தேர்தல் நாளன்று வாக்காளர்கள் அனைவருக்கும் கையுறை...



 கொரோனா பரவலை தடுக்க, தேர்தல் அன்று ஓட்டளிக்க வரும் அனைவருக்கும், கையுறை வழங்கப்படும். வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளருடன் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.


அவர் அளித்த பேட்டி:

தமிழக சட்டசபை தேர்தல், ஏப்ரல், 6ல் நடக்க உள்ளது. சட்டசபை தொகுதிகளிலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியிலும், வரும், 12ம் தேதி மனு தாக்கல் துவங்குகிறது; 19ம் தேதி நிறைவடையும். கொரோனா தொற்று பரவலை தடுக்க, பல்வேறு புதிய விதிமுறைகளை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி உள்ளது. வேட்பு மனு தாக்கலின் போது, வேட்பாளருடன் இருவர் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவர். தமிழகத்தில், ஜனவரி, 20 வரை, 68 ஆயிரத்து, 324 ஓட்டுச்சாவடிகள் இருந்தன.


கொரோனா பரவல் காரணமாக, ஓட்டுச்சாவடிகள் எண்ணிக்கை, 88 ஆயிரத்து, 937ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தேர்தல் பணியாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மொத்தம், நான்கு லட்சத்து, 79 ஆயிரத்து, 892 பேர், தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் முடிந்து, ஓட்டு எண்ணிக்கை, 76 மையங்களில், மே, 2ல் நடக்க உள்ளது. பதற்றமான ஓட்டுச்சாவடிகள் உட்பட, 50 சதவீத ஓட்டுச்சாவடிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. பணப்பட்டுவாடாவை தடுக்க, வாகன சோதனை நடத்த, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும், மூன்று பறக்கும் படை, மூன்று நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


அந்த வாகனங்கள் எங்கு செல்கின்றன என்பதை கண்காணிக்க, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள், அந்தந்த மாவட்ட எஸ்.டி.டி., கோடு எண்ணுடன், '1950'ல் தொடர்பு கொள்ளலாம். இந்த தொலைபேசி எண், 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருக்கும். அனைத்து தொலைபேசி பேச்சுகளும், பதிவு செய்யப்படும். யார் புகார் தெரிவித்தாலும், சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில், 1800 4252 1950 என்ற, கட்டணமில்லா தொலைபேசி எண் உள்ளது. இந்த எண்ணும், 24 மணி நேரம் பயன்பாட்டில் இருக்கும்.


புகார்களை பெற, 25 பேர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தேர்தல் அன்று, ஓட்டுச்சாவடியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும். ஓட்டுப்போட வரும் அனைவரும், முக கவசம் அணிந்து வர வேண்டும். ஓட்டுப்போட வரும் அனைவருக்கும் கையுறை வழங்கப்படும். அதை அணிந்து தான் ஓட்டளிக்க வேண்டும். வாக்காளர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப்படும். காய்ச்சல் இருந்தால், அவர்கள் மருத்துவர் சான்றிதழ் பெற்ற பின், கடைசி ஒரு மணி நேரம், உரிய பாதுகாப்பு உடைகள் அணிந்து, ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர். பாதுகாப்பு உடைகளை, தேர்தல் கமிஷன் வழங்கும். இவ்வாறு, சத்யபிரதா சாஹு கூறினார்.


ரூ.23.75 கோடி பறிமுதல்

தமிழகத்தில், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, நேற்றுமுன்தினம் வரை, மொத்தம், 32.03 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில், 23.75 கோடி ரூபாய் ரொக்கம். மேலும், 6.5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம்; 77 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 129 கிலோ வெள்ளி; 21.75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. 

தமிழில், 'சி விஜில்' 

பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க, 'CVIGIL' என்ற மொபைல் செயலியை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலியை, ஆங்கிலம், ஹிந்தி தெரிந்தோர் மட்டுமே பயன்படுத்தும் நிலை உள்ளது. ஓரிரு நாளில், தமிழிலும் பயன்படுத்த வழி வகை செய்யப்படும் என, சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...