கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மருத்துவ தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருத்துவ தகவல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கான்சியா : தாய்ப்பால் விழிப்புணர்வு வார தகவல்

 


கான்சியா : தாய்ப்பால் விழிப்புணர்வு வார தகவல்


தென்கிழக்கு ஆசிய நாடுகளுள் ஒன்று 

லாவ்...

அருகில் உள்ள பந்தமான நாடுகள்

வியட்நாமும் 

தாய்லாந்தும் 

கம்போடியாவும்


1950 களில் 

லாவ் நாட்டை பிரெஞ்சு காலணி ஆதிக்கத்தில் இருந்து மீட்பதற்கான 

விடுதலைப் போர் நடந்து கொண்டிருந்தது. 


இதற்கு ஆதரவாக அருகில் உள்ள வியட்நாம் நாட்டின் ராணுவம் நேசக்கரம் நீட்டியது. 


ஹுவாய் துவா எனும் நீரோடை இருக்கும் பகுதியில் 

உக்கிரமான போரின் விளைவால் 

அமெரிக்க படைகள் - வியட்நாம் வீரர்களின் ஆயுதக்கிடங்கு மற்றும் தங்குமிடங்களை குண்டுகளிட்டு அழித்தனர். 


அதில் வியட்நாம் ராணுவ வீரர்களும் பாதிப்புக்குள்ளாகினர். 


அவர்களுக்கு உணவு செல்லும் வழியும் 

தடைபட்டுப் போனது. 


இந்த சூழ்நிலையில் 

வியட்நாம் முகாமில் ஒரு ராணுவ வீரருக்கு 

அனோஃபிலஸ் கொசு வகையினால் பரப்பப்படும் மலேரியா காய்ச்சல் வரவே 


அருகில் இருந்த கிராமத்திற்கு 

உதவி கேட்டு ராணுவ வீரர்கள் வந்தனர். 


அப்போது கான்சியா  எனும் 18 வயது நிரம்பிய அப்போது தான் தனது முதல் குழந்தையை ஈன்று பால் கொடுக்கும் காலத்தில்  பெண்ணொருத்தி இருந்தார். 

  

அவரிடம் சென்ற ராணுவ வீரர்கள் 

"உயிருக்கு மன்றாடும் வியட்நாம் நாட்டு சகோதரனுக்கு தங்களின் பாலைத் தந்து உதவ வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர். 


அக்காலத்தில் மட்டுமன்று 

இக்காலத்தில் கூட மற்றொரு சிசுவுக்குத் தாய்ப்பால் தருவதற்கே பல முறை சிந்திப்போம் தானே.. 


அப்போது நிலவி வந்த மூடநம்பிக்கைகள் அனைத்தையும் உடைத்து 

தன்னை நம்பி வந்த ராணுவ சகோதரனின் உயிரைக் காப்பாற்ற தனது தாய்ப்பாலைச் சுரந்து கொடுத்தார் கான்சியா. 


அந்தப் பாலைப் பருகி கூடவே மூலிகை சிகிச்சையும் மேற்கொண்டு  மலேரியாவில்  இருந்தும் மீண்டார் அந்த ராணுவ வீரர். 


பல போராட்டங்கள் உள்நாட்டுப் போர்கள் முடிவில் 1975 இல் லாவ் விடுதலை பெற்றது. பிறகு வியட்நாம் வீரர்கள் அனைவரும் அவர்கள் சொந்த நாடு திரும்பினர்.


தற்போது 50 ஆண்டுகள் கழித்தும் 

அந்த இருநாட்டு நல்லுறவு தூதர் 

உரையாற்றும் போது 

"இருநாடுகளுக்கு  இடையே உள்ள பந்தம் - சகோதரி கான்சியா தந்த தாய்ப்பாலால் இன்னும் உறுதிப் படுத்தப்பட்டிருக்கிறது"  என்றார். 


சகோதரி கான்சியா அவர்கள் 

அதற்குப் பிறகு 12 மகவுகள் ஈன்று 

தற்போது தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகளுடன் அதே கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். 


தாய்பால் கொடையாகத் தந்த இந்த சகோதரியைப் பற்றி இன்று எழுதுவதற்கான காரணம் இருக்கிறது. 


ஆகஸ்ட் முதல் வாரம் 

தாய்ப்பால் விழிப்புணர்வு வாரமாகும்.


தாய் சுரக்கும் தாய்ப்பால் 

அவர் சிசுவுக்கும் உதவுகிறது

மிஞ்சும் பாலை பால் வங்கிக்கு வழங்கினால் தாயற்ற பல சிசுக்களுக்கும் உதவும். 


தாய்ப்பால் வழங்குவது தாயின் கடமை

தாய் மற்றும் சேய் இருவரையும் அரவணைப்பது தந்தையின் கடமை. 


அன்புத் தாய்மாரே 

எங்கு இருந்தாலும் 

எந்தப் பணி செய்தாலும் 

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்கிடுங்கள் 


பெரியோரே சகோதரரே 

மக்கள் கூடும் இடத்தில்

முக்கியமாக பணி செய்யும் இடத்தில் 

தாய்ப்பால் வழங்கப்படுவதற்கு ஏற்ற சூழலை உண்டாக்க முன்னுரிமை வழங்கிடுவோம். 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


ECG எடுத்தல் : இந்தியா மற்றும் அமெரிக்கா மருத்துவ நிலை



 ECG எடுத்தல் : இந்தியா மற்றும் அமெரிக்கா மருத்துவ நிலை


விசித்திரமான வரலாறு 


இப்போதெல்லாம் நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டால்  

- உடனே மருத்துவமனைக்கு விரைந்து சென்று ஈசிஜி எனும் இதய சுருள் படம் எடுத்துப் பார்க்க வேண்டும் என்பது 

பெரும்பான்மையினருக்கு தெரியும்


இதய ரத்த நாள அடைப்பை ஹார்ட் அட்டாக் என்கிறோம். அடைப்பு ஏற்பட்டதில் இருந்து மூன்று மணிநேரமே பொன்னான நேரம் என்று கணக்கில் கொள்ளப்படுகிறது


அதற்குள் சிகிச்சை செய்து அடைப்பை நீக்க வேண்டும். 


நிற்க


 இங்கிருந்து செப்டம்பர் 23,1955 

அமெரிக்காவுக்கு செல்வோம்


பனிப்போர் காலம்


இரண்டாம் உலகப்போரை வென்ற அதிபர் ட்ரூமன் இறக்க 

இரண்டாம் உலகப்போரில் நேச நாடுகள் படையை தலைமை ஏற்று நடத்திய போர்த்தளபதி எய்ஸன்ஹோவர் அமெரிக்காவின் அதிபரானார். 


தனது அலுவலக பணிகளில் இருந்து ஒரு நாள் ஓய்வு எடுத்துக் கொண்ட அவர் செப்டம்பர் 23,1955 அன்று காலை கோல்ஃப் விளையாடிக் கொண்டிருக்கும் போது 

நெஞ்செரிச்சலாக இருப்பதை உணர்ந்தார். 


அவரது சிறப்பு மருத்துவர் டாக்டர் ஹோவார்ட் ஸ்நைடர்

நெஞ்செரிச்சலுக்கான மருந்துகளை வழங்கினார். 


எனினும் நெஞ்செரிச்சல் அதிகமானதேயன்றி குறைந்தபாடில்லை. 


இது வயிற்றுப் பிரச்சனை இல்லை. இதய ரத்தநாள அடைப்பாக இருக்கக்கூடும் என்று உணர்ந்த மருத்துவர் ஸ்நைடர் 

  அதிபரை மருத்துவமனைக்கு பத்து மணிநேரங்களுக்குப் பிறகு அன்றிரவு பரிந்துரைத்தார். 


பரிந்துரைக்கும் போது இதய ரத்த நாளத்தை விரிவடையச் செய்யும் அமைல் நைட்ரேட் மற்றும் நெஞ்சு வலியை குறைக்க உதவும் மார்ஃபின் ஆகியவற்றை தந்தார். 


மார்ஃபின் விளைவால் அதிபர் நன்றாக உறங்கி விட்டார். 

மறுநாள் காலை எழுந்தும் நெஞ்சு வலி விட்டபாடில்லை. 


அருகில் உள்ள மற்றொரு மருத்துவமனையில் இருந்து ஈசிஜி எடுக்கும் உபகரணம் கொண்டு வரப்பட்டு ஈசிஜி எடுக்கப்பட்டது. 


முந்தைய நாள் அறிகுறி தோன்றிய அதிபருக்கு 

அடுத்த நாள் காலை எடுக்கப்பட்ட ஈசிஜியில் இதய ரத்த நாள அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. 


அப்போதெல்லாம் இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டாலும் 

இப்போது இருப்பது போல 


எக்கோ கிடையாது 

ஆஞ்சியோ கிடையாது 

ஸ்டெண்ட் கிடையாது 

இதய தசைகள் காயமாகியுள்ளதை அறியும் நொதிகள் பற்றி அறிவியல் அறிந்திருக்கவில்லை


இதய ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும் லோடிங் டோஸில்

உள்ள ஆஸ்பிரின் அப்போது காய்ச்சலுக்கும் மூட்டு வலிக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த மருந்தாகும். 


ரத்த நாள அடைப்புக்கு வழங்கப்படும்

க்லோபிடோக்ரெல் / ஸ்டேடின் போன்ற மாத்திரைகள் கண்டறியப்படவில்லை


அப்போது இதய ரத்த நாள அடைப்பு வந்தால் 30-40% மரணம் தான் 

உயிர் பிழைத்தாலும் பலம் குன்றிய இதயத்துடன் சில காலம் வாழ்ந்து மரணிக்க வேண்டியது தான். 


உலகின் வல்லரசின் அதிபராக இருந்தாலும் அதே நிலைமை தான். 


இதய ரத்த நாள அடைப்பு என்பது நெஞ்சு வலி அன்றி நெஞ்செரிச்சல் / கழுத்து வலி / தாடை வலி என்றும் ஏற்படலாம் என்ற அறிவும் அப்போது இருந்திருக்கவில்லை


 இதய ரத்த நாள அடைப்புக்கு 

நைட்ரோ க்ளிசரின் ( ரத்த நாள விரிவடையச் செய்யும் மருந்து) மற்றும் வலியைக் குறையச் செய்யும் மார்ஃபின்  மட்டுமே இருந்த சிகிச்சைகள்


நிற்க 

மீண்டும் 2026க்கு வந்து விடுவோம் 


இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று மெடிக்கல் இண்சூரண்ஸ் இல்லாமல் ஒருவர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்


அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஈசிஜி எடுத்துப் பார்க்க வேண்டுமென்றால் 

ஒரு ஈசிஜி எடுத்துப் பார்க்க 

$450 முதல் $1200 டாலர் செலவாகும் என்பதை அறிந்து அதிர்ந்தேன். 


இந்திய மதிப்பில் குறைந்தபட்சம் ₹45000 வருகிறது. 


இதை எடுப்பதும் எளிதன்று 

கட்டாயம் மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே எடுக்க முடியும். 


அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவரை சந்தித்து ஈசிஜி எடுக்க வேண்டும். 


இந்தியாவில் 

தமிழ்நாட்டில் 


ஒருவருக்கு அவர் நம் மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பினும் சரியே 

வெளிமாநிலம் வெளி நாட்டினராக இருப்பினும் சரியே 

இண்சூரன்ஸ் தேவையில்லை 


நெஞ்சு வலி என்றால் அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு சென்றால் உடனடியாக 

ஈசிஜி இலவசமாக எடுக்கப்படும். 


பணம் கொடுத்து ஈசிஜி எடுக்க வேண்டுமென்றாலும் ₹300 க்கு எடுத்து விட முடியும். 

மருத்துவ பரிந்துரை தேவையில்லை. 

ஈசிஜி எடுத்து விட்டு மருத்துவரை படத்துடன் சந்திக்க முடியும். 


வல்லரசு நாட்டில் 70 வருடங்களுக்கு முன்பு அதிபருக்கு நேர்ந்த அதே விசயம் தான் இப்போதும் நேருகிறது 

மருத்துவம் சாமானியர்களிடம் இருந்து தூரமாக நிற்கிறது. 


இந்தியாவில் தமிழ்நாட்டில் சாமானியனுக்கும் எட்டக்கூடிய அளவில் மருத்துவ வசதி எளிமையாகக் கிடைக்கிறது என்பது தெரிகிறது. 


நாம் வாழும் காலம் 

சூழல் 

வாழும் இடம் போன்றவை 

நமது இருப்பை முடிவு செய்யும் ஆற்றல் பெற்றிருக்கின்றன என்பது புலனாகிறது 


இந்த நிலை தொடர வேண்டும் என்பதே ஆவலாக உள்ளது. 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர்

சிவகங்கை


இளையோரிடத்தில் அதிகரித்து வரும் HIV தொற்று

 


கர்நாடக மாநிலத்தில் இளையோரிடத்தில்  அதிகரித்து வரும் ஹெச் ஐ வி தொற்று 


கர்நாடகா வழி பாடம் கற்போம் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


2023 - 2024 ஆம் வருடம்

44,500 எச்.ஐ.வி தொற்றாளர்கள் என்றிருந்த நிலையில் தற்போது 2025-2026 இல் 

66,600 என்று எண்ணிக்கை கூடியுள்ளது. 

இந்தத் தொற்றாளர்கள் அனைவரும் 18-35 வயதுக்குட்பட்டோர் என்பது குறிப்பிடத்தக்கது. 


கர்நாடகாவில் தற்போது 

2.60 லட்சம் எச்.ஐ.வி தொற்றாளர்கள் இருக்கிறார்கள் 

அதில் 2.05 லட்சம் பேர் மட்டுமே சிகிச்சையில் இருக்கிறார்கள். 

54000 பேர் எந்த சிகிச்சை வளையத்துக்குள்ளும் இல்லாமல் தங்களுக்கு தொற்று இருந்தும் அது குறித்த விழிப்புணர்வு இன்றி இருக்கிறார்கள். 


இவர்கள் மூலம் தான் தொற்று பிறருக்கு 

- பாதுகாப்பற்ற உடலுறவு 

- பாதுகாப்பற்ற ஊசி ஏற்றிக் கொள்ளுதல் 

போன்ற வழிகளில் பரவி வருகிறது என்கின்றது ஆய்வு. 


ஹெச். ஐ.வி. 90களில் பரவத் துவங்கிய போது அது 30+ வயதினரிடையே அதிகம் கண்டறியப்பட்டு வந்தது. 


இப்போது 18+ முதல் 35 வயதுக்குள் அதிகமாகக் கண்டறியப்பட்டு வருவதன் காரணங்கள் இதோ..


1. ஆன்லைன் டேட்டிங் ஆப்களின் வருகை 


ஆன்லைன் டேட்டிங் ஆப்கள் பல உள்ளன. அவற்றின் வழியாக ஊர் பேர் தெரியாத ஆள் யாரென்றே தெரியாதவர்கள் கூட 

பிணைப்பு ஏற்படுகிறது. 

இந்தப் பிணைப்பு பிறகு "ஹூக் அப்" எனும் பிரச்சனைக்குரிய கலாச்சார சீர்கேட்டுக்கு வழிவகுக்கிறது.  ஹூக் அப் என்றால் 

கொஞ்ச நாள் டேட்டிங் ஆப்களில் பழகியவருடன் உடலுறவு கொள்ளுதல். 

இதை "டிஜிட்டல் ஹூக் அப்" என்கிறார்கள்


இதனுடன் 


2. கெம் செக்ஸ் கலாச்சாரம் 


ஆன்லைன் ஆப்கள் மூலம் இணைந்த இது போன்ற ஜோடிகள் உடலுறவில் ஈடுபடும் போதும் அதற்கு முன்பு மெத்தாம்பிடமின், கொகயன் போன்ற போதை வஸ்துக்களை உட்கொண்டு அதன் மூலம் எந்த ஒரு தடை உணர்வோ அச்ச உணர்வோ இல்லாமல் தங்குதடையின்றி உடலுறவு கொள்ளுதல் நிலை தான் கெம் செக்ஸ் ( CHEM - மருந்து SEX - உடலுறவு) 

தன்னிலை மறந்த நிலையில் காண்டம் ( ஆணுறை) பெண்ணுறை போன்றவற்றை உபயோகிப்பதில்லை, உபயோகித்தாலும் அது கிழியுறுவதைக் கண்டுகொள்வதில்லை ஆகிய அலட்சியங்களால் 

ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பால்வினை நோய்கள் பரவுகின்றன. 


3. ஒருவருக்கு பலருடன் ஒரே நேரத்தில் தொடர்பு


ஒருவர் ஒருவருடன் உறவில் இருக்கும் போதே பலருடனும் அதே சமயத்தில் உறவில் ஈடுபடும் போது பால்வினை தொற்றுகள் எளிதில் பரவும் வாய்ப்பாக அமைந்து விடுகின்றன 


4. ஆண்களுக்குள் உறவில் ஈடுபடுபவர்களிடம் சதவிகித அளவில் சற்று அதிகமாக ஹெச் ஐ வி தொற்று பரவி வருவதும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 


5. சுத்தமற்ற ஊசிகள் / ஒருவர் பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தி போதை மருந்துகளை ஏற்றும் பழக்கம் இருப்பவர்கள் (PEOPLE WHO INJECT DRUGS) 


6. இளையோரிடத்தில் பாதுகாப்பற்ற உடலுறவு குறித்தும், பால்வினை நோய்களின் பரவல் குறித்தும் போதுமான விழிப்புணர்வின்மை 


என்று பல காரணங்கள் இதற்குப் பின்பு உள்ளன. 


இளையோரிடத்தில் பால்வினை நோய்ப்பரவல் அதிகரித்திருப்பது ஏன்? 


முன்பெல்லாம் குறிப்பிட்ட சில இரவு விடுதிகள், சில நைட் கிளப்கள், சிவப்பு விளக்குப் பகுதிகள் ஆகிய இடங்களில் 

இருந்து மட்டுமே ஹெச்.ஐ.வி உள்ளிட்ட நோய்கள் பரவும் என்பது பொதுவான நம்பிக்கையாகவும், பொது சுகாதார ரீதியாக அந்த இடங்களைக் குறிவைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போதுமானதாக இருந்தது. 


விபச்சாரத்தில் ஈடுபடுவோரிடையே 

ஹெச் ஐ வி , பால்வினை நோய் பரிசோதனைகள், கட்டாய ஆணுறை உபயோகிப்பு , சுய உதவிக் குழுக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு விழிப்புணர்வு அதிகரித்தது. 


ஆனால் தற்போது இந்த ஆன்லைன் ஹூக் அப் கலாச்சாரம் - உடலுறவில் ஈடுபட மேற்கூறிய இடங்கள் தேவையில்லை

 மாறாக ஆன்லைன் மூலம் ஜோடிகள் கிடைத்து, எளிதில் எந்த இடத்திலும் உடலுறவு கொள்ளும் நிலைக்கு பரவலாக்கம் ஆகியுள்ளது. பொது சுகாதார ரீதியாக நோய் தொற்று அடைந்தவர் யார்? 

அவரிடம் இருந்து யார் யாருக்கெல்லாம் பரவியது என்று சரியான மேற்பார்வை செய்ய இயலாமல் போகிறது. 


இவற்றைத் தடுக்க தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? 


- செக்ஸ் குறித்த  கல்வி வளர் இளம் பருவத்தில் இருந்து கட்டாயமாக்கப்பட வேண்டும். 

- பாதுகாப்பற்ற உடலுறவு கர்ப்பத்திலும் பால்வினை நோய்களிலும் எய்ட்ஸிலும் கொண்டுய்க்கும் எனும் செய்தி பரவலாக்கப்பட வேண்டும்

- போதை வஸ்து நுகர்வு அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெளிவாக பள்ளிகள் கல்லூரிகள் தோறும் பரப்புரை ஆற்றப்பட வேண்டும். 

- குறிப்பாக ரத்த நாளம் வழி ஊசி மூலம் போதை பொருள் ஏற்றிக் கொள்வதும். ஊசிகளை பகிர்ந்து கொள்வதும் மிகவும் ஆபத்தானது. ஹெச் ஐ வி , ஹெப்பாடைட்டிஸ் பி போன்ற நோய்கள் பரவும் அபாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்ட வேண்டும் 

- ஆன்லைன் ஆப்கள் மூலம் ஜோடிகள் சேருவது அதிலும் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவது என்பது ஆபத்தானது. இது குறித்தும் விழிப்புணர்வு அவசியம். 


தொடர்ந்து தொற்றுக்குள்ளாகி அதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் 54000 பேரைக் கண்டறியும் பொருட்டு 

மாநிலம் முழுவதும் உள்ள நிறுவனங்கள், கல்வி மையங்களில் தன்னார்வமாக ஹெச் ஐ வி பரிசோதனை செய்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 


விழிப்புணர்வை ஏற்படுத்துவது நம் கடமை

விழித்துக் கொள்வது அவரவர் பொறுப்பு 


ஆதாரங்கள் 

1. NACO SANKALAK sixth edition 2024 report 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர்

சிவகங்கை


Stomach Ulcer | சாப்பிட வேண்டிய & தவிர்க்க வேண்டிய உணவுகள்




வயிற்றுப்புண் (அல்சர்) - சாப்பிட வேண்டிய உணவுகள் - தவிர்க்க வேண்டியவை


Stomach Ulcer | Foods to Eat | Foods to Avoid


உணவுப் பழக்கத்தையும், வாழ்வியல் முறையையும் அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் பிரச்னை அல்சர். `நேரத்துக்குச் சாப்பிடணுமா... போங்க அதுக்கெல்லாம் எங்க நேரம் இருக்கு?’ இதுதான் அல்சர் வருவதற்கான முதல் கட்டம். வேலைக்குச் செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் பலர், காலை உணவைச் சாப்பிடத் தவறுவதால், பலரும் வயிற்றுப் புண் பிரச்னையால் அவதிப்படுகின்றனர்.


அல்சர் என்றால்...


அல்சர் என்றால் வயிற்றில் உருவாகும் புண்கள். உணவுக்குழாய், இரைப்பை மற்றும் சிறுகுடலின் முன்பகுதியிலிருக்கும் உட்சுவரில் உருவாகும் புண்களைக் குடல் புண் அல்லது வயிற்றுப்புண் என்கிறோம்.

* இரைப்பையில் ஏற்படுகின்ற புண்களை கேஸ்ட்ரிக் அல்சர் எனச் சொல்லலாம்.

* உணவுப்பாதையில் ஏற்படுகின்ற புண்களை ஈசோபேகல் அல்சர் என வகைப்படுத்தப்படுகிறது.

* சிறுகுடலின் முன்பகுதியில் உள்ள புண்களை டியோடனல் அல்சர் எனச் சொல்லலாம்.


காரணங்கள் என்னென்ன?


பாக்டீரியா தொற்று (Helicobacter pylori)

மன உளைச்சல்

அதீத கவலை

தவறான உணவுப் பழக்கம்

சில வகை மருந்துகளை உட்கொள்வது

அதிகமாகக் காபி குடிப்பது

மசாலா, கார உணவுகளை அதிகமாக சாப்பிடுவது  போன்ற பல்வேறு காரணங்களால் அல்சர் ஏற்படுகிறது.


தவிர்க்க வேண்டிய உணவுகள் :


* காபியில் உள்ள கெஃபைன், வயிற்றின் அமிலத் தன்மையை அதிகரிப்பதால், வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் காபியைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும். கடுமையான வயிற்று வலி ஏற்படுவதோடு, நோயின் தீவிரத்தையும் அதிகமாக்கிவிடும். கெஃபைன் அதிகமாக இருக்கும் டீ, சாக்லேட், ஐஸ்கிரீம் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.


* காரமான உணவுகள், மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதால், எதுக்களித்தல் பிரச்னை அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் போது, கடுமையான வயிற்றுவலி ஏற்படும். அதனால், மிளகாய், மிளகு, மிளகாய்ப் பொடி ஆகியவற்றை உங்கள் மெனுவில் சேர்த்துக் கொள்ளாமல் தவிர்ப்பது நல்லது.


* பால் குடித்தால் வயிற்றுப் புண் குணமாகும், எரிச்சல் ஏற்படாது என்று சிலர் கூறுவார்கள். இது தவறாகும். பால் வயிற்றிலுள்ள அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. அது மட்டுமல்லாமல் பாலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு மற்றும் புரதம், நோய் குணமடைவதைத் தாமதப்படுத்துகிறது.


* சோடா மற்றும் குளிர்பானங்களுக்கு முற்றிலுமாகத் தடைப்போடுங்கள். அதில் உள்ள சிட்ரிக் அமிலம் வயிற்றின் அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. இதனுடன் செரிமானக் கோளாறுகளையும் உண்டாக்குகிறது. குறிப்பாக, மதுப்பழக்கம் உள்ளவர்கள், குடிப்பதை நிறுத்த வேண்டும். இந்தப் பழக்கம் நோயைத் தீவிரமாக்கும். அதுமட்டுமல்ல வயிறு மற்றும் சிறுகுடலில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, வீக்கம்கூட உண்டாகலாம்.


* ஆடு, மாடு போன்ற கால்நடை இறைச்சி (ரெட் மீட்டை) உணவில் சேர்த்துக்கொள்ளாதீர்கள். இதில் அதிக அளவில் புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளதால், உணவு செரிமானமாக நீண்ட நேரம் எடுக்கும். அதனுடன் நோயின் வீரியத்தையும் அதிகப்படுத்தும்.


சாப்பிட வேண்டிய உணவுகள் :



* நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுவதால் செரிமான மண்டலம் சீராகச் செயல்படும். உணவுகளும் எளிதாகச் செரிமானமாகும். நாள் ஒன்றுக்கு 2 கப் அளவுக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் வயிற்றுப்புண் வராமல் பாதுகாக்கலாம்.


* தயிரில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுத்து, நோயைக் குணப்படுத்த உதவுகிறது. தயிரை வாரத்துக்கு மூன்று முறை சாப்பிட்டுவர, சிறந்த பலன்களைப் பெறலாம்.


* முட்டைக்கோஸில் உள்ள குளூட்டமைன் (Glutamine), வயிற்றுப்புண்களை எதிர்க்கும் தன்மையுடையவை. இதனால் வயிற்றுப்புண்கள் வராமல் தடுக்கலாம்.


* ஃபிரெஷ் திராட்சைப் பழங்களை ஜூஸாக செய்து, வாரத்துக்கு மூன்று முறை அருந்தலாம்.


* கல்யாண பூசணிக்காயின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன் ஏலக்காய் ஒன்று, தேவையான பனங்கற்கண்டு சேர்த்து வெறும் வயிற்றில் 48 நாட்கள் குடித்து வர, நோய் குணமாகும் வாய்ப்புகள் அதிகம்.


* அவ்வப்போது புதினா ஜூஸ், புதினா துவையல், புதினா சாதம் என ஏதாவது ஒரு வகையில், புதினாவைச் சேர்த்துக்கொள்வது நல்லது.


* வாரத்துக்கு மூன்று நாட்கள், ஒரு டம்ளர் அளவுக்கு வெறும் வயிற்றில் தேங்காய்ப்பால் குடித்து வரலாம். ஒரு பெரிய ஸ்லைஸ் தேங்காயை நன்றாக மென்று விழுங்குவது நல்லது.


* மணத்தக்காளி கீரை சூப், மணத்தக்காளி கீரை, மணத்தக்காளி கூட்டு என ஏதாவது ஒருவகையில் கீரையைச் சேர்த்துக்கொள்வது நல்லது.


* பாசிப் பருப்பு சேர்த்து கீரைக் கூட்டு செய்து, ஒரு கப் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வரலாம்.


* முள்ளங்கி, புடலைங்காய், பூசணிக்காய், தர்பூசணி, வெள்ளரிக்காய், நுங்கு, இளநீர் ஆகிய நீர்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.


"மணம் இல்லாத கொலையாளி" – கார்பன் மோனாக்சைடு, "மூச்சுப்பாதையை எரிக்கும் விஷம்" – அமோனியா! எப்படி கையாள வேண்டும்?

 


"மணம் இல்லாத கொலையாளி" – கார்பன் மோனாக்சைடு, "மூச்சுப்பாதையை எரிக்கும் விஷம்" – அமோனியா! எப்படி கையாள வேண்டும்?


"The odourless killer" – Carbon monoxide; "The poison that burns the airways" – Ammonia! How should they be handled?



நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு மூச்சும் உடலுக்கு ஆக்சிஜனை கொண்டு சென்று உயிரைத் தாங்குகிறது. ஆனால் சில வாயுக்கள் இந்த செயல்முறையை அமைதியாக சிதைத்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. அவற்றில் மிகவும் ஆபத்தானது கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide). இதற்கு நிறமோ, மணமோ, சுவையோ கிடையாது. அதனால்தான் இதை "Silent Killer" என்று அழைக்கிறார்கள். இந்த வாயு பொதுவாக மூடிய அறைகளில் ஜெனரேட்டர் இயக்கும்போது, கார் அல்லது லாரி இன்ஜின் புகை அதிகமாக இருக்கும் இடங்களில், நிலக்கரி அடுப்பு பயன்படுத்தும் வீடுகளில், தீ விபத்து ஏற்பட்ட கட்டிடங்களில், மற்றும் காற்றோட்டம் குறைவான இடங்களில் அதிகமாக காணப்படுகிறது. இந்த வாயு உடலுக்குள் சென்றவுடன், இரத்தத்தில் ஆக்சிஜனை சுமந்து செல்லும் ஹீமோகுளோபினுடன் ஆக்சிஜனை விட பல மடங்கு வலிமையாக ஒட்டிக்கொள்கிறது. இதனால் உடலில் ஆக்சிஜன் இருந்தாலும் அது செல்களுக்கு சென்று சேர முடியாது. குறிப்பாக மூளை மற்றும் இதயம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. முதலில் தலைவலி, சோர்வு, மயக்கம் போன்றவை தோன்றும். ஆனால் வாயுவை தொடர்ந்து சுவாசித்தால் சில நிமிடங்களிலேயே மயக்கம், கோமா, ஏன் மரணம் கூட ஏற்படலாம்.



மற்றொரு பக்கம், அமோனியா (Ammonia) முற்றிலும் வேறுவிதமாக தாக்குகிறது. இதற்கு மிகவும் கடுமையான நாற்றம் இருக்கும். அமோனியா பொதுவாக உரத் தொழிற்சாலைகள், குளிர்பதன அமைப்புகள், ஐஸ் தொழிற்சாலைகள், ரசாயன தொழிற்சாலைகள் மற்றும் சில சுத்தம் செய்யும் திரவங்கள் பயன்படுத்தப்படும் இடங்களில் காணப்படுகிறது. நாம் அமோனியாவை சுவாசிக்கும்போது அது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரலின் ஈரப்பதத்துடன் கலந்து ஒரு காரத் தன்மை கொண்ட பொருளாக மாறி, சுவாசப் பாதையின் செல்களை எரிச்சலடையச் செய்கிறது. அதனால் கண்களில் நீர் வடிதல், மூக்கெரிச்சல், இருமல் போன்றவை ஆரம்பிக்கும். அதிக அளவு அமோனியா உடலுக்குள் சென்றால், காற்றுக்குழாய் மற்றும் நுரையீரல் வீங்கி, ஆக்சிஜன் உள்ளே செல்லும் பாதையே குறுகிவிடும். இதனால் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.


எளிமையாகச் சொன்னால், கார்பன் மோனாக்சைடு உடலுக்குள் ஆக்சிஜன் செல்லும் "வாகனத்தை" திருடுகிறது; அமோனியா ஆக்சிஜன் செல்லும் "சாலையையே" சேதப்படுத்துகிறது. கார்பன் மோனாக்சைடு இரத்தத்தை தாக்கி ஆக்சிஜன் போக்குவரத்தை தடுக்கிறது; அமோனியா சுவாசப் பாதையை தாக்கி ஆக்சிஜன் நுழைவதை தடுக்கிறது. இரண்டின் முடிவும் ஒன்றே – உடலுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் உயிருக்கு ஆபத்து ஏற்படுவது.


சுவாரஸ்யமான ஒரு உண்மை என்னவென்றால், தீ விபத்துகளில் உயிரிழக்கும் பலர் தீக்காயத்தால் அல்ல; புகையில் இருக்கும் கார்பன் மோனாக்சைடு விஷத்தன்மையால் உயிரிழக்கிறார்கள். அதேபோல், அமோனியா கசிவு சில நிமிடங்களிலேயே ஆரோக்கியமான ஒருவருக்குக் கூட கடுமையான மூச்சுத்திணறலை ஏற்படுத்த முடியும். அதனால்தான் இந்த இரண்டு வாயுக்களும் "கண்ணுக்குத் தெரியாத எதிரிகள்" என்று அழைக்கப்படுகின்றன.


எப்படி கையாள வேண்டும்?


கார்பன் மோனாக்சைடு அல்லது அமோனியா விஷத்தன்மை சந்தேகிக்கப்பட்டால், முதலில் அந்த நபரை உடனடியாக திறந்த காற்றோட்டம் உள்ள இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். மூடிய இடத்தில் இருந்தால் கதவுகளையும் ஜன்னல்களையும் திறக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் மயக்கத்தில் இருந்தால், பாதுகாப்பாக பக்கவாட்டில் படுக்க வைத்து அவசர மருத்துவ உதவியை அழைக்க வேண்டும். மருத்துவமனையில் ஆக்சிஜன் சிகிச்சை அளிக்கப்படும்; கார்பன் மோனாக்சைடு விஷத்தன்மையில் சில நேரங்களில் Hyperbaric Oxygen Therapy கூட தேவைப்படலாம். அமோனியா கண் அல்லது தோலில் பட்டிருந்தால், உடனடியாக அதிக அளவு சுத்தமான நீரால் கழுவ வேண்டும். மிக முக்கியமாக, பாதிக்கப்பட்டவரை காப்பாற்றச் செல்லும் நபரும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அந்த இடத்திற்குள் நுழையக் கூடாது, ஏனெனில் பல விபத்துகளில் காப்பாற்றச் சென்றவர்களும் அதே விஷ வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நினைவில் கொள்ளுங்கள்: தீயை நாம் பார்க்க முடியும், புகையை நாம் உணர முடியும். ஆனால் கார்பன் மோனாக்சைடு மற்றும் அமோனியா போன்ற வாயுக்கள் பல நேரங்களில் உயிருக்கு ஆபத்தை அமைதியாக ஏற்படுத்துகின்றன. அதனால் விழிப்புணர்வும், உடனடி மருத்துவ உதவியும் உயிரைக் காப்பாற்றும் மிகப் பெரிய ஆயுதங்களாகும்.


இன்று உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் அனைவரும் குணம் அடைய இறைவனிடம் வேண்டிக்கொள்வோம்..


 

கோழிக்கோட்டில் ஷிகெல்லா நோய் பாதித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு - 123 பேருக்கு பாதிப்பு - பரவும் வழிகள், தடுப்பு முறைகள்

 


கோழிக்கோட்டில் ஷிகெல்லா நோய் பாதித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு - 123 பேருக்கு பாதிப்பு - பரவும் வழிகள், தடுப்பு முறைகள்


கோழிக்கோட்டில் ஷிகெல்லா நோய் பாதித்து மூன்று சிறுமிகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரண்டு சிறுமிகள் குணமடைந்துள்ளனர் . ஒரு சிறுமி உயிர் இழந்துள்ளார் என கேரள மாநில  சுகாதாரத்துறை அமைச்சர் திருமுருளிதரன் தெரிவித்துள்ளார்.


ஷிகெல்லா நோய்      


 ஷிகெல்லா தொற்று (Shigellosis) என்பது ஷிகெல்லா (Shigella) எனப்படும் பாக்டீரியாவால் குடலில் ஏற்படும் ஒரு தீவிரமான தொற்று நோயாகும். 

இது கடுமையான வயிற்றுப்போக்கு, ரத்தத்துடன் கூடிய மலம் மற்றும் வயிற்றுவலியை ஏற்படுத்துகிறது.


பரவும் வழிகள்:

அசுத்தமான உணவு மற்றும் குடிநீர் மூலம் எளிதில் பரவுகிறது.

பாதிக்கப்பட்ட நபரின் மலம் படிந்த பொருள்கள், கைகள் மூலமாக மற்றவர்களுக்குப் பரவுகிறது.

சுகாதாரமற்ற கழிவறைகளைப் பயன்படுத்துவதாலும், நெருங்கிய தொடர்புகளாலும் பரவ வாய்ப்புள்ளது.


அறிகுறிகள்:

கடுமையான வயிற்றுப்போக்கு (மலத்தில் ரத்தம் மற்றும் சளி காணப்படலாம்).

அதிக காய்ச்சல் மற்றும் குளிர்.

தீவிரமான வயிற்று வலி மற்றும் தசைப்பிடிப்பு.

குமட்டல் மற்றும் வாந்தி.


பாதுகாப்பு மற்றும் சிகிச்சை:

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறைவதைத் (Dehydration) தடுக்க, ORS கரைசல் மற்றும் அதிக நீர் ஆகாரங்கள் கொடுக்க வேண்டும்.

அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகி, மருத்துவரின் பரிந்துரைப்படி ஆன்டிபயாடிக் (Antibiotic) மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

கைகளைச் சோப்பு போட்டு அடிக்கடி சுத்தமாகக் கழுவுதல் மற்றும் பாதுகாப்பான குடிநீரைப் பயன்படுத்துதல் மூலம் இந்நோயைத் தடுக்கலாம்.


Ventilator சிகிச்சை ஏமாற்று வேலையா?

 


வென்டிலேட்டர் ( Ventilator ) சிகிச்சை ஏமாற்று வேலையா? 


நமது சமூகத்தில் பரவி இருக்கும் முக்கியமான கட்டுக்கதைகளுள் ஒன்று - வெண்டிலேட்டர்  சிகிச்சை குறித்தானதாக இருக்கிறது. 

வென்டிலேட்டரில் ஒருவர் போடப்பட்டதாலேயே அவருக்கு உயிர் பிழைக்க வாய்ப்பே இல்லை. வென்டிலேட்டர் சிகிச்சை  வெறுமனே பணம் சம்பாதிப்பதற்குண்டான அவசியமற்ற சிகிச்சை என்றும், 

இன்னும் சில திரைப்படங்களில் வென்டிலேட்டர் சிகிச்சையில் இறந்தவர்களை வைத்தும் போலியாக நாடகமாடுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டமையால் அந்த சிகிச்சை குறித்து பல அவநம்பிக்கைகள் சமூகத்தில் நிலவி வருகின்றது. அவற்றை  க் களைவதே இன்றைய கட்டுரையின் பணியாகும். 


வெண்டிலேட்டர் எப்படி செயல்படுகிறது? 


பொதுவாக ஒரு அறைக்குள் புதிய காற்று உள்ளே வந்து,  பழைய காற்று வெளியே செல்வதை "வென்டிலேசன்"( காற்று சுழற்சி) என்று கூறக் கேட்டிருப்போம். இதைப் போன்றே நமது உடலிலும் 

ஆக்சிஜன் நிரம்பிய புதிய காற்று உள்ளே வந்து, கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய பழைய காற்று வெளியே செல்வது நம் உயிர் வாழ்வுக்குத் தேவையான முக்கியமான காற்று சுழற்சியாகும். 


நமது உடலில் காற்றில் உள்ள ஆக்சிஜனை ரத்தத்தில் ஏற்றுவதும், 

ரத்தத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதும் என ஒரு ஓய்வறியா சலவைக்காரரின் பணியைச் செய்பவை நமது நுரையீரல்கள்.


இந்த நுரையீரல்கள் செவ்வனே அதன் பணியைச் செய்வதற்கு 

இரண்டு விஷயங்கள் தேவை. 


முதல் விஷயம் 

காற்று உள்சென்று வெளியேறத் தேவையான  தங்குதடையற்ற சுவாசப்பாதை 


இரண்டாவது விஷயம் 

நுரையீரல் காற்றை உள்ளே இழுக்கவும் வெளி விடவும்,  உதரவிதானம் மற்றும் நெஞ்சாங்கூட்டுத் தசைகளின் இயக்கம் இன்றியமையாத தேவையாகிறது. 


பல நேரங்களில், நுரையீரலில் ஏற்பட்ட நிமோனியா போன் கொடுந்தொற்றுகளின் காரணமாக, அதன் இயக்கம் பாதிக்கப்படும். இதன் விளைவாக, ரத்தத்தின் ஆக்சிஜன் ஏற்றப்படுவது முறையாக நடக்காமல் போகும். 


நுரையீரலில் நீர் தேங்குதல், தீவிர ஆஸ்துமா நிலை, மஸ்குலார் டிஸ்ட்ரோபி போன்ற தசைகளின் செயலிழப்பை ஏற்படுத்தும் நோய்கள், 

இதய செயல் முடக்கம், சுவாச செயல் முடக்கம், 

அறுவை சிகிச்சைகள், சுவாசப்பாதையில் ஏதேனும் பொருள் சிக்கிக் கொள்ளுதல்,  நினைவு மங்கி மூர்ச்சை நிலைக்குச் செல்வது என்று பல காரணங்களினால் சுவாசித்தல் என்பது இயற்கையாக நிகழாமல் போகின்றது. 


இந்நிலையில் உடனடியாக சி.பி.ஆர் (CARDIO PULMONARY RESUSCITATION) எனும் இதய சுவாச செயல் மீட்பு முதலுதவியைச் செய்து, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உடனடியாக அவரது உயிரைக் காக்கும்

உன்னத சிகிச்சையாக வென்டிலேட்டர்கள் பொருத்தப்படுகின்றன. 


வென்டிலேட்டர் என்பது 

உதரவிதானமும் நெஞ்சாங்கூட்டு தசைகளும் செய்த வேலையான காற்று உள்ளிளுத்து வெளிவிடும் காற்று சுழற்சிக்கு செயற்கையான முறையில் உதவுகின்றன.


வென்டிலேட்டரில் போட்டு விட்டாலே கதை முடிந்தது என்று பரப்பப்படும் கட்டுக் கதைகளை நம்ப வேண்டியதில்லை. 


தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் செயற்கை சுவாசக் கருவிகளில் பொருத்தப்படும் பயனாளிகளில் பெரும்பான்மையினர் விரைவில் நலம் பெற்று தங்களது உடல் நிலையில் முன்னேற்றம் கண்டு வீடு திரும்புகின்றனர் என்பதே உண்மை. 


நுரையீரல் இயற்கையாக சுவாசிக்கும் திறனைப் பெறுமட்டும், தற்காலிகமாக அதன் இயக்கு தசைகளுக்கு ஓய்வு வழங்கும் பணியை மட்டுமே வென்டிலேட்டர் செய்கிறது. 


எனவே, இறந்த ஒரு நபரை வென்டிலேட்டரில் போலியாகப் பொருத்தி வைப்பது என்பது இயலாத காரியமாகும்.


வென்டிலேட்டரால் 

இதயத்தை துடிக்கச் செய்யவோ, 

நுரையீரல் மூலம் நிகழும் ஆக்சிஜன்- கார்பன் டை ஆக்சைடு பரிமாற்றத்தையோ செய்ய இயலாது. 

எனவே, உயிருடன் இருக்கும் நபர்களுக்கு அதிலும் வென்டிலேட்டர் உதவியுடன் மீண்டு வருவார் என்ற நிலையில் இருக்கும் நபர்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. 


இறந்த ஒரு உடல் அடுத்த சில மணிநேரங்களில் ரைகர் மார்டிஸ் என்ற விரைத்துக் கொள்ளும் நிலையை அடையும். இந்த சூழ்நிலையில், இறந்த உடலுக்கு வென்டிலேட்டர் பொருத்துவது இயலாத காரியம். எனவே, திரைப்படங்களில் காட்சியின் விறுவிறுப்பைக் கூட்டுவதற்கு எடுக்கப்படும் காட்சிகளை நம்பி உயிர்காக்கும் வென்டிலேட்டர் சிகிச்சையை மறுத்துவிடக்கூடாது. 


வென்டிலேட்டரைச் சுற்றியுள்ள அடுத்த மூடநம்பிக்கை - வென்டிலேட்டரில் போடப்பட்ட நபர் அதிலிருந்து வெளியே வருவது கடினம் என்பதாகும். 

உண்மையில், மயக்க மருத்துவ சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவானது, ஒருவரை வென்டிலேட்டரில் பொருத்தும் போதே அவர்களைத் தொடர்ந்து துல்லியமாகக் கண்காணித்து எத்தனை விரைவாகவும் விவேகமாகவும் வென்டிலேட்டரில் இருந்து மறக்கடிப்பது என்பது குறித்தே சிந்திப்பார்கள். 


காற்று உட்புகும் அழுத்தம் மற்றும் ஆக்சிஜன் அளவு ஆகியவற்றைத் தேவைக்கு ஏற்ப, பயனாளியின் தேக முன்னேற்றத்தைப் பொருத்து படிப்படியாகக் குறைத்து வென்டிலேட்டரை நீக்குவார்கள். இதற்குப் பெயர் "வீனிங் (weaning)" மறக்கடித்தல்" என்பதாகும். 

எனவே, தேவையில்லாமல் வென்டிலேட்டரில்  பயனாளியை வைத்திருப்பார்கள் என்ற வதந்தியில் மெய் துளியும் இல்லை. 


அவசிய தேவையின்றி வென்டிலேட்டரில் பயனாளியை வைத்திருக்கும் போது 

வென்டிலேட்டர் பொருத்தியமையால் உண்டாகும் பாதிப்புகள்  ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதை சிகிச்சை அளிக்கும் குழு உணர்ந்தே செயலாற்றுகின்றது. 


நுரையீரலில் இருந்து நெஞ்சாங்கூட்டுக்கு காற்றுக் கசிவு ஏற்படுதல் (நிமோ தொராக்ஸ்), நுரையீரலில் ஏற்படும் தொற்றுகள், நீண்ட காலம் படுத்தே இருப்பதால் ஏற்படும் முதுகுப்பகுதி அழுத்தக் காயங்கள்,  கால்களின் ஆழ்சிரைகளில் ஏற்படும் ரத்த நாளக்கட்டிகள் ஆகியவற்றில் இருந்து பயனாளியைப் பாதுகாக்கும் பொருட்டு உயிர்காக்கும்  

தேவைக்கு மீறி நீண்ட  நாட்கள்  வென்டிலேட்டர் சிகிச்சை பரிந்துரைக்கப்படுவதில்லை என்பதைப் பதிவு செய்கிறேன்.  


நவீன கால வென்டிலேட்டர்களில் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் நுரையீரலுக்கு பாதகமான விளைவுகள் ஏற்படாத வண்ணம் சரியான அளவில் காற்றின் அளவு மற்றும்  அழுத்தம் நிர்வகிக்கப்படுகிறது. 

தொடர்ந்து வென்டிலேட்டரின் செயல்முறை கண்காணிக்கப்பட்டு பயனாளியின் தேவைக்கு ஏற்ப அதன் இயக்கம் மாற்றி அமைக்கப்படுகிறது. 

இதனால் பயனாளிக்குத் தேவையான குறைந்தபட்ச அழுத்தம் மற்றும் அளவில் காற்று சுழற்சி நடந்து நுரையீரலின் நலன் பாதுகாக்கப்படுகிறது.


வென்டிலேட்டர் -  உயிர்காக்கும் நவீன கண்டுபிடிப்பு


போலியோ நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பதற்காக  "இரும்பு நுரையீரல்" எனும் பெயரில் 1930 களில் இருந்து பயன்பாட்டுக்கு வந்த வென்டிலேட்டர்கள் தற்போது கணினிகள் துணைகொண்டு இயங்கும் தானியங்கி முறையில் நவீனமடைந்துள்ளன. 


கோவிட் பெருந்தொற்று காலத்தில் இவற்றின் உயிர்காக்கும் தன்மையைட் கண்கூடக் கண்டோம்.

கோவிட் வைரஸால் ஏற்பட்ட நிமோனியா குணமடையும் வரை பலரின் உயிர்களை உடல்களோடு ஒட்டி வைத்த பெரும் காரியத்தைச் செய்தவை வென்டிலேட்டர்கள். 


வென்டிலேட்டர்கள் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு  

உயிர் காக்கும் உன்னத சிகிச்சையை வழங்குகின்றன. எனவே, அவற்றைப் பற்றிய அவதூறுகளை நம்பி, முக்கியமான நேரத்தைத் தாழ்த்தாமல், செயற்கை சுவாசக் கருவி சிகிச்சை குறித்து சரியான முடிவெடுப்போம் 


இன்றைய (6.6.2026) இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை. 


நன்றி இந்து தமிழ் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை






சின்னம்மை நோய் (Chicken Pox) குறித்த முழுமையான தகவல்கள்

 


சின்னம்மை நோய் (Chicken Pox) குறித்த முழுமையான தகவல்கள் 


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

தற்போதைய வெயில் காலத்தில் சின்னம்மை தொற்றுக்கு உள்ளாகி வருவதைக் காண்கிறோம். 


"Chich-Pois" எனும் பிரெஞ்சு மொழிச் சொல்லுக்கு "பச்சை பட்டாணி" ( Chick peas) என்று பொருள். 


சின்னம்மை ஏற்படும் போது உடல் முழுவதும் பச்சை பட்டாணி அளவில் கொப்புளம்  தோன்றியதால் "சிக்கன் பாக்ஸ்" என்று அழைக்கப்படுகிறது. மற்றபடி நாம் உண்ணும் சிக்கனுக்கும் இந்த சின்னம்மைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 

 

பொதுவாக 

சின்னம்மைக்கு எந்த  மருத்துவ சிகிச்சையும்  தேவை இல்லை எனும் மூடநம்பிக்கை இன்னும் நமது சமூகத்தில் நிலவி வருகிறது.

அதைப் போக்கும் முகமாக இந்த விழிப்புணர்வுக்  கட்டுரை அமையும். 


சின்னம்மை எனும் சிக்கன் பாக்ஸ் - வேரிசெல்லா சோஸ்டர் வைரஸ் மூலம் உண்டாகும் தொற்று நோயாகும். 


காற்றின் மூலம் பரவும் தொற்று நோய் என்பதால் தொற்றுக்குள்ளானவர் தும்மும் போதும் இருமும் போதும் அருகில் இருந்து அதை சுவாசிப்பவர்களுக்கு எளிதில்  பரவி விடும். 


இதனோடு கொப்புளங்கள் தோன்றும் நிலை வரும் போது தோலோடு தோல் உரசுவதாலும் தொற்றுப் பரவல் நடக்கிறது.


வைரஸ் தொற்று உடலுக்குள் சென்றதில் இருந்து நோயின் அறிகுறி தொடங்க சராசரியாக இரண்டு வாரங்கள் எடுக்கும்.


காய்ச்சல்

உடல் சோர்வு 

தொண்டை வலி

தலை வலி ஆகியன முதல் ஐந்து முதல் ஏழு நாட்கள் இருக்கும். 


அதன்பின், உடல் முழுவதும் சிவப்பு நிற படை தோன்றி நெஞ்சுப் பகுதி, பின்புறம், முகம் என கொப்புளங்கள் உருவெடுத்து உடல் முழுவதும் பரவும். 


இரண்டாவது வாரத்தின் முடிவில் கொப்புளங்கள் சருகாகி விழுந்து விடும். 


கொப்புளங்கள் தோன்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்து, அவை சருகாகி விழும் வரை பிறருக்குத் தொற்றுப் பரவும் நிலையில் இருக்கும். 


ஏன் சின்னம்மைக்கு மருத்துவ சிகிச்சை அவசியம்   ? 


பொதுவாக குழந்தைகளுக்கு இந்தத் தொற்று ஏற்படும் போது பெரிய பாதிப்புகள் இன்றி மறையும் என்பது உண்மை தான். ஆனால் வளர் இளம் பருவத்தினர், வயது வந்தோர், முதியோர், கர்ப்பிணிகள், எதிர்ப்பு சக்தி குன்றியோர்க்கு ஏற்படும் போது நோயின்  தீவிரமாக வெளிப்படும். 


முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் 

சிலருக்கு நிமோனியா எனும் தீவிர நுரையீரல் தொற்று , எண்கஃபாலைட்டிஸ் எனும் மூளை அழற்சி , கொப்புளங்களில் பாக்டீரியா தொற்று ஆகியவை ஏற்படலாம். 


சின்னம்மைக்கு 

ஏசைக்ளோவிர்/ வேல்ஏசைக்ளோவிர் ஆகிய மாத்திரைகள் சிறப்பாக செயல்பட்டு நோயின் தீவிரத்தையும் நோயின் காலத்தையும் குறைக்கக் கூடியதாக உள்ளன. 


முக்கியமாக இந்த மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின் கீழ், தோல் படை மற்றும் கொப்புளங்கள் தோன்றத் துவங்கிய 24 மணிநேரத்திற்குள் எடுக்கும் போது சிறந்த பலனைத் தருகிறது.  


இதுவன்றி சின்னம்மை ஏற்பட்டு குணமானவர்களுக்கு, வைரஸின் ஒரு பகுதி அவர்களின் நரம்பு மண்டலத்தில்  நெடிய துயில் நிலைக்குச் சென்று அமைதி காத்திருக்கும். தனக்கான தோதான சூழல் வரும் போது ( அந்த நபரின் எதிர்ப்பு சக்தி குறையும் போது) மீண்டும் உயிர்ப்பு பெற்று அக்கி எனும் ஹெர்பிஸ் சோஸ்டர் நோயை ஏற்படுத்தும். அக்கி என்பது தோலில் திராட்சை பழம் போல தோற்றம் கொண்ட ஒன்றோடு ஒன்று நெருங்கி ஒட்டி இருக்கும் கொப்புளங்களுடன் கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடிய நோயாகும். 


ஒரு வயதுக்குள் சின்னம்மை ஏற்பட்டிருந்தாலும் சரி, அந்த நபர் முதியவராக ஆன பின்பும் கூட அதாவது அறுபது வயதைக் கடக்கும் போது மீண்டும் வெளிவந்து அக்கியை ஏற்படுத்தலாம்.

அந்த நோய்க்கும், 

ஏசைக்லோவிர் மருந்தை உடனடியாகக் கொடுப்பதன் மூலம் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.


சின்னம்மை கண்ட ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்களில் 20% பேருக்கும், எதிர்ப்பு சக்தி குன்றியோரில் 50% பேருக்கும் அவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் அக்கி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிக. 


யாருக்கெல்லாம் சின்னம்மை தீவிரத்துடன் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது? 


எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறிப்பாக அதிக அளவில் ஸ்டீராய்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், 


புற்று நோய் சிகிச்சையில் இருப்பவர்கள், மனித எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர், கர்ப்பிணிமார்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள், குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள், குறைவான எடை கொண்ட ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள், ஒரு வயதுக்குட்பட்ட சிசுக்கள், 60+ வயதைத் தாண்டிய முதியோர் 

ஆகியோருக்கு சின்னம்மை தொற்று ஏற்படும் போது தீவிரத்துடன் வெளிப்படக்கூடும். எனவே அதிக கவனம் தேவை. உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். 


சின்னம்மை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வழிகள் உள்ளனவா? 


ஆம். சின்னம்மைக்கு எதிரான தடுப்பூசியை நமது குழந்தைகளுக்கு 

முதல் தவணை - 12 முதல் 15 மாதங்களுக்குள்ளும் 

இரண்டாவது தவணையை  - 4 முதல் 6 வயதிலும் வழங்கலாம். 


இந்தத் தடுப்பூசி 70 முதல் 90%  தொற்றுகளைத் தடுக்கவும், 95% தீவிரத் தொற்றுகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. 


இந்தத் தடுப்பூசியை, 

சின்னம்மை ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த குழந்தைக்கு மூன்று நாட்களுக்குள் வழங்கினால் நோயின் தீவிரம் குறைவதைக் காணலாம். 


எனது குழந்தைக்கு சின்னம்மை தடுப்பூசி போட்டும் சின்னம்மை வந்து விட்டதே. ஏன்? 


சின்னம்மை தடுப்பூசி நோய்த் தொற்றை 70-90% தடுக்கும் என்று ஆய்வுகளில் நிரூபணமாகியிருப்பதால், 10-30% பேருக்கு தடுப்பூசி போட்டிருந்தாலும் தொற்று ஏற்படலாம். ஆயினும் தீவிர நோய் நிலை ஏற்படாமல் தடுப்பூசி காக்கும். 


இதுவரை சின்னம்மை தொற்று ஏற்படாத வயது வந்தோரும் கூட இந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை - நான்கு மாத இடைவெளியில் போட்டுக் கொள்ளலாம். 


அக்கிக்கு எதிரான தடுப்பூசியும் 50+ வயதினருக்குக் குறிப்பாக நீரிழிவு மருத்துவப் பயனாளிகளுக்கென சந்தையில் உள்ளது. 

தேவைப்படுவோர் அக்கி ஏற்படாமல் இருக்க இந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை -  இரண்டு முதல் ஆறு மாத இடைவெளியில் பெற்றுக் கொள்ளலாம். 


வீட்டில் ஒருவருக்கு சின்னம்மை ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்? 


சின்னம்மை ஏற்பட்டவரிடம் இருந்து வீட்டில் பிறருக்கும் தொற்று பரவாமல் இருக்க - தொற்று கண்டவரைத் தனிமைப் படுத்த வேண்டும். நோயின் அறிகுறிகள் தோன்றிய ஒருவரை தனிமைப்படுத்துவதற்குப் பெயர் "ISOLATION" ஆகும். 


கொப்புளங்கள் தோன்றியதில் இருந்து அவை சருகாகி உலரும் வரை இந்தத் தனிமைப்படுத்துதல் தொடர வேண்டும். 


இதற்கடுத்த படியாக, 

தொற்று கண்ட நபருடன் நேரடித் தொடர்பில் இருந்த அவரது வீட்டினர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

தொற்று கண்டவருடன் தொடர்பில் இருந்து, இன்னும் நோயின் அறிகுறிகள் தோன்றாதவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதை "QUARANTINE" என்கிறோம். 


தற்காலத்தில் இந்த குவாரண்டைன் என்பது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை.  அதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 


பொதுவாக ஒரு குடும்பத்தில் முதலில் தொற்று கண்டவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் போது, இரண்டாவது தொற்று கண்டவருக்கு முன்னவரை விட தீவிரமாக நோய் வெளிப்படுவதைக் காண முடிகின்றது. 


இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், சின்னம்மை தொற்று வீட்டில் உள்ள முதியோர்களுக்கும் அதிகமாக ஏற்பட்டு தீவிரத் தொற்றை ஏற்படுத்துகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 


கொப்புளங்கள் தோன்றிய  24 மணிநேரத்திற்குள், அவர்களுக்கு ஏசைக்லோவிர் / வால்ஏசைக்லோவிர் மருத்துவ சிகிச்சை கிடைத்திடச் செய்ய வேண்டும். 


- தொற்று கண்டவரின் விரல் நகங்களை வெட்டி விட வேண்டும்.  கைகளில் துணி கையுறை அணிவிக்கலாம். இது கொப்புளங்களில் ஏற்படும் அரிப்பின் போது அதிகமாக சொரிந்து காயம் ஏற்படாமல் தடுக்க உதவும். 

- அரிப்பு ஏற்படும் போது காலமைன் லோசன் தடவலாம்.

வேறு எந்த வலி நிவாரணி களிம்போ வேறு வகையான தைலங்களோ தடவுதல் கூடாது. 

- தினமும் லேசான  வெந்நீரில் உடலை ஒத்தி எடுக்கலாம். இது கொப்புளங்கள் மீது பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும். 

- நீராகாரங்களாகப் பருகக் கொடுக்கலாம். 

- அரிப்புக்கும் காய்ச்சலுக்கும் மருத்துவர் பரிந்துரையில் சிகிச்சை எடுக்க வேண்டும்

- கொப்புளங்கள் சருகாகி உலர்ந்ததும் குளியல் போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே வரலாம். 


அபாய அறிகுறிகள் குறித்த கவனம் தேவை - 

சின்னம்மை ஏற்பட்டவருக்கு இரண்டாவது வாரத்தில் 

- பிதற்றல் நிலை 

- அதீத தலை வலி

- வலிப்பு 

- மூர்ச்சை நிலை 

- மூச்சுத் திணறல் 

- தலை சுற்றல் 

- வயிற்று வலி

ஆகியன ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை வழங்கிட வேண்டும். 


சின்னம்மை தானே என்று லேசாக எடுத்துக் கொள்ளாமல் 

அதற்கு வழங்க வேண்டிய மருத்துவ சிகிச்சையையும் 

அதற்குரிய சரியான வழிகாட்டுதல்களையும் கடைபிடித்தால் நோயின் தீவிரத்தையும் 

காலத்தையும் அதன் பாதிப்புகளையும் நம்மால் குறைத்திட முடியும். 


நன்றி இந்து தமிழ் 

மறையாத கட்டுக் கதைகள் - 3 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை





தொலைதூரப் பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ? - மருத்துவரின் எச்சரிக்கை பதிவு



 தொலைதூரப் பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ? - மருத்துவரின் எச்சரிக்கை பதிவு


அடிக்கடி பேருந்துகளில் பல மணிநேரங்கள்    தொலைதூரப் பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ?


மகிழ்வுந்தில் வீக்கெண்ட் சில  நூறு கிலோமீட்டர்கள் லாங்  ட்ரைவ்  செல்பவரா  நீங்கள்? 


தொலைதூர விமானப்பயணங்களின்  மூலம் காலை நியூயார்க்கில்  காபி 

மாலை டோக்கியோவில்  டின்னர் சாப்பிடும் வழக்கம் கொண்டவரா நீங்கள்? 


குடும்பத்தைக்காக்க வருமானத்துக்காக   சரக்கு லாரிகளை மாநிலம் விட்டு மாநிலம்   ஓட்டும் லாரி ஓட்டுநர்கள்  / அரசு விரைவுப்போக்குவரத்து  பேருந்து ஓட்டுநர்கள்  / தனியார் மொஃபசல் பேருந்து ஓட்டுனர்கள்  


இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கானது  தான். 


Dr.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


சமீபத்தில் புது டெல்லியை சேர்ந்த சவுரப்  சர்மா எனும் முப்பது வயது இளைஞர் 

வீக்கெண்ட் ஜாலி ட்ரைவாக  ரிசிகேஷில்  இருந்து காரை  எடுத்துக்கொண்டு கிளம்பி இருக்கிறார் 


இவரது வண்டி ஒரு ஆட்டோமேட்டிக்  வண்டி  ஆதலால் இடது காலுக்கு வேலை இல்லை. 


வழக்கமான  கியர்  வண்டியில் இடது கால் க்ளட்ச்சில்  எப்போதும் கால் இருக்க வேண்டும். 

ஆனால் ஆட்டோமேட்டிக்கில்  ப்ரேக் ஆக்சிலேட்டர்  இரண்டும் வலது காலால்  இயக்கினால்  போதும். 


மேலும் விலையுயர்ந்த  கார்களில் "cruise" மோட்  என்று இருக்கும். 

நாம் நெடுஞ்சாலையை அடைந்தவுடன்  அடைய வேண்டிய வேகத்தை அடைந்து விட்டு க்ரூஸ்  போட்டு விடலாம். 


இப்போது வலது  காலுக்கும்  வேலை இருக்காது. 


சரி விசயத்துக்கு வருவோம். 

இந்த தம்பி சுமார் எட்டு மணிநேரம் நான்  ஸ்டாப்பாக  வண்டியை செலுத்தி தனது அலுவலகத்தை  அடைந்துள்ளார். 


கூடவே நன்றாக டைட்டாக  இருக்கும் படியான சாக்குத்துணியால்  ஆன பேண்ட்டை  அணிந்துள்ளார். என்னது சாக்குதுணியா? என்று கேட்காதீர்கள். நாம் உபயோகிக்கும்  ஜீன்ஸ் பேண்ட்  உருவாக்கப்படும்  டெனிம்  வகை துணி - சாக்குத்துணி தானே. 


நமது சீதோஸ்ன  நிலைக்கு சற்றும் பொருந்தாது  என்றாலும் நாம் ஃபேசனுக்காக  ரோசத்தை  விடும் கூட்டமன்றோ? 


இந்த டைட் டெனிம்  பேண்ட்  போட்டுக்கொண்டு  எட்டு மணிநேரம் வண்டியை ஓட்டிக்கொண்டு போன அவருக்கு

இடது கனுக்காலில்  நன்றாக வலி  இருந்துள்ளது.  


முதல் அறிகுறிகளை புறக்கணிப்பது இந்திய நோயாளி கண்டிப்பாக கடைபிடிக்கும் எழுதப்படாத  சட்டமன்றோ.? 

தம்பியும்  அந்த வலியை  புறக்கணித்து  இரண்டு நாட்கள் அலுவலகம் செல்கிறார். 


அங்கும் குத்த  வைத்தபடியே  பணி செய்யும் வொய்ட்  காலர் வேலை தான். 


வலி அதிகமாகியிருக்கிறது. 

இரண்டாவது நாள் அலுவலகத்தில் நண்பர்களுடன் இருக்கும் போது 

தீடீரென்று கண்ணைக் கட்டிக் கொண்டு  வந்திருக்கிறது. 

இதை Black outs என்கிறோம். 


கூடவே மூச்சிரைப்பும்  படபடப்பும் 

பிறகு மூர்ச்சை  நிலைக்கு சென்று விட்டார். 


கொஞ்ச நேரம் கழித்து நினைவு வந்தாலும் மீண்டும் மயக்கத்துக்கு  செல்ல


ஆபத்தில் உதவுபவர்கள் தானே நண்பர்கள். 

உடனே இவரை பக்கத்தில் இருக்கும் பெரிய மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். 

அங்கே நாடித்துடிப்பு  மிக குறைவாக இருக்கவே 


இதயத்துடிப்பையும்  சுவாசத்தையும்  மீட்கும்  நவீன மருத்துவத்துறையின் பிரம்மாஸ்திரமான cardio pulmonary resuscitation ஐ செய்து  

உடலை விட்டு பிரிந்து சென்ற உயிரை மீண்டும் பிடித்து இழுத்து வந்து  இரண்டுக்கும்  கால்கட்டு  போட்டிருக்கிறார்கள் மருத்துவர்கள்.


இதெல்லாம் சரி.. இப்ப அவருக்கு என்ன தான் நடந்துச்சு.. அத சொல்லுங்க டாக்டர்.. 

நானும் வாரக்கடைசில  சென்னைல  இருந்து வண்டிய கெளப்பி  நான்ஸ்டாப்பா  மதுரைக்கு கார் ஓட்டிட்டு  போய்ட்ருக்கேன் என்று நமது ஐடி துறை சகோதரர்கள் பதறும் அவர்களின் இதயத்துடிப்பு  இங்கு வரை கேட்கிறது. 


சொல்கிறேன் ..


ஒரு மனுசன் இவ்வளவு நேரம் தான் படுத்துருக்கணும்..இவ்வளவு நேரம் தான் காலை தொங்க போட்டு வச்சுருக்கணும்.. இவ்வளவு நேரம் தான் தொடர்ந்து உக்கார்ந்துருக்கணும்னு  விதி இருக்கு. 


சாதாரண சிசேரியன் செய்தாலும் மருத்துவர்  பிள்ளை பெற்ற அந்த பச்சை உடம்புக்காரியை  வலியே  இருந்தாலும் பரவாயில்லை  எழுந்து நடந்தே ஆகணும்  என்று வற்புறுத்துவது  எதனால்? 


காரணம் இருக்கிறது. 

நாம ஒரே இடத்தில் பல மணிநேரம் எந்த அசைவும் கொடுக்காம கால்கள தொங்க போட்டோ? அல்லது நீட்டியோ  வைத்திருந்தால் நமது கால்களில் இருக்கும் ரத்த ஓட்டம் மெதுவாகும்  மேலும் காலில் இருந்து மேலே செல்ல வேண்டிய ரத்தத்தின் சுழற்சியும்  குறையும். 


இதனால் stasis எனும் ரத்த ஓட்ட மந்த நிலை ஏற்படும். 


இதனால் நமது கால்களில் உள்ள ஆளத்தில்  இருக்கும் சிறைகளில் Deep vein thrombosis என்ற பிரச்சனை வரலாம். அதாவது அந்த சிறைகளில் ரத்தம் கட்டியாக மாறிவிடக்கூடும். எனினும் அனைவருக்கும் இவ்வாறு நடக்காது. ஒரு சிலருக்கு இவ்வாறு ரத்தக்கட்டி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். 


இந்த ரத்தக்கட்டி  நாம் அடுத்து எழுந்து நடக்கும் போது நமது காலின் சிறைகள் வழியாக பயணித்து inferior vena ceva  எனும் பெரிய சிறைதனில் நுழைந்து 

இதயத்தில் உள்ள வலப்பக்க  மேல்புற  அறையான Right atrium  அடைந்து அங்கிருந்து right ventricle வழியாக நுரையீரலுக்கு  பம்ப் செய்யப்பட்டு நுரையீரலின்  ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தலாம். இதை pulmonary embolism என்கிறோம். 


இது போய் மூளையின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுத்தினால் அது பக்க வாதம் (stroke) வரவழைக்கும். இதை thrombo embolic stroke என்கிறோம். 


இதய ரத்த நாளங்களை  அடைத்தால் அதற்கு பெயர் myocardial infarction. 


ஏன் சார்.. ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கிட்டு  ஒரு லாங்க் ட்ரைவ்ல நான்ஸ்டாப்பா ஓட்டி  புது வொயஃப்  கிட்ட சீன் போடலாம்னு பாத்தா...அதுலயும்  இப்டி பயம்புடுத்துறீங்களே? என்று கேட்கிறீர்களா 


என்ன செய்வது? 

நம் உடலின் இயற்கை அப்படி. 

நாம் நடந்து நடந்தே பழக்கப்பட்ட பிராணிகள்.  


நாம் நடப்பதை நிறுத்தினால்  மரணம் வரப்போகிறது என்று அர்த்தம்.   


நமது கால்களின் கணுக்கால் பகுதியில்  Soleus எனும் பிரத்யேகமான தசை  உள்ளது. இதை இன்னொரு இதயம் என்றே அழைக்கலாம் . நாங்கள் இதை peripheral heart என்று செல்லமாக அழைக்கிறோம். 


இதன் வேலை கால்களில் ரத்த ஓட்டத்தை  ஒரு இடத்தில் நிற்க விடாமல் ரத்த கட்டிகள் உருவாகிவிடாமல் இருக்க  


ஒரு விநாடிக்கு  9.8 மீட்டர் என்ற அளவில்  இழுக்கும் பவர்ஃபுல்  புவிஈர்ப்பு சக்தியை எதிர்த்து ரத்தத்தை  பம்ப்  செய்கிறது. 

இது ஏறக்குறைய நம் அந்த கால அடிகுழாய்  போன்று வேலை செய்கிறது. 


ஒரு பக்கமாக ரத்தத்தை  மேலே ஏற்றிவிட்டு 

கீழே ரத்தம் இறங்காமல்  பார்த்துகொள்கிறது. 


இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சோலியஸ்  தசை கூட 

நீரிழிவு 

உடல் பருமன் 

முதுமை போன்றவைகளால்  வலுகுறைகிறது.  


கால்களுக்கு செல்ல வேண்டிய  ரத்த ஓட்டத்தை நாம் டைட்டான  பெல்ட்/ டைட்டான  சாக்குத்துணி  பேண்ட்  அணிந்து தடுத்தால் 

என்ன நடக்கும் என்பதை நான் சொல்லித்தெரிய  வேண்டியதில்லை. 


இந்த கட்டுரையின் கடைசி கட்டம் 


டேக் ஹோம் அட்வைசஸ் 


1. வீக்கெண்ட்  ட்ரிப்  நிச்சயம் தேவை. 

லாங்க்  ட்ரைவும்  ஓகே. ஆனால் நான் ஸ்டாப்பாக  பல மணிநேரம் பயணிக்க வேண்டியதில்லை. 

நம்மை நம்பி தானே நெடுஞ்சாலையோர  டீக்கடைகள்  இருக்கின்றன. இறங்கி இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறையேனும்  ஒரு சாயா  அடிக்கலாம் அல்லது சிறுநீர் கழிக்கலாம். இப்படி நின்று நிதானமாக  செல்வது தான் நல்லது . நம் கூட பயணிக்கும் அனைவரும் ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் இறங்கி இரண்டு நிமிடம் நடந்து விட்டு பிறகு வந்து காரில்  ஏறுவது சிறந்தது. 


2. எந்த நெடுந்தூரப்பயணத்திற்கும்  டெனிம் துணிகள் அணிய தகுதியானைவை  அல்ல. 

பருத்தி  துணிகள் சிறந்தவை. 

அளவுக்கு பொருந்தாத  டைட்  ஜீன்ஸ்கள்  வேண்டாம். பேலியோவுக்கு மாறினால் அந்த டைட் ஜீன்ஸ்களும்  லூசாக  வாய்ப்பு உண்டு 😃


3.  முதியோர் / நீரிழிவு நோயர்கள் / ரத்த அழுத்தம் இருந்து மாத்திரை எடுப்பவர்கள் 

பேருந்துகளில்  நெடுந்தூர பயணங்களில் இருக்கும் போது கட்டாயம் வண்டி நிற்கும் போது ஏறி இறங்குவது நல்லது. 

இடை நில்லாப்பேருந்தாக இருந்தால் குறைந்தபட்சம் எழுந்து கொஞ்ச நேரம் நின்று உட்காரலாம்  அல்லது கால்களை  தையல்  மிசின் அமுக்குவது  போல அமர்ந்த படியே செய்யலாம். இது கால்களின் ரத்த ஓட்டம் மந்தமாகாமல் தடுக்கும். 


4. லாரி ஓட்டுநர்கள்/ தொலை தூர  வாகன ஓட்டிகள் கட்டாயம் இரண்டு மணிநேரத்திற்கு  ஒரு முறை வண்டியை நிறுத்தி விட்டு ஒரு கிலோமீட்டராவது  நடந்து விட்டு வண்டியில்  ஏற வேண்டும்.  என்னை சந்திக்கும் பல பேருந்து ஓட்டுனர்களுக்கு  நீரிழிவு / ரத்த கொதிப்பு இருக்கிறது.


5. விமானங்களில்  நெடுந்தொலைவு  பயணப்படும்  மக்கள்  வண்டி சீட் பெல்ட் அணியத்தேவையில்லாத உயரத்தை அடைந்ததும் கட்டாயம்  இரண்டு மணிநேரத்திற்கு  ஒரு முறையாவது எழுந்து சிறுநீர் வராவிட்டாலும்  பரவாயில்லை. ஃப்ளைட்டில்  டாய்லெட்  எப்படி இருக்கிறது என்று பார்க்கவாவது  எழுந்து நடங்கள்.  

ஏர்  ஹோஸ்டஸ்  அம்மணிகள்  என்ன நினைப்பார்களோ? அருகில் இருக்கும் கோட் சூட் போட்ட அங்கிள்  என்ன நினைப்பாரோ? என்றெல்லாம் சங்கோஜப்படாதீர்கள்.  


6. இதயத்தில் வால்வு ஆபரேசன் செய்யப்பட்டு அடைப்பு நீக்கம் / செயற்கை வால்வு பொருத்தப்பட்டவர்களுக்கு  ரத்தம் உறையாமல் தடுக்க அசிட்ரோம்  போன்ற மாத்திரைகள் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும்.

பயணத்தின்  போது அந்த மாத்திரையை மறந்து விடாதீர்கள் சொந்தங்களே. 


7. வீட்டில் நடக்கவே  இயலாத நிலையில் இருக்கும் முதியோர் இருப்பார்கள். அவர்களுக்கு முழங்கால்  முட்டிப்பகுதியில்  காலை  அவ்வப்போது  மடக்கி நீட்டும்  பிசியோதெரபி செய்ய வேண்டும். தையல்  மிசினை அமுக்குவது  போன்ற எக்சர்சைஸ் செய்ய வேண்டும்.



8. முதியவர்கள் / கர்ப்பிணிகள்  / வேரிகோஸ்  வெய்ன்  பிரச்சனை இருப்பவர்கள் கால்களில் கம்ப்ரசன்  ஸ்டாக்கிங்க்ஸ்  அணிந்து கொண்டு பயணம் செய்யலாம் 


9. கட்டாயம் தொலை தூரப்பயணத்தின்  போது தண்ணீர் போதுமான அளவு அருந்த மறக்கக்கூடாது . காரணம் நீரிழப்பு  ரத்தத்தை  எளிதில் உறைய வைக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே தண்ணீர் குடித்துக்கொண்டே  இருக்க வேண்டும். தண்ணீர் குடித்தால்  யூரின் போக  வேண்டி வரும் என்று முக்கியமாக பெண்கள் சரியாக தண்ணீர் குடிக்க மாட்டார்கள்.  அவர்களுக்கானது இந்த எச்சரிக்கை. 


10.எந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தாலும் சரி.. மருத்துவர் எழுந்து நடக்க சொல்லிவிட்டால் நடக்க வேண்டும். எத்தனை வலித்தாலும்  பரவாயில்லை. எழுந்து நடக்க வேண்டும்  

எழுந்து நடக்கும் வரை தான்   

நாம் வாழ்கிறோம் 


11 . முதியோர்களுக்கு மூட்டுத் தேய்மானத்திற்கு பரிந்துரைக்கப்படும் KNEE CAP / KNEE CUFF போன்றவற்றை நீண்ட பயணங்களின் போது கட்டாயம் ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை  அவிழ்த்து ரத்த ஓட்டத்தை உறுதி செய்த பின் மீண்டும் கட்டிக் கொள்ளலாம் அல்லது இறுக்கமாக அணியும் KNEE CAPகளை நீண்ட பயணங்களின் போது தவிர்க்கலாம். 

முதுகுக்கு அணியும் Lumbo sacral belt போன்றவற்றை அணிவதில் பிரச்சனை இல்லை. 


  

நடை நின்று  விட்டால் 

ஒன்று நாம் அதை நெருங்கி விட்டோம்

அல்லது 

அது நம்மை நெருங்கி விட்டது 

என்று அர்த்தம் 


அவசியமான குறிப்பு 


கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் குறிப்பாக மருத்துவமனைகளில் அட்மிட் ஆகும் அளவு பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களின் ரத்த உறைதல் தன்மையை சரிபார்க்கும் PT , aPTT , INR , BT, CT ஆகிய பரிசோதனைகளை இப்போது ஒரு முறை செய்து ரத்த உறைதல் தன்மை சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வது அவசியம். 

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் ரத்த உறைதல் தன்மையில் பாதிப்பு இருப்பதைக் காண முடிகிறது. இவர்களுக்கு மற்றவர்களை விட சீக்கிரம் ரத்தம் உறைவதால் ரத்தக் கட்டிகள் ஏற்பட்டு இதய ரத்த நாள அடைப்பு / மூளை ரத்த நாள அடைப்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்படுகிறது. 


பொறுமையுடன் படித்தமைக்கு நன்றி 


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


Portronics Mobike 4 Bike Phone Mount with 360° Rotational, Strong Hold for Bicycle, Motorcycle Compatible with 4.7 to 6.8 inch Devices (Black)


https://amzn.to/3KRgV8k




மாரடைப்பைத் தடுக்கும் "Loading Dose" - மருத்துவரின் தகவல்

 


மாரடைப்பைத் தடுக்கும் "Loading Dose" - மருத்துவரின் தகவல்


தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையால் 

செயல்படுத்தப்பட்டு வரும் 

முக்கியமான திட்டம் குறித்து 

காண்போம்.


இல்லத்தின் மூளைகளாக மனைவிகள் செயல்பட்டால், 

குடும்பத்தின் இதயமாக செயல்படும் கணவன்மார்களின் இதயம் முக்கியமல்லவா? 


உலகின் நம்பர் 1 கில்லர் - மாரடைப்பு

மாரடைப்பு ஏற்படுவதில் மெஜாரிட்டி - ஆண்கள் 


இளம் கைம்பெண்கள் உருவாகாமல் தடுக்கவும், அவர்களின் இதயத்தைக் காக்கவும் கொண்டு வரப்பட்ட திட்டம் 


"இதயம் காப்போம் திட்டம்"


இந்தத் திட்டத்தின் படி, 

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் , துணை சுகாதார மையங்களிலும் மாரடைப்பு ஏற்பட்டவுடன் வழங்கப்பட வேண்டிய "லோடிங் டோஸ்" மாத்திரைகள் வழங்கப்படுகின்றன 


முதலில் மாரடைப்பு எப்படி ஏற்படுகின்றன என்பது தெரிந்தால் 

மாரடைப்பில் லோடிங் டோஸ் எப்படி வேலை செய்கிறது என்பது புரியும்.


ரத்த நாளங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்சிஜனேற்றம் அடைந்த எல்டிஎல் படியத் துவங்கி "காரை" (PLAQUE)  உருவாகிறது. 

இந்தக் காரையானது திடீரென உடைந்து (PLAQUE RUPTURE)  அந்த இடத்தில் ரத்த உறைதல் ஏற்பட்டு கட்டி ஏற்படுகிறது. இதனால் ரத்த நாள அடைப்பு ஏற்படுகிறது. 


இந்த ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு ஒரு மணிநேரத்தில், அந்த ரத்த நாளத்தால் ஊட்டமளிக்கப்பட்ட இதயத்தின் தசைகள் 

முழுவதுமாக மரணிக்கும்.


எனவே, மாரடைப்பு ஏற்பட்ட முதல் ஒரு மணிநேரம் என்பது "கோல்டன் ஹவர்" எனப்படும். 


இந்த கோல்டன் ஹவருக்குள் மேல்சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்று 

ரத்தக் கட்டியை கரைக்கும் சிகிச்சை/ ஸ்டென்ட் மூலம் ரத்த நாளத்தை விரிவுறச் செய்யும் சிகிச்சை ஆகியவற்றை செய்ய வேண்டும். 


இவ்வாறு மேல் சிகிச்சையை அடையும் நேரத்தில் இதயத்தின் தசைகளைக் காக்கவல்ல பணியை "லோடிங் டோஸ்" மாத்திரைகள் செய்கின்றன. 


அவை பின்வருமாறு - 


1. ஆஸ்பிரின் 325 மில்லிகிராம் 

2. க்ளோபிடோக்ரெல் 300 மில்லிகிராம் 

மேற்கூறிய இரண்டு மாத்திரைகளும் 

ரத்த தட்டணுக்களின் செயல்திறனை பாதித்து ரத்த உறைதலைத் தடுத்து ரத்த கட்டிகள் ஏற்படாமல் தடுக்கிறது.

3. அடோர்வாஸ்டாட்டின் 80 மில்லிகிராம் 

ரத்த நாள அடைப்பை ஏற்படுத்தும் காரை மேலும் நலிவடைந்து விடாமல் அதன் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கச் செய்யும். அதனால் மேற்கொண்டு காரை உடைப்பு ஏற்பட்டு ரத்த நாளத்தை அடைப்பது தடுக்கப்படும். 


இந்தத் திட்டத்தின் பலனை 

ஆய்வு செய்த போது, 

2023-2024  வருடத்தில் 

நெஞ்சு வலி என்று ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ துணை சுகாதார நிலையத்துக்கோ வந்தவர்களுக்கு

சராசரியாக 13.09 நிமிடங்களில் 

உடனடியாக லோடிங் டோஸ் மாத்திரைகள் வழங்கப்பட்டு சராசரியாக 46.25 நிமிடங்களுக்குள் ( கோல்டன் ஹவருக்குள்) 

மேல்சிகிச்சை செய்ய வேண்டிய இடத்துக்கு அனுப்பி முறையான சிகிச்சையைப் கிடைக்கச் செய்ததில் 97.7% பேர் மாரடைப்பு ஏற்பட்டும் உயிர்பிழைத்துள்ளனர். 

வெறும் 0.1% மட்டுமே மேல் சிகிச்சைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். 

2.2% மட்டுமே மேல் சிகிச்சை கிடைத்தும் இறந்துள்ளனர். 


நெஞ்சுவலி ஏற்பட்டு லோடிங் டோஸ் வழங்கப்பட்ட 6493 பேரில் 

90% பேருக்கு மாரடைப்பு உண்மையிலேயே ஏற்பட்டது தெரியவந்துள்ளது. 647 (10%) பேருக்கு மட்டுமே அது வயிறு சார்ந்த உபாதை என்பது தெரியவந்தது. 


இதில் இருந்து தெரிவது என்ன? 

நெஞ்சு வலி ஏற்பட்டால் அது 90% மாரடைப்பாக இருக்கலாம். 10% மட்டுமே அது வயிறு சார்ந்த உபாதையாக இருக்கலாம். எனவே நெஞ்சு வலியை சாதாரணமாகக் கடந்து விடக்கூடாது. 


மாரடைப்பு ஏற்பட்டவர்களுள்  97.7% பேர் லோடிங் டோஸ் உதவியால் மேல்சிகிச்சை தூரத்தை பாதுகாப்பாக  அடைந்து உயிர் பிழைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இது சத்தமில்லாமல் நடத்தப்பட்டிருக்கும் மிகப்பெரும் சாதனை. 


உயிர் பிழைத்தவர்களில் 65% ஆண்கள். 

அதிலும் பெரும்பான்மை குடும்பமே இவர்களது வருமானத்தைச் சார்ந்திருக்கும் 40-55 வயதுடைய ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


யாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டாலும் 

உடனே லோடிங் டோஸ் மாத்திரை உட்கொண்டு அடுத்த ஒரு மணிநேரத்திற்குள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 மூலம் விரைந்தால் உயிர்களைக் காக்க முடியும்

என்பது புலனாகிறது. 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



Amazon Brand - Solimo Germ-Protect Handwash Liquid, Refreshing Rose, 1500 ml


https://amzn.to/4ah3SYe




Antibiotic Resistance - தவிர்க்கும் வழிமுறைகள்



Antibiotic Resistance - தவிர்க்கும் வழிமுறைகள்


ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டெண்ஸ் 

தவிர்க்க சில எளிய டிப்ஸ் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


ஆண்டிபயாடிக்குகள்  கண்டறியப்படாத  காலகட்டத்தில் , அதாவது 19ஆம் நூற்றாண்டு வரை 


  புண்கள், கீறல்கள், விலங்குகளிடம்  கடிபடுவது என்பது போன்ற சாதாரண நிகழ்வுகளினால் ஏற்படும் காயங்கள் சீழ்  வைத்து அது ஆறாமல்  பெரிதாகி உடல் முழுவதும் பரவி இறந்து வந்தனர். 


பென்சிலின் என்ற ஆண்டிபயாடிக்கை  ஃப்ளெமிங் கண்டறியும் முன் நடந்த முதல் உலகப்போரில் போர் காயங்கள் ஆறாமல் முற்றிப்போய்  இறந்த மக்கள் தொகை பல மில்லியன்கள். 


அதற்குப்பிறகு பல ஆண்டிபயாடிக்குகள்  கண்டறியப்பட்டு பாக்டீரியாக்களுக்கு எதிராக நாம் தொடுக்கும் போரில்  நமக்கு சிறந்த ஆயுதங்களாக  செயல்பட்டு வருகின்றன. 


எதிரிகளும் நம்மை விட அதி வேகமாக பல்கிப்பெருகும்  ஆற்றலுடன்  இருப்பதால் நமது ஆயுதங்களுக்கு எதிராக அவர்களை தகவமைத்துக்கொள்கிறார்கள். 


எனவே இது நமக்கும் பாக்டீரியாக்களுக்கும் இடையே நடக்கும் தொடர் யுத்தமாகவே  இருக்கிறது. 


இதில் எதிரி நம்மை விட பலம் கூடினால் நம் நிலை பிரச்சனைக்குள்ளாகும். 


உலகின் கடைசி ஆண்ட்டிபயாடிக்கும் வேலை செய்யாத நிலை இப்போதே வந்து விட்டது. இதை Total Drug Resistance என்கிறோம்


இந்த நிலையை 

காச நோய் எனும் Tuberculosis இல் அதிகம் பார்க்க முடிகிறது. 


எத்தனை விலை உயர்ந்த ஆண்ட்டிபயாடிக்குகள்  கொடுத்தும் நிலைமை சரியாகாமல் நோயாளிகள் இறந்து வருகிறார்கள். 


இத்தனை ஆபத்தான

ஆண்ட்டிபயாடிக்  ரெசிஸ்டெண்ஸை நம்மளவில் தவிர்ப்பது எப்படி ? 


1. எந்த ஒரு உடல் சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும் குடும்ப மருத்துவரை சந்திக்க வேண்டும் என்ற கொள்கையை வைத்துக்கொள்ள வேண்டும். நாமாக நேரே  மருந்தகங்களுக்குச்  சென்று ஆண்டிபயாடிக்  மாத்திரைகளை  எடுக்கக்கூடாது. 


2. பெரும்பாலும் மழை சீசன்களில்  வரும் சளி மூக்கடைப்பு  காய்ச்சலுக்கு  வைரஸ்களே  காரணம். ஆகவே இவற்றுக்கு  ஆண்ட்டிபயாடிக்  எனும் பாக்டீரியாக்களை  எடுத்து ப்ரயோஜனமே  இல்லை. 

மருத்துவர்களும் இவ்வகை வைரஸ் தொற்றுகளுக்கு  ஆண்டிபயாடிக்  பரிந்துரைப்பதை  நிறுத்த வேண்டும். மேலும் நோயாளிகளும்  மருத்துவர்களை ஆண்டிபயாடிக்  பரிந்துரை செய்யுமாறு  வற்புறுத்தக்கூடாது. 


என்னை சந்திக்கும் பலரும் முதல் இரண்டு நாள் ஏதாவது ஒரு ஆண்டிபயாடிக்கை  எடுத்து விட்டு தான் என்னை சந்திக்கின்றனர்  என்பதை பதிவு செய்கிறேன். பெரும்பாலும் குழந்தைகளுக்கு அவர்களின் தாயார் முந்தைய ப்ரிஸ்க்ரிப்சனை  வைத்து ஆண்ட்டிபயாடிக்  சிரப்  வாங்கி கொடுத்து விடுகின்றனர். 


இவனுக்கு க்ளாவம் ( ஒரு ஆண்டிபயாடிக்  பெயர்)  கொடுத்தா தான் சார் கேட்கும்..  என்று நமக்கே டஃப் கொடுக்கும் தாய்மார்களை கடந்தே வருகிறேன். இந்த விசயத்தில் மருத்துவர் பேச்சை கேட்பது தான் சிறந்தது தாய்மார்களே. 

நீங்களாக ஆண்டிபயாடிக்  ஆரம்பித்து குழந்தைக்கு நன்மை செய்வதில்லை. 


3. மருத்துவர் ஆண்ட்டிபயாடிக் பரிந்துரைக்கும் கால அளவை  "ஒரு கோர்ஸ்" ( course of antibiotic)  என்று 

அழைக்கிறோம் 


இந்த கோர்ஸ் என்பது குறிப்பிட்ட நோயின் தன்மை பொறுத்தும் பரிந்துரைக்கப்படும் ஆண்ட்டிபயாட்டிக்கின்  தன்மை பொறுத்தும் மாறுபடும் 


ஒருவருக்கு காலை இரவு இருவேளையும்  அடுத்த ஐந்து நாட்களுக்கும் ஒரு ஆண்ட்டிபயாடிக்  எழுதப்பட்டால் அதை அவ்வாறே எடுக்க வேண்டும். 

இரண்டு நாட்களில் நோயின் அறிகுறிகள் (symptomatic relief)  குணமாகிவிடும். ஆனால் நோயை ஏற்படுத்திய கிருமிகள் இன்னும் முழுமையாக இறந்திருக்காது . அதனால் இத்தோடு நோய் சரியாகி விட்டது என்று மாத்திரையை விட்டால் மீண்டும் வில்லன்  எழுந்து வருவான் . எனவே கிருமிகளை  முழுவதுமாக  அழிக்க வேண்டும் என்பதே நமது குறி. 


இன்னும் சிலர் மருத்துவர்  காலை இரவு 

500mg மாத்திரை என்று எழுதிய மாத்திரையை அரையாக  ஒடித்து  காலை இரவு 250mg என்று சாப்பிடுவார். 


கேட்டால் எனக்கு பவர் ஒத்துக்காது  என்பார். 

ஆனால் அவர் போடும் 250மில்லிகிராம் எனும் பவரில் எதிரிகளான  கிருமிகள் வெகு சீக்கிரமாக ஆண்டிபயாடிக்  ரெசிஸ்டெண்சை  வளர்த்துக்கொள்ளும்.  


அப்போது அவருக்கு நோய் குணமானதாக  தெரிந்தாலும். நாளடைவில் அவருக்கு அந்த மருந்து வேலையே செய்யாமல் போய் விடும்.


இதே போன்று தான் காலை இரவு என்று இரு வேளை எழுதிய மாத்திரைகளை ஒரு வேளை மட்டும் போடுவது. 


இது எதற்கு சமம் என்றால் 

 வங்கிக்கு பகல் நேரத்தில் மட்டும் காவலாளி வைத்து விட்டு இரவு நேரத்தில் வைக்காமல் விடுவதற்கு சமம். 


பகல் நேரத்தில் மாத்திரை போடுவதால் மூர்ச்சை நிலைக்கு செல்லும் கிருமிகள் அடுத்த ஷிப்ட்டு  மாத்திரை போடாததால்  மீண்டும் எழுந்து நம்மை அடிக்கும்.  இதுவும் ரெசிஸ்டெண்சை  வரவழைக்கும். 


4. கால்நடை மற்றும் இறைச்சிக்காக கோழிகள் வளர்ப்புத்துறையில் மனிதனுக்கு  பயன்படும் ஆண்ட்டிபயாடிக்  உபயோகத்தை குறைக்க வேண்டும். முறைப்படுத்த வேண்டும். கடந்த ஜூலை மாதம் இதன் ஒரு பகுதியாக மனிதனுக்கு ஆபத்து நேரத்தில் பயன்படும் கோலிஸ்டின்  எனும் உயிர்காக்கும் ஆண்ட்டிபயாடிக்கை கால்நடைகளில் உபயோகிப்பதை  இந்திய அரசு தடை செய்துள்ளது வரவேற்கத்தக்கது.   


4. முடிந்த அளவு தொற்று நோய்களால்  பாதிக்கப்படுவதை  தவிர்த்தால் , ஆண்டிபயாடிக்  போடும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளாமல்  இருக்கலாம். 


வைரஸ் காய்ச்சல் பரவும் சீசன்களில்  கைகளை  அடிக்கடி சோப் போட்டு கழுவுவது  , 

இருமும்  போதும் தும்மும்  போதும் கைக்குட்டை  கொண்டு மூக்கையும்  வாயையும்  மூடுவது, தண்ணீரை வடிகட்டி  காய்ச்சி குடிப்பது, பொதுவெளியில்  மலம் கழிக்காமல்  இருப்பது, சளி பிடித்தவர் அடுத்தவருக்கு கை குலுக்காமல்  இருப்பது, குழந்தைகளுக்கு  முத்தம் கொடுக்காமல் இருப்பது போன்ற சாதாரண அன்றாட நடவடிக்கைகள்  மூலம் நாம் நோய் கிருமி  தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ள முடியும். 


5. கர்ப்பிணிகள் / குழந்தைகள் / முதியோர்கள்/ நீரிழிவு நோயர்கள் / கான்சர்  பாதித்து சிகிச்சை எடுப்பவர்கள் / மருத்துவ காரணங்களுக்காக ஸ்டீராய்டு  எடுப்பவர்கள் 


மிக மிக இன்றியமையாத தேவையின்றி உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை எடுக்கும் மருத்துவமனைகளுக்கு வேறு நோயாளிகளைப்  பார்க்க செல்லாமல் தவிர்க்கலாம். காரணம் இது போன்ற எந்த ஆண்ட்டிபயாடிக்குக்கும் கேட்காத பெரிய சூப்பர் பக்  வகை கிருமிகள் அனைத்தும் உள் நோயாளிகளை அட்மிட் செய்து பார்க்கும் மருத்துவமனைகளில் இருக்கும். இதை HAI  என்று சுருக்கமாக  அழைக்கிறோம். 

HAI  என்றால் Hospital Acquired Infection என்கிறோம். 

இந்த வகை கிருமிகள் பரவாமல் இருக்க பல கிருமித்தொற்றுப்பரவல்  தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவமனையில் கடைபிடிக்கிறோம். 


( சரி சார்.. எங்கள தேவையில்லாம வர வேண்டாம்னு சொல்லிட்டீங்க.. ஆனா நீங்க டாக்டர்ஸ், நர்ஸ்களாம்  அங்க தான சார் வேலை பாக்குறீங்க.. உங்களுக்கு பாதுகாப்பு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது 


இதற்கு பதிலாக.. 

குணா படத்தின் பாடலை எடுத்துக்காட்டுகிறேன் 

நன்றி இசை ஞானி / கலை ஞானி 


"என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக்கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே .....எந்தன் காதல் என்ன என்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது ..எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றென்னும் போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது ................!!!" 

😄😄


சரி..  ஃபரூக் டாக்டர் சொல்லிட்டாரு.. நான் குழந்தை பெத்துக்க  ஆஸ்பத்திரிக்கு  வரமாட்டேன். வீட்ல தான் குழந்தை பெத்துப்பேன்.  ஆஸ்பத்திரல  HAI  இருக்கு என்றெல்லாம் கூறிவிடாதீர்கள் சகோதரிகாள் 🙏😄


நம் உடல் ரீதியான ஆரோக்கிய ரீதியான தேவைக்கன்றி அடிக்கடி மருத்துவமனைக்கு விசிட் செல்வது தான் தவறு. 

மேற்சொன்ன மக்கள் இன்பேசண்ட்டுடன் அட்டெண்டராக தங்குவதைக்  கூட மறுபரிசீலனை  செய்யலாம். 


6. சளி இருமல் போன்று தொற்று இருப்பவர்கள் முடிந்தவரை அடுத்த வீட்டுக்கு/ அடுத்த ஊருக்கு / அடுத்த நாட்டுக்கு பயணம் செய்யாமல் இருக்கலாம். இதனால் ஒரு இடத்தில் இருக்கும் தொற்று மற்றொரு இடத்திற்கு பரவாமல் இருக்கும். ஆனால் இது அந்த அளவு ப்ராக்டிகலாக  தோன்றவில்லை. காரணம் ஒரு சளி வந்தது என்பதற்காக ப்ளைட்  டிக்கெட்டை யாரும் கேன்சல் செய்ய முடியாது. 

இருப்பினும்  கிருமித்தொற்று இருந்தால் 

முடிந்தவரை பயணங்களை  தவிர்த்தல் சிறந்தது. 


சிந்திப்போம் மக்களே. 

மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். 

மாற்றம் ஒன்றே மாறாதது.


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை


Bajaj Pygmy Go 178MM Mini Fan with LED Lighting | Rechargeable | USB Charging | 4-hours Battery Backup | 3 Speed | 2-Light Brightness Setting | High Speed | Portable【Blue】


https://amzn.to/4oRIpth




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Reconstitution 2026 | Budget & Phase wise school list | SPD Proceedings

2026-2028ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் மறுகட்டமைப்பு - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நடைபெறுதல் - வ...