கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நிக் வாயிச்சஸ் (NICK VUJICIC) - உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளரின் வாழ்க்கை பயணம் (Life Travel of World famous Self Confidence Speaker)...



நிக் வாயிச்சஸ் (NICK VUJICIC) வாழ்க்கை பயணம் (Life Travel)...


உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கைப் பேச்சாளர் Nick Vujicic இன் வலி நிறைந்த வாழ்க்கை வரலாறு.


உலகில் பலநூறு தன்னம்பிக்கைப் பேச்சாளர்கள் இருந்தாலும் அவர்களில் Nick Vujicic தனித்துவமானவர். பல உலகத் தலைவர்களுக்கும் தன்னம்பிக்கை சொல்லிக்கொடுப்பவர். பல்லாயிரம் மனிதர்களின் வாழ்க்கையையே மாற்றியமைத்தவர்.


இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் உரையாற்றியுள்ளார். 


இவ்வாறு பல்வேறு புகழிற்குச் சொந்தமான Nick இன் கடந்தகால வாழ்க்கை மிக வேதனை மிகுந்ததாகவே அமைந்தது. தங்கள் வாழ்க்கையைக் குறை கூறிக்கொண்டிருப்பவர்கள் இவரின் வாழ்க்கை பற்றி அறிந்துகொண்டால் தாங்கள் எவ்வளவு பாக்கியசாலிகள் என உணர்ந்துகொள்வார்கள்.


1982 இல் ஆஸ்ட்ரேலியாவின் மெல்பன் நகரில் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைப் பார்த்தவுடன் அதன் தந்தை வாந்தியெடுத்துவிட்டார். தாய் "இது என் குழந்தையே அல்ல.." எனக் கத்த ஆரம்பித்துவிட்டார். இதற்கெல்லாம் காரணம் அக்குழந்தை பிறக்கும்போதே இரண்டு கைகளும், இரண்டு கால்களும் அற்ற நிலையில் வெறும் தலையும், உடலும் கொண்ட உருவமாகப் பிறந்தது.


சில மணி நேரங்களில் மனதை அமைதிப்படுத்திக்கொண்ட அத்தம்பதியினர் கடவுள் தங்களுக்களித்த அக்குழந்தையை மனமாற ஏற்றுக்கொண்டனர். மற்ற குழந்தைகள் போலவே இவனையும் வளர்க்கவேண்டும் என முடிவு செய்தனர். Nicholas James Vujicic என பெயர் சூட்டி அன்புடன் வளர்க்க ஆரம்பித்தனர்.

பிற்காலத்தில் அந்தப் பெயர் சுருக்கமாக Nick Vujicic என மாறிவிட்டது.


அக்காலத்தில் Nick போன்ற குறையுள்ள குழந்தைகள் சாதாரண பாடசாலைகளில் கல்வி கற்பது தடை செய்யப்பட்டிருந்தது. குறைபாடு உள்ள குழந்தைகளுக்கென தனியான பாடசாலைகள் இயங்கிவந்தன. இருப்பினும் Nick பள்ளிப்பருவத்தை அடைந்தபோது இந்த சட்டம் மாற்றப்பட்டு அனைத்து குழந்தைகளும் ஒன்றாக கல்விகற்கமுடியும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.


Nick தனது குறையை உணரக்கூடாது என விரும்பிய அவரது பெற்றோர்கள் சாதாரண மாணவர்கள் கல்விகற்கும் பாடசாலையிலேயே Nick ஐயும் சேர்த்தனர். அந்த மாநிலத்திலேயே சாதாரண பள்ளியில் சேர்ந்த குறைபாடுள்ள முதல் மாணவர் Nick தான்.


ஆனால் நடந்தது மிக்க கொடுமையானது. Nickஇனை பள்ளியிலுள்ள சக மாணவர்களால் ஏற்கமுடியவில்லை. அவரை ஒரு தீண்டத்தகாத பொருளாக அனைவரும் நடத்த ஆரம்பித்துவிட்டனர். அவருடன் யாரும் பேசமாட்டார்கள். எதிலும் சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து பகடிவதை செய்வார்கள். ஏன் அடிக்கவும் செய்தார்கள். இது Nickஇன் 6 வயதிலேயே நடந்துவிட்டது. இதனால் சிறுவயதிலேயே மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானார்.


தனது 8 வயதில் வீட்டிற்குச் சென்று தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்துடன் பாடசாலையில் அமர்ந்திருந்தார் Nick. சக மாணவி ஒருவர் சோகத்தில் அமர்ந்திருந்த அவரிடம் வந்து "Nick நீயும் அழகானவன்தான் ஆனால் உன் அழகை மற்றவர்களால் உணர முடியாது, ஆனால் அதை நான் உணர்கின்றேன்" எனக் கூறிவிட்டுச் சென்றார். அந்தக் கணம் இவனினுள் தன்னம்பிக்கை பிறந்தது. தற்கொலை எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு பாடல்கள், விளையாட்டுக்கள் போன்றவற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.


காலங்கள் கடந்தன. இருப்பினும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் நச்சு வார்த்தைகளால் மனமுடைந்துபோனார் Nick. தனது 10 வயதில் தற்கொலை முயற்சி செய்தார். ஆனால் எப்படியோ பெற்றோர்கள் இவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிர் தப்பித்தாலும் 2 வாரங்கள் கோமா நிலையில் இருந்தார். கண் திறந்தவர் தன் செயலால் தனது தாய் படும் வேதனையைக் கண்டு மனமுடைந்துபோனார். இனி வாழ்க்கையில் தற்கொலை பற்றி எண்ணப்போவதில்லை என முடிவெடுத்தார். சாதாரண ஒரு மனிதன் எவ்வாறு வாழ்வானோ அதேபோலவே தானும் வாழவேண்டும் என வைராக்கியம் கொண்டார்.


இரு கைகள், இரு கால்கள் இல்லாமல் நீச்சல் கற்றுக்கொண்டார், உதைப் பந்து விளையாடினார், கோல்ப் விளையாடினார், இசைக் கருவிகள் வாசிக்கக் கற்றுக்கொண்டார், நீர்ச்சறுக்கு விளையாட்டைக் கற்றுக்கொண்டார் ஏன் கணினியில் மிக வேகமாக type செய்யவும் கற்றுக்கொண்டார். இவை அனைத்தையும் தனது கால் இருக்கவேண்டிய இடத்தில் இருந்த சிறு பாதத் துண்டை வைத்து செய்தார்.


Nick அதிகம் கடவுள் நம்பிக்கை கொண்டவர். தனது இளமைப் பருவம்வரை தனக்கு எப்படியாவது கைகளும் கால்களும் முளைத்துவிடவேண்டும் என கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருந்தார். ஒரு நாள் பத்திரிக்கையில் மிகக் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பற்றிய செய்தியை இவர் படிக்க நேரிட்டது. அப்போதே தன்னைவிட மோசமான வாழ்க்கை கொண்ட பலர் இருப்பதை அறிந்தார். இவ்வாறான மனிதர்களுக்கு உதவி செய்வதே தான் படைக்கப்பட்ட நோக்கம் என உணர்ந்தார் Nick. இதுவே Nickஇனை ஒரு தன்னம்பிக்கைப் பேச்சாளராக மாற்றியது.


பல மேடைகளில் பேசினார், இரு கைகளும், கால்களும் இல்லாத ஒருவர் தன்னம்பிக்கையையும் வாழ்க்கையையும் பற்றிப் பேசுவது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. Nick இன் புகழ் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்து இன்று உலகெங்கும் பரவி விட்டது. 



2012 இல் Kanae Miyahara என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் பிறந்தனர்.



இன்று உலகெங்கும் பலரால் விரும்பப்படும் தன்னம்பிக்கைப் பேச்சாளர் என்றால் அது Nick தான். ஆனால் தனது இன்றைய வெற்றிக்கு அடிப்படையாக அமைந்தது 8 வயதில் சக மாணவி கூறிய "நீயும் அழகானவன்தான் Nick" என்ற வார்த்தைகள்தான் என இவர் அடிக்கடி குறிப்பிடுவார்.


.


வாழ்வின் வெற்றிக்கு Nick Vujicic கூறும் டாப் 8 அறிவுரைகளை இங்கு பார்க்கலாம்...


1. உங்கள் வாழ்வில் எந்த அதிசயமும் நடக்கவில்லை எனில், இன்னொருவரது வாழ்வின் அதிசயமாக நீங்கள் மாறுங்கள்.


2. "நீங்கள் எவ்விதத்திலும் சிறந்தவரல்ல, உங்களால் எதுவும் முடியாது" இவை இரண்டுமே உங்கள் வாழ்வில் நீங்கள் கேட்கும் மிகப்பெரும் பொய்கள்.


3. இறந்தகால வலிகளில் உங்கள் வாழ்க்கையைச் சிக்கவைக்காதீர்கள். அது உங்கள் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் இல்லாமல் செய்துவிடும்.


4. முயற்சிசெய்யுங்கள். முயற்சி வாழ்வின் ஒரு பகுதியல்ல. முயற்சியே வாழ்க்கை. பயத்திற்கும் கனவிற்கு இடையிலேயே உங்கள் வாழ்க்கை இருக்கின்றது.


5. பயமே ஒருவனின் மிகப்பெரிய இயலாமை. அது பக்கவாதத்தைவிட மோசமாக அவனை முடக்கிவிடும்.


6. மாற்றங்கள் மிக முக்கியமானவை. ஏனெனில் வாழ்க்கை எப்போதும் நாம் விரும்பும்படி அமையாது. சிலவேளை நம்மை மாற்றிக்கொள்ளத்தான் வேண்டும்.


7. உங்கள் குறைகளைப் பயன்படுத்தி வாழாதீர்கள். மாறாக திறமைகளைப் பயன்படுத்தி வாழுங்கள்.


8. எனது நம்பிக்கையை இழக்காதவரை நான் ஊனமுற்றவனாகமாட்டேன்.


நூலின் பெயர் : நிக் வாயிச்சஸ் (கைகள் இல்லை - கால்கள் இல்லை - கவலைகள் இல்லை)


நூலாசிரியர் : சேவியர்


பதிப்பகம் : தோழமை வெளியீடு


மொழி : தமிழ்


வருடம் : 2012


நூல் வகை : வாழ்க்கை வரலாறு, சுயமுன்னேற்றம்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

+2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...

  +2 முடித்த மாணவிகளுக்கு அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் கட்டணமில்லாத இரண்டாண்டு செவிலியர் பயிற்சி...  அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈர...