கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>மாநகராட்சிப் பள்ளியின் கல்வித்தரம் மாறியாச்சு : வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நிரூபணம்

நவீன தகவல் தொழில் நுட்ப பயிற்சி பெற்று வரும் மாநகராட்சிப் பள்ளி மாணவியர், தாங்கள் தயாரித்த புராஜெக்ட் ஒன்றை, பள்ளியில் இருந்தபடியே மாநகராட்சி கமிஷனருக்கு "வீடியோ கான்பிரன்ஸ்' முறையில் விளக்கி தங்கள் திறமையை நிரூபித்தனர்.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 83 பள்ளிகள் உள்ளன. ஒரு காலத்தில் மாநகராட்சிப் பள்ளிகள் என்றாலே தரமில்லாத பள்ளிகள் என்றிருந்த நிலை மாறி, இப்பள்ளிகளில் இடம் கிடைக்க அமைச்சர் சிபாரிசு தேடும் அளவுக்கு இப்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்பள்ளிகளின் தரமான கட்டமைப்பு வசதிகளும், அனுபவமிக்க ஆசிரியர்களின் உழைப்புமே இதற்குக் காரணம். இந்த வரிசையில், புதிதாக தகவல் தொழில் நுட்ப வசதிகளும் இணைந்திருப்பதால், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியரின் கல்வித்தரம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. பெரும்பாலான மாநகராட்சிப் பள்ளிகளில் குறைந்தது 20 கம்ப்யூட்டர்கள் கொண்ட "லேப்' இருப்பது, வேறு எந்த மாநகராட்சிக்கும் இல்லாத சிறப்பாகக் கருதப்படுகிறது.அழகுக்காக கம்ப்யூட்டர்களை அடுக்கி வைக்காமல், அவற்றை முறைப்படி பயன்படுத்தி, மாணவ, மாணவியரை மேம்படுத்தவும் முயற்சி எடுக்கப்படுகிறது.

இந்த கம்ப்யூட்டர்களை முறையாக பயன்படுத்தி, மாணவர்களின் தகவல் தொழில் நுட்ப அறிவை மேம்படுத்தி வருகிறது அமெரிக்கன் இந்தியா பவுண்டேஷன் என்ற அமைப்பு.பவுண்டேஷனின் வெளிநாடு வாழ் இந்தியர் நிதியுதவியுடன், இந்தியாவில் ஆறு மாநிலங்களில் "டிஜிட்டல் ஈக்குவலைசர்' எனும் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. கோவை மாநகராட்சிப் பள்ளிகளில் கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் தொடர்பான "புராஜெக்ட்' தயாரிப்பது, பாடத்துக்குத் தேவையான படங்கள், தகவல்களை இன்டர்நெட்டில் பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட பயிற்சிகளை, பவுண்டேஷனின் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கற்றுத் தருகின்றனர்.
தொடர் மதிப்பீட்டு முறை, இன்டர்நெட்டை கையாள்வது குறித்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி தருகின்றனர். கடந்த ஐந்து மாத பயிற்சி குறித்த கலந்தாய்வுக் கூட்டம், மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமியின் தலைமையில் நேற்று நடந்தது.கம்ப்யூட்டரை பயன்படுத்தி கணித பாடத்தில் தயாரித்த புரொஜெக்ட் குறித்து, கே.கே.புதூர் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவியர் அம்ரின் தாஜ், கோகிலவாணி ஆகிய மாணவியர், "பவர் பாயின்ட்' உதவியுடன் அற்புதமாக விளக்கினர். அதைப் பார்த்து, தலைமை ஆசிரியர்கள், துணை கமிஷனர் சிவராசு, கல்வி அலுவலர் வசந்தா ஆகியோர் ஆச்சரியமடைந்தனர்.ஒப்பணக்கார வீதி மாநகராட்சிப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவியர் திவ்யா, ரோஷ்மா, காவ்யஸ்ரீ ஆகியோர், தாங்கள் தயாரித்த அறிவியல் புராஜெக்ட் குறித்து, பள்ளியில் இருந்தபடியே "வீடியோ கான்பிரன்ஸ்' வசதியுடன் கமிஷனருக்கு விளக்கினர். பாடம் குறித்து கமிஷனருடன் கலந்துரையாடி, அவரிடம் பாராட்டும் பெற்றனர்.

பவுண்டேஷனின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அலெக்சாண்டர் பேசுகையில், ""ஐந்து மாதங்களில் 5,383 மாணவர்களுக்கும், 189 ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்துள்ளோம். சிறப்பு பயிற்சி பெற்ற 295 மாணவர்கள் "மாஸ்டர் பயிற்சியாளர்களாக' அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மொத்தம் 1956 பாட புராஜெக்ட்களை தயாரித்துள்ளனர்,'' என்றார். மின்வெட்டால் பயிற்சி தடைபடுவதால், ஜெனரேட்டர் வசதி செய்து தர வேண்டுமென்று அவர் கோரிக்கை விடுத்தார்.

கமிஷனர் பொன்னுசாமி, ""மாணவியரின் திறமை, ஆச்சரியப்பட வைத்தது. மூன்றாண்டுக்குப் பின் அனைத்து வகுப்பிலும் கம்ப்யூட்டர் உதவியுடன்தான் பாடம் நடத்த வேண்டும். கூடுதல் கம்ப்யூட்டர்கள், ஜெனரேட்டர், யு.பி.எஸ்., வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TNTET 2026 Notification For Working Teachers

    TAMIL NADU TEACHER ELIGIBILITY TEST FOR WORKING TEACHERS - 2026 NOTIFICATION பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு கு...