ஒரு
சாதாரண குடும்பத்தில் பிறந்து, தன் அறிவாற்றலாலும், விடாது செய்த
ஆராய்ச்சிகள் மூலம் அறிவியல் உலகின் உண்மைகளைக் கண்டுபிடித்தவரின்
வாழ்க்கையைக் காப்பி அடிக்கலாம் வாங்க!
அந்தக் கல்லூரியின் வகுப்பறையில் நுழைந்த பேராசிரியர், மாணவர்களுக்கு மத்தியில் ஒரு சிறிய பையனும் அமர்ந்து இருப்பதைக் கண்டார். ஏதோ தெரியாமல் அமர்ந்திருக்கிறான் என எண்ணிய அவர், ''நீ என்ன இந்தக் கல்லூரி மாணவனா?'' என்று கேட்டார். அதற்கு அவன் பணிவாக, ''ஆம் ஐயா!'' என்று சொன்னான். ஆச்சர்யம் அடைந்த பேராசிரியர், ''உன் பெயர் என்ன?'' என்று கேட்டார். அதற்கு அவன் ''ராமன்'' என்றான்.
ஆமாம்! அவர்தான் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர்.சி.வி.ராமன்.
இவரது பெற்றோர் கணித மேதையும் ஆசிரியருமான சந்திரசேகரன் மற்றும் பார்வதி அம்மையார். சந்திரசேகர வெங்கட்ராமன் என்பதன் சுருக்கமே சி.வி.ராமன். இவர் பி.ஏ. இயற்பியலில் தங்கப் பதக்கம் பெற்று தேர்வானார். கொல்கத்தாவில் இந்திய நிதித் துறையில் உதவி கணக்குப் பொது மேலாளராக 1907- ல் பதவி ஏற்றார். அப்போதைய ரங்கூன் நகருக்கு பதவி மாற்றம் செய்யப்பட்டு மீண்டும் கல்கத்தாவுக்குத் திரும்பினார்.
அந்தச் சமயத்தில் டிராம் வண்டியில் பயணம் செய்தபோது ஒரு கட்டடத்தில் 'விஞ்ஞான வளர்ச்சிக்கான இந்தியக் கழகம்’ என்ற பலகை தொங்குவதைக் கண்டார். டிராமில் இருந்து குதித்தார். கட்டடத்தினுள் நுழைந்தார். அங்கே நிறைய அறிவியல் சாதனங்கள், பெரிய ஆராய்ச்சி அறைகள் இருப்பதைக் கண்டார். உடனே அங்கேயே தங்கி, அறிவியல் ஆராய்ச்சிகள் செய்வதற்கு அனுமதியும் பெற்றார். தனது அரசுப் பணியை விட்டு விட்டு, அறிவியல் ஆராய்ச் சிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். தன் இருப்பிடத்தையும் அந்த ஆராய்ச்சிக்கூடத்துக்கே மாற்றிக் கொண்டார்.
1921-ஆம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற உலகப் பல்கலைக் கழகங்களின் சபையில், கல்கத்தா பல்கலைக் கழகத்தின் சார்பில் பங்கேற்றார். அப்போது அவர் மேற்கொண்ட கடல் பயணத்தின்போது, கப்பலின் மேல் தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்தபடி பயணம் செய்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மனதில், கடலுக்கு நீல நிறம் எப்படி வந்தது? வானத்தின் நிறமா? வானம் மேகமூட்டத்துடன் கறுப்பாக இருக்கும்போதும், தொடர்ந்து அலைகள் வரும்போதும் கடல் எப்படி நீலநிறமாக உள்ளது, என்ற கேள்விகள் உருவானது. திடீரென்று சூரிய ஒளியை நீர்த் துளிகள் பிரதிபலிப்பதால்தான் கடல் நீலநிறமாக உள்ளது என்பதை உணர்ந்தார்.
தனது ஒளிச் சிதறல் பற்றிய அறிக்கையைத் தயாரித்து, ராயல் சொசைட்டி ஆப் லண்டன் கழகத்துக்கு அனுப்பினார். முப்பட்டகக் கண்ணாடியின் வழியே ஒளிக்கதிர்கள் செல்லும்போது பல்வேறு வண்ணங்களாகப் பிரிவதை 1928-ல் கண்டுபிடித்தார். இதுவே, ராமன் விளைவு. இந்தக் கண்டுபிடிப்புக்காக அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அந்த முறை நோபல் பரிசு தனக்குத்தான் கிடைக்கும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் ராமன். அதனால், அவர் நவம்பர் மாதம் நடக்கப்போகும் விழாவுக்கு ஜூன் மாதத்திலேயே டிக்கெட் பதிவுசெய்து விட்டார். அவரது கண்டுபிடிப்பின் மீது அந்த அளவுக்கு நம்பிக்கை. நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர். அதுவும் தவிர, வெள்ளையர் அல்லாத ஒருவருக்கு அப்போதுதான் முதல் முதலாக நோபல் பரிசு அளிக்கப்பட்டது. அவருக்கு நமது அரசு பாரத ரத்னா வழங்கி கௌரவித்தது. அவருக்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித்தந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்த பிப்ரவரி 28-ம் தேதியை சிறப்பிக்கும் வகையில், தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நமது அரசு கொண்டாடுகிறது.
எளிய குடும்பத்தில் பிறந்தாலும் முயற்சி மூலம் ஜெயிக்கலாம். ஒரு கடல் பயணத்தைக் கூட எப்படி அறிவியல் ஆர்வத்தின் மூலம் குறிக்கோளை அடைவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளலாம் என்பதை சி.வி.ராமன் அவர்களின் வாழ்க்கை மூலம் காப்பி அடிக்கலாம் வாங்க!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.