கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>காவல் நிலையத்தின்(போலீஸ் ஸ்டேஷன்) இன்றைய நிலை..!

 
எந்தவொரு பிராந்தியத்திலும் அதை நிர்வகிப்பதற்கான அதிகபட்ச அதிகாரம் குவிந்திருக்கும் இடம்... அங்குள்ள காவல் நிலையம். தமிழகத்தில் அரசுக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் துறை டாஸ்மாக் என்றால், அரசின் பணியாளர்களுக்கு அதிக வருமானம் ஈட்டித் தரும் துறைகளில் முதலிடம் பிடிப்பது தமிழகக் காவல் துறை. ஆம்... நம்புங்கள்... பத்திரப் பதிவுத் துறை, விற்பனை வரித் துறைகளைவிட காவல் துறையில் 'மேல்’ வருமானம் அதிகம். தமிழகத்தில் ஒரு காவல் நிலையத்தின் பணிகள் என்ன, அதன் அதிகார எல்லை என்ன, வரம்பு மீறும் எல்லைகள் எவை...?

தமிழகத்தில் மொத்தம் 1,296 காவல் நிலையங்கள், 196 மகளிர் காவல் நிலையங்கள், சுமார் 250 ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஒரு லட்சம் காவலர்கள்... பிரமாண்ட ஆலமரமாகக் கிளை பரப்பி இருக்கும் காவல் துறையில் கட்டப் பஞ்சாயத்தும் லஞ்சமும்கூடப் பிரமாண்டம்தான். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் எப்படி எல்லாம் வசூல் வேட்டை நடத்துகிறார்கள்?

ஃபர்ஸ்ட் இன்கம் ரிப்போர்ட்!
முதல் தகவல் அறிக்கை எனப்படும் எஃப்.ஐ.ஆர்... போலீஸாரைப் பொறுத்தவரை பொன் முட்டையிடும் வாத்து. காவல் நிலைய நடைமுறைகளில் முதல் நடைமுறையே எஃப்.ஐ.ஆர். பதிவுதான். அதில் இருந்தே தொடங்குகிறது வசூல் வேட்டை. காவல் நிலையத்தில் ஒருவர் அளிக்கும் புகாரைப் பெற்றுக்கொண்டு ஆய்வாளர் அல்லது நிலைய எழுத்தர் உடனடியாக ரசீது (சி.எஸ்.ஆர்.) கொடுக்க வேண்டும். புகாரின் தன்மையைப் பொறுத்து அன்றைய தினமே எஃப்.ஐ.ஆர். பதியப்பட வேண்டும்.

ஆனால், உண்மையில் நடப்பது என்ன? புகாரைப் பெற்றுக்கொண்டு உடனே புகாரில் சம்பந்தப்பட்ட எதிர்த் தரப்பை அழைக்கிறார்கள். பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். புகார்தாரர், எதிர்த் தரப்பு... இவர்களில் யாரிடம் அதிக பேரம் நடக்கிறதோ, அவர்களுக்குச் சாதகமான வகையில் புகார் பதிவு செய்யப்படும் அல்லது பதிவுசெய்யப்படா மலேயே போகும். ஒருவேளை போலீஸ் வற்புறுத்தியும் புகார்தாரர் புகாரை வாபஸ் வாங்க மறுத்தால், அதற்கெல்லாம் அசரவே மாட்டார்கள்.

எதிர்த் தரப்பிடம் ஒரு புகாரை வாங்கி, ஒரிஜினல் புகார் கொடுத்தவர் மீதே வழக்குப் பாய்ச்சி அதிரவைப்பார்கள். 'ஏன்தான் காவல் நிலையத்துக்குச் சென்றோமோ’ என்று விரக்தியில் நொந்தேபோவார் புகார்தாரர். இந்த எஃப்.ஐ.ஆரை எப்படியும் வளைக்கலாம். அது நிலையத் தின் அனுபவசாலிக்குக் கைவந்த கலை. உதாரணமாக, ஆயுதங்களுடன் கொலை மிரட்டல் வழக்குக்கு செக்ஷன் 506 (2) என்று பதிவுசெய்தால் ஜாமீன் கிடைக்காது. அதையே வெறும் மிரட்டல் என்று செக்ஷன் 506 (1)ல் பதிவுசெய்தால் ஸ்டேஷனில் இருந்து கையை வீசிக் கொண்டு வீட்டுக்குச் சென்றுவிடலாம். இப்படி ஒரு எண்ணை மாற்றி எழுதினாலே, வழக்கின் மொத்த ஜாதகத்தையே மாற்றிவிடலாம்.

கைதுக்கும் காசு!
பதிந்த எஃப்.ஐ.ஆர். மீது குற்றம்சாட்டப் பட்டவரைக் கைதுசெய்யவும் கைது செய்யாமல் இருக்கவும் பணத்தைத் தண்ணீராகச் செலவழிக்க வேண்டும். புகார்தாரர், குற்றம்சாட்டப்பட்டவர் இருதரப்பில் யாரிடம் அதிக பேரம் படிகிறதோ, அவருக்குச் சாதகமாக நடவடிக்கை பாயும். குற்றம்சாட்டப்பட்ட நபர் முன் ஜாமீனுக்கு விண்ணப்பித்தால், அதை ஆட்சேபிக்காமல் இருக்கவும் பணம் வேண்டும்.

ரெக்கவரி ரீல்!
மேற்கண்ட வகை வருமானம் எல்லாம் சட்டம் - ஒழுங்கு போலீஸாருக்கு மட்டும்தான். இவர்களுக்கு அன்றாட வருமானம் என்றால், குற்றப் பிரிவு போலீஸாருக்கு இரண்டொரு மாதங்களுக்கு ஒருமுறைதான் வருமானம். ஆனால், செம லம்ப் வருமானம். திருடு போன சொத்துகளை மோப்பம் பிடித்து, துப்புத் துலக்கி மீட்கும் கடமைஆற்றும் போலீஸாருக்கு ஒவ்வொரு வழக்கும் புதையல் வேட்டைதான். 100 பவுன் திருடு போய்விட்டதாகப் புகார் அளித்தால், உடனே எஃப்.ஐ.ஆர். போட மாட்டார்கள். ஆனால், உடனடியாக வியர்க்க விறுவிறுக்க தேடுதல் வேட்டை நடத்துவார்கள்.

எந்தத் திருடன், எந்த ஏரியாவில், எந்த ஸ்டைலில் தேட்டை போடுவான் என்பதெல்லாம் ஸ்டேஷன் காவலர்களுக்கு அத்துப்படி. திருடனை அமுக்கிப் பிடித்து, 'சிறப்பு விசாரணை’ மூலம் நகையை எங்கே பணமாக்கினான் என்று ஆதியோடு அந்தமாக உண்மையைக் கறந்துவிடுவார்கள். அண்ணா நகர், அமைந்தகரை தொடங்கி ஆம்பூர் வரை தான் கைவரிசை காட்டிய இடங்களை அவன் பட்டியல் இடுவான். அப்போது போலீஸ் உண்மையில் என்ன செய்ய வேண்டும்? ஒவ்வொரு ஏரியா காவல் நிலையத்திலும் அவன் மீது தனித்தனி எஃப்.ஐ.ஆர். பதிவுசெய்து, ஒவ்வொரு எஃப்.ஐ.ஆருக்கும் இறுதி அறிக்கை தயார் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தண்டனை வாங்கித் தர வேண்டும். அந்தந்த நிலைய விசாரணை அதிகாரி, அவரது எல்லையில் திருடுபோன சொத்துகளை மீட்டு, நீதிமன்றம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும்.

ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது? திருடன் நகையை விற்ற நபர்களிடம் அதட்டி மிரட்டி தங்கத்தை மீட்பார்கள். இப்படி 10 வழக்குகளுக்கான மொத்த திருட்டுச் சொத்தையும் ஒன்றுதிரட்டினால், 200 பவுனுக்குக் குறையாமல் கிடைக்கும். பிறகு, புகார்தாரரைக் கூப்பிட்டு பஞ்சாயத்து பேசுவார்கள்.
''அந்தப் பய எல்லாத்தையும் வித்து சாப்புட்டுட்டான். உங்களப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு. அதுவும் அடுத்த மாசம் பொண்ணுக்குக் கல்யாணம்கிறீங்க...

நாங்க வேணா ஒண்ணு செய்யறோம். வேற கேஸ்ல கொஞ்சம் நகை சிக்கி இருக்கு. அது முப்பது பவுன் தேறும். நீங்க ஒரு அமவுன்ட் கொடுத்தா, அதை எடுத்து உங்களுக்குச் சரிக்கட்டிடலாம்'' என்பார்கள். ஆட்களின் வசதியைப் பொறுத்து, லட்சங்களையோ ஆயிரங்களையோ பெற்றுக் கொண்டு... கட்டக் கடைசியாகத்தான் எஃப்.ஐ.ஆர். பதிவார்கள். 100 பவுனுக்கு 30 பவுன் திருடுபோனதாகப் பதிவுசெய்து... அதையும் வெற்றிகரமாக மீட்டுக் கொடுத்ததாக பத்திரிகையாளர்களை அழைத்துப் பேட்டி கொடுப்பார்கள். லாபம், 170 பவுன் ப்ளஸ் சில லட்சங்கள்! நாம் இதை நம்ப முடியாமல் பழுத்த அனுபவம் உள்ள சில கிரிமினல் லாயர்களிடம் விசாரித்தபோது, 'இது அனைத்தும் 100 சதவிகிதம் உண்மைதான்!’ என்றுஆமோதித்தார்கள். அட... ஆண்டவா!

ஏன் இந்தக் கொள்ளை?

காவல் நிலையங்களில் ஏன் இந்த அடாவடி வசூல்? இதில் ஒரு சின்ன உண்மை என்ன வென்றால், தங்கள் சுயலாபத் துக்கு மட்டுமே காவலர்கள் இப்படி வசூல் வேட்டை நடத்துவது இல்லை. காவல் நிலையத்தின் நிர்வாகச் செலவினங்களைச் சமாளிக்க இதைத் தவிர வேறு வழியில்லை என்று நேர்மையாகச் செயல்படும் பல காவலர்களே சொல்கிறார்கள்.

விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஒரு நபர், ஸ்டேஷனில் இருக்கும்வரை அவருக்கு உணவு, காபி, டீ முதலிய அத்தனையும் அந்தந்த காவல் நிலையத்தின் பொறுப்புதான். இப்படி விசாரணைக்கு அழைத்து வரப்படும் ஒரு நபரின் மூன்று வேளை உணவுச் செலவுக்கென அரசு வழங்கும் தொகை 10 ரூபாய் மட்டுமே. குற்றவாளியை விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லுதல், சம்பவம் நடந்த இடத்துக்கு அழைத்துச் செல்லுதல் போன்ற போக்குவரத்துச் செலவுக்கு அரசு பஸ் கட்டணம் மட்டுமே அரசின் அளவுகோல்.

விழிபிதுங்கும் கூட்ட நெரிசலில் நகரப் பேருந்துகளில் அக்யூஸ்டை அழைத்துச் செல்ல முடியுமா? ஆட்டோ தான் ஒரே வழி. கடைநிலைக் காவலர்கள் தங்கள் கைக்காசு மூலம்தான் அதைச் சமாளிக்க வேண்டும்.
இதைக்கூடச் சமாளித்துவிடலாம். ஆனால், உயர் அதிகாரிகள் இழுத்துவிடும் செலவுதான் பலரை மூச்சு முட்ட வைக்கும். உயர் அதிகாரி துப்பு துலக்கவோ... மோப்பம் பிடிக்கவோ ஏரியாவுக்கு வந்தால், அந்த ஊரின் நட்சத்திர ஹோட்டல் அறை, அவரது போக்குவரத்துக்கு ஏ.சி. கார், சாப்பாடு, சரக்கு முதல் 'மேற்படி’ச் செலவு வரை அனைத்துமே அந்தப் பகுதியின் காவல் நிலையப் பொறுப்புதான்.

காவல் நிலைய ஜீப்புக்கு அரசு மாதம் ஒன்றுக்கு 160 லிட்டர் டீசல் ஒதுக்கீடு செய்கிறது. இதை அந்தந்தப் பகுதியில் இருக்கும் அரசு பெட்ரோல் பங்க்குகளில் நிரப்பிக்கொள்ள வேண்டும். ஆனால், அந்த நிலையத் தின் உயர் அதிகாரிகள் தனது சொந்த வாகனத்துக்கு ஸ்டேஷன் ஜீப்பின் பதிவு எண்ணைக் கொடுத்து எரிபொருள் நிரப்பிக்கொள்வார். அப்படியெனில் ஸ்டேஷன் ஜீப்புக்கு? ஏரியா பெட்ரோல் பங்க்கில் மாமூலுக்குப் பதில் டீசல். இதுவும் இன்ன பிறவுமாக அனுதினமும் குவியும் செலவுகளைச் சமாளிக்கவே காவலர் கள் இப்படி வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் வசூல் மேளா நடத்துவதாக நியாயம் கற்பிக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொல்லும் கணக்குகளை எல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் அந்தச் செலவுகளெல்லாம் போலீஸார் அடிக்கும் கொள்ளையில் ஒரு சதவிகிதம்கூட இல்லை.

காவலர்கள் அனைவருமே ஊழல் புரிவது இல்லை. ஆனால், காவல் பணியை தங்கள் உயிர் மூச்சாக நினைத்துச் செயல்படுபவர்கள் சுமார் 30 சதவிகிதத்தினர் மட்டுமே. அதுவும் இன்றைய சூழலில் நேர்மை என்பது உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே, அதுவும் ஓரளவுதான் சாத்தியம். ஒரு ஆய்வாளர் தன் அளவில் மட்டுமே நேர்மையாக இருக்க முடியும். மற்றபடி தனது காவல் நிலைய எல்லைக்குள் போலீஸார் மாமூல் வசூலிப்பதைத் தடுக்க முடியாது. ஏனெனில், அந்தப் பணம்தான் ஒரு காவல் நிலையத்தை நிர்வகிக்கும் என்கிற யதார்த்த உண்மை அவருக்குப் புரிந்திருக்கும்.

போலீஸாருக்கு டூட்டி நேரம் எல்லாம் எதுவும் கிடையாது. 24 மணி நேரமும் வேலை நேரம்தான். காவல் நிலைய ஆட்களின் எண்ணிக்கையைப் பொறுத்து, அவர்களுக்குள் வேலை நேரத்தைப் பிரித்துக்கொண்டு தூக்கம், சாப்பாடு மற்றும் குடும்பத்துக்கு மிகச் சொற்ப நேரத்தை ஒதுக்கிக்கொள்வார் கள். காக்கிச் சட்டையின் கம்பீரத்துக்கும் அங்கீகாரத்துக்கும்... அதற்கு மேல் கிடைக்கும் வருமானத்துக்கும் இவர்கள் கொடுக்கும் விலையும் மிக அதிகமே.

நன்றி: ஆனந்தவிகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Assembly Election 2026 - Polling Personnel Training Schedule

ASSEMBLY ELECTION 2026 - POLLING PERSONNEL TRAINING SCHEDULE - WhatsApp Information  All Polling Personnel are requested to attend the train...