சிவபுராணம் பாடல் வரிகள் தமிழில் (sivapuranam lyrics tamil)...

  சிவபுராணம் பாடல் வரிகள் | Manickavasagar Tiruvasagam Tamil


 

சிவபுராணம் பாடல் வரிகள் தமிழில் (sivapuranam lyrics tamil)...


தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி

அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை

மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்

திருவாசகம் என்னும் தேன்….


திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகர் அருளியது – தற்சிறப்புப் பாயிரம்


திருச்சிற்றம்பலம்


நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க

ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க

ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5)


வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க

பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க

புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க

கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க

சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10)


ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி

தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி

நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி

மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி

சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி  (15)


ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி

சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்

அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்

சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை

முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20)


கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி

எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி

விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கொளியாய்,

எண்ணிறந்து எல்லை இலாதானே நின் பெரும்சீர்

பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன் (25)


புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்

பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்

வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் (30)


எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்

மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்

உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற

மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்

ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே (35)


வெய்யாய், தணியாய், இயமான னாம்விமலா

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி

மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே (40)


ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்

ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்

போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்

நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே

மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே (45)


கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்

சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று

பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்

நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த

மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை (50)


மறைந்திட மூடிய மாய இருளை

அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி

புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,

மலம் சோரும் ஒன்பது வாயிற் குடிலை

மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, (55)



விலங்கு மனத்தால், விமலா உனக்குக்

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்

நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி

நிலம் தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி,

நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் (60)


தாயிற் சிறந்த தயாவான தத்துவனே

மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே

தேசனே தேனார் அமுதே சிவபுரானே

பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே

நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் (65)


பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே

ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே

ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே

நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே

இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70)


அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்

சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே

ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே

ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே

கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தின் (75)


நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே

போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே

காக்கும் என் காவலனே காண்பரிய பேரொளியே

ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற

தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் (80)



மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்

தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்

ஊற்றான உண்ணார் அமுதே உடையானே

வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப

ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்றென்று (85)


போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்

மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே

கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே

நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே

தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே (90)


அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று

சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்

செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்

பல்லோரும் ஏத்தப் பணிந்து. (95)


திருச்சிற்றம்பலம்!!!


தென்னாடுடைய சிவனே போற்றி… எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! போற்றி!!!


 ஓம் நமசிவாய… சிவாய நமஹ… திருச்சிற்றம்பலம்…


சிவபெருமான் காயத்ரி மந்திரம் 1


ஓம் தத்புருஷாய வித்மஹே 

மஹா தேவாய தீமஹி!

தன்னோ ருத்ர ப்ரச்சோதயாத்...


சிவபெருமான் காயத்ரி மந்திரம் 2

ஓம் த்ரயம்பகாய வித்மஹே 

ம்ருத்யுஞ்சாய தீமஹி!

தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

01-04-2025 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - UPS - Unified Pension Scheme இன் முக்கிய அம்சங்கள் மற்றும் நன்மைகள் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் - தமிழில்...

எண்ணும் எழுத்தும் - 4 & 5ஆம் வகுப்புகள் - அலகு 1 - பாடக்குறிப்பு - ஜூன் முதல் வாரம் (Ennum Ezhuthum - 4 & 5th Standard - Unit 1 - Notes of Lesson - June 1st Week)...

2023-24 ஆம் நிதியாண்டு & 2024-25 ஆம் கணக்கீடு ஆண்டு - புதிய மற்றும் பழைய முறை வருமான வரி விகிதங்கள் மற்றும் வருமான வரி அடுக்குகள் குறித்த தகவல்கள் (Income Tax Slabs FY 2023-24 & AY 2024-25 - New & Old Regime Tax Rates)...