யாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்) - Yadhum Oore Yavarum Kelir (Kaniyan Poonkunranar)...

 யாதும் ஊரே யாவரும் கேளிர் (கணியன் பூங்குன்றனார்) - Yadhum Oore Yavarum Kelir (Kaniyan Poonkunranar)...


பாடல்: 192

திணை: பொதுவியல் துறை -பொருண்மொழிக் காஞ்சி


யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;


தீதும் நன்றும் பிறர்தர வாரா ;


நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;


சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்


இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,


இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு


வானம் தண்துளி தலைஇ, ஆனாது


கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று


நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்


முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்


காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்


பெரியோரை வியத்தலும் இலமே;


சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


விளக்கம்:


யாதும் ஊரே,யாவரும் கேளிர்;

-எல்லா ஊரும் எங்கள் ஊர்தான், எல்லோரும் எங்கள் உறவுகள் தான்;


தீதும், நன்றும், பிறர் தர வாரா;

-தீயது, நல்லது என்பவை பிறர் தந்து வருபவை இல்லை;


நோதலும், தணிதலும், அவற்றோர் அன்ன;

-துன்பமும், அதன் தீர்வும் கூட அதுபோல் தான்.


சாதலும் புதுவது அன்றே! வாழ்தல்

-செத்துப் போவது ஒன்றும் புதியது இல்லை.


இனிது என மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்

-வாழ்க்கை இனியது என்று சொல்லி மகிழ்ச்சிப் படுவதும் தவறு.


இன்னாது என்றலும் இலமே! மின்னொடு

-மாறி, வாழ்க்கையில் இருந்து விலகி ஏற்கும் துறவு கொடியது என்று சொல்லுவதும் தவறு;


வானம் தண் துளி தலைஇ ஆனாது,

-வானம், மின்னல் வெட்டும் மழையாய் குளிர்ந்த துளிகளைப் பெய்ய,


கல்பொருது இரங்கும், மல்லல் பேர்யாற்று

-கல், மண் ஆகியவற்றைப் புரட்டிக் கொண்டு இறங்கி, பெருகி வரும் ஆற்று நீரில் சிக்கி,


நீர்வழிப் படூஉம் புனை போல், ஆருயிர்

-அதன் தடத்திலே போகும் புனையைப் [மிதவை (அ) சிறு படகு] போல, அரிய உயிரியக்கம் ஆனது


முறைவழிப் படூஉம் என்பது திறவோர்

-முன்னர் இட்ட முறைவழியே போகத் தான் செய்யும் (நியதி வழிப் படும்) என்று வாழ்க்கையின் திறம் அறிந்தவர்கள் சொல்லுவார்கள்.


காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியில்

-அந்த காட்சியில் நாங்கள் தெளிந்தோம் ஆகையால், [இந்தப் பேருண்மையைக் கண்டு அனுபவத்தால் தெளிவு பெற்றோம் ஆகையால்]


பெரியோரை வியத்தலும் இலமே!

-பெரியவர்களைக் கண்டு வியத்தலும் தவறு; [அறிவிலோ செல்வத்திலோ பிறப்பிலோ நம்மை விடவும் மேலானவரைக் கண்டு போற்றித் துதித்தலும் செய்யோம்.]


சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே!

-சிறியவர்களை இகழ்தல் அதனிலும் தவறு. [நம்மை விடவும் கீழானவரைக் கண்டு சிறுமையாய் நடத்துதலை எண்ணவும் மாட்டோம்.]



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...