சிறிய மனிதரின் பெரிய சாதனை
"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து".
பொருள்: ஒருவரின் உருவத்தின் சிறிய தோற்றத்தைக் கண்டு அவரை இகழக் கூடாது. பெரிய உருவம் கொண்ட தேருக்கு, மிகச் சிறிய அச்சாணியே முக்கியமானது போல, உலகத்தில் சிறிய தோற்றம் உடையவர்களும் பெரிய திறமை உடையவர்களாக இருக்க கூடும்.
“என் மகனை சர்க்கஸுக்கு அனுப்ப மாட்டேன்; அவனைப் படிக்க வைத்து, நாளை ஒரு மருத்துவராக்குவேன் !” 👑
இவர் தான் கணேஷ் பாரையா. வெறும் 3 அடி உயரமும் 20 கிலோ எடையும் கொண்ட இளைஞர். இன்று இவரது பெயர் பலருக்கும் ஒரு மிகப்பெரிய உத்வேகம்.
பல ஆண்டுகளுக்கு முன்பு கணேஷ் சிறுவனாக இருந்தபோது, அவரது உடல் தோற்றத்தைக் கண்டு சர்க்கஸ் நடத்துபவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். கணேஷை தங்களிடம் ஒப்படைத்தால், அவரது தந்தைக்கு 5 லட்சம் ரூபாய் தருவதாக அவர்கள் கூறினர். அக்காலத்தில் ஒரு சாதாரண குடும்பத்திற்கு அது மிகப்பெரிய தொகை.
ஆனால் அந்தத் தந்தை உறுதியாகச் சொன்னார்:
“என் மகனை நான் படிக்க வைப்பேன். சர்க்கஸுக்கு அனுப்பி பணம் சம்பாதிக்க மாட்டேன்!”
தந்தை கண்ட அந்தக் கனவுக்கு சிறகுகள் கொடுக்க, கணேஷ் தனது முழு முயற்சியுடன் படித்தார்.
2018-ஆம் ஆண்டு NEET தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், அவரது உயரம் குறைவாக இருப்பதாகக் கூறி மருத்துவக் கல்லூரியில் MBBS சேர்க்கை மறுக்கப்பட்டது.
ஆனால் கணேஷ் தோல்வியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. உயர்நீதிமன்றத்திலும், பின்னர் நாட்டின் உச்ச நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்திலும் சட்டப் போராட்டம் நடத்தி, தனது மருத்துவக் கல்விக்கான உரிமையைப் பெற்றார்.
இன்று, MBBS படிப்பையும் இன்டர்ன்ஷிப்பையும் நிறைவு செய்து, டாக்டர் கணேஷ் பாரையா ஆகியிருக்கிறார்!
சமீபத்தில் கௌன் பனேகா குரோர்பதி (KBC) நிகழ்ச்சியில் தனது வாழ்க்கைப் பயணத்தை கணேஷ் பகிர்ந்தபோது, அதை கேட்ட அமிதாப் பச்சனின் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.
வரம்புகள் உடலுக்குத்தான்; மனதிற்கு அல்ல என்பதை தனது வாழ்க்கையின் மூலம் நிரூபித்த கணேஷுக்கும், தனது மகனின் திறமையின் மீது முழு நம்பிக்கை வைத்த அந்தத் தந்தைக்கும் மிகப் பெரிய பாராட்டுகள்
தன் மருத்துவக் கனவை அடைய உயரம் ஒரு தடையே இல்லை என்பதை சாத்தியப்படுத்திக் காட்டியுள்ளார், 3 அடி உயரமுள்ள 23 வயது மருத்துவர் கணேஷ் பாரையா.
உயரத்தைக் காரணம் காட்டி இவருக்கு எம்.பி.பி.எஸ் படிக்க இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது. 3 அடி உயரம் இருப்பதால் அவசர கால சிகிச்சைகளைக் கையாள முடியாது எனக் கூறி அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
தன் லட்சியத்தை அடைய அவர் பள்ளித் தலைமை ஆசிரியர் உதவியோடு மாவட்ட ஆட்சியர், மாநில கல்வி அமைச்சரை அணுகியதோடு, குஜராத் உயர் நீதிமன்றத்தையும் நாடினார். குஜராத் உயர் நீதிமன்றத்தில் தோல்வியைச் சந்தித்தவர், அந்தத் தீர்ப்பையும் எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.
2018-ல் இந்த வழக்கில் வெற்றி பெற்றவர், 2019-ல் எம்பிபிஎஸ் படிக்க அனுமதிக்கப்பட்டார். தன் படிப்பை முடித்த பிறகு பாவ்நகர் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்துள்ளார்.
தன் வெற்றி குறித்துக் கூறிய கணேஷ் பாரையா, ``நான் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றேன். அதற்காக விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்த பிறகு, இந்திய மருத்துவ கவுன்சில் குழு என் உயரத்தைக் காரணம் காட்டி நிராகரித்தது.
உயரம் குறைவாக இருப்பதால் அவசரகால சிகிச்சைகளை என்னால் கையாள முடியாது என்று கூறினார்கள். அதன்பின் நான் என் பள்ளித் தலைமை ஆசிரியர், டாக்டர் தல்பத் பாய் கட்டாரியா மற்றும் ரேவசிஷ் சேர்வையா ஆகியோரிடம் இதைப் பற்றி பேசினேன்.
2018-ல், உச்ச நீதிமன்றம் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்க்க உத்தரவிட்டது. ஆனால், அதற்குள் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான சேர்க்கை முடிந்துவிட்டது. ஆதலால், 2019-ல் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்க்கை பெறுவார் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
நான் பாவ்நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் பெற்றேன், அதன்பின் என் எம்.பி.பி.எஸ் பயணம் தொடங்கியது. முதலில் என்னைப் பார்க்கும் நோயாளிகள் என் மீதான அபிப்பிராயத்தை உயரத்தை வைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால், காலப்போக்கில் அவர்கள் இணக்கமாகி, என்னை மருத்துவராக ஏற்றுக்கொண்டனர். அவர்கள் என்னுடன் அன்பாகவும் நேர்மறையாகவும் நடந்துகொள்கிறார்கள்’’ என்று கூறியுள்ளார்.
வாழ்த்துகள் டாக்டர் கணேஷ் பாரையா!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.