கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 இ.பி.எஃப் (EPF - Employee Provident Fund) பென்ஷன்... என்ன சொல்கிறது தீர்ப்பு?

 இ.பி.எஃப் பென்ஷன்... என்ன சொல்கிறது தீர்ப்பு? (நன்றி : விகடன்.com )

ஓய்வுபெறும் ஓர் ஊழியர் இ.பி.எஃப்  பென்ஷன் பெறுபவராக இருந்தால், அவரின் கடைசிச் சம்பளம் லட்சம் ரூபாயாகவே இருந்தாலும், பொதுவாக அவருக்கான பென்ஷன் 15,000 ரூபாய்க்கே கணக்கிடப்படும். இந்த 15,000 ரூபாய்க்கும் பென்ஷன் கணக்கிடப்படுமா எனக் கேட்டல், கிடையாது. பணியாளர் கடைசியாக வாங்கும் சம்பளம் ரூ.15,000 (அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படி) என்று வைத்துக் கொண்டால், 12,511 ரூபாய்க்குத்தான் பென்ஷன் கணக்கிடப்படும். அதாவது, கடைசி சம்பளத்தை அடிப்படையாக வைத்து பென்ஷனைக் கணக்கிடாமல், அந்த ஊழியரின் கடைசி ஐந்து வருடங்களில் பெற்றிருந்த சம்பளத்தின் சராசரிக்கே பென்ஷன் கணக்கிடப்படும். 

இந்தக் கணக்கீட்டு முறை தன்னிச்சையானது  என்று கேரள உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து, மேல்முறையீடு செய்தது இ.பி.எஃப் அமைப்பு. ஆனால், கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதே என்று உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம்.

இந்தத் தீர்ப்பினால் இ.பி.எஃப் திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கு இனி கிடைக்கப்போகும் பணப்பலன் என்னென்ன என்று பார்ப்போம்.

* நாற்பது ஆண்டுகாலப் பணியை நிறைவு செய்து, ஒரு லட்சம் ரூபாய் கடைசி சம்பளத்துடன்  ஓய்வுபெறும் அரசு ஊழியருக்குக் கிடைக்கும் பென்ஷன் ரூ.50,000-ஆக இருக்கும்.

இதே கடைசி  சம்பளத்துடன் 33 ஆண்டுகள் பணி செய்து ஓய்வுபெறப்போகும் இ.பி.எஃப் ஊழியரின் இ.பி.எஸ் பென்ஷனும் 50,000 ரூபாயாகவே இருக்கும். இந்தத் தீர்ப்புக்கு முந்தைய கணக்கீட்டின்படி பெற்ற இ.பி.எஸ் பென்ஷன் வெறும் 7,500 ரூபாயாகவே இருந்திருக்கும்.

அதுமட்டுமல்ல, அரசுப் பணியினரின் அதிகபட்ச மாதச் சம்பளம் ரூ.2.5 லட்சம். எனவே, அதிகபட்ச அரசு பென்ஷன் ரூ.1.25 லட்சம்தான். இ.பி.எஸ்-ல் அதிகபட்ச சம்பள வரம்பு எதுவும் இல்லாததால், அரசு ஊழியரைவிடவும் கூடுதல் பென்ஷன் பெறவும் வாய்ப்புண்டு.

அதேநேரத்தில், உறுப்பினர் இ.பி.எஃப் கணக்கில் சேரும் தொகை குறைவாக இருக்கும். அதனால், அவர் இடையிடையே கடனாகப் பெறும் தொகையும் குறைவாக இருக்கும். மேலும், இறுதியாகக் கிடைக்கும் பி.எஃப் தொகையும் மிகக் குறைவாக இருக்கும்.

தீர்ப்பின் தொடர் விளைவுகள்

மத்திய அரசுப் பணியினரின் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.9,000-ஆகவும், தமிழக அரசின் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.7,850-ஆகவும் உள்ளபோது, இ.பி.எஸ் தரும் குறைந்தபட்ச பென்ஷன் 1,000 ரூபாய் மட்டுமே என்பதால், பல்வேறு நிறுவனங்களில் சிறிது சிறிது காலம் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்கள், தனது பணிக்காலத்தை ஒருங்கிணைத்து பென்ஷன் பெறும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்திருக்கலாம்.

இந்தத் தீர்ப்பின் பலனாக, அசல் சம்பளத்துக்கே பென்ஷன் கணக்கீடு என்றானதால், துண்டு துண்டுகளாகச் சிதறிக்கிடக்கும் தனது பணிக் காலத்துக்கு சான்றிதழ்களைப் பணி செய்த நிறுவனங்களில் பெற்று, பென்ஷனுக்கு முயற்சி  செய்யலாம். இதனால் பென்ஷன் பெற இருப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம்.

பி.எஃப் டிரஸ்ட்

இ.பி.எஃப் அமைப்பு (EPFO) தனது சந்தாதாரர் களுக்கு மட்டும் பென்ஷன் வழங்கவில்லை. இந்த அமைப்பில் இணையாத 1,552 நிறுவனங்கள் உள்ளன. இத்தகைய நிறுவனங்கள் தனது ஊழியர்களின் பி.எஃப் சந்தாவை இ.பி.எஃப் அமைப்புக்குச் செலுத்துவதில்லை. ஊழியர்களின் பி.எஃப் கணக்கை தாமே பராமரித்துக் கொள்கின்றன.

தனது பி.எஃப் கணக்கை தானே நிர்வகித்துக் கொள்ளும் பிற நிறுவனங்களின் மொத்த ஊழியர் எண்ணிக்கை சுமார் 80 லட்சம். இந்த நிறுவனங் களுக்கும் பென்ஷன் வழங்கும் பொறுப்பு இ.பி.எஃப் அமைப்புக்குத்தான் உள்ளது.

அதாவது, உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி இனி மொத்தம் ஏழு கோடியினருக்குக் கூடுதலான பென்ஷன் தொகை வழங்கப்பட வேண்டும். இதற்கான நிதி ஆதாரம் இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.

நிதி ஆதாரம்

* ரூ.15,000 என்ற உச்சவரம்புக்கு 8.33% பணம் செலுத்திவிட்டு, அசல் சம்பளத்துக்கு பென்ஷன் பெற இயலாத நிலையே உள்ளது. ஆனாலும், பென்ஷன் பங்களிப்பை உயர்த்தி வசூலிக்க தற்போதைய விதிமுறைகளில் இடமில்லை என்பதும் முக்கியமான விஷயம்.

*  அசல் சம்பளத்துக்கு ஏற்றவாறு அதிகமான சந்தா செலுத்தியவர்களுக்கும், 15,000 பணவரம்பைக் கணக்கிட்டு சந்தா செலுத்தியவர் களுக்கும் தனித்தனியாக கணக்கு வைத்துப் பராமரிப்பது இதுவரையில் நடைமுறையில் இல்லாத ஒன்று.

* உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி உயர்த்தப்பட்ட பென்ஷனை வழங்கத் தேவையான நிதியானது ஊழியரின் பி.எஃப் கணக்கிலிருந்து பெற வேண்டியிருக்கலாம். ஆனால், சுமார் 1552 நிறுவனங்கள் தனது ஊழியர்களின் பி.எஃப் பணத்தைத் தாமே நிர்வகித்து வரும்போது, இந்த நிறுவனங்களிடமிருந்து பி.எஃப் பணத்தைப் பெறுவதில் நிர்வாக ரீதியான சிரமங்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

தீர்ப்பு தீர்க்கமானது

ஆனாலும், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு தீர்க்கமானது என்பதால், இந்தத் தீர்ப்பினை நடைமுறைப்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படலாம்.

அப்படி வகுக்கப்படும்போது இ.பி.எஸ் பயனாளிகள் மூன்று வகைகளாக இருக்கக்கூடும்.

1. ஏற்கெனவே ஓய்வுபெற்றவர்கள்

இவர்கள் கூடுதல் பென்ஷன் பெற கையிருப்பிலுள்ள பி.எஃப் தொகையை, தேவையான அளவுக்குத் திரும்பச் செலுத்தலாம். அல்லது பி.எஃப் தொகையை லாபகரமான முறையில் முதலீடு செய்துவிட்டு, பழைய நடைமுறைப்படி பென்ஷன் பெறலாம். இதில் எதை அவர்கள் தேர்வு செய்கிறார்கள் என்பதைப் பொறுத்து நடைமுறை மாறக்கூடும்.

2. ஓய்வு பெறப்போகிறவர்கள்

உயர்த்தப்பட்ட பென்ஷனைப் பெறத் தேவையான தொகையானது இவர்கள் தரும் அனுமதியைப் பொறுத்து, உறுப்பினரின் பி.எஃப் நிதியிலிருந்து பெறப்படலாம்.

3. புதிய ஊழியர்கள்

இவர்களைப் பொறுத்தவரை, பென்ஷன் கணக்கீட்டில் எந்தவொரு தடங்கலும் இருக்காது. ஏனென்றால், தொடக்கத்திலிருந்தே இவர்களது பென்ஷன் பங்களிப்புத்தொகை, அவர்களது அசல் சம்பளத்துக்கே பிடித்தம் செய்யப்பட்டுவிடும்.

என்.பி.எஸ் முன்மாதிரி

என்.பி.எஸ் சந்தாதாரர்களாக உள்ள மத்திய அரசு ஊழியர்கள், தனது பென்ஷன் பங்களிப்பாக தனது சம்பளத்தில் 10% தொகையைச் செலுத்து கிறார்கள். இதற்கு இணையான பணத்தை (10%) மத்திய அரசும் செலுத்திவந்தது.

01.04.2019 முதல், என்.பி.எஸ்-க்கான மத்திய அரசின் பங்களிப்பு 10 சதவிகிதத்திலிருந்து 14 சதவிகிதமாக உயர்த்தப்பட்டிருக்கிறது.

ஆக, தற்போது   என்.பி.எஸ்-ல் சேரும் தொகை அதாவது 10 + 14 = 24%

இப்படிச் சேர்க்கும் பணம் மொத்தத்தையும் கடைசிவரை விட்டுவைத்தால், கடைசியாகப் பெறும் சம்பளத்தில் 50 சதவிகிதத்துக்கும் அதிகமாக பென்ஷனை ஓய்வுக்காலத்தில் பெற வாய்ப்புண்டு. 

அப்படிப் பார்த்தால், இ.பி.எஃப் சந்தாவும் (12+12) 24 சதவிகிதம்தான். பென்ஷனுக்கான முதலீடு போக, நிகரத்தொகை பி.எஃப் தொகைக்கு நிகரானதாகவே அமையக்கூடும்.

எனவே, கடைசிச் சம்பளத்தில் சரிபாதியான 50 சதவிகிதத் தொகையை பென்ஷனாகப் பெறுவதிலும், பி.எஃப்-க்கு இணையான தொகையைப் பெறுவதிலும் தடையேதும் இருக்காது.

எனவே, இனிவரும் காலத்திலாவது  இ.பி.எஃப் பயனாளிகளுக்குக் கூடுதலான பென்ஷன் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம்.

ப.முகைதீன் சேக்தாவூது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது - பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் அறிக்கை...

 பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை   ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது: அது அவர்களுக்கு இ...