப்பர் மலையில், 2027 மீ., ஆழத்தில் பாதாள சுரங்கம் அமைத்து, உலகின் மிகப்பெரிய மின்காந்தம்(50 டன்) அமைக்கப்படவுள்ளது. நியூட்ரினோ "டிடக்டராக' இந்த மின்காந்தம் செயல்படும்.உலகின் பல பகுதிகளில் நியூட்ரினோ குறித்த ஆராய்ச்சி தீவிரமாக நடைபெறுகிறது. சூரியனின் உள் வட்டம் குறித்த விபரங்கள் அறிய நியூட்ரினோ ஆராய்ச்சி முடிவுகள் அவசியம். இதற்காக அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, கனடா உள்ளிட்ட நாடுகளில் அமைந்துள்ள நியூட்ரினோ ஆய்வத்தில் நூற்றுக்கணக்கான இயற்பியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நியூட்ரினோ என்றால் என்ன?:
"நியூட்ரினோ' எளிதில் அடையாளம் காண முடியாத, அணுவை விட சிறிய துகள். பெருவெடிப்பு ஏற்பட்டு, பால்வெளி வீதி (கேலக்சி) உருவான போதே நியூட்ரினோ உற்பத்தி துவங்கியது. பால்வெளியில் நட்சத்திர கூட்டங்கள் மோதும் போதும், நட்சத்திரங்கள் வெடித்து சிதறும் போதும், நியூட்ரினோ உருவாகிறது. சூரியனில் எரிசக்தி உருவாக்கத்தின் போதும், நியூட்ரினோ வெளிப்படுகிறது (சோலார் நியூட்ரினோ). ஒளியை விட கூடுதல் வேகத்தில் பயணிக்கும், நியூட்ரினோ துகள்கள் பால்வெளியிலிருந்து பூமி பரப்பை எட்டும் வரை, எந்த சிதைவும் இல்லாமல் வந்தடைகிறது. உதாரணமாக சனி கிரகத்தில், எப்போதும் ஏற்பட்டு கொண்டிருக் கும் மின்காந்த புயலில் கூட, நியூட்ரினோ துகள் பாதிப்படைவதில்லை. நியூட்ரினோக்கள் எலக்ட்ரானை போன்ற பண்புடை யது. எடையற்ற, மின் அதிர்வை ஏற்படுத்தாத நியூட்ரினோ துகள்கள், மனிதனின் உடலில், ஒரு நொடிக்கு 50டிரில்லியன் என்ற எண்ணிக்கையில் ஊடுருவுகின்றன. பூமி உருவான அடிப்படை மூலக்கூறுகளில் நியூட்ரினோவும் அடங்கியுள்ளது.
ஆராய்ச்சி எதற்காக:
நியூட்ரினோ ஆய்வு என்பது அணு துகள்கள் பற்றிய ஆய்வின் ஒரு பகுதி. பிரபஞ்சம் உருவான ரகசியத்தை அறிவதற்கான அடிப்படை ஆராய்ச்சி. சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களை முன்கூட்டியே அறிய உதவும், என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். ஏற்கனவே, உலகளவில் அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, கனடா போன்ற நாடுகளில் நியூட்ரினோ ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
பங்கேற்பவர்கள்:
ஐ.ஐ.டி., மும்பை, ஐ.ஐ.டி., கவுகாத்தி, அலிகார் யுனிவர்சிட்டி, தி இன்ஸ்டிடியூட் ஆப் மேத்தமெடிக்கல் சயின்ஸ், சென்னை, இந்திராகாந்தி சென்டர் பார் அட்டாமிக் ரிசர்ச், கல்பாக்கம், மும்பை டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச், டெல்லி யுனிவர்சிட்டி, ஜம்மு, காஷ்மீர் யுனிவர்சிட்டி உட்பட 24 நிறுவனங்கள், இந்த ஆராய்ச்சியில் பங்கேற்க உள்ளன. 100 இந்திய இயற்பியல் வல்லுநர்கள், மற்றும் ஹவாய் யுனிவர்சிட்டி ஆகியோர் இணைந்து ஆராய்ச்சியில் ஈடு பட உள்ளனர். செலவு முழுவதும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

அம்பரப்பர் மலை தேர்வு ஏன்:
தேனி மாவட்டம், தேவாரம் அருகே அம்பரப்பர் மலையை குடைந்து, பாதாள அறையில் நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ளது. நியூட்ரினோ துகள்களுடன் இணைந்து பயணிக்கும் "காஸ்மிக்' கதிர்களை வடிகட்ட, கடினமான ஒற்றை கல்லால் ஆன பாறை தேவை. 2027மீ., கடினமான, அடுக்குகளற்ற, ஒற்றை பாறையாக அம்பரப்பர் மலை உள்ளது. மலையின் அடியில் ஆய்வகம் அமையும் போது, இடையூறு இல்லாமல் நியூட்ரினோ துகள்கள் "டிடக்டரை' வந்தடைய வாய்ப்புள்ளது. எனவே, இந்த மலையை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். 
 
சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலா?:
பாதாள சுரங்கத்தில், 50 டன் எடையுள்ள மின்காந்தம் பொருத்தப்படவுள்ளது. சுரங்கம் தோண்ட, பாறையை வெடி வைத்து உடைக்கும் போதோ, வேறு தொழில் நுட்பத்தில் பாறையை உடைக்கும் போதோ ஏற்படும் அதிர்வாலும், பாறை தூசிகளாலும் அருகிலுள்ள விவசாய நிலங்கள், குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் சுற்றுப்புற கிராம மக்களிடம் உள்ளது. இது குறித்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் உண்டு. நவீன தொழில்நுட்பத்தில் பாறையை குடைந்து பாதாள சுரங்கம் அமைக்கப்படும் என்று, டாடா கன்சல்டன்சி ஆப் பண்டமென்டல் ரிசர்ச் விஞ்ஞானி கே.மண்டல், பொட்டிபுரம் கிராமத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவித்தார். இந்த முறையில் தூசி வெளியில் பறக்காத வண்ணம் வலைகள் சுற்றி கட்டப்படும். வெட்டி எடுக்கப்படும் பாறைகள் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் என்றார்.
மக்களின் தேவை என்ன?:
ஆய்வகம் அமைய உள்ள பொட்டிபுரம் ஊராட்சி முழுவதும், விவசாயம் சார்ந்த பகுதி. இரண்டாயிரம் மக்கள் தொகை கொண்டது. ஆய்வக கட்டுமானப்பணிகளுக்கு, நிலத்தடி நீரை அதிகமாக பயன்படுத்தப்படும் போது, இங்குள்ள இறவை பாசன கிணறுகளில் நீர் பாதிக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சப்படுகின்றனர்.நிலத்தடி நீர்மட்டத்தை பாதுகாக்க, இங்குள்ள வனப்பகுதிகளில் தடுப்பணைகள் அமைக்க வேண்டும். பல்லிளிச்சான்பாறை கீழ் பகுதியில், சிறு அணை கட்டி மழை நீரை தேக்க வேண்டும். பொட்டிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.புதுக்கோட்டை, புதூர், பொட்டிபுரம், சின்னபொட்டிபுரம், குப்பனாசாரிப்பட்டி கிராமங்களில் உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிதியை பயன்படுத்தி, தடையில்லா கூட்டு குடிநீர் திட்டம், கழிவு நீரோடை வசதிகளை செய்ய வேண்டும். அவசர சிகிச்சைக்கு உத்திரவாதம் அளிக்க குப்பனாசாரிபட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி, 24 மணி நேரம் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். கிராம மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, சிறு தொழில், கால்நடை வளர்ப்பு,விவசாய பொருட்களை சந்தைப்படுத்தும் வசதியை ஏற்படுத்த வேண்டும். ஆய்வகத்தில் இருந்து நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு,தேசிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.ஆய்வகம் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள்:ஆராய்ச்சி நோக்கத்திற்காக நியூட்ரினோ ஆய்வகம் அமையவுள்ளது. ஆராய்ச்சி மாணவர்கள் ஏராளமானோர், இப்போதே, ஆய்வக கட்டுமானம் துவங்கும் முன்பே வந்து பார்த்து செல்கின்றனர். கல்வி, சுற்றுலா மேம்பட வாய்ப்புள்ளது. வெளிமாநில, வெளிநாட்டு ஆராய்ச்சி மாணவர்கள் வருகையால், மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி மேம்படும். கட்டுமான பணிகளில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும், என்று மாவட்ட நிர்வாகம் வாக்குறுதி அளித்துள்ளது. தென்மாவட்ட மாணவர்களுக்கு ஆராய்ச்சி படிப்பின் மீது ஆர்வம் அதிகரிக்கும். போக்குவரத்து வசதிகள் மேம்படும். உதாரணமாக மதுரை-எர்ணாகுளம் ரயில் பாதை நியூட்ரினோ ஆய்வகம் வழியாக செல்வதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணிகளை, தென்னக ரயில்வே கட்டுமான துறையினர் மேற்கொண்டுள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளில், இதற்கான ஆதரவு தீர்மானங்கள் பெறப்பட்டுள்ளன.

>>>நீர்-இனி போர்: எதிரியாக மாறுமா எதிர்காலம்

 
பணத்தை தண்ணியா செலவழிக்கிறான்' என பழமொழி சொல்லப்போய், "தண்ணியை பணத்தைப் போல செலவழிக்கிறான்' என சொல்லும் காலம் நெருங்கி வருகிறது. மண்ணுக்காக நாடுகள் முட்டிக்கொண்டதால் தான் இரண்டு உலகப் போர்கள் நடந்தன. எதிர்காலத்தில் இன்னொரு உலகப் போர் நடந்தால், அது நீருக்காக மட்டுமே நடக்கும் என்கின்றனர் அறிஞர்கள். இதற்கு காரணம், மாறி வரும் சுற்றுச்சூழ்நிலைகளால், நீர் என்பதே அரிதாகி வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு, உலகுக்கு கிடைக்கும் நல்ல நீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. செயற்கையாக நீரை தயாரிக்கலாம் என்றால், அது எளிதில் சாத்தியமாகாது. எனவே, இயற்கையாக கிடைக்கும் நீரை கைப்பற்ற, உலக நாடுகள் போட்டி போடும். தண்ணீர் இல்லாவிட்டால், வாழ்க்கையே இல்லை என்பதால், உலக நாடுகள், உச்சகட்டத்தில் மோதிக்கொள்ளும்.
பருவநிலை மாற்றம்:
பருவநிலை மாற்றத்தால், அதிக மழை அல்லது அதிக வெப்பம் என்ற நிலைமை ஏற்படுகிறது. சரியான நேரத்தில், மழை பெய்வது சமீப காலமாக நடப்பதில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வறட்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தண்ணீரின் தேவை குறைவாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமையே வேறு. தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் மக்கள் தொகை பெருக்கம், காடுகளை அழித்தல், மழை நீரை தேக்கி வைக்காதது, நதிகள் இணைக்கப்படாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தொழில் மயம் ஆகியவை. தேவையை உணர்ந்து செயல்படாவிட்டால், 2015லேயே தண்ணீர் தேவை அதிகரித்து, உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும். தண்ணீர் பற்றாக்குறையால், உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து, விலை உயரும்.  பூமி, 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. 29 சதவீதம் நிலப்பரப்பாக உள்ளது. மொத்த தண்ணீரில் உப்பு நீரே அதிகம். 2.5 சதவீதம் நீர் மட்டுமே நல்லநீர். உலகில், 0.08 சதவீதத்துக்கும் குறைவான தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் 50 நாடுகளை 1999ல் ஐ.நா., அறிவித்தது. தற்போது விவசாயத்திற்காக 70 சதவீத நீர் பயன்படுத்தப்படுகிறது. இது 2020ல் 87 சதவீதம் ஆகும் என, உலக தண்ணீர் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, உலக அளவில் ஐந்து பேரில் ஒருவருக்கு, சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஐந்து வயது பூர்த்தியடையாத, 30 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் பசி, தொற்று நோய்களால் இறக்கின்றனர். சுத்தமான குடிநீர், நல்ல சுகாதாரம், சரிவிகித உணவு போன்றவற்றின் மூலமே இதை சரி செய்ய முடியும்.
என்ன தீர்வு:
அனைத்து ஆதாரங்களுக்கும், அடிப்படையான தண்ணீரை பாதுகாப்பது நமது கடமை. நீராதாரங்களை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அதிக மரங்களை நட வேண்டும். தண்ணீரை மறுசுழற்சி செய்து, விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சூரிய ஒளி மின்சாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். சொட்டு நீர் பாசனம், நீர்தெளிப்பு போன்ற வற்றை பயன்படுத்தி தண்ணீரை சேமிக்கலாம்.
"மடி'யில் கை வைத்த கதை:
பற்றாகுறை ஏற்பட்டதும், "மடி'யில் கை வைத்த கதையாக, நிலத்தடியில் கை வைத்தோம். அந்த நீரையும் எக்கச்சக்கமாக உறிஞ்சுகிறோம். இது இன்னொரு ஆபத்து. இதனால், அந்த இடத்தின் இயற்கை சமநிலைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கிணறுகள் வற்றி, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படுகிறது.
நீரின் தேவை:
விவசாயத்திற்கே அதிக நீர் தேவைப்படுகிறது. அடுத்ததாகத் தான் மற்ற உபயோகங்களுக்கு தேவை. 1970ம் ஆண்டில், உலகில் இருந்த மொத்த நீரில் 25 சதவீதத்தை பயன்படுத்தினோம். இது 1980ல், 45 சதவீதமாகவும், 1990ல் 65 சதவீதமாகவும் அதிகரித்தது. தற்போது உலகின் நீர்த் தேவை, மொத்த நீரில் 80 சதவீதத்தை நெருங்கி விட்டது. இதே நிலை தொடர்ந்தால், நீர் அரிதான பொருளாகும் அபாயம் இருக்கிறது. நீர் இல்லாவிடில், உலகம் அழிந்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கிறதா என்ன.?

மாசுபடுத்தும் காரணங்கள்: 
நீர் மாசுபடுவதற்கு முக்கிய காரணமே மனிதர்களின் மனசாட்சி இல்லாத நடவடிக்கைகள் தான். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள், வேதிப்பொருட்கள், ஆயில், பெயின்ட் போன்றவையாலும் நீர் மாசுபடுகிறது. இக்கழிவுகள் ஆற்று நீரை மட்டுமல்லாது, நிலத்தடி நீரையும் நாசம் செய்கின்றன. நிலத்தின் இயற்கை தன்மையே மாறுகிறது. வீட்டு கழிப்பறை, சாக்கடை ஆகியவற்றாலும் நீர் மாசுபடுகிறது. உலகம் முழுவதும் 40 சதவீதம் நிலத்தடி நீர் குடிநீராகவும், 60 சதவீத நிலத்தடி நீர், விவசாயத்துக்கும் பயன்படுகிறது.
செயற்கை நீர் சாத்தியமா:
செயற்கையாக நீரை உருவாக்க முடியுமா என்று ஆராய்ச்சியாளர்களை கேட்டால், முடியாது என்றே பதில் அளிக்கின்றனர். இருப்பினும், ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்தது தான் நீர். இந்த இரண்டு வாயுக்களும், எளிதாக கிடைக்கக்கூடியவைதான். ஆனாலும் இதை இணைத்து நீரை உருவாக்க முடிவதில்லை. காரணம், ஹைட்ரஜன் அணு தனித்து கிடைக்காது. ஆக்ஸிஜன், இரட்டை அணுவாகத்தான் இருக்கும். ஒரு அணுவை அதிலிருந்து பிரிக்க முடியாது. இதையும் மீறி, இரண்டு ஹைட்ரஜன் அணுவையும், ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் பிரித்தெடுத்தால், இரண்டும் நிலையான எலக்ட்ரான்களை கொண்டிருக்கும். ஒரே அளவு எலக்ட்ரான்கள் கொண்டவை, எதனுடனும் வினைபுரியாது. மீறி இணைத்தால், தண்ணீருடன் சேர்ந்து அதிகமான சக்தி வெளிப்படும். காரணம் அணுக்கரு இணைவு (பியூஷன்). செயற்கையாக நீரை உருவாக்குவதில், இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், இயற்கையாக ஆவியாகும் கடல்நீர், மேகத்தின் மீது பட்டு குளிர்வடைந்து மழைநீராக மண்ணில் மீண்டும் விழுகிறது. அந்த நீரை அலட்சியமாக வீணாக்குகிறோம்.

>>>சேலம் இரயில்வே கோட்டம் - வயது ஆறு...[Salem Railway Division - Age 6]

சேலம் ரயில்வே கோட்டம் துவங்கி ஐந்தாண்டுகள் நிறைவடையும் நிலையில், கோவையின் ரயில்வே தேவைகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளன. தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட கொங்கு மண்டலப்பகுதிகள் அனைத்தும், பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் கீழ் இருந்தன; கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய முக்கிய நகரங்கள் உட்பட கொங்கு மண்டலப்பகுதிகள் பெரும்பாலும் அதில் இருந்ததால், கோட்டத்தின் மொத்த வருவாயில் பெரும்பங்கை தமிழகமே கொடுத்து வந்தது.ஆனால், இங்கு கிடைக்கும் வருவாயைக்கொண்டு, கேரளாவிலுள்ள ரயில்வே ஸ்டேஷன்களை மேம்படுத்துவதிலேயே பாலக்காடு கோட்ட அதிகாரிகள் குறியாக இருந்தனர். புதிய ரயில்கள் விடுவது, புதிய ரயில் பாதைகள் அமைப்பது, ரயில்வே ஸ்டேஷன் மேம்பாடு என எல்லாவற்றிலும் தமிழக பகுதிகள் புறக்கணிக்கப்பட்டன.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Karur District Secondary Grade Teacher Vacancies

     இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் நிறைவடைந்தது. மீதி உள்ள காலிப்பணியிடங்களுக்கு அடுத்த வாரம் புதிதாக இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்ப...