கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"Kakapo" வைக் காப்பாற்றிய Rimu பழம்

 


"காகாபோ" வைக் காப்பாற்றிய ரீமு பழம்  


நியூஸிலாந்து மற்ற பெரிய நிலப்பரப்புகளில் இருந்து துண்டிக்கப்பட்டதால், மனிதர்கள் வரும் முன் அங்கே பெரிய பறவைகள் வாழ்ந்து வந்தன.


அதில் முக்கியமானது காகாபோ (Kakapo). உலகிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் அழகான பறவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இது கிளிகளின் குடும்பத்தைச் சேர்ந்தது என்றாலும், இது உலகிலேயே பறக்க முடியாத ஒரே கிளி ஆகும்.


காரணம், நியூஸிலாந்தில் தரை இறங்கியபின் நிலத்தில் நிறைய உணவுகள் கிடைத்தன. கிளிகளை வேட்டையாட பூனை, நரி என எந்த மிருகமும் இல்லை. வானில் பறக்கும் கழுகுகள் மட்டுமே இவற்றை வேட்டையாடும். அதன்பின் எதற்காக வானில் பறக்க வேண்டும்? தரையிலேயே வாழ்ந்தால் என்ன? அதிலும் கழுகுகள் கண்ணில் படாத வகையில் இரவில் மட்டுமே நடமாடி, பகலில் தூங்கும் நாக்டர்னல் வகை பறவையாக மாறினால் என்ன?


ஆக, அடுத்த பல மில்லியன் ஆண்டுகளில் இந்த டீல் காகாபோ கிளிகளுக்கு மிகச் சாதகமானதாக மாறியது. இவை நியூஸிலாந்து எங்கும் பல்கிப் பெருகின. இவற்றின் எடையும் நான்கு கிலோ அளவுக்கு அதிகரித்தது. இவற்றின் ஆயுளும் நூறாண்டுகளாக மாறியது. உலகிலேயே மிக நீண்ட ஆண்டுகள் வாழும் பறவைகளில் ஒன்றாக மாறியது காகாபோ.


அதன்பின் பல மில்லியன் ஆண்டுகள் கழித்து மனிதர்கள் நியூஸிலாந்தில் இறங்கினார்கள். நான்கு கிலோ கோழிகள் கிடைத்தால் எப்படி இருக்கும்? உணவுக்காகவும், சிறகுக்காகவும் இவை வேட்டையாடப்பட்டன. மனிதர்களுடன் வந்த பூனைகள் இவற்றை வேட்டையாடின.


1980களில் கிட்டத்தட்ட அழிந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், எங்கோ ஒரு பள்ளத்தாக்கில் 51 கிளிகள் மட்டுமே மீதமிருந்தன. அவை அனைத்தையும் கைப்பற்றிய நியூஸிலாந்து அரசு, மனிதர்கள், பூனைகள், எலிகள் என எவையுமே இல்லாத தொலைதூர தீவு ஒன்றை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அங்கே இவற்றை கொண்டு சேர்த்தது.


இவற்றுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதிகள், கூடுகள் அனைத்தும் வழங்கப்பட்டன. முழு தீவும் உங்களுக்குத்தான். ஒரு ராணுவமே உங்கள் பாதுகாப்புக்கு நிற்கிறது. தயவு செய்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு, சந்ததியை பெருக்குங்கய்யா என்றார்கள் விஞ்ஞானிகள்.


ஆனால் கிளிகள் கலவியில் ஈடுபட மறுத்தன. அடுத்த சில ஆண்டுகளில் இனப்பெருக்கமே நடக்கவில்லை. குஞ்சுகள் பிறக்கவில்லை. இப்படியே விட்டுவிட்டால் இனம் அழிந்துவிடும்.


ஏன்? இந்த கிளிகளுக்கு என்னதான் வேண்டும்?


விஞ்ஞானிகள் மண்டையை உடைத்துக் கொண்டார்கள். அப்போது ஒரு சீசனில் கிளிகள் திடீரென கலவியில் ஈடுபட்டன. அதன்பின் சில குஞ்சுகள் உருவாகின. அதன்பின் பல ஆண்டுகள் மீண்டும் அமைதி.


"இந்த ஆண்டு என்ன நடந்தது?" என யோசிக்கையில், தீவில் ரீமு (Rimu Trees) மரங்கள் கனிந்து ரீமு பழங்கள் உருவானது நினைவுக்கு வந்தது. காகாபோ கிளிகள் ரீமு பழத்தை விரும்பி சாப்பிடும். ஆனால் கலவிக்கும் ரீமு பழத்துக்கும் என்ன தொடர்பு?



அதன்பின் நியூஸிலாந்தில் இருந்து ரீமு பழங்களை கொண்டுவந்தபின் மீண்டும் கிளிகள் கலவியில் இறங்கின. ஆக, ரீமு பழம்தான் இவற்றின் இனப்பெருக்கத்தை துண்டும் காரணியா என்ன? அதில் என்ன மாயமந்திரம் உள்ளது?


ரீமு பழங்களை ஆராய்ந்ததில் அதில் ஏகப்பட்ட கால்சியமும், வைட்டமின் டி3-உம் இருப்பது தெரியவந்தது. இரவில் மட்டுமே நடமாடுவதால் இக்கிளிகளுக்கு சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி3 கிடைக்கும் வாய்ப்பு இல்லை. இயற்கையில் ஒரு கனியில் வைட்டமின் டி3 இருக்கும் என்பதே அதுவரை அறிவியலுக்கு தெரியாது. ஆனால் இக்கிளிகளுக்கு தெரிந்துள்ளது. கால்சியமும், வைட்டமின் டி3-உம் இருந்தால்தான் முட்டை ஓடு வலுவாக ஆகி, குஞ்சுகளுக்கு சத்து கிடைக்கும். ரீமு பழம் இவற்றின் பிரீநேட்டல் வைட்டமின் மாதிரி.


ரிமு மரங்களில் பழங்கள் காய்க்கும்போது, ஆண் காகபோக்கள் "பூமிங்" (Booming) எனப்படும் அதிர்வலை ஒலிகளை எழுப்பி பெண் காகபோக்களை ஈர்க்கின்றன.


இந்த ரகசியம் பிடிபட்டவுடன், ரீமு பழங்களை கொடுத்து கிளிகளின் எண்ணிக்கையை பெருக்கினார்கள். இன்று இவற்றின் எண்ணிக்கை 250 தாண்டியது. ஒரு வைரத்தை விட விலை உயர்ந்தது இவற்றின் முட்டை எனும் அளவுக்கு இவற்றின் இனம் அழியாமல் பாதுகாத்து, ரீமு பழத்தின் மர்மங்களையும் உடைத்த நியூஸிலாந்து அரசு நம் பாராட்டுக்கு உரியதுதானே?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-07-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-07-2026 ; School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்