கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அன்புமணி ராமதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அன்புமணி ராமதாஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

‘கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?’ - ‘ப’ வடிவ இருக்கை குறித்து அன்புமணி கருத்து


‘கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்?’ - ‘ப’ வடிவ இருக்கை குறித்து அன்புமணி கருத்து


‘ப’வடிவில் இருக்கைகளை அமைப்பது இருக்கட்டும்... முதலில் வகுப்பறைகளும், ஆசிரியர்களும் இருப்பதை உறுதி செய்யுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பள்ளி வகுப்பறைகளில் மாணவர் இருக்கைகள் 'ப' வடிவில் அமைக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனரகம் ஆணை பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் வலியுறுத்தப்பட்ட கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்க முயல்வதில் தவறு இல்லை.


ஆனால், ப வடிவத்தில் இருக்கைகளை அமைப்பதில் நிறைகள் இருப்பதைப் போலவே குறைகளும் உள்ளன. இந்த முறையை மலையாள திரைப்படமும், தமிழக அரசும் வலியுறுத்துவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்பே அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தமிழக அரசு பள்ளி ஆசிரியர்கள் நடைமுறைப்படுத்தியுள்ளனர். இந்த முறையில் அனைத்து மாணவர்களும் முதல் வரிசை மாணவர்களாக கருதப்படுவார்கள் என்பது மாணவர்களின் மனநிலையை மேம்படுத்தக்கூடும், கற்றல் - கற்பித்தல் என்பது கலந்துரையாடலாக அமையும் என்பவை சாதகமான அம்சங்கள்.



எனினும், பெரும்பான்மையான வகுப்பறைகள் 20 அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டவையாகவே உள்ளன. இந்த வகுப்பறைகளில் ப வடிவில் அதிக அளவாக 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடியும்; அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் அனைவரிடத்திலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியாது.


வகுப்பறையின் இரு புறமும் அமர்ந்துள்ள மாணவர்கள் கரும்பலகையை பார்த்து எழுதுவதற்கு கழுத்தை ஒருபுறமாக திருப்பி வைத்திருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும்; மாணவர்கள் எதிரெதிராக அமர்ந்திருக்கும் போது கவனச் சிதறல்கள் ஏற்படும் என்பன போன்ற பாதகமான அம்சங்களும் உள்ளன.



இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு அடிப்படைத் தேவை ஆசிரியர்களும், வகுப்பறைகளும் தான். ஆனால், தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?


பெரும்பான்மையான பள்ளிகளில் வகுப்பறைக் கட்டிடங்கள் இடிந்து விழும் நிலையில் தான் உள்ளன. பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.7500 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் எத்தனை வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்பது அரசுக்கே வெளிச்சம். புதிய வகுப்பறை கட்டிடங்களிலும் மேற்கூரை பூச்சு பெயர்ந்து விழுவது வாடிக்கையாகி விட்டது.



மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும் என்றால் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் மட்டும் குறைந்தது ஒரு லட்சம் வகுப்பறைகள் கட்டப்படுவதுடன், ஒரு லட்சம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும். அதை விடுத்து ப வடிவில் இருக்கைகளை அமைப்போம் என்பதெல்லாம் கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும்? என்பதற்கு இணையான நகைச்சுவையாகவே அமையும். எனவே, தமிழக அரசு நகைச்சுவை செய்வதை விடுத்து கல்வி வளர்ச்சியில் உண்மையான அக்கறையை காட்ட வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


பழைய ஓய்வூதியத் திட்டம் : 20 ஆண்டுகளாக ஏமாற்றப்படும் அரசு ஊழியர்கள் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை


 பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை

பழைய ஓய்வூதியத் திட்டம்: ககன்தீப் சிங் குழு இதுவரை செய்த பணிகள் என்ன?ஊழியர்களை ஏமாற்றுவதே அரசு வேலையா?


தமிழ்நாடு அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தில் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்ட நிலையில், அதன்  பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.


தமிழ்நாட்டில் 2003ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, அதன்பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் என்றழைக்கப்படும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின்படி ஓய்வு பெற்றவர்களுக்கு  உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படாது என்பதால், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, 2003ஆம் ஆண்டுக்கு முன் நடைமுறையில் இருந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தையே மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க.வும், அரசு ஊழியர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத நிலையில், அரசின் மோசடிக்கு எதிரான போராட்டம் நடத்துவதற்கு அரசு ஊழியர்கள் தீர்மானித்தனர். அவர்களின் கோபத்தை அறிந்த தமிழக அரசு, தமிழ்நாட்டில் எந்த வகையான ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரை அளிப்பதற்காக ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 3 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்தக் குழு அதன் பரிந்துரை அறிக்கையை 9 மாதங்களுக்குள் அரசிடம் தாக்கல் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குழு அறிவிக்கப்பட்டு 139 நாள்கள் நிறைவடைந்து விட்ட பிறகும் கூட,  இதுவரை அக்குழு எந்தப் பணியையும் செய்ததாக தெரியவில்லை.


ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பணி வரம்புகள் அறிவிக்கப்பட்டு விட்டதாக நிதித்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். எனினும், பணி வரம்புகள் இன்று வரை மக்களின் பார்வைக்கு வைக்கப் படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமா? அல்லது வேறு வகையான திட்டம் செயல்படுத்தப்பட வேண்டுமா? என்பதை சம்பந்தப்பட்ட சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களுடன் விவாதித்து தான் முடிவெடுக்க முடியும். ஆனால், அதற்கான கலந்தாய்வுக் கூட்டங்கள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை. குழுவின் உறுப்பினர்களாக இருக்கும் மூன்று அதிகாரிகளும் இதுவரை ஒன்று கூடி தங்களுக்கான திட்டத்தின் நோக்கம் குறித்து விவாதித்தார்களா? என்பது கூட தெரியவில்லை.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து பரிந்துரைப்பதற்காக குழு அமைப்பதே காலம் கடத்தும் செயல்தான் என்பதை கடந்த பிப்ரவரி மாதமே கூறியிருந்தேன். பத்தாண்டுகளுக்கு முன்பே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் கடந்த 2015, 16ஆம் ஆண்டுகளில் தீவிரமடைந்த நிலையில், 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருந்ததைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது  குறித்து பரிந்துரைக்க 2016ம் ஆண்டு பிப்ரவரியில் இ.ஆ.ப. அதிகாரி சாந்தா ஷீலா நாயர் தலைமையில் குழு ஒன்றை அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அமைத்தார். அக்குழு எந்த பணியையும் செய்யாத நிலையில், 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மூத்த இஆப அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் தலைமையில் இன்னொரு குழுவை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்தார். அந்தக் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று தாக்கல் செய்து விட்ட நிலையில், திமுக அரசுக்கு மனம் இருந்தால்  அதன் அறிக்கையையே செயல்படுத்தியிருக்கலாம். அதை விடுத்து புதிய குழுவை அமைத்ததே தவறு எனும் போது, அந்தக் குழுவும் பணி செய்யாமல் காலம் தாழ்த்துவது அப்பட்டமான ஏமாற்று வேலை.


தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களில் 6 லட்சத்து 24,140 பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் தான் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை மொத்த பணியாளர்களில் 90%க்கும் அதிகமாகும். புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்து இதுவரை ஓய்வு பெற்ற 49,912 பேருக்கு சராசரியாக ரூ.10 லட்சம் வீதம் ரூ.4381 கோடி வழங்கப்பட்டதைத் தவிர வேறு எந்த பயன்களும் அவர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. அவர்கள் வாழ்வாதாரம் இன்றி தான் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அதேநிலை மீதமுள்ள 6.24 லட்சம் பேருக்கும் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. வலியுறுத்தி வருகிறது.


இந்தியாவில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், கர்நாடகம், இமாலயப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை விட மிகவும் மோசமான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் தான். தமிழக அரசுக்கு மனமிருந்தால், அங்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது என்பதை ஒரு வாரத்தில் அறிந்து தமிழகத்திலும் செயல்படுத்த முடியும். ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது.


பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களை இனியும் ஏமாற்றிக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால், தொடர்ந்து ஏமாற்றி வரும் திமுகவை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும், மக்களும் ஏமாற்றுவது உறுதி.


DMK deceived 60 lakh government employees, teachers and their families in Old Pension Scheme Promise - PMK leader Dr. Anbumani Ramadoss



7 மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வரும் நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 60 லட்சம் பேரின் வாக்குகளைப் பெற்று கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஏமாற்றி விட்டது - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் பேட்டி 


While 7 states are implementing the Old Pension Scheme, the DMK, which won the last election by winning the votes of 60 lakh people including government employees, teachers and their families, has deceived them - Interview with PMK leader Dr. Anbumani Ramadoss


ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகக் கூறி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என கிட்டத்தட்ட 60 லட்சம் பேரின் வாக்குகளைப் பெற்று திமுக ஏமாற்றி விட்டது - பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள்



>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...




பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்...

 


பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.14 குறைக்க வேண்டும் - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்...


உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்திருக்கிறது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை  68 அமெரிக்க டாலராக குறைந்திருக்கும் நிலையில், அதற்கு இணையாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.


இந்தியாவில் கடைசியாக கடந்த மார்ச் 14-ஆம் நாள் பெட்ரோல், டீசல்  விலைகள்  லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டது. அப்போது உலக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 89.94 டாலராக  இருந்தது.  அப்போது இந்தியாவில்  ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ. 55.69 ஆகவும்,  ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.56.45 ஆகவும் இருந்தது. இப்போது கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் 68 டாலராக குறைந்து விட்ட நிலையில்,  ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் அடக்கவிலை முறையே  ரூ.42.09, ரூ.42.63 ஆக குறைந்திருக்கிறது.


உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்கும் போதெல்லாம் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தும்  எண்ணெய் நிறுவனங்கள், உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும் போதும் அதன் பயன்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.  கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போது, சில காலம் பெட்ரோல், டீசல் விலைகள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை என்பது உண்மை தான்.  ஆனால்,  அதனால்  ஏற்பட்ட இழப்பை விட, அதிக லாபத்தை  கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலத்தில்  பெட்ரோல், டீசலை அதிக விலைக்கு  விற்றதன் மூலம் எண்ணெய் நிறுவனங்கள் ஈட்டியுள்ளன.


உலக அளவில் தேவை குறைந்திருப்பதன்  மூலம் உலக  சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில்  ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.13.60,  ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.13.82 குறைக்கப்பட வேண்டும்.  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த பல ஆண்டுகளாக  மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  அவர்களுக்கு ஒரளவாவது நிவாரணம் வழங்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.


தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது? - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி...


தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது? - பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி...


மத்திய அரசில் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் அமல்: தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருவது எப்போது?


மத்திய அரசில் 2004&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இது ஈடு இல்லை என்றாலும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை விட சிறந்தது என்ற வகையில் வரவேற்கத்தக்கது.


தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசில் 2004&ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பணியில் சேர்ந்த சுமார் 23 லட்சம் பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின்படி, மத்திய அரசுப் பணியாளர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் பிற படிகளில் 10% பிடித்தம் செய்யப்பட்டு, ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்படும். மத்திய அரசும் அதே தொகையை செலுத்தும். மத்திய அரசு ஊழியர் 60 வயதில் ஓய்வு பெறும் போது, அவரது கணக்கில் உள்ள முதிர்வடைந்த தொகையில் 40 விழுக்காட்டையும், 60 வயதுக்கு முன்பாக ஓய்வுபெறுவோர் 80 விழுக்காட்டையும் காப்பீட்டு நிறுவனத்திடம் செலுத்தி ஓய்வூதிய ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த முறையில் எவ்வளவு ஊதியம் வழங்கப் படும்? என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இது தான் புதிய ஓய்வூதிய முறையின் பெரும் குறையாகும்.


• செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!

• https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29


ஆனால், மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின்படி, 25 ஆண்டுகள் பணி செய்து ஓய்வு பெறுவோர் அனைவருக்கும் அவர்கள் கடைசி 12 மாதங்களில் பெற்ற சாராசரி ஊதியத்தில் 50% உறுதியளிக்கப்பட்ட ஊதியமாக வழங்கப்படும். குறைந்தது பத்தாண்டுகள் பணியாற்றியவர்களுக்கு  மாதம் ரூ.10,000 உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியமாக வழங்கப்படும். ஓய்வூதியர்கள் உயிரிழ்ந்தால், அவர் கடைசியாக பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவரது வாழ்விணையருக்கு வழங்கப்படும். அதே நேரத்தில்  பணியாளர்கள் செலுத்தும் பங்களிப்புத் தொகையில் எந்த மாற்றமும் இல்லை. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது பழைய ஓய்வூதியத்திற்கு மாற்றாக முடியாது. ஆனால், புதிய ஓய்வூதியத்துடன் ஒப்பிடும் போது சிறந்தத் திட்டம். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் என்பது தான் அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.


மத்திய அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிவிட்ட நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்ன செய்யப் போகிறார்? என்பது தான் எனது வினா. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்பது கடந்த பல ஆண்டுகளாகவே தேர்தல் வாக்குறுதியாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்து பரிந்துரைக்க 2016-ஆம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப் பட்ட சாந்தா ஷீலா நாயர் குழு எந்த அறிக்கையும் அளிக்கவில்லை. அதன்பின் 03.08.2017-ஆம் தேதி அமைக்கப் பட்ட டி.எஸ்.ஸ்ரீதர் குழு அதன் அறிக்கையை 27-.11.2018 அன்று அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அளித்தது. ஆனால், அதன் மீது தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.


2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவும் பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை அளித்திருந்தது.  ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான முயற்சியைக் கூட திமுக அரசு மேற்கொள்ளவில்லை. தேர்தலில் அளித்த வாக்குறுதியைக் கூட மதிக்காமல், கடந்த 2022&ஆம் ஆண்டு மே 7&ஆம் நாள் சட்டப்பேரவையில் மனிதவள மேலாண்மைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் பி.டி,ஆர் பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த  வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டார். அதன்பிறகு வந்த நிதியமைச்சரோ, தமிழகத்தின் நிதிநிலைமை மேம்பட்ட பிறகு பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்வோம் என்று  கூறி வருகிறார். இது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்றழைக்கலாம் என்பதற்கு ஒப்பானதே.


தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஜாக்டோ&ஜியோ உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் போதிலும் அசைந்து கொடுக்க தமிழக அரசு  மறுக்கிறது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமற்றது அல்ல. கடந்த இரு ஆண்டுகளில் இராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப், இமாலயப் பிரதேசம், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு நினைத்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அடுத்த மாதமே செயல்படுத்தலாம். ஆனால், அதை செய்ய திமுக அரசுக்கு மனம் இல்லை. பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படவில்லை என்றால் அடுத்து வரும் மாதங்களில் அரசு ஊழியர்கள் கடுமையான போராட்டங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியாது.


வாழ்நாளில் 30 முதல் 35 ஆண்டுகள் வரை அரசுக்காக பணியாற்றும் அரசு ஊழியர்கள், ஓய்வுபெற்ற பிறகு அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. அரசு ஊழியர்களின் வாக்குகளை வாங்குவதற்காக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டிய கடமையும்  திமுக அரசுக்கு உண்டு. இந்த இரண்டையும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

THIRAN - Quarterly exam - QP Download schedule

  நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - திறன் - காலாண்டுத் தேர்வு - வினாத்தாள் பதிவிறக்கம் செய்யும் கால அட்டவணை Dear team,  Please...