குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 - விருச்சிகம் (Guru Peyarchi Palangal - Viruchigam)...



  குரு பெயர்ச்சி பலன்கள் 2022 - 2023  - விருச்சிகம் (Guru Peyarchi Palangal - Viruchigam)...



பணத்துக்கும் பகட்டான வாழ்க்கைக்கும் மயங்காதவர்களே...!



நீதி நியாயம் பற்றி பேசும் நீங்கள், அடிபட்டவர்களை அரவணைப்பவர்கள். இதுவரை 3-ம் வீட்டிலும்,4-ம் வீட்டிலும் மாறி மாறி நின்று கொஞ்சம் தடுமாற்றத்தையும், கொஞ்சம் மகிழ்ச்சியையும் கொடுத்து வந்த குருபகவான் இப்போது 14.04.2022 முதல் 22.04.2023 வரை 5-ம் வீட்டுக்குள் ஆட்சிப் பெற்று அமர்ந்து உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவார்.



எதிர்பாராத திடீர் யோகங்கள் உண்டாகும். இழுத்துப் பறித்துக் கொண்டிருந்த சில காரியங்கள் உடனே முடியும். குடும்பத்தில் வீசி வந்த புயல் விலகும். உண்மையைப் பேசி பொல்லாதவர்களானீர்களே, வீட்டுக்குள் நுழைந்தாலே என்ன நடக்குமோ என்ற படபடப்பு இருந்ததே, இனி அந்த நிலையெல்லாம் மாறும். வசதி வாய்ப்புகள் இருந்தும் துள்ளி விளையாட ஒரு பிள்ளை இல்லையே என்று ஏங்கித் தவித்த தம்பதியருக்கு வாரிசு உருவாகும். பழைய சொத்தை விற்று புதுசு வாங்குவீர்கள். எப்பொழுது பார்த்தாலும் மாத்திரை, மருந்து என்றும் என்ன நோய் என்றே தெரியாமலும் இருந்ததே இனி அதற்கெல்லாம் விடுதலை. உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமணமும் கூடி வரும். பணத்தை ஏதோ ஒரு வகையில் சேமிப்பீர்கள். திடீர் பணவரவு திருப்தி தரும்.



குரு உங்கள் ராசியை பார்ப்பதால் விரக்தி, இனம்புரியாத கவலையிலிருந்து விடுபடுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். குருபகவான் உங்களின் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் அப்பாவுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வந்து சேரும். வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். நாடாளுபவர்கள், சமுக அந்தஸ்துள்ளவர்கள் உதவுவார்கள். குரு பகவான் உங்களுடைய லாப வீட்டை பார்ப்பதால் மூத்த சகோதரர், சகோதரிகளுடன் இருந்து வந்த மனஸ் தாபங்கள் நீங்கி பாசமழை பொழிவார்கள். வாகன வசதி பெருகும். இழுபறியான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். பழுதான டிவி, ஃப்ரிஜ், வாஷிங் மிஷினை மாற்றுவீர்கள். தங்க ஆபரணம், ரத்தினங்கள் சேரும். பழைய கடன் பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைப்பீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். உறவினர்களுடன் இணக்கமான போக்கு ஏற்படும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.



குருபகவானின் பாதச்சாரப் பலன்கள்:



14.04.2022 முதல் 29.04.2022 வரை: இக்காலகட்டங்களில் உங்களின் தன பூர்வப் புண்யாதிபதியான குருபகவான் தன் நட்சத்திரமான பூரட்டாதி 4-ம் பாதத்தில் செல்வதால் குழந்தை பாக்யம் கிடைக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். வீண் விவாதங்கள் நீங்கும். வெகுநாட்களாக தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாணம் கூடி வரும். சீமந்தம்,காதுகுத்து என வீடு களைகட்டும். ஷேர் மூலம் பணம் வரும். வெளிமாநில புண்ணிய நதிகளில் நீராடுவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும்.



30.04.2022 முதல் 24.02.2023 வரை: மேற்கண்ட நாட்களில் தைரிய சுகாதிபதியான சனிபகவானின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் இளைய சகோதர வகையில் அடிக்கடி இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டு. ஆலயத்தைப் புதுப்பிக்க உதவுவீர்கள். தாயாரின் உடல்நிலை பாதிக்கும். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் கருத்து மோதல்கள் வெடிக்கும். யாரிடமும் உங்கள் கோபத்தைக் காட்ட வேண்டாம். எதைப் பேசினாலும் யோசனை செய்து பேசவும்.



24.02.2023 முதல் 22.04.2023 வரை: இக்காலகட்டத்தில் குருபகவான் உங்கள் அஷ்டம லாபாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் செல்வதால் கொஞ்சம் அலைச்சல் இருக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை முயன்று எந்த வேலையையும் முடிக்க வேண்டி வரும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். ஒரு சொத்தை காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். மூத்த அண்ணன் உதவுவார். சில நாட்களில் வருங்காலம் குறித்த கவலைகளால் தூக்கம் குறையும். வெளிநாட்டுப் பயணங்கள் தேடி வரும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள்.



வியாபாரிகளே, சந்தை நிலவரம் அறிந்து லாபத்தை பெருக்குவீர்கள். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் புதிய முதலீடுகளை போடுவதுடன் கடையை விரிவுபடுத்தி போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி பொறுப்பாக நடந்து கொள்வார்கள். புது வேலையாட்களையும் பணியில் அமர்த்துவீர்கள். வெகுநாட்களுக்குப் பிறகு பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அரிசி, எண்ணெய், மருந்து, ரசாயன வகைகள், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடனான கருத்து வேறுபாடுகள் மறையும்.



உத்யோகஸ்தர்களே, உங்களைப் பற்றி குறை கூறியவர்களுக்கு இனி பதிலடி கொடுப்பீர்கள். உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெகுநாட்களாக பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருந்தீர்களே, உங்களைவிட தகுதி குறைந்தவர்களுக்கெல்லாம் பதவி உயர்ந்ததே, கவலை வேண்டாம். நீங்கள் எதிர்பார்த்தபடி பதவி உயரும். கூடவே சம்பளமும் உயரும். சக ஊழியர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். அயல்நாட்டுத் தொடர்புடைய புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் அமையும். ஆகமொத்தம் இந்த குருப்பெயர்ச்சி பிரச்சினைகளால் சிதறிக் கிடந்த உங்களை சீர்செய்வதுடன், திடீர் யோகங்களையும், மனமகிழ்ச்சியையும் தருவதாக அமையும். எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும்.



பரிகாரம்: தஞ்சை மாவட்டம், வலங்கைமான் வட்டத்தில் ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஆபத்சகாயேஸ்வரரையும், குருபகவானையும் பூசம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.



குருப்பெயர்ச்சி பலன் - விருச்சிகம்

குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023
வாக்கிய பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 13.04.2022 முதல் 22.04.2023 வரை

குருதேவர் தான் நின்ற இடத்திலிருந்து

ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் இடத்தையும்

ஏழாவது பார்வையாக லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தையும்

ஒன்பதாம் பார்வையாக ஜென்ம ஸ்தானத்தையும் பார்க்கின்றார்.
எதிலும் சுறுசுறுப்புடனும், வேகமாகவும் செயல்படக்கூடிய விருச்சிக ராசி அன்பர்களே!!
இந்த வருட குருபெயர்ச்சியில் உங்களுடைய ராசிக்கு குருபகவான் நான்காம் ஸ்தானமான சுக ஸ்தானத்தில் இருந்து புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.

குருவானவர் தான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்தை வாழ வைக்கும் தன்மை கொண்டவர் ஆவார். அதனால்தான் குரு பார்வை கோடி புண்ணியம் என்று அழைக்கப்படுகின்றது.
பலன்கள் :

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் நீங்கி சுதந்திர போக்குடன் செயல்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் முன்னேற்றமான சூழ்நிலை ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். கோயில் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். புதுவகையான தேடல்கள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மருத்துவம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயமும், ஆர்வமும் அதிகரிக்கும். மூத்த சகோதரர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். வேளாண்மை சார்ந்த துறைகளில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும்.
பொருளாதாரம் :

இதுவரை தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். குழந்தைகள் வழியில் மனமகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான மதிப்பு மேம்படும். வருவாய் மேம்படுத்துவது தொடர்பான நுணுக்கங்களை அறிவீர்கள்.
உடல் ஆரோக்கியம் :

உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பேச்சுக்களில் புதுவிதமான புத்துணர்ச்சி ஏற்படும். உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள்.
பெண்களுக்கு :

பெண்களுக்கு சுபகாரியம் தொடர்பான செயல்கள் கைகூடும். தந்தைவழி உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழ்நிலை மறையும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குறுந்தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் எதிர்பார்த்திருந்த பயண வாய்ப்புகள் கைகூடும். முயற்சிக்கேற்ப புதிய பொறுப்புகளும், உயர்வான சூழ்நிலைகளும் காணப்படும். பணி மாற்றம் தொடர்பான முயற்சிகளில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து சிந்தித்து செயல்படுவது நல்லது. சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சாதகமாக அமையும்.
மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும். ஆராய்ச்சி தொடர்பான துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர்கல்வியில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் உருவாகும். கற்ற கல்விக்கு உண்டான தொழில் வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
வியாபாரிகளுக்கு :

வியாபார பணிகளில் அலைச்சலுக்கு பின் தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். புதிய முதலீடுகளில் சாதகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். சுற்றுலா தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு லாபங்கள் ஏற்படும். கால்நடை மற்றும் மனை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
விவசாயிகளுக்கு :

விவசாயம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். விளைச்சலுக்கு உண்டான தனவரவுகள் கிடைப்பதில் இழுபறியான சூழ்நிலை அவ்வப்போது ஏற்பட்டு மறையும். நீண்ட நாட்களாக மனையில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பங்காளி உறவினர்கள் வழியில் ஆதரவான சூழ்நிலை காணப்படும்.
அரசியல்வாதிகளுக்கு :

அரசியல்வாதிகளுக்கு தனவரவுகள் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் மறைமுக ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். செல்வச்சேர்க்கை மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்களின் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள்.
கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் புத்துணர்ச்சியுடனும், புதுப்பொலிவுடனும் காணப்படுவீர்கள். உங்களின் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான புதிய வாய்ப்புகள் சாதகமாக அமையும். உங்களின் மீதிருந்த வதந்திகள் குறைந்து செல்வாக்கு மேம்படும்.
நன்மைகள் :

வர இருக்கின்ற குருபெயர்ச்சியில் மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். செயல்பாடுகளின் மூலம் வெளிவட்டார தொடர்புகளை விரிவுபடுத்தி லாபகரமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள்.
கவனம் :

வர இருக்கின்ற குருபெயர்ச்சியில் குழந்தைகள் மற்றும் உயரதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்வது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும்.
வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் எல்லை சுவாமிகளை வழிபாடு செய்துவர பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த இடர்பாடுகள் நீங்கும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே...!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...