வெப்பநிலை உயர்வால் கொதிக்கும் ஃபிரான்ஸ்
France sweltering due to rising temperatures
ப்ரான்சில் வரலாறு காணாத அளவு வெப்பம் நிலவி வருகிறது.
பாலைவனத்தில் தகிக்கும் சவுதி அரேபியாவின் மக்கா மாநகரை விடவும் ப்ரான்சின் பாரிசில் வெப்பம் அதிகமாக நிலவி வருகிறது என்பது எத்தகைய பெரிய முரண்.
கடந்த திங்கள் அன்று ப்ரான்சு அதன் வரலாற்றிலேயே உஷ்ணமான நாளை அனுபவித்தது குறிப்பிடத்தக்கது.
இத்தனைக்கும் அங்கு பல்வேறு இடங்களிலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் தான் நிலவுகிறது.
நீங்கள் கேட்கலாம்..
நாங்களாம் இதே 40 டிகிரி செல்சியஸ்
வெப்பத்தில் சூடான டீ அடிப்போமே
40 டிகிரிலாம் ஒரு வெப்பமா? என்று கேட்கலாம்.
ப்ரான்சின் சராசரி வெப்பம் வெறும் 11 டிகிரி முதல் 13 டிகிரி செல்சியஸ்ங்க..
வெயில் காலத்தில் கூட அதிகபட்சம் 24-28 டிகிரி தான் அங்கு வெப்பமே இருக்கும்.
உங்களுக்கு இன்னொரு விஷயம் சொல்றேன் ரொம்ப அதிர்ச்சியாக இருக்கும்..
அங்கு பெரும்பான்மையான இடங்களில் ஏசி கிடையாது. இன்னும் ஏன் ஃபேன் கூட கிடையாது
காரணம் அதற்குத் தேவையும் அங்கு இல்லை.
ஆனால் திடீரென்று மாறிய இத்தகைய வெப்பமான சூழ்நிலையை அந்நாட்டு மக்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.
வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளில் குளிக்கச் சென்ற 40 இளைஞர்கள் மரணமடைந்துள்ளனர்.
அடைபட்ட காரில் சிக்கிக் கொண்ட 2 மற்றும் 4 வயது சிறுவர்கள் இருவர் வெப்ப வாதம் ஏற்பட்டு இறந்துள்ளனர்.
போர்டியா நகரில் 80-95 வயதுடைய மூன்று முதியோர் இறந்துள்ளனர்.
இரவு நேர வெப்பமே 30 டிகிரி செல்சியஸ் நிலவி வருவதால் குளிரூட்டியும் இல்லாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ஈஃபிள் டவருக்கு முன் உள்ள செயற்கை நீர் சுனையில் மக்கள் குளித்து வருகின்றனர்.
இத்தகைய வானிலை மாற்றத்துக்குக் காரணம் "ஒமேகா தடை" வானிலை என்று அழைக்கப்படுகிறது.
கிரேக்க எழுத்துகளில் ஒமேகா எழுத்து Ω
இப்படி குண்டானைக் கவிழ்த்தது போல இருக்கும்.
இத்தகைய ஒமேகா வடிவில் வட ஆப்ரிக்காவில் இருந்து வரும் வெப்பக்காற்றை தன்னகத்தே வைத்துக் கொண்டு மேற்கு ஐரோப்பாவை அவித்து வருகிறது எனலாம்.
இந்தக் காற்று மிகவும் மெதுவாக நகர்வதால், வெப்பத்தில் இருந்து தப்பிக்க லேசான காற்று கூட அடிக்காமல் வெப்பம் உயர்ந்து வருகிறது.
வீட்டில் ஏசி ஃபேன் இல்லாமல் இத்தகைய சூழ்நிலையை சமாளிப்பது மிக மிகக் கடினம் என்பதால் குழந்தைகளுக்கு பள்ளிகள் விடுமுறையும் வேலை நேரங்களைக் குறைத்தும் இயங்கி வருகின்றன.
நாளின் பிற்பகுதி தான் முற்பகுதியை விட அதிக வெப்பத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரிட்டனில் கெண்ட் நகரில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக வீட்டில் யாரும் தோட்டத் தண்ணீர்க் குழாயை உபயோகிக்கக் கூடாது என்று தற்காலிகத் தடை விதிக்கும் அளவு நிலை சென்று வருகிறது.
சூப்பர் எல்நினோவின் பாதிப்பை இந்திய தீபகற்பம் சந்தித்து வரும் சூழ்நிலையில்
ஒமேகா ப்ளாக் காரணமாக மேற்கு ஐரோப்பிய நாடுகள் வெப்பத்தால் தகிப்பது, மாறி வரும் வானிலை சூழல்கள் மக்களை பாதித்து வருகிறது. அதனால் ஏற்படும் உடல் நிலை பாதிப்புகளும் அதிகரிக்கின்றன.
வானிலை / காலநிலை மாற்றங்கள் குறித்து நாம் அதிகம் அறிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகி இருக்கிறது.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.