இந்தியாவின் 100 பணக்கார பெண்கள் பட்டியலில் சத்தியமங்கலம் பெண் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என இருந்த நிலை மாறி இன்று அனைவரும் படித்து ராணுவம், விமானம், கடற்படை, மருத்துவம், பொறியியல், அரசியல் ஆகிய பிரிவுகளில் தொடங்கி பெண்களே இல்லாத பிரிவே இல்லை எனும் அளவுக்கு பெண்கள் இன்று முன்னேறி வருகிறார்கள்.
அன்று கல்லூரிக்கு அனுப்புவதற்கே தயக்கம் காட்டிய பெற்றோர் இன்று தங்கள் பெண் பிள்ளைகளை வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு படிக்க அனுப்பும் நிலை உள்ளது.
அதிலும் பெண்கள் தொழில் முனைவோர்களாக இருந்தாலும் பெண்களின் சாதனை பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வகையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செண்பகப்புதூரை சேர்ந்த ஒரு பெண் இந்தியாவின் 100 பணக்கார பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
பெண்ணின் சொத்து மதிப்பு
அந்த பெண்ணின் சொத்து மதிப்பு 2,870 கோடி ரூபாய் ஆகும். அவரது பெயர் டாக்டர் வித்யா வினோத். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக் கூடத்தின் முன்னாள் மாணவியாவார். இந்த தகவல் கோட்டக் வெல்த் மற்றும் ஹூரான் இந்தியா என்ற அமைப்பு தயாரித்த பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.
தலைமை செயல் அதிகாரி
டாக்டர் வித்யா வினோத் துபாயை தலைமை இடமாக கொண்ட ஸ்டடி வேர்ல்டு எஜுகேஷன் ஹோல்டின் குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆவார். இவருடைய கணவர் வினோத் நீலகண்டம் அதன் தாளாளராகவும், மூத்த சகோதரர் கார்த்திகேயன் நிர்வாக அறங்காவலராகவும் இளைய சகோதரர் ஜெயகிருஷ்ணன் செயலாளராகவும் உள்ளனர்.
வித்யா வினோத்
டாக்டர் வித்யா வினோத் இந்தியாவின் 8-ஆவது இடம் பிடித்த சுய தொழில்முனைவோர் ஆவார். கோட்டக் அமைப்பு தயாரித்த பட்டியலில் உள்ள 100 பணக்கார பெண்களில் 36 பேர் சுயமாக வளர்ந்த பணக்காரர்கள் என்றால் அது மிகையாகாது. இந்த பட்டியலில் எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா முதலிடத்தில் உள்ளார்.
இவருடைய சொத்து மதிப்பு ரூ 54 ஆயிரத்து 850 கோடி, 36 ஆயிரத்து 600 கோடி சொத்துகளுடன் பயோகான் நிறுவனத்தின் கிரண் மசும்தார் ஷா 2ஆவது இடத்தையும் மும்பையை சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான லீனா காந்தி திவாரி ரூ 21 ஆயிரத்து 340 கோடி சொத்துகளுடன் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.