கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

விளாத்திகுளம் 12ஆம் வகுப்பு மாணவி கொலை வழக்கு - மாவட்ட எஸ்.பி. விளக்கம்

 


விளாத்திகுளம் 12ஆம் வகுப்பு மாணவி கொலை வழக்கு - மாவட்ட எஸ்.பி. விளக்கம்


விளாத்திகுளம் பள்ளி மாணவி கொலை வழக்கில், முனீஸ்வரன் என்ற நபர் எப்படி கைது செய்யப்பட்டார் என்பது குறித்து மாவட்ட  காவல்துறை கண்காணிப்பாளர் மதன் விளக்கமளித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் 17 வயதான பிளஸ் 2 மாணவி, மார்ச் 11ஆம் தேதி வெட்டவெளியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று மாணவியின் பெற்றோர், உறவினர் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.


இந்த சம்பவத்தை நிகழ்த்தியவர்களை கண்டறிய 10 தனிப்படைகளை அமைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் துறை உத்தரவிட்டிருந்தது. தனிப்படை போலீசார், இந்த குற்றம் இழைத்தவர்களை தீவிரமாக தேடி வந்தனர். போலீசாருக்கு கடும் சவாலாக அமைந்த இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக,  சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரன் (30) என்ற நபர்  கைது செய்யப்பட்டார்.


எஸ்.பி. மதன் பேட்டி

முனீஸ்வரன் கைது, இவ்வழக்கின் நிலை உள்ளிட்டவை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) மதன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கினார்.


அப்போது அவர், "விளாத்திகுளம் அருகே 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அறிந்த உடனே 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 6 டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் சுமார் 150க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த வழக்கைத் தொடக்கம் முதலே டிஜிபி தொடர்ந்து கண்காணித்து வந்தார்.


மாணவி கொலை செய்யப்பட்ட இடம் காட்டுப்பகுதி என்பதால், அங்கு சிசிடிவி கேமரா வசதி எதுவும் இல்லை. எனவே, சுற்றுவட்டாரத்தில் இருந்த 98 சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி, செல்ஃபோன் கால் பதிவுகள், அப்பகுதி மக்கள் அளித்த தகவல்கள் மற்றும் பிற அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.


800 ஆண்களிடம் விசாரணை

குறிப்பாக, வேடநத்தம் கிராமத்தில் உள்ள சுமார் 800 ஆண்கள், சம்பவம் நடந்த சமயத்தில் எங்கு இருந்தனர் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டோம். 461 குற்றப் பின்னணி கொண்ட நபர்களையும் விசாரணை செய்து, சம்பவத்தில் தொடர்பு இல்லை என உறுதி செய்யப்பட்டவர்களை விடுவித்தோம். அதில், ஆரம்பத்தில் பிடிக்கப்பட்ட 5 நபர்கள் மீது மட்டுமே சந்தேகம் இருந்தது. உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லாத காரணத்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.



இதுபோன்ற சூழலில்தான் சிசிடிவி காட்சிகள், செல்ஃபோன் சிக்னல் ஆய்வு மற்றும் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் இன்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை எந்தவொரு அழுத்தத்தினாலும் எடுக்கப்படவில்லை. முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது” என்று எஸ்பி மதன் திட்டவட்டமாக தெரிவித்தார்.


மேலும் பேசிய அவர், “இந்த வழக்கில் போலீஸ் கான்ஸ்டபிள் முதல் ஆய்வாளர் வரை என அனைவரும் மிக கடினமாக உழைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகள், டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அதேசமயம் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயர் மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்த 6 பேருக்கு எதிராக போக்சோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.


மேலும், "வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில், அனைத்து கிராமங்களிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு, அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன" என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - தபால்வாக்கு மூலம் வாக்களிக்க புதிதாக 12 பிரிவினருக்கு அனுமதி - தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழ்நாடு அரசின் 5 துறைகள் உட்பட 12 பிரிவினரை தபால் வாக்கு பட்டியலில் புதிதாக சேர்த்து தேர்தல் ஆணையம் உத்தரவு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2...