கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உண்மையான கல்வி என்பது என்ன? - இன்றைய சிந்தனை

 


உண்மையான கல்வி என்பது என்ன? - இன்றைய சிந்தனை


Co- Regulation

ஒரு தாத்தா கரடியும் குட்டிக்கரடியும் நடக்கப் புறப்பட்டார்கள். சற்று தூரம் நடந்திருப்பார்கள். ஓர் அருவியின் சத்தம் கேட்டது. 

"அருகே ஓர் அருவி இருக்கிறது. அப்படியானால் சிறிய ஆறு இருக்கும். வா உனக்கு நான் நீச்சல் கற்றுத்தருகிறேன்" என்றார் தாத்தா. 

"ஐயோ வேண்டாம் வேண்டாம். எனக்குத் தண்ணீர் என்றாலே பயம்" குட்டிக்கரடி சொன்னது. 

"ஓ... அப்படியா... சரி நீந்த வேண்டாம். வா அருவியைப் பார்த்து விட்டு வரலாம்" என்று நடக்கத் தொடங்கினார். குட்டிக்கரடியும் பின்னால் நடந்தது. 

"ஆகா... அருவி கொட்டுது பார்" தாத்தாக்கரடி சற்று தள்ளி நடந்தார். 

"பார் இங்கே தண்ணீர் மெதுவாக ஒழுகுது" என்றபடி ஒரு கையால் தண்ணீரைத் தொட்டார். "ஆகா ஜில்லென்று இருக்கிறது. வா வந்து சும்மா தொட்டுப் பார். அவ்வளவு நன்றாக இருக்கிறது" என்று குட்டிக்கரடியை அழைத்தார். 

சும்மா தொட்டுத்தான் பார்ப்போமே என்றபடி அந்த ஓடையின் அருகே வந்தது. கையால் ஓடும் நீரைத் தொட்டது. 

"ஆமா நல்லா ஜில்லென்று இதமாக இருக்கிறது" குட்டிக்கரடியும் சொன்னது. 

"என்னைப் பார். இப்படிச் செய்தால் இன்னும் நன்றாக இருக்கும்" என்றபடி கையை அப்படியும் இப்படியும் ஆட்டினார். குட்டியும் அதுபோல் ஆட்டியது. "ஆகா நன்றாக இருக்கிறது" என்று உற்சாகத்தோடு தாத்தாகரடியைப் பார்த்துச் சொன்னது. 

அப்போது தாத்தாக் கரடி கரையில் அமர்ந்து கால்கள் இரண்டையும் தண்ணீரில் தாழ்த்தி வைத்து முன்னும் பின்னும் ஆட்டிக்கொண்டிருந்தது. முகத்திலோ அவ்வளவு மகிழ்ச்சி. 

நாமும் அதுபோல் செய்து பார்ப்போமே என்று கரையில் உட்கார்ந்து கால்களைத் தண்ணீரில் தாழ்த்தி முன்னும் பின்னும் ஆட்டியது. 

நானும் அதுபோல் செய்கிறேன் என்று சொல்வதற்காகத் திரும்பிப்பார்த்தால் தாத்தாக்கரடி தன்னை மறந்து கால்களை வேகம் வேகமாக ஆட்டிக்கொண்டிருந்தது. அதன் உடல் எல்லாம் நனைந்திருந்தது

குட்டிக்கரடியும் அதுபோல் வேகம் வேகமாக கால்களை ஆட்ட குட்டிக்கரடியின் உடலும் நனைந்திருந்தது. 

"நான் தண்ணீரில் இறங்கப்போகிறேன். இந்தக் குளிர்ந்த நீர் நம் உடலைத் தழுவிப் போவது அவ்வளவு சுகமாக இருக்கும். நீ நீந்த வேண்டாம். விருப்பம் இருந்தால் இறங்கி நின்றால் மட்டும் போதும்" என்றபடி தாத்தாக் கரடி நீரில் இறங்கியது. தயங்கித் தயங்கிக் குட்டிக்கரடியும் இறங்கியது. 

அப்படி கைகால்களை ஆட்ட குட்டிக்கரடி தண்ணீரில் நீந்தத் தொடங்கியிருந்தது. 

"ஆகா என்னாலும் நீந்த முடிகிறதே...நீந்துவது என்பது இதுதானா? நான் என்னவோ ஏதோவென்று நினைத்தேன்" குட்டிக்கரடி நீந்திக்கொண்டே சொன்னது. 

இந்தக் கதையைச் சொல்லி விட்டு Dr. Ammu Lukose என்பவர் இன்றைய ஒரு முக்கிய பிரச்சனையைப் பற்றிப் பேசுகிறார். 

இந்தத் தாத்தா ஒருபோதும் குட்டிக்கரடியைக் கேலி செய்யவில்லை. "தண்ணீரைப் பார்த்துப் பயப்படும் நீயொரு பயந்தாங்ககொள்ளி. உனக்கு எல்லாமே பயம்தான். எப்பத்தான் உன் குணம் மாறுமோ?" என்றெல்லாம் திட்டவில்லை. மாறாக குழந்தையே அறியாமல் மெல்ல மெல்ல குழந்தையை நீந்த வைத்துவிட்டார். 

குழந்தைகள் கைபேசித் திரைக்குள் சிக்கிக்கொண்டுள்ள இக்காலத்தில் அருகே இருந்து இதுதான் நல்லது, இதெல்லாம் நமக்குத் தேவையில்லாதது. நீ வேண்டாம் என்ற சொன்னதற்குள் இவ்வளவு சுகம் இருக்கிறது என்றெல்லாம் குழந்தைகள் அறியாமலே எடுத்துச் சொல்லவும் அவர்களை அனுபவிக்கச் செய்யவும் ஒருவர் இன்றைய சமூகச் சூழலில் இல்லை என்பதுதான் முக்கிய பிரச்சனை. 

குழந்தைளின் மூளை இன்னும் முதிர்ச்சியடைவில்லை. காலம் கடந்து கிடைக்கும் மகிழ்ச்சிக்காகக் காத்திருக்க அவர்களால் முடியாது. அதற்குப் பதில் உடனடியாக கிடைக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் செயல்பாடுகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். அதற்குக் குழந்தைகளைக் குறை சொல்ல முடியாது. குறை சொல்லக் கூடாது என்கிறார். 

 இந்தக் கதை மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறது.  துவக்கநிலை வகுப்பறைகளில் ஆசிரியர் பின்பற்ற வேண்டிய அருமையான கருத்துக்கு அருமையான எடுத்துக்காட்டு. 

அந்தக் கருத்து 

கற்கிறோம் என்று தெரியாமலே கற்பதுதான் உண்மையான கல்வி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-03-2026

    பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 10-03-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்   🌀🌀...